Social Icons

அன்புள்ள ராட்சசி - 4


 




அத்தியாயம் 6

அந்த நாளும் அடுத்த நாளும் அசோக்கிற்கு ஒருவித பிரம்மையும் பிரச்னையுமாகவே கழிந்தன..!! ஆசைஆசையாக பேச சென்றவனின் மனதை.. அந்தப் பெண்ணுடைய அனல் கக்கும் பார்வையும்.. அவள் கழற்றி கையிலெடுத்த செருப்பும்.. அந்த செருப்பின் அகலமான அடிப்புறமும்.. அதில் ஓரமாய் ஒட்டியிருந்த பபிள்கமும்.. என எல்லாமும் சேர்ந்து.. ரொம்ப.. ரொம்பவே பாதித்துவிட்டன..!! அந்த பாரதிக்கு.. 'பார்க்கும் மரங்கள் எல்லாம் பச்சை நிறம்' தோன்றிய மாதிரி.. இந்த பாரதி மைந்தனுக்கு.. காணும் இடங்கள் எல்லாம் கலர் கலராய் செருப்புகள்தான் தோன்றின..!!

"என்னடா.. வெறும் சாதத்தையே சாப்பிட்டுட்டு இருக்குற.. இந்தா.. இதை கொஞ்சம் கடிச்சுக்கோ..!!" என்றவாறு, அசோக்கின் அம்மா அவனுடைய வாய்க்கருகே செருப்பை நீட்டினாள்.

"மம்மீஈஈ..!!!!" அலறியே விட்டான் அசோக். அவனுடைய முகம் பட்டென வியர்த்துப் போனது.

"அ..அசோக்கு... அசோக்கு... என்னப்பா ஆச்சு..??" பாரதி பதற்றமும் பயமும் தொற்றிக்கொண்டவளாய் கேட்டாள்.

"ஒ..ஒன்னும்.. ஒ..ஒன்னும் இல்ல மம்மி..!!"

அம்மாவின் கையில் இருப்பது அப்பளம்தான் என்று புரிந்ததும், சற்றே நிம்மதியடைந்த அசோக், சமாளிக்கும் விதமாய் சொன்னான். ஆனால் அப்புறமும் பாரதி சமாதானம் ஆகாமல்,

"எ..என்னடா நீ... இந்தா.. இந்த தண்ணியை கொஞ்சம் குடி..!!"

என்றவாறே, தண்ணீர் டம்ளரை எடுத்து அவளே தன் மகனுக்கு நீர் புகட்டினாள். அன்று மாலை அசோக் வீடு திரும்பியதில் இருந்தே, அவனிடம் ஒரு வித்தியாசத்தை உணர்ந்திருந்த பாரதி, 'எம்புள்ளைக்கு என்னாச்சுன்னு தெரியலையே..?? எதைப்பாத்து பயந்தான்னு புரியலையே..?? ஒத்தை ஆளா எத்தனை பேய்ப்படம் வேணா பார்ப்பானே..?? இன்னைக்கு அப்பளத்தை பாத்தாலே அனகோண்டாவை பாத்தவன் மாதிரி அலர்றானே..?? காளியாத்தா மாரியாத்தா.. காமாட்சி மீனாட்சி.. கருமாரி மகமாயி.. நீங்கதான் எம்புள்ளைக்கு தொணை இருக்கணும்டியம்மா..' என்று மனதுக்குள்ளாகவே கவலையும் ரகசியமுமாய் வேண்டிக்கொண்டாள்.


அசோக்கிற்கு காணும் இடங்கள் மட்டும் அவ்வாறு அல்ல..

அந்தப்பெண் ஏற்படுத்திய டென்ஷன் தாங்காமல்.. சலம்புகிற மைன்ட் சனியனை சமாதானம் ஆக்கலாம் என்று.. ஆபீஸை விட்டு வெளியேறி.. அடுத்த தெருவில் இருக்கும் பெட்டிக்கடைக்கருகே.. ஆகாயத்தை வெறித்தபடி.. புகை இழுத்து விட்டுக்கொண்டிருந்தான்..!! புகையின் நடுவினிலும்.. அவளுடைய பூமுகமே மசமசப்பாய் தெரிந்துகொண்டிருந்த வேளையில்.. வந்து சேர்ந்தான் அவன்..!! முழங்காலுக்கு மேலே ஏற்றிக்கட்டப்பட்ட லுங்கியும்.. முழங்கைக்கு மேலே சுருட்டிவிடப்பட்ட சட்டையும்.. முகம் நிறைய தாடியும்.. வாயில் நீட்டிய பீடியுமாய்..!!

"ஸார்.. கொஞ்சம் செருப்பு குடுக்குறீங்களா..??"

"என்னது..????' அசோக் அதிர்ந்து போய் அந்த ஆளைப் பார்த்தான்.

"செருப்பு ஸார்.. செருப்பு செருப்பு செருப்பு..!!!!"

அந்த ஆள் கண்ணை சிமிட்டிக்கொண்டே, திரும்ப திரும்ப அந்த வார்த்தைகளை உச்சரித்த விதம், அசோக்கை கேலி செய்வது போல இருக்க, கடுப்பