Social Icons

ஆண்மை தவறேல் - 1







மீண்டும் ஒரு சிம்பிளான கதையை கையில் எடுத்திருக்கிறேன். கதை சொல்லும் விதத்தையும், இந்தக்கதைக்காக நான் உருவாக்கிய சில கேரக்டர்களையும் நம்பியே இந்தக்கதையை ஆரம்பிக்கிறேன். எது ஆண்மை..? எது ஆண்பிள்ளைத்தனம்..? என்பது பற்றி என்னுடைய கருத்தை இந்தக்கதையில் சொல்ல கொஞ்சம் முயற்சிக்கிறேன். கதை சற்று நிதானமாகவே நகரும். உங்களுடைய பொறுமைக்கு பெரும் சோதனை காத்திருக்கிறது. என்னுடைய முயற்சிகள் அனைத்தையும் இதுவரை உற்சாகப்படுத்திய உங்களிடம் இருந்து, இந்த முயற்சிக்கும் அத்தகைய உற்சாகத்தை எதிர்பார்த்து, இந்தக்கதையை ஆரம்பிக்கிறேன். நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்


அத்தியாயம் 1

அதிகாலை இருளில் அந்த இடம் தெப்பலாக நனைந்திருந்தது. நேரம் அப்போது 4.30..!! நான்கு புறமும் இரும்புக்கம்பி வேலிகளால் சூழப்பட்ட அந்தக் கட்டிடம், அந்த அதிகாலை இருளுக்குள் அமைதியாக நின்றிருந்தது. நான்கு அடுக்குகள் கொண்ட.. அகலமாய் விரிந்திருந்த.. பிரம்மாண்டமான கட்டிடம்..!! கட்டிடத்தை சுற்றிலும் உயரம் உயரமாய் வளர்ந்திருந்த பச்சை பசேல் மரங்கள், இப்போது கரிய நிறத்தில் காட்சியளித்தன.. காற்றுக்கு மெல்ல தலையசைத்துக் கொண்டிருந்தன..!!

அது ஒரு மாணவர் விடுதி.. கோவையில் இருக்கும் ஒரு பிரபலமான பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான மாணவர் விடுதி..!! மாணவர்கள் தங்கியிருந்த அறைகள் எல்லாம் இந்த நேரத்தில், விளக்குகள் அணைக்கப்பட்டு இருண்டிருந்தன. கேட்டுக்கு இருபுறமும் நின்றிருந்த உயரமான ஸ்டீல் போஸ்டுகளில் மட்டும் இரண்டு குழல் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. விளக்குகள் உமிழ்ந்த வெள்ளை நிற வெளிச்சத்தின் அடியில், வாட்ச்மேன் வாய் பிளந்தவாறு சேரில் உறைந்திருந்தான்.

கட்டிடத்தின் நான்கு அடுக்குகளிலும் தெரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட இருண்ட ஜன்னல்களில், ஒன்று மட்டும் இப்போது பளிச்சென வெளிச்சமாய் ஒளிர்ந்தது. விளக்கினை உயிர்ப்பித்த அசோக், உடனே கண்களை இறுக்கி மூடிக் கொண்டான். திடீர் வெளிச்சத்துக்கு கூசியதால், அவன் கண்களை மூடிக்கொள்ளவில்லை. அவனுடைய அறையின் சுவர் எங்கிலும் ஆபாச சித்திரங்கள் ஒட்டப் பட்டிருக்கும். அரைகுறை உடைகளோடு.. அளவுக்கு மீறி வளர்ந்திருக்கும் தங்களுடைய அங்கங்களை காட்டியவாறு.. பெண்கள் அந்த சித்திரங்களில் சிரிப்பார்கள். காலையில் எழுந்ததுமே அந்த ஆபாசத்தை காணக் கண்கூசிதான் அசோக் விழிகளை அவ்வாறு மூடிக்கொண்டான். இது தினமும் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான்.

கண்களை மூடிக்கொண்டவன், இரண்டு கைகளையும் முன்புறமாக நீட்டி.. சுவரையும், சுவரோடு பொருந்தியிருந்த அலமாரியையும் தடவி தடவியே.. அறையின் அடுத்த மூலையில் இருந்த அந்த டேபிளை அடைந்தான். அதன் மீதிருந்த அவனது பெட்டியை திறந்தான். உள்ளே கைவிட்டு தன் மூக்கு கண்ணாடியை தேடி அணிந்து கொண்டான். அப்புறம் தன் இமைகளை மெல்ல பிரித்தான். பெட்டியின் உட்புறமாக ஒட்டப்பட்டிருந்த விநாயகரின் படத்தில் கண் விழித்தான்.

சில வினாடிகள் கடவுளின் படத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், அப்புறம் மெல்ல திரும்பி அறையை பார்வையிட்டான். சிறிய அறைதான். அறையின் இரண்டு ஓரங்களிலும், சுவரை ஒட்டி கிடக்கும் இரண்டு ஒற்றைக் கட்டில்கள்தான் பிரதானம். ஒரு கட்டிலில் முழு உடலையும் போர்வையால் போர்த்தியவாறு அவன் உறங்கிக் கொண்டிருந்தான். அசோக்கின் அறை நண்பன் புருஷோத்தமன்..!! அவன்தான் சுவற்றில் சிரிக்கும் சிங்காரிகளை வரைந்த ஓவியன். நல்ல ஓவியத்திறமை அவனுக்கு.. அந்த திறமையை இந்த மாதிரி ஓவியங்கள் வரைய பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்.

அசோக் ஒருமுறை விழிகளை சுழற்றி அந்த ஓவியங்களை பார்த்தான். அவனுடைய மனதினில் ஒரு கெட்ட விதமான காம எண்ணம் சரசரவென ஊற ஆரம்பித்தது. சில விநாடிகள்தான்..!! அப்புறம் படக்கென தலையை உதறிக் கொண்டு பார்வையை வேறு பக்கம் திருப்பினான். உடனடியாய் சுறுசுறுப்பானவன், டேபிளுக்கு அடியில் இருந்த பக்கெட்டை வெளியே இழுத்தான். ப்ரஷ் எடுத்து பேஸ்ட் பிதுக்கிக் கொண்டான். சோப்பு டப்பாவும், டவலும் எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.

அசோக்கின் சொந்த ஊர் சென்னைதான். செல்வ செழிப்பான ஒரு குடும்பத்தில் பிறந்தவன். அசோக்கிற்கு அம்மா கிடையாது.. அவனுக்கு ஐந்து வயது இருக்கும்போதே இவ்வுலகை விட்டு பிரிந்துவிட்டாள்..!! அசோக்குடைய அப்பா ஒரு தொழிலதிபர். மனைவி பிரிந்த பிறகு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல், இனி மகன்தான் தன் ஒரே சொந்தம் என்று முடிவு செய்து கொண்டவர்.

அசோக் ஒரு அப்பாவி.. சிறுவயதில் இருந்தே அவனுக்கு வாய்த்த நண்பர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். யாருடனும் அவ்வளவு எளிதில் நெருங்கி பழகிவிட மாட்டான். உலக அறிவு என்பது அவனை பொறுத்தவரையில் ஒரு குறுகிய வட்டத்துக்குள்தான்..!! அவனுக்கு தெரிந்ததெல்லாம் படிப்பு.. படிப்பு.. படிப்புதான்..!! நீங்களும் தொடர்ந்து படியுங்கள்.. அசோக்கைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளலாம்..!!

ஒரு பதினைந்து நிமிடங்களில் அசோக் மீண்டும் அறைக்கு திரும்பினான். இப்போது குளித்து முடித்து மிகவும் புத்துணர்வுடன் இருந்தான். வேறு உடைகளை அணிந்து கொண்டவன், திருநீறு அள்ளி நெற்றி நிறைய பூசிக்கொண்டான். மீண்டும் விநாயகர் படத்தை எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்தான். கண்கள் மூடி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தான். அவனுடைய உதடுகள் காரிய சித்தி மந்திரத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தன..!!

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து

ஒரு ஐந்து நிமிடங்களுக்கு மந்திரம் சொன்னவன், அப்புறம் புத்தகத்தை எடுத்து விரித்து வைத்து, படிக்க ஆரம்பித்தான். இன்றுதான் கடைசி செமஸ்டரின் கடைசி எக்ஸாம்..!! இன்றோடு இந்த இளநிலை இஞ்சினியரிங் டிக்ரிக்கான உழைப்பு ஒரு முடிவுக்கு வருகிறது..!! நான்காண்டுகளான.. இந்த கல்லூரி, இந்த ஹாஸ்டல் வாழ்க்கைக்கும் இன்றுதான் இறுதி நாள்..!! அசோக் அடுத்த ஒரு மணி நேரத்துக்கு அப்படியே உலகத்தை மறந்து, புத்தகத்துக்குள் மூழ்கிப் போனான்.

கிழக்கு இப்போது மெல்ல வெளுக்க ஆரம்பித்திருந்தது. ஹாஸ்டலிலும் இப்போது நிறைய ஜன்னல்கள் வெளிச்சத்தை வெளியிட ஆரம்பித்திருந்தன. வாட்ச்மேன் கூட விழித்துக்கொண்டு.. சும்மா நின்றிருந்த நாய்கள் மீது கல்லெறிந்து விரட்டியவாறு.. சுறுசுறுப்பாக காணப்பட்டான். ஹாஸ்டலுக்கு எதிர்ப்புறம் இருக்கும் டீக்கடை ஒன்றில், குத்துப்பாட்டு ஒன்று சத்தமாக ஒலித்தது. காலையிலேயே கண்விழித்துக் கொண்ட காகங்களும் குருவிகளும், கத்திக்கொண்டு அங்கும் இங்கும் இலக்கில்லாமல் பறந்தன.

படிப்பில் மூழ்கியிருந்த அசோக்கிற்கு திடீரென்றுதான் அது நினைவுக்கு வந்தது. புருஷோத்தமன் நேற்று இரவு எங்கோ சென்று ஊர் சுற்றிவிட்டு, நள்ளிரவுக்கு மேல்தான் அறைக்கு திரும்பினான். தூங்கிக்கொண்டிருந்த அசோக்கை எழுப்பி..

"அசோக்.. கா..காலைல ஒரு ஆறு மணிக்குலாம் என்னை எழுப்பி விட்ரு.. சரியா..?"

என்று ஆல்கஹால் ஸ்மெல்லுடன் வாய்குழற சொன்னான். அசோக்கோ தூக்கக் கலக்கத்துடன் முனகினான்.

"ம்ம்ம்..."

"த்தா.. மறந்துடாதடா..!! நா..நாளைக்கு எக்சாமுக்கு ஒரு மசுரும் படிக்கலை.. காலைல நீ எழுப்பி விடலைன்னா.. கப்புதான்..!!"

"ம்ம்ம்.. சரிடா..!!"

புருஷோத்தமனின் நினைவு வந்ததும், அசோக் உடனே டேபிள் மீதிருந்த கடிகாரத்தை பார்த்தான். ஆறு மணியாகி இப்போது ஐந்து நிமிடங்கள் ஆகியிருந்தன. சேரில் இருந்து எழுந்துகொண்ட அசோக், புருஷோத்தமனின் அருகில் சென்று அவனுடைய தோள்பட்டையை பற்றி உலுக்கினான்.

"டேய்.. புருசு.. டேய்.."

அவ்வளவுதான்..!! புருஷோத்தமன் படக்கென்று உடலை ஒரு சிலுப்பு சிலுப்பினான். போர்வைக்குள் இருந்து வெளிப்பட்ட அவனது வலது கால், அசோக்கின் வயிற்றிலேயே ஓங்கி ஒரு உதை விட்டது. நல்ல வலுவான உதை..!! அசோக் அப்படியே பொறி கலங்கிப் போய் நான்கைந்து அடிகள் பின்வாங்கினான். கண்களில் முணுக்கென்று கண்ணீர் கோர்த்துக் கொண்டது.

"அம்மாஆஆஆஹ்ஹ்..!!!"

என்று வலியில் முக்கியவாறு, வயிற்றைப் பிடித்துக்கொண்டு அப்படியே தரையில் அமர்ந்தான். உடலின் ஒவ்வொரு அணுவும் வேதனையில் துடிப்பதை அவனால் உணர முடிந்தது. கொஞ்ச நேரத்திற்கு மூச்சு விடவே அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. பின்பு மூச்சு சீரானதும், வயிற்றைப் பிடித்துக் கொண்டு அவ்வாறு அமர்ந்த நிலையிலேயே மீண்டும் புருஷோத்தமனை அழைத்தான்.

"டேய்.. புருசு.. எந்திரிடா..!!" அசோக்கின் பரிதாப அழைப்புக்கு,

"ம்ம்ம்..." என்று ஒரு உறுமல் மட்டுமே புருஷோத்தமனிடம் இருந்து வெளிப்பட்டது.

அசோக் கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தான். அப்புறம் எழுந்து மீண்டும் புருஷோத்தமனை நெருங்கினான். இந்த முறை அவனுடைய தோளைப் பற்றி பலமாக உலுக்கிவிட்டு, அவன் உதை விடுவதற்குள், ஓடிப்போய் தூரமாக நின்றுகொண்டான். உதைத்துப் பார்த்து ஏமாந்த புருஷோத்தமன், கடுப்புடன் எழுந்து அமர்ந்தான். அறையின் ஓரமாக பம்மிக் கொண்டு நிண்டிருந்த அசோக்கை பார்த்து கை நீட்டி, கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்ய ஆரம்பித்தான்.

"த்தா.. நாறக்..., முட்டாப்......, ......, ......, ......, அறிவிருக்காடா..??"

"ஏய்.. நீதானடா எழுப்பி விட சொன்ன..?"

"அதுக்காக..???" அவனுக்கு இன்னும் கோவம் குறையவில்லை.

"எந்திரிச்சு படிடா புருசு.. ஒன்னும் படிக்கலைன்னு சொன்னில..? இன்னும் நாலு மணி நேரந்தான் இருக்கு.. கொஞ்சமாவது படிடா..!! ப்ளீஸ்..!!" அசோக் கெஞ்சலாக சொல்ல, அவன் இப்போது சற்று சாந்தமானான்.

"ம்ம்.. ம்ம்.. எல்லா மசுரும் எங்களுக்கு தெரியும்..!! நீ மூடிட்டு போய் படி.. போ..!!"

அசோக் உதை வாங்கிய வயிற்றைப் பிடித்தவாறே நடந்து சென்று சேரில் அமர்ந்து கொண்டான். விட்ட இடத்தில் இருந்து புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தான். புருஷோத்தமன் கொஞ்ச நேரம் எதையோ பறிகொடுத்த மாதிரி, படுக்கையிலேயே அமர்ந்திருந்தான். அப்புறம் ஒருவழியாக மனம் வந்தவனாய் எழுந்து குளிக்க சென்றான்.

ஒரு அரை மணி நேரம் கழித்து அறைக்கு திரும்பிய புருஷோத்தமன், இப்போது சற்று தெளிவாக இருந்தான். 'த்தா.. ஆறு மணிக்குலாம் அத்தனை பயலும் எந்திரிச்சு கியூல நிக்கிறாங்கையா.. ச்சே..' என்று சலித்துக் கொண்டே வந்தான். ஈர ஜட்டியை கொடியில் காயப்போட்டவன், அதே கையுடன் அசோக்கின் கன்னத்தை பிடித்து திருகி, 'ஹாய்.. அசோக் பேபி..!!' என்று குழைவான குரலில் கொஞ்சினான். அசோக்கோ முகத்தை சுளித்துக் கொண்டான். உடனே புருஷோத்தமன்,

"என்னடி செல்லம்.. மூஞ்சை திருப்பிக்கிட்ட..? மாமன் மேல கோவமா..?" என்று நக்கலாக குழைந்தான்.

"அ..அதுலாம் ஒண்ணுல்ல.."

"அப்புறம் என்ன..? நான் உன்னை தொடுறது புடிக்கலையா.?"

"ப்ச்.. அதான் ஒன்னுல்லன்னு சொல்றேன்ல.. விடு.."

"சரி சரி கோவிச்சுக்காத.. சும்மா.. வெளையாட்டுக்கு..!!"

"ம்ம்.. கோவம்லாம் ஒன்னும் இல்ல.."

"நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத அசோக்.. சும்மா சொல்லக் கூடாது.. நச்சு பீஸ்டா நீ..!! பொண்ணா பொறந்திருக்க வேண்டியவன்..!! த்தா.. ஜஸ்ட் மிஸ்ல பையனா போயிட்ட..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்.. நீ மட்டும் பொண்ணாருந்திருந்தா எனக்கு எவ்வளவு வசதியா இருந்திருக்கும் தெரியுமா..??" புருஷோத்தமன் ஏக்கமாக சொல்ல,

"ம்ம்ம்.." அசோக் அவஸ்தையாக நெளிந்தான்.

"நீ பொண்ணா பொறந்திருந்தேன்னு வச்சுக்கோ.. காலேஜ்ல வேற எவளுக்கும் மார்க்கெட் இருந்திருக்காது.. எல்லாரையும் அடிச்சு காலி பண்ணிருக்கலாம்.. பசங்கல்லாம் உன் பின்னாடிதான் திரிஞ்சிருப்பானுக.. நாய் மாதிரி ஜொள்ளு வுட்டுக்கிட்டு..!!"

சொல்லிக்கொண்டே புருஷோத்தமன் இன்னொரு சேரை இழுத்துப் போட்டு, அசோக்கிற்கு எதிரே அமர்ந்தான். சிகரெட் ஒன்றை பற்ற வைத்துக்கொண்டு, புகையை கவலை இல்லாமல் அசோக்கின் முகத்தில் ஊதினான். அசோக் சிகரெட் நெடிக்கு முகத்தை சுளிக்க, புருஷோத்தமனோ அதை கண்டுகொள்ளாமல் கேட்டான்.
"எத்தனை மணிக்குடா எந்திரிச்ச..?"

"நா..நாலரைக்கு.."

"த்தா.. வாங்குன மார்க்குலாம் பத்தாதாடா உனக்கு..? நாலரை மணிக்கு வேற எந்திரிச்சு.. அப்படி படிச்சு மார்க்கு வாங்கனுமா..? ஏண்டா இப்படி மார்க்கு மார்க்குன்னு வெறி புடிச்சு அலையுற..?"

"லாஸ்ட் எக்ஸாம்டா.. நல்லா பண்ணனும்..!!"

"ஓஹோ..? பண்ணு பண்ணு.. நல்லா பண்ணு..!!"

"நீ படிக்கலையா..?"

"ஹாஹா.. படிக்கவா..? போடாங்..!!"

"அப்புறம் எதுக்கு எழுப்பி விட சொன்ன..?"

"எழுப்பி விட சொன்னது படிக்கிறதுக்கு இல்ல டியர்.."

"அப்புறம்..?"

"பிட் பிரிப்பேர் பண்றதுக்கு..!!"

கண்சிமிட்டியவாறே சொன்ன புருஷோத்தமன், வாயில் சிகரெட்டை வைத்து புகை விட்டுக்கொண்டே, பாடப்புத்தகத்தை எடுத்தான். புரட்டினான். எந்தெந்த கொஸ்டின் எல்லாம் எக்ஸாமுக்கு வரும் என்று தலையை சொரிய ஆரம்பித்தான்.

அப்புறம் அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இருவருமே அவரவர் வேலையில் மூழ்கிப் போயினர். எட்டு மணி ஆனதும் அசோக் மெஸ்சுக்கு சென்று இட்லி தின்று திரும்ப வந்தான். புருஷோத்தமன் சாப்பிடவே செல்லவில்லை. பிட் கிழிப்பதில் பிஸியாக இருந்தான்.

ஒன்பதரை மணி வாக்கில் அசோக் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்தான். புத்தகத்தை விட்டு நிமிர்ந்து பார்த்த புருஷோத்தமன், அசோக்கிடம் கேட்டான்.

"என்னடா கெளம்பிட்டியா..?"

"ம்ம்.. ஆமாம்..!! நீ கெளம்பலையா புருசு..?"

"போ போ.. பின்னாலேயே வர்றேன்.."

அசோக் வேறு சட்டை மாட்டிக் கொண்டான். பேன்ட் அணிந்துகொண்டான். அதை அணிந்ததுமே அவனுடைய வலது தொடையை ஏதோ கீறியது. என்னவென்று அறிந்து கொள்ள, பேன்ட் பாக்கெட்டுக்குள் கை விட்டுப் பார்த்தான். பார்த்தவன் உடனே பதறிப் போனான். உள்ளே இருந்து இரண்டு காண்டம் பாக்கெட்டுகள் கையோடு வந்தன..!!

"ஐயே.. ச்சீய்...!!!"

என்று முகத்தை சுளித்து கத்தியவாறு, அசோக் கையிலிருந்தவைகளை தரையில் வீசி எறிந்தான். புகை வழியும் வாயோடு திரும்பிப் பார்த்த புருஷோத்தமனுக்கு ஓரிரு வினாடிகள் கழித்துத்தான் என்ன நடந்ததென்று புரிந்தது. உடனே அசோக்கைப் பார்த்து கிண்டலாக ஒரு சிரிப்பு சிரித்தான்.

"ஹஹா.. காண்டந்தானடா..? ஏதோ கருந்தேளை கைல புடிச்ச மாதிரி கத்துற..?"

"ப்ச்.. எத்தனை தடவை சொல்லிருக்கேன் புருசு.. என் ட்ரெஸ் எடுத்து போடாதன்னு..?" அசோக் இப்போது சற்றே எரிச்சலாக சொன்னான்.

"விட்றா.. நேத்து நைட்டு ஏதோ அவசரத்துல.. உன் பேன்ட்னு தெரியாம போட்டுட்டு போயிட்டேன்.. அதுக்கு என்ன இப்போ..?"

"சரி.. போட்டதுதான் போட்டுட்டு போன.. இதெல்லாம் எதுக்கு என் பாக்கெட்டுல வைக்கிற..?"

"அவினாசி ரோட்டுல அம்சமா ஒரு ஐட்டம் இருக்குது.. வாடா மச்சி..'ன்னு.. நம்மாளு நேத்து கால் பண்ணுனான் அசோக்..!! நானும் ரொம்ப ஆர்வமா நாலு பாக்கெட்டு வாங்கிட்டு போனேன்.. போய்ப்பாத்தா.. அது சரியான சப்பை பீஸ்..!! வாங்குனதுல ரெண்டு பாக்கெட் எச்சா போயிடுச்சு..!!"

"எச்சா போனா என்ன..? அந்த அசிங்கத்தை அங்கேயே விட்டெறிஞ்சுட்டு வர்றதுதான..?"

"என்னது.. அசிங்கமா..? இன்னைக்கு நம்ம நாடு இருக்குற நெலமைக்கு ஒவ்வொருத்தனுக்கும் இதுதாண்டா ரொம்ப ரொம்ப அவசியம்..!! அவன் அவன் இதை மாட்டிக்கிறதுக்கு நமக்கு ஒரு சான்ஸ் கெடைக்காதான்னு ஏங்கிட்டு இருக்கானுக.. அசிங்கமாம்ல அசிங்கம்..??"

கிண்டலாக சொன்ன புருஷோத்தமன் எழுந்து வந்து, கீழே கிடந்த இரண்டையும் பொறுக்கி தன் பேன்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். மீண்டும் சென்று சேரில் அமர்ந்து கொண்டு பிட் கிழிக்க ஆரம்பித்தான். அதை பார்த்த அசோக், சற்றே அருவருப்புடன் கேட்டான்.

"ஏண்டா எப்போ பார்த்தாலும் அதை பாக்கெட்லயே வச்சுட்டு சுத்துற..?"

"ஆப்பர்ச்சூனிட்டி எப்போ வேணாலும் வரும் மச்சி.. நாமதான் அதை கபால்னு புடிச்சுக்க ரெடியா இருக்கணும்.. என்ன.. புரியுதா..?"

"கருமம்.." அசோக் வாய்க்குள் முனக,

"என்னது..??" என்றான் புருஷோத்தமன் சத்தமாக.

"ஒண்ணுல்ல.."

சலிப்பாக சொன்ன அசோக் அந்த பேன்ட்டை அவிழ்த்து வீசி விட்டு, வேறு பேன்ட் எடுத்து அணிந்து கொண்டான். டக்-இன் செய்து பெல்ட் மாட்டிக் கொண்டான். திருநீறு பூசிக்கொண்டான். கிளம்புவதற்கு முன் ஒரு முறை கண்ணாடி முன் நின்று தன் முகத்தை பார்த்தான்.

அப்பழுக்கற்ற அழகான வட்ட முகம் அசோக்கிற்கு. எப்போதுமே மீசை, தாடியை சுத்தமாக மழித்து மழுமழுவென்று வைத்திருப்பான். நடுவகிடு எடுத்து படிய வாரியிருந்த தலையில், சற்று எக்ஸ்ட்ராவாகவே எண்ணெய் மினுக்கும். கண்ணுக்கு கொடுத்திருந்த கண்ணாடியும், நெற்றியில் விபூதி கீற்றும், கழுத்தை சுற்றி நெருக்கமாக இருந்த ருத்ராட்சையும் அவன் ஒரு பழம் என்பதை பார்ப்பவர்களுக்கு பறை சாற்றும். உருண்டையாகவும், கூர்மையாகவும் மூக்கு.. ஆப்பிள் துண்டங்கள் போல சிவந்த அதரங்கள்.. அமுல் பேபியைப்போல புசுபுசுவென கன்னங்கள்..!! அவனை நீங்கள் பார்த்தால்.. 'பெண்ணாகப் பிறந்திருக்க வேண்டியவன்' என்று புருஷோத்தமன் சொன்னதில் ஒரு நியாயம் இருக்கிறது என்று உங்களுக்கு தோன்றும்..!!

அசோக் அறையை விட்டு வெளியே வந்தான். அறைக்கு வெளியில் இருந்த வராண்டாவிலும் சரி.. ஹாஸ்டலின் கீழ்த்தளத்திலும் சரி.. கல்லூரிக்கு செல்லும் சாலையிலும் சரி.. எக்ஸாம் ஹாலுக்கு வெளியேயும் சரி.. அவனுடன் படிக்கும் மாணவ, மாணவியர்கள் எக்கச்சக்கமாய் அவனுடைய கண்களில் தென்பட்டார்கள்..!!

'சாகப்போற நேரத்தில் சங்கரா சங்கரா..' என்பது மாதிரி, கடைசி நேரத்தில் புத்தகத்துடன் முட்டிக்கொண்டு சிலர்..!! 'ஏய் நீ அதை படிக்கலையா.. நான் படிச்சுட்டேன்பா.. இன்னைக்கு அந்த கொஸ்டின் கண்டிப்பா கேப்பானுக பாரு..' என்று அருகில் இருப்பவர்களுக்கு கிலி கிளப்பிக்கொண்டு சிலர்..!! 'ஆல் தி பெஸ்ட் டி.. நல்லாப் பண்ணு..' என்று கைகள் குலுக்கி வாழ்த்து தெரிவித்தவாறு சிலர்..!!

ஆனால் அவர்கள் யாருமே அசோக்கை கண்டு கொள்ளவில்லை. அசோக்கும் யாரையுமே ஏறிட்டுப் பார்க்கவில்லை. ஒரு கையில் கால்குலேட்டரும்.. இன்னொரு கையில் ஸ்கேல், பென்சில், பேனாவும்.. மனதிலோ படித்ததை எல்லாம் அசை போட்டபடியும்.. தலையை குனிந்தவாறே அவர்களுக்கு இடையில் புகுந்து நடந்து சென்றான்.

எக்ஸாம் ஹாலுக்குள் நுழைந்ததுமே அசோக்குடைய கண்கள், அவசரமாய் அவளை தேடின. தேடிப்பார்த்த கண்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவள் இன்னும் வந்திருக்கவில்லை..!! சற்றே சலிப்பாக அசோக் அவனுடைய இடத்தில் சென்று அமர்ந்து கொண்டான்.

பத்து மணி ஆனதும் வெளியே பெல் அடித்தது. உடனே ஹால் சூப்பர்வைசர் வினாத்தாள்களை எல்லோருக்கும் வழங்க ஆரம்பித்தார். அவளையோ இன்னும் ஆளைக்காணோம்..!! 'ஏன்னா ஆயிற்று அவளுக்கு.. ஏன் இன்னும் வரவில்லை..?' அசோக்கை இப்போது ஒருவித கவலையும், பதற்றமும் தொற்றிக் கொண்டது. அந்தப் பதற்றத்துடனே வினாத்தாளை வாங்கி மேலோட்டமாக மேய்ந்தான். 'எல்லாம் எளிதான வினாக்கள்தான்..!!'

அவன் மனது அவ்வாறு நிம்மதி அடைந்து கொண்டிருக்கும்போதுதான், எக்ஸாம் ஹாலுக்குள் புயல் வீசியது மாதிரி அவள் நுழைந்தாள். காற்றில் பறக்கும் கூந்தலும், துப்பட்டாவுமாய்.. கண்ணைப் பறிக்கும் அழகும், வடிவமுமாய்..!! அவள் வந்ததுமே அந்த அறையில் ஒரு புதுவித நறுமணம் பரவ ஆரம்பித்தது. விடைத்தாள் பார்த்து கவிழ்ந்திருந்த அனைவருமே, விழிகள் சுழற்றி அவளை பார்த்தார்கள். அவள் பெயர் நந்தினி..!!! கல்லூரியில் பலருடைய தூக்கம் கேட்டுப் போனதற்கு முழு முதற் காரணகர்த்தா..!!

தாமதமாக வந்ததற்கு ஹால் சூப்பர்வைசரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டவள், விடைத்தாளையும், வினாத்தாளையும் பெற்றுக் கொண்டு, 'டக்.. டக்.. டக்..' என ஹைஹீல்ஸ் ஒலி கிளப்ப, தனது இடத்தை நோக்கி நடந்தாள். ஆண்கள் அனைவரும் தங்களை கடந்து செல்லும் அவளை ஏக்கமாக ஏறிட்டு பார்த்தார்கள். தூரத்தில் அமர்ந்திருந்த அசோக்கும் தன்னை நோக்கி வரும் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

முகத்தில் ஒருவித கவர்ச்சிப் புன்னகையுடனே நடந்து வந்தவள்.. அசோக் அமர்ந்திருந்ததற்கு அருகில் இருந்த வரிசையில்.. அவனுக்கு சற்று முன்னதாகவே இருந்த அவளது இடத்தில்.. அமர்ந்து கொண்டாள்..!! அசோக் அதன்பிறகும் 'ஆ'வென பிளந்த வாயுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சுடிதார் மறைக்காத அவளுடைய செழுமையான முதுகுப் பிரதேசத்தையும்.. அங்கே தவழும் அவளது கார்கூந்தலையும்..!! பார்வையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அவனுக்கு தோன்றவே இல்லை.

"ஹலோ சார்.. எக்ஸாமுக்கு எதுவும் படிக்கலையா..?"

ஹால் சூப்பர்வைசர் அசோக்கின் முகத்துக்கு முன்பாக கையை நீட்டி அசைத்து, அவனது கவனத்தை கலைத்தவாறே கேட்டார். அசோக் உடனே அவசரமும், பதற்றமுமாய் சொன்னான்.

"இல்ல இல்ல.. படிச்சிருக்கேன்..!!"

"அப்படினா.. எழுதுங்க..!! எங்கயோ பராக்கு பாத்துட்டு இருக்கீங்க..?"

"ஸா..ஸாரி..!!"

பரிதாபமாக சொன்ன அசோக், தலையை கவிழ்த்துக் கொண்டான். மனதெங்கும் நிறைந்திருந்த நந்தினியை வேண்டா வெறுப்பாக விரட்டிவிட்டு, வினாத்தாள் மீது பார்வையை வீசினான். ஸ்கேல் பென்சில் எடுத்து விடைத்தாளில் மார்ஜின் போட்டான்.



அத்தியாயம் 2

எல்லாக் கேள்விகளுக்கும் விடையளித்துவிட்டு, அசோக் மணிக்கட்டு திருப்பி நேரம் பார்த்தான். இன்னும் பத்து நிமிடங்கள் பாக்கி இருந்தது. மிச்சம் இருக்கிற நேரத்தில், எழுதிய விடைகளை ஒருமுறை சரி பார்க்கலாம் என்று எண்ணினான். அவ்வப்போது திரும்பி நந்தினியின் முதுகை வெறித்தவாறே, எழுதியவற்றை முதல் பக்கத்தில் இருந்து சரி பார்த்தான்.

நந்தினி திடீரென எழுந்து கொண்டாள். கட்டி வைத்திருந்த விடைத்தாளை ஹால் சூப்பர்வைசரிடம் நீட்டினாள். ஹாலுடைய எக்ஸிட் நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அதை கவனித்த அசோக் இப்போது பரபரப்பானான். அவசரமாய் விடைத்தாள்களை அள்ளி.. நூலால் கட்டி.. சூப்பர்வைசரிடம் ஒப்படைத்துவிட்டு, நந்தினியின் பின்னால் ஓடினான். ஹாலில் இருந்து வெளிப்பட்டதுமே,

"நந்தினி.." என்று அழைத்தான். திரும்பி பார்த்த நந்தினி,

"ஹாய் அசோக்.." என்று எளிறுகள் தெரியுமாறு அழகாக சிரித்தாள்.

"எக்ஸாம் நல்லா பண்ணுனியா..?"

"ம்ம்.. ஏதோ பரவால..!! நீ எப்படி பண்ணுன..?"

"ம்ம்.. நல்லா பண்ணிருக்கேன்..!!"

"ஹாஹா.. உன்கிட்ட போய் கேட்குறேன் பாரு.. நீ நல்லா பண்ணலைன்னாத்தான் ஆச்சரியம்..!! அப்புறம்.. ஊருக்கு என்னைக்கு கெளம்புற..?"

"இன்னைக்கேதான்.. அதான் எக்ஸாம்லாம் முடிஞ்சதுல்ல..?"

"இல்லப்பா.. பாய்ஸ்லாம் நாலஞ்சு நாள் இங்கயே டேரா போட்டு.. நல்லா என்ஜாய் பண்ணிட்டு.. அப்புறமா ஊருக்கு போற மாதிரி ப்ளான் பண்ணிருக்காங்க.. அதான் கேட்டேன்..!!"

"ஓ..!!"

"ஓ'வா..? உனக்கு தெரியாதா..?"

"ம்ஹூம்.. தெரியாது..!! நா..நான் இன்னைக்கே கெளம்புறேன்..!!" அசோக் ஒருமாதிரி பரிதாப குரலில் சொன்னான்.

"ம்ம்ம்.. ஓகே அசோக்..!! ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் கெரியர்.. ஸீ யூ லேட்டர்..!!" புன்னகையுடன் சொன்னவாறு நகர முயன்ற நந்தினியை, அசோக் அவசரமாக தடுத்தான்.

"நந்தினி நந்தினி.. ஒரு நிமிஷம்..!!"

"ம்ம்..?"

"உ..உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.." அசோக் தயக்கமாக சொல்ல,

"எ..என்ன பேசணும்..?" நந்தினியின் முகத்தில் இப்போது குழப்ப ரேகைகள்.

"கேண்டீன் போயிடலாமா..?"

"இ..இல்ல அசோக்.. இப்போ எனக்கு டைம் இல்ல..!! என்ன சொல்லனும்னு இங்கயே கொஞ்சம் குயிக்கா சொல்லிடேன்..!!"

"இங்க வேணாம் நந்தினி.. கேண்டீன் போயிடலாம்.. ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்..!!"

"ப்ச்.. டைம் இல்ல அசோக்.. நான் போய் திங்க்ஸ்லாம் பேக் பண்ணனும்.. ஊருக்கு கெளம்பனும்..!!"

"ப்ளீஸ் நந்தினி..!! ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்..!! ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!"

அசோக் வெட்கம் இல்லாமல் கெஞ்ச, நந்தினி அவஸ்தையாய் நெளிந்தாள். 'ப்ச்..' என்று சலிப்படைந்தாள். அப்புறம் சற்றே கண்டிப்பான குரலில் சொன்னாள்.

"ஓகே.. ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்தான்.. சரியா..?"

"ம்ம்ம்.. சரி நந்தினி.. தேங்க்ஸ்..!!"

எக்ஸாம் ஹாலில் இருந்து நடந்தால், இரண்டே நிமிடங்களில் காலேஜ் கேண்டீன் வந்துவிடும். கேண்டீன் சாப்பாடு மஹாமட்டமாக இருக்கும். அதனால் கல்லூரி நாட்களிலேயே காத்தாடும். இப்போது எக்ஸாம் நேரம் வேறு அல்லவா..? டேபிள்களில் ஈ, கொசுவை தவிர வேறெந்த பிராணியையும் காணோம். உள்ளே நுழைந்ததும்,

"என்ன சாப்பிடுற நந்தினி..?" கேட்டான் அசோக்.

"அதெல்லாம் ஒன்னும் வேணாம் அசோக்.. நீ மேட்டரை சொல்லு..!!"

"இல்ல இல்ல.. நீ ஏதாவது சாப்பிடனும்.. ப்ளீஸ்.. எனக்காக..!!"

"ப்ச்..!! சரி.. நீ என்ன சாப்பிடுறியோ அதுவே எனக்கும் ஆர்டர் பண்ணு..!!"

"ஜூஸ் சாப்பிடலாமா..? குக்கூ மில்க்ஷேக்..?? ம்ம்..?? ஓகேவா..?"

"ம்ம்.. ஓகே..!!"

நந்தினி சொல்ல அசோக் உற்சாகமானான். கவுன்ட்டருக்கு சென்று இரண்டு மில்க் ஷேக்குகள் ஆர்டர் செய்து வந்தான். அதுவரை நந்தினி பொறுமை இல்லாமல் காத்திருந்தாள். அவன் திரும்ப வந்து அமர்ந்ததுமே ஆரம்பித்தாள்.

"ம்ம்.. என்ன மேட்டர்னு சீக்கிரம் சொல்லு அசோக்..."

"அ..அது.. அது.."

"ம்ம்ம்..??"

"வே..வேற ஒண்ணுல்ல நந்தினி.. அந்த மேட்டர்தான்.."

"எந்த மேட்டர்..??"

"அதான்.. போ..போன வாரம் உன்கிட்ட சொன்னனே..? எ..என் மனசுல இருக்குறது.."

அசோக் தயங்கி தயங்கி சொல்லி முடிக்க, நந்தினி ஓரிரு வினாடிகள் அவனையே ஒருமாதிரி நம்ப முடியாமல் பார்த்தாள். அப்புறம் 'ப்ச்..' என்றவாறு, இமைகளை மெல்ல மூடி, இடதும் வலதுமாய் சலிப்பாக தலையசைத்தாள். நிமிர்ந்து அசோக்கின் கண்களை கூர்மையாக பார்த்தவள், சற்றே எரிச்சலான குரலில் சொன்னாள்.

"ஹே.. கமான் அசோக்.. நான்தான் அன்னைக்கே என் முடிவை சொல்லிட்டனே.. இன்னுமா நீ உன் மனசை மாத்திக்கலை..?"

"இல்ல நந்தினி.. ஒரு வாரம் கழிச்சு சொல்றேன்னு சொன்ன..?"

"ஒரு வாரம் கழிச்சு சொல்லு'ன்னு சொன்னது நீ..!! நான் அன்னைக்கே எல்லாம் தெளிவாத்தான் சொன்னேன்..!!"

"சரி.. இந்த ஒரு வாரம் அதைப் பத்தி நீ எதுவும் யோசிக்கலையா..?"

"ப்ச்.. இதுல யோசிக்கிறதுக்குலாம் எதுவும் இல்ல அசோக்.. என் முடிவு எப்போவும் மாறாது.. அன்னைக்கு சொன்னதுதான் இன்னைக்கும்..!! எனக்கு உன் மேல லவ் இல்லை.. இல்லை.. இல்லை..!!"

நந்தினி முகத்தை கடுகடுப்பாக வைத்துக்கொண்டு சொன்னாள். அசோக்கிற்கு இப்போது அவனுடைய இதயத்தின் ஒவ்வொரு அணுவிலும், ஒரு வித வேதனை உணர்வு பரவுவதை தெளிவாக உணர முடிந்தது. அவனுடைய முகமும் இப்போது களையிழந்து வாடிப்போனது. ரொம்பவே பரிதாபமான குரலில் கேட்டான்.

"ஏன் நந்தினி.. உனக்கு என்னை புடிக்கலையா..?"

"ஆமாம்.. புடிக்கலை..!! போதுமா.. ஹேப்பி நவ்..?? கெளம்பட்டுமா நான்..?? ம்ம்..??"

நந்தினி முகத்தில் அறைந்த மாதிரி சொன்னாள். சேரில் இருந்து எழுந்து கொள்ள முயன்றாள். அசோக் எழவில்லை. அப்படியே தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்தவன், ஒருவித ஏக்கமான குரலில் கேட்டான்.

"ஏ..ஏன்..??"

"என்ன ஏன்..?" நந்தினி எரிச்சலாக அசோக்கை முறைத்தாள்.

"ஏன் என்னை புடிக்கலை..?" அசோக் பாவமாக கேட்க,

"உஷ்ஷ்ஷ்.. ப்பா..!!!" என்று நந்தினி இப்போது அவஸ்தையாக உஷ்ண மூச்சு விட்டாள்.

"சொல்லு நந்தினி.. ஏன் என்னை புடிக்கலை..?"

"புடிக்கலைன்னு சொன்னா விட மாட்டியா..? ஏன் எதுக்குன்னு காரணம்லாம் சொல்லனுமா..?"

"ஆமாம்.."

"என்னால காரணம்லாம் சொல்ல முடியாது.. புடிக்கலை.. அவ்ளோதான்..!!"

"ப்ளீஸ் நந்தினி.. நான் உன்னை உண்மையா நேசிக்கிறேன்.. மனசுல இருக்குற காதல் உண்மையா இருந்தா, அதுவே உன்னை என்கூட சேர்த்து வைக்கும்னு நம்புனேன்..!! என் காதலை நீ வேணான்னு சொல்றதே எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு.. ஆனா.. எதுக்காக என்னை ரிஜக்ட் பண்றன்னு கூட தெரிஞ்சுக்கலைன்னா.. எனக்கு தலையே வெடிச்சுடும்..!!"

"ஓஹோ..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கனுமா..?"

"ஆ..ஆமாம்.."

"சரி.. என்னவா இருக்கும்னு நீயே கொஞ்சம் யோசிச்சு பாரேன்.."

"எனக்கும் அதுதான் புரியலை.. என்னை ஏன் உனக்கு புடிக்கலை..?? எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்ல.. நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருப்பேன்.. தேவையில்லாத எந்த பிரச்னைக்கும் போகமாட்டேன்..!! நல்லா படிக்கிற பையன்.. உனக்கே தெரியும்ல.. நாந்தான யுனிவர்சிட்டி டாப்பர்..?"

"ம்ம்ம்.. தெரியும்.."

"அப்புறம் என்ன..?? நா..நான்.. நான் அழகா இல்லையா..?? நான் என் அம்மா மாதிரின்னு அப்பா அடிக்கடி சொல்வாரு.. என் அம்மா எவ்வளவு அழகுன்னு உனக்கு தெரியுமா நந்தினி..??"

"ஹ்ஹ.. உன் அழகுக்கு என்ன கொறைச்சல்..? ஐஸ்வர்யாராய்க்கு இருக்குற ஒரே காம்படிஷன் நீதான்.." நந்தினியின் நக்கலை கூட புரிந்து கொள்ளாமல் அசோக் தொடர்ந்து பேசினான்.

"வேற என்ன நந்தினி..? பணமா..?? என் அப்பாவுக்கு நான் ஒரே புள்ளை நந்தினி.. எங்களுக்கு கோடிக்கணக்குல சொத்து இருக்கு.. நான்தான் ஒரே வாரிசு தெரியுமா..? என்னை மேரேஜ் பண்ணிக்கிட்டா.. நீ எந்த குறையும் இல்லாம நல்லா வசதியா வாழலாம்..!!"

"ப்ச்.. அசோக்.. நானும் ஒன்னும்.. இல்லாத வீட்டு பொண்ணு இல்ல..!! கார், பங்களான்னு எங்க வசதிக்கும் எந்த குறைச்சல் இல்ல.. அதுலாம் நான் பெரிய மேட்டரா நெனைக்கலை..!!"

"அப்புறம் என்ன நந்தினி..? வேற என்னதான் காரணம்..??"

"சொன்னா உனக்கு புரியாது அசோக்.. விடு.."

"பரவால.. சொல்லு.."

"இங்க பாரு அசோக்.. நான் சொல்லிருவேன்.. அப்புறம் ஏண்டா கேட்டோம்னு உனக்குத்தான் கஷ்டமா இருக்கும்.."

"ஹ்ஹ.. என் மேல லவ்வே இல்லைன்னு சொல்லிட்ட..? அதைவிட என்ன கஷ்டம் இருந்திட போகுது..? சும்மா சொல்லு..!!"

"ஓ.. காட்..!!" நந்தினி அவஸ்தையாக நெளிய,

"ப்ளீஸ் நந்தினி.. சொல்லு.." அசோக் அவளை கட்டாயப் படுத்தினான்.

"ஆஆஹ்.. அதை எப்படி சொல்றது..? எ..எனக்கு.. எனக்கு உன்னை பாத்தா அந்த லவ் ஃபீலிங்கே வரலை.."

"அதான் ஏன்னு கேக்குறேன்..?"

"யூ டோன்ட் லுக் மேன்லி..!! ஓகே..?"

நந்தினி பட்டென சொல்லி விட, அசோக் அதிர்ந்து போனான். நம்பமுடியாமல் நந்தினியின் முகத்தையே திகைப்பாய் பார்த்தான். அவனுடைய வாய் குழறியது.

"ந..நந்தினி.."

"உன் ஃபேஸ்.. உன் ஃபிஸிக்.. உன் நடை.. உன் பேச்சு.. உன்னோட சாஃப்ட் நேச்சர்.. எல்லாத்துலயுமே ஒரு பொம்பளைத்தனம்தான் தெரியுது.. ஒரு மேன்லினஸே இல்ல..!! உ..உன்னைப் பாத்தா எந்தப் பொண்ணுக்குமே லவ் வராது அசோக்..!!"

நந்தினி படபடவென சொல்ல, அசோக் அப்படியே இடிந்து போனான். இப்போது அவனுடைய கண்களில் கொஞ்சம், கொஞ்சமாய் நீர் தேங்க ஆரம்பித்தது. நந்தினியின் முகத்தையே ஏக்கமாக பார்த்தவன், பரிதாபமாக கேட்டான்.

"அ..அப்போ நான் ஆம்பளையே இல்லைன்னு சொல்றியா நந்தினி..?"

"ப்ச்.. நான் அப்படி சொல்லலை.. அந்த மாதிரி நீ நடந்துக்கலைன்னுதான் சொல்றேன்..!!"

நந்தினி வெறுப்பாக சொல்ல, அசோக்கின் கண்களில் இருந்து பொலபொலவென நீர் கொட்ட ஆரம்பித்தது. துடிதுடித்த உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டான். அவனுடைய கண்களில் கண்ணீரை பார்த்ததும், நந்தினி இப்போது சற்று பதறிப் போனாள். தன்னுடைய குரலில் மென்மையை குழைத்துக் கொண்டு சொன்னாள்.

"ஹேய்.. அசோக்.. நான் உன்னை ஹர்ட் பண்றதுக்காக சொல்லலை..!! ப்ளீஸ்.. அண்டர்ஸ்டாண்ட் மீ..!! ப்ச்.. இதுக்குத்தான் நான் சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன்னு சொன்னேன்.. நீதான் கேட்கலை..!! ப்ளீஸ் அசோக்.. அழாத.. நான் சொன்னது உன்னை ஹர்ட் பண்ணிருந்தா.. ஐம் ரியல்லி வெரி ஸாரி..!!"

"ம்ம்ம்... அதுலாம் ஒண்ணுல்ல.." மூக்கை உறிஞ்சிக்கொண்ட அசோக், புறங்கையால் கண்களை துடைத்துக் கொண்டான்.

"ஸா..ஸாரி அசோக்.."

"ப..பரவால நந்தினி.. நீ எதுக்கு ஸாரி கேக்குற..? நீ சொன்னதுல எந்த தப்பும் இல்ல..!! நீ ஒன்னும் அதுக்காக ஃபீல் பண்ணாத..!! சரி.. உனக்கு டைமாச்சு.. நீ கெளம்பு..!!"

"அ..அசோக்.."

"கெளம்பு நந்தினி..!! ஐ விஷ் யூ ஆல் சக்சஸ் இன் யுவர் லைஃப்..!! பை..!!"

அசோக் இறுக்கமான குரலில் சொல்ல, நந்தினி மெல்ல சேரில் இருந்து எழுந்துகொண்டாள். ஒரு மாதிரி வெறித்த பார்வை பார்த்துக் கொண்டிருந்த அசோக்கையே, சில வினாடிகள் பாவமாய் பார்த்தாள். அப்புறம் 'பை அசோக்..' என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு, திரும்பி நடந்தாள். அசோக்கோ உணர்ச்சியற்ற ஜடம் மாதிரி அங்கேயே அமர்ந்திருந்தான். சர்வர் பையன் வந்து வைத்து விட்டு சென்ற, மில்க் ஷேக்குகள் இரண்டிலும் ஈ மொய்ப்பதையே வெகுநேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் அதை தொட்டுக் கூட பார்க்காமல், பில்லுக்கு பணம் கொடுத்துவிட்டு வெளியே வந்தான்.

அசோக் ஹாஸ்டலை அடைந்தபோது, ஹாஸ்டலின் கீழ்த்தளம் ஒரே கூச்சலும், கும்மாளமுமாய் இருந்தது. எக்சாம்கள் எல்லாம் முடிந்து போன சந்தோஷத்தை, அதற்குள்ளாகவே சிலர் பீர் குடித்து கொண்டாட ஆரம்பித்திருந்தார்கள். ஸ்பீக்கர்களில் ஒலித்த விஜய் பாட்டுக்கு, லுங்கியுடன் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். யாரோ ஒரு பையனை நான்கைந்து பேர் விரட்டி விரட்டி அடியை போட்டார்கள். அவனும் சிரித்துக்கொண்டே அவர்களிடம் அடி வாங்கினான். ஒரு சிலர் ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள். 'பாக்கலாம்டா மச்சான்..' என்று பார்ப்பவர்களை எல்லாம் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் பிரிவை தாங்க முடியாமல் அழுதார்கள்.

ஒவ்வொருவரையும் தலையை திருப்பி திருப்பி பார்த்தவாறு, மொத்தக் கும்பலுக்கும் நடுவே அசோக் பரிதாபமாக நின்றிருந்தான். யாருமே அவனை கண்டுகொள்ளவில்லை. அவனுடைய கண்களில் அவ்வப்போது நீர் வடிவதும், அதை அவன் புறங்கையால் துடைத்துக் கொள்வதும்.. அதைக்கூட யாருமே கவனித்தார்கள் இல்லை..!! சுற்றி இருப்பவர்கள் அனைவருமே சந்தோஷமாக இருக்க, தான் மட்டும் அந்தக் கூட்டத்தில் இருந்து தனித்து விடப்பட்டதை வேதனையுடன் உணர்ந்தான்..!! அவனுடைய நெஞ்சு குமுறியது.. உதடுகள் விம்ம, கண்களில் கண்ணீர் பொங்கியது..!! 'ஏன்டா உங்க யாருக்குமே என்னை புடிக்க மாட்டேன்னுது..??' என்று அசோக்கிற்கு சத்தம் போட்டு கத்த வேண்டும் போலிருந்தது..!!



அத்தியாயம் 3

"ஏ தில்.. தீவானா.. தீவானா.. ஏ தில்.. தீவானே னே.. முஜ்கோ பி.. கர் தாலா.. தீவானா.."

ஷாருக்கான் பட ஹிந்திப்பாடலை மிகவும் குஷியாக பாடிக்கொண்டே.. மைக்கேல் ஜாக்சன் மாதிரி ஸ்டெப் போட்டுக்கொண்டே.. புருஷோத்தமன் ஹாஸ்டல் வராண்டாவில் நடந்து வந்து கொண்டிருந்தான். 'நடுவுல நடுவுல மானே தேனே பொன் மானே எல்லாம் போட்டுக்க..' என்பது மாதிரி.. ஹிந்தி லிரிக்சின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில்.. ஆண், பெண்ணின் அந்தரங்க உறுப்புகளை குறிக்கும் வல்கரான தமிழ் வார்த்தைகளை இவனாக செருகிக் கொண்டான். வராண்டாவில் எதிர்ப்பட்டவர்கள்..

"எக்ஸாம் எப்படிடா பண்ணிருக்குற..?" என்று கேட்க,

"ஆன்சர்லாம் அப்படியே பிட்டு பிட்டு வச்சுட்டேன் மச்சி.." என்றான்.

கதவை தள்ளி அறைக்குள் நுழைந்தவன், ஒரு கணம் திகைத்துப் போனான். உள்ளே அசோக் அழுகிற விழிகளுடன் அமர்ந்திருந்தான். இவனைப் பார்த்ததும் அவசரமாய் தன் கண்களை துடைத்துக் கொண்டான். அசோக்கை அவன் பலமுறை எவ்வளவோ கேவலமாக திட்டியிருக்கிறான். எட்டி எட்டி உதைத்திருக்கிறான். எல்லாவற்றையும் அசோக் அமைதியாக தாங்கிக் கொள்வானே தவிர, அவன் இப்படி அழுது இப்போதுதான் புருஷோத்தமன் முதன்முறையாக பார்க்கிறான். சிரித்தபடியே வந்த புருஷோத்தமனின் முகம், பட்டென சீரியசாகிப் போனது.

"ஏய்.. அசோக் டியர்.. என்னாச்சு..??" என்றான்.

"எ..என்னாச்சு..? ஒ..ஒன்னுல்லையே..?"

"அப்புறம் ஏன் அழுவுற..?"

"அழுதனா.. இ..இல்லையே.."

"ப்ச்.. நடிக்காதடா.. நான்தான் பாத்துட்டனே..? என்னாச்சு.. எக்ஸாம் ஒழுங்கா எழுதலையா செல்லம்..? எல்லா கொஸ்டினும் அட்டன்ட் பண்ண டைம் பத்தலையா..?"

"அ..அதுலாம் ஒண்ணுல்ல.. எக்சாம்லாம் நல்லாதான் எழுதிருக்கேன்.."

"அப்புறம் என்ன..? என்னை பிரிஞ்சு போறேன்னு அழுவுறியா..? அப்டிலாம் நெனைக்க மாட்டியே நீ..?? என் தொல்லை வுட்டதுன்னு சந்தோஷமால இருக்கணும்..!!"

"ப்ச்.. அதுலாம் இல்ல புருசு.."

"அப்புறம் என்னடா.. ஏன் அழுவுற..? சொல்லித் தொலையேன்.."

அசோக் அதன்பிறகும் கொஞ்ச நேரம் தயங்கினான். சமாளிக்க முயன்றான். ஆனால் விஷயத்தை ரொம்ப நேரம் அவனால் மறைக்க இயலவில்லை. புருஷோத்தமன் துருவித்துருவி கேட்டது ஒரு காரணம் என்றால், அசோக்கிற்கும் அவனுடைய சோகத்தை யாரிடமாவது சொல்லி அழவேண்டும் போலிருந்தது, இன்னொரு காரணம்..!! எல்லாவற்றையும் புருஷோத்தமனிடம் கொட்டி தீர்த்துவிட்டான்.

நந்தினி மீதான அவனது ஈர்ப்பு.. ஒருவருடத்துக்கும் மேலாக அவன் கொண்டிருந்த ஒருதலைக்காதல்.. போன வாரம் தன் காதலை அவளிடம் வெளிப்படுத்தியது.. இன்று கேண்டீனில் அவள், அவனுடைய ஆசை இதயத்தில் அமிலம் ஊற்றி சென்றது.. எல்லாவற்றையும் சொல்லிவிட்டான்..!!

சொல்லிவிட்டு அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அசோக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தான். அவ்வளவு நேரம் புகை விட்டபடி, அத்தனையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த புருஷோத்தமன் இப்போது சிகரெட்டை நசுக்கி எறிந்துவிட்டு வெறுப்பாக சொன்னான்.

"அவ்வளவு திமிரா அந்த சுள்ளான் குஞ்சுக்கு..?? புடிக்கலைன்னா புடிக்கலைன்றதை டீசண்டா சொல்ல மாட்டாளாமோ..?? வேற ஒண்ணுல்ல அசோக்.. அவளுக்கு.. மனசுக்குள்ள பெரிய ரதின்னு நெனப்பு..!! த்தா.. பணக்காரி வேறல்ல..?? பணமும், அழகும் ஒண்ணா சேர்ந்தா.. இப்படித்தான் பேசுவாளுக..!! திமிரெடுத்தவ.. போய்த் தொலையுறான்னு விடு..!!"

"என்னால முடியலைடா புருசு.. ரொம்ப கஷ்டமா இருக்கு..!! அவளை எந்தக்குறையும் இல்லாம சந்தோஷமா வச்சுக்கனும்னு சத்தியமா நெனச்சேன்.. காதலுக்கு அந்த நெனைப்பு மட்டும் போதாதாடா புருசு..??"

"ப்ச்.. ஐயையையே.. அழாதடா..!! அவளே சரியான அல்டாப்பு ராணி.. காலேஜ்ல ஒருத்தனையும் மதிக்க மாட்டா.. உன்னையா மதிப்பா..?? உனக்கு லவ் பண்றதுக்கு வேற ஆளே கெடைக்கலையா..? உன் ரேஞ்சுக்கு ஏத்தமாதிரி ஏதாவது ஆசைப்பட்டிருக்கணும்.. அதை விட்டுட்டு..!! நம்ம காலேஜ்லயே எவ்வளவு நல்ல பொண்ணுகள்லாம் இருக்குதுங்க..!!"

"இல்ல புருசு.. நம்ம காலேஜ்ல.. எங்கிட்ட பேசுன ஒரே பொண்ணு அவதான்.. அதுவும் அவளா வந்து எங்கிட்ட பேசுனா.."

"அவளா..? அவளா வந்து பேசுனாளா..? எப்போ..?"

"போன வருஷம் நாங்க ரெண்டு பேரும்.. பேப்பர் பிரசண்டேஷனுக்காக பெங்களூர் போயிருந்தோம்ல.. அப்போ..!!"

"ஓஹோ..?? இதுலாம் எப்போடா நடந்தது..? த்தா.. சொல்லவே இல்ல..??"

"நல்லா பேசுனா புருசு.. அந்த நாலு நாள்.. என்னால மறக்கவே முடியாது.. 'சாப்டியா.. தூங்குனியா..'ன்னு.. ரொம்ப கேர் எடுத்துக்கிட்டு பேசுனா.. அதனாலதான் எனக்கு அவளை ரொம்ப புடிச்சு போச்சு..!!"

"ம்ம்ம்.. எல்லாம் அப்படித்தான் பேசுவாளுக.. நல்லா வாயிலேயே கொடுப்பாளுக..!! அப்புறம்.. நம்மளை லூஸ் ஆக்கிட்டு அவளுக எஸ் ஆயிடுவாளுக..!! திருட்டு சிறுக்கிக..!!"

"ப்ளீஸ் புருசு.. அவளை திட்டாத.."

"பார்டா.. இவ்ளோ ஆனப்புறமும்..? அவளை திட்டுனா உனக்கு வலிக்குதா..?? சூப்பரு..!! அவ்ளோ புடிக்குமாடா அவளை..??"

"ம்ம்.. புடிக்கும்..!!"

"ம்ம்ம்.. ரொம்ப கஷ்டமா இருக்கோ..?"

"செத்துடலாம் போல இருக்கு.."

"த்தா.. பேச்சை பாரு..!! அப்டியே போட்டன்னா..!!"

"அவ சொன்ன வார்த்தை அந்த மாதிரி புருசு..!! எந்தப்பொண்ணுக்கும் என் மேல லவ் வராதுன்னு சொல்லிட்டாளே..??"

"ப்ச்.. அதை சொல்றதுக்கு அவ யாருடா..??"

"அவ வேற ஏதாவது சொல்லிருக்கலாம்ல.. உன்னை விட பெரிய பணக்காரனா எதிர்பார்க்குறேன்.. ரொம்ப படிச்சவனா எதிர்பார்க்குறேன்..!! இல்லனா.. என் அத்தை பையனைத்தான் கட்டிக்கப்போறேன்.. கல்யாணத்துலையே எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல.. அப்டி ஏதாவது பொய்யாவது சொல்லிருக்கலாம்ல..?? நான் ஆம்பளையே இல்லைன்னு சொல்லிட்டு போயிட்டாளே..??"

அசோக் அழுது பிதற்றியவாறே தன் மனக்குமுறலை வெளிப்படுத்த, இப்போது புருஷோத்தமனுடைய மனதை ஒரு குற்ற உணர்வு அரிக்க ஆரம்பித்தது. அந்த நந்தினி செய்த தவறை அவனும் செய்திருக்கிறான் என்ற உறுத்தல்தான் அது..!! குற்ற உணர்வு பொங்கும் குரலிலேயே அசோக்கிடம் சொன்னான்.

"ஸாரிடா அசோக்..!! இத்தனை நாளா.. உன் மனசு என்ன பாடுபடும்னு புரிஞ்சுக்காம.. நான் கூட 'செல்லம்.. டியர்..'ன்னுலாம் .. பொம்பளையை கொஞ்சுற மாதிரி உன்னை கொஞ்சிருக்குறேன்.. என்னை மன்னிச்சுடுடா..!!"

"பரவாலடா.. நீதான..?? நீ என்னை எவ்வளவோ திட்டுவ.. அடிப்ப..!! ஆனா இங்க.. என்னையும் மனுஷனா மதிச்சு எங்கிட்ட பேசுற ஒரே ஆளு நீதான் புருசு.. உன் மேலலாம் எனக்கு கோவமே வராது..!!"

அசோக் அழுகிற குரலில் அந்த மாதிரி சொல்ல, புருஷோத்தமன் அப்படியே உருகிப் போனான். அவனுடைய கல்நெஞ்சில் கூட கொஞ்சமாய் ஈரம் கசிந்தது. அழுகிற அசோக்கையே பரிதாபமாக பார்த்தான். ஏனோ அசோக்கின் அழுகையை இப்போது அவனால் சகிக்க முடியவில்லை. ஒரு முடிவுக்கு வந்தவனாய், அசோக்கின் புஜத்தை பற்றி இழுத்தவாறே சொன்னான்.

"நீ அழுதது போதும்.. எந்திரி.."

"எ..என்னடா..?" அசோக் புரியாமல் கேட்டான்.

"எங்கயாவது வெளில போயிட்டு வரலாம்.. வா..!!"

"எங்க..?"

"வா.. சொல்றேன்.."

"நான் வரலை புருசு.. நீ போயிட்டு வா.. எனக்கு கொஞ்ச நேரம் தனியா உக்காந்து அழனும் போல இருக்கு..!!"

"அறைஞ்சுருவேன்.. வான்னு சொல்றேன்ல.. வா..!! எந்திரி.. வேற ட்ரஸ் மாத்திக்கோ.. இந்த கருமம் புடிச்ச சட்டையை கழட்டி போட்டுட்டு.. ஏதாவது டி-ஷர்ட் இருந்தா மாட்டிக்கோ..!!"

"வேணாம் புருசு.." அசோக் தயங்க,

"அடிங்.. கெளம்புடா..!! அப்டியே போட்ருவேன்..!!" புருஷோத்தமன் அவனை விடவில்லை.

அதன்பிறகு ஒருமணி நேரம் கழித்து..

அசோக்கும், புருஷோத்தமனும் அந்த டாஸ்மாக் பாரில் எதிரெதிரே அமர்ந்திருந்தார்கள். ஏற்கனவே ஒரு ரவுண்டு முடிந்திருந்தது. அடுத்த ரவுண்டுக்காக பிளாஸ்டிக் டம்ளர்களில் புருஷோத்தமன் விஸ்கியை நிரப்பிக் கொண்டிருந்தான். புருஷோத்தமன் மிகவும் தெளிவாகவே இருந்தான். அசோக்தான் முதன் முறை என்பதால், முதல் ரவுண்டுக்கே கண்கள் செருக காட்சியளித்தான்.

"ம்ம்.. எடுத்துக்கோ அசோக்..!! அப்போ அடிச்ச மாதிரியே.. எடுத்து கப்புன்னு ஒரு அடி பார்ப்போம்..!!"

அசோக் டம்ளரை எடுத்துக்கொண்டான். வாயில் வைத்து மொத்த விஸ்கியையும் கடகடவென உள்ளே ஊற்றிக் கொண்டான். உள்ளே ஊற்றப்பட்ட விஸ்கி.. நாக்கு, கன்னத்தின் உட்புறம், தொண்டை, நெஞ்சு என.. அடிவயிறு வரை திகுதிகுவென தீயுரசிக்கொண்டே சென்று விழுந்தது. குடித்து முடித்த அசோக் கண்களை மூடி, 'ஆஆஆஆஹ்க்' என்று முகத்தை சுளித்து கனைத்தான். 'ஓவ்வ்வ்.. ' என வாந்தி வருவது மாதிரி குமட்டினான். அதைப் பார்த்த புருஷோத்தமன்,

"ஒண்ணுல்ல ஒண்ணுல்ல.. இந்தா.. ஊறுகாய்.. கடிச்சுக்கோ..!!"

என்றவாறு கையில் வைத்திருந்த ஊறுகாய் பாக்கெட்டை அசோக்கிடம் நீட்டினான். அசோக் அதை வாங்கி கடித்துக் கொண்டான். வாந்தி வரும் உணர்வு இப்போது காணாமல் போயிருக்க, கண்களை நிம்மதியாக திறந்து பார்த்தான். இப்போது புருஷோத்தமன் தன் பங்கு விஸ்கியை தொண்டைக்குள் ஊற்றினான். ஊறுகாய் வாங்கி கடித்துக் கொண்டவன், அசோக்கிடம் கேட்டான்.

"தம்மடிக்கிறியா..?"

"இல்ல புருசு.. வேணாம்.."

"த்தா.. சும்மா அடிடா..!! நல்லாருக்கும்..!!"

அவனே ஒரு சிகரெட் எடுத்து அசோக்கிற்கு பற்றவைத்தான். முதன்முறையாய் புகை பார்த்த அசோக்கின் நுரையீரல், முடியாமல் மறுதலிக்க.. அசோக்கிற்கு இருமல் வந்தது..!!

"ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும்.. போகப்போக சரியாயிடும்.. அடி..!!"

புருஷோத்தமன் உற்சாகப்படுத்த, அசோக் புகைபிடிக்கவும் கற்றுக் கொண்டான். உள்ளே சென்ற ஆல்கஹாலும், நிக்கோடினும் அசோக்கின் சிறுமூளையை சென்று பிராண்ட.. அவனுக்கு கண்கள் செருகிக் கொண்டன.. தலை ஒருநிலையில் நில்லாமல் தடுமாறியது.. வாய் கோணிக்கொள்ள, பேச்சு குழறியது.. மயக்கம் வரும்போல் இருந்தது.

"எப்படிடா இருக்கு..?" புருஷோத்தமன் கேட்டான்.

"ஒருமாதிரி இருக்குடா.. தலை கிர்ருனுது.."

"மனசு கஷ்டத்துக்கு இது மாதிரி வேற மருந்தே இல்ல மச்சி..!!"

"ஹ்ஹா.. மருந்து நல்லாத்தான் இருக்குது.. ஆனா மனசு இன்னும் வலிக்கத்தான் செய்யுது..!!"

"ம்ம்ம்.. இதுக்குத்தான் எல்லாரும் என்னை மாதிரி இருந்து தொலைங்கடான்னு சொல்றது..!! காதலும் வேணாம்.. கல்யாணமும் வேணாம்.. ஒரு கருமாந்திரமும் வேணாம்னு..!!"

"உனக்கு காதல் புடிக்காதுன்னு எனக்கு தெரியும்.. கல்யாணமும் புடிக்காதா புருசு..?"

"மச்சி.. காதல் ஒரு பாவச்செயல்னா.. கல்யாணம் ஒரு பெருங்குற்றம்..!!"

"ஹ்ஹா.. ஏண்டா அப்படி சொல்ற..?"

"பின்ன என்ன..? உனக்கு ஒரு க்ளாஸ் பால் வேணும்னு வச்சுக்கோ.. உன் ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி.. ஒரு ரோட்டுக் கடைலயோ.. ஒரு ரெஸ்டாரன்ட்லயோ.. இல்ல ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல்லயோ போய்.. ஆர்டர் பண்ணி வாங்கி குடிச்சுக்கணும்..!! அதை விட்டுட்டு எந்த மடையனாவது பசு மாட்டை வாங்கி வீட்டுல கட்டுவானா..? அது குடுக்குற அரைப்படி பாலுக்காக.. அந்த மாட்டுக்கு புல்லு வைக்கணும்.. புண்ணாக்கு வாங்கி போடணும்.. தண்ணி காட்டனும்.. கழிஞ்சுச்சுனா சாணி அள்ளிப் போடணும்..!! சில கொழுப்பெடுத்த மாடுக.. நாம வச்ச புண்ணாக்கை தின்னுபுட்டு.. நம்மளையே முட்ட வருங்க..!! இதுலாம் தேவையா..? கடைக்கு போனமா.. காசை குடுத்தமா.. கப்புல வர்ற பாலை வாங்கி கப்புன்னு அடிச்சமான்னு.. போயிட்டே இருக்கணும் மச்சி..!!! என்ன.. நான் சொல்றது புரியுதா..??"

"ம்ம்.. புரியுது புரியுது..!! அந்த மாதிரி பால் குடிக்கத்தான.. நேத்து அவினாசி ரோட்டுக்கு போயிட்டு வந்த..? ம்ம்ம்..?? ஹ்ஹஹ்ஹஹ்ஹ..!!"

"ஹாஹா..!! கரெக்ட்..!!"

"ம்ம்ம்.. நீ சொல்ற லாஜிக்லாம் நல்லாத்தான் இருக்குது புருசு..!! ஆனா.. இவ்வளவு கஷ்டம் இருந்தும்.. உலகத்துல எல்லாரும் கல்யாணம் பண்ணிக்கிறாங்களே.. அதுக்கு என்ன அர்த்தம்..??"

"உலகத்துல ஒருத்தனுக்கும் அறிவே இல்லைன்னு அர்த்தம்..!!"

"ஹஹாஹஹாஹஹா...!!"

"நான் உனக்கு சொல்ற அட்வைஸ்லாம் இதுதான் அசோக்..!! காதல், கல்யாணம்லாம் ஆம்பளைங்க அவங்களோட ஆண்மையை பொண்ணுககிட்ட அடகு வைக்கிற மேட்டர்.. தயவு செஞ்சு அந்த தப்பை மட்டும் பண்ணாத..!!"

புருஷோத்தமன் சிரிப்புடனே சொல்ல, அசோக்கின் முகம் இப்போது பட்டென சுருங்கிப் போனது. ஆம்பளை, ஆண்மை என்ற வார்த்தைகள் காதில் விழுந்ததும், நந்தினி சற்று முன் பேசிய பேச்சு எல்லாம், திரும்ப அவன் மூளையை வந்து தாக்கின. அவனுடைய முகமாற்றத்தை கவனித்த புருஷோத்தமன் கேட்டான்.

"ஏய்.. என்னடா ஆச்சு..?"

"எங்கிட்ட அடகு வைக்க என்ன இருக்கு..? அதான்.. நான் ஆம்பளையே இல்லைன்னு சொல்லிட்டு போயிட்டாளே..??" அசோக் பாவமாக சொல்ல, புருஷோத்தமன் எரிச்சலானான்.

"டேய்.. அவ அந்த அர்த்தத்துல சொல்லல.. நீ தேவையில்லாம உன் மனசை போட்டு கொழப்பிக்காத..!!"

"சரி.. டைரெக்டா சொல்லலை.. ஆனா அவ சொன்னதுக்கு அதுதான அர்த்தம்..? உன்னை பாக்குறதுக்கு ஆம்பளை மாதிரி இல்லைன்னா என்ன அர்த்தம்..?"

"பாக்குறதுக்கு ஆம்பளை மாதிரி இல்லாட்டா என்ன..? ஓ.. என்னமாத்தான் வருது..? இங்க பாரு அசோக்.. இதுலாம் சப்பை மேட்டரு..!!"

"எ..எது சப்பை மேட்டரு..?"

"நீ பாக்குறதுக்கு ஆம்பளை மாதிரி மாறுறது..!! உன் ஹேர் ஸ்டைல் மாத்து.. மீசை தாடி வச்சுக்கோ..!! அந்த கழுத்துல தொங்குற கொட்டை, நெத்தியில போட்டுருக்குற பட்டை.. அதெல்லாம் வேணாம்.. பக்தி மனசுல இருந்தா போதும்.. மண்டைலலாம் மார்க் போட்டு காட்ட வேணாம்..!! ஜிம்முக்கோ போ.. எக்சர்சைஸ் பண்ணு.. லூசா இருக்குற மஸில் எல்லாம் டைட் பண்ணு.. அவ்ளோதான்..!! உன் பேச்சு, நடைலாம் மாத்தணுமா.. அதுக்கும் கூட கோர்ஸ்லாம் இருக்கு..!! லுக், கெட்டப் மாத்துறதுலாம் ஒரு மேட்டரே இல்ல அசோக்.. உன் ஆட்டிட்யூட் நெறைய மாறனும்.. அதுதான் மேட்டர்..!!"

"ஆ..ஆட்டிட்யூட்னா..? பு..புரியலை..!!"

"சரி.. புரியிற மாதிரி சொல்றேன்.. நான் சொல்றதை கொஞ்சம் கவனமா கேளு..!! பாக்குறதுக்கு மட்டும் ஒருத்தன் ஆம்பளை மாதிரி இருந்துட்டா போதுமா..?? ஆம்பளைன்னா.. ஒரு வீரம் இருக்கணும்.. எது வந்தாலும் எதுத்து நிக்கிற துணிச்சல் இருக்கணும்.. எவனுக்கும் பயப்பட மாட்டேன்னு ஒரு திமிரு இருக்கணும்..!! உன்னை எவனாவது மதிக்கலைன்னா.. அவனுக்காக நீ ஏன் கவலைப் படுற..? நீயும் அவனை ஏறி மிதிச்சுட்டு போயிட்டே இருக்கணும்..!! உன்னை ஒருத்தி ஆம்பளை இல்லைன்னு சொல்லிட்டு போனா.. அதுக்காக மூலைல உக்காந்து அழுதுட்டு இருப்பியா..?? அழறதை நிறுத்திட்டு எந்திரிச்சு கம்பீரமா நில்லு.. உனக்குள்ள இருக்குற ஆம்பளையை தேடி கண்டுபுடி.. ஆம்பளையா வாழ்ந்து காட்டு..!!"

புருஷோத்தமன் சொல்ல சொல்ல, அசோக் எல்லாவறையும் உன்னிப்பாக கேட்டுக் கொண்டான். வேதனையில் இருந்த அவன் மனதுக்கு, புருஷோத்தமன் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் வேதவாக்காக ஒலித்தன. அந்த வார்த்தைகளில் இருந்த ஒரு வேகம், அவனுடைய உதிரத்தை சூடேற செய்வதை அவனால் உணர முடிந்தது.

போர் முனையில் அர்ஜுனனுக்கு அந்த புருஷோத்தமன் ஆற்றிய கீதோபதேசம் போல.. பார் முனையில் அசோக்கிற்கு இந்த புருஷோத்தமன் போதோபதேசம் ஆற்றிக் கொண்டிருந்தான். ஆண்மை பற்றி சொன்னதுடன் அவன் விட்டுவிடவில்லை. பெண்களை பற்றி தனக்கிருந்த கருத்துக்களையும் அசோக்கிற்கு அவன் போதிக்க ஆரம்பித்தான்.

"பொண்ணுகள்லாம் அதுக்குத்தான் மச்சி.. அவளுகளலாம் கட்டிலோட கழட்டி விட்டுடனும்.. கழுத்துல தாலி கட்டி வீட்டோட வச்சுக்குறது எல்லாம் டூ மச்..!! உனக்கு பொண்ணுக சுகம் வேணுமா.. அந்த அவினாசி ரோட்டு வீடு மாதிரி ஆயிரம் வீடு ஊருக்குள்ள இருக்கு.. அங்க போ.. என்ஜாய் பண்ணு.. அத்தோட பொண்ணுகளை மறந்துடு..!! காதல், கல்யாணம்னு அவளுக முந்தானைல சிக்கிக்காத.. காலத்துக்கும் உன்னால சந்தோஷமா இருக்க முடியாது..!! அவளுகளுக்காக செலவழிக்கிற நேரத்துல.. நீ உன் சொந்தக்கால்ல நில்லு.. கஷ்டப்பட்டு உழை.. பணம் சம்பாதி..!! பணம் இருந்தா அப்புறம் எல்லாம் தானா உன்னை தேடிவரும்..!!"

புருஷோத்தமன் அதன் பிறகும் ஏதேதோ அறிவுரைகளை அள்ளி வீசிக் கொண்டிருந்தான். அசோக்கும் போதை ஏறிய மூளையுடன் அவனது போதனைகளை கேட்டுக் கொண்டிருந்தான். அசோக்கின் உள்மனம் புருஷோத்தமனின் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தது. புருஷோத்தமன் பேசி ஓய்ந்த பிறகு, இருவரும் கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர். அப்புறம் அந்த அமைதியை குலைக்கும் வண்ணம் அசோக் மெல்ல ஆரம்பித்தான்.

"பு..புருசு.."

"ம்ம்ம்..?"

"நான் உன்கிட்ட ஒரு ஹெ..ஹெல்ப் கேட்பேன்.. செய்வியா..?"

"என்னடா ஹெல்ப் வேணும்.. கேளு.. செய்றேன்..!!"

"எ..என்னை தப்பா நெனைக்க கூடாது..?"

"ம்ஹூம்.. சொல்லு.."

"எ..என்னைய.."

"ம்ம்.. உன்னைய..?"

"அந்த அ..அவினாசி ரோடு வீட்டுக்கு கூட்டிட்டு போறியா..? எ..எனக்கு இப்போ யார்கிட்டயாவது.. நான் ஆ..ஆம்பளைன்னு ப்ரூவ் பண்ணனும் போல இருக்கு..!!"

அசோக் தயங்கி தயங்கி சொல்ல, புருஷோத்தமன் அவனுடைய முகத்தை திகைப்பாக ஏறிட்டான். ஒரு மாதிரி நம்ப முடியாமல் பார்த்தான். ஒரு சில விநாடிகள்தான்..!! அப்புறம் அவனுடைய உதடுகளை விரித்து அழகாக புன்னகைத்தான். மெல்லிய சிரிப்புடன் சொன்னான்.

"ஹாஹா.. இப்போதாண்டா மச்சி நீ என் வழிக்கு வந்திருக்குற.. கையை குடு..!!"

என்று அசோக்கின் கையைப் பற்றி குலுக்கினான். அசோக்கும் இப்போது சற்றே வெட்கத்துடன் புன்னகைத்தான். கை குலுக்கிய புருஷோத்தமன், திடீரென ஞாபகம் வந்தவனாய் தனது பேன்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு அதை எடுத்தான். காலையில் தரையில் இருந்து பொறுக்கி உள்ளே போட்டுக்கொண்ட காண்டம் பாக்கெட்டுகள்..!! அவைகளை அசோக்கின் பக்கம் தூக்கி எறிந்தான்..!!

"எடுத்து பாக்கெட்டுல போட்டுக்கோ.. போகலாம்..!! அவினாசி ரோடு வீடு வேணாம்.. அங்க எல்லாம் சப்பை பீசுங்க..!! வேற ஒரு நல்ல எடத்துக்கு உன்னை கூட்டிட்டு போறேன்..!!"

அசோக் அந்த காண்டம் பாக்கெட்டுகளையே ஒரு சில வினாடிகள் வெறித்து பாத்தான். அப்புறம் மெல்ல கைநீட்டி அவைகளை பொறுக்கி எடுத்துக் கொண்டான். காலையில் 'ச்சீய்..' என்று அருவருப்புடன் விசிறி எறிந்த அதே பாக்கெட்டுகளை, இப்போது எந்த தயக்கமும் இல்லாமல் தன் பேன்ட்டுக்குள் திணித்துக்கொண்டான்.

No comments:

Post a Comment

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...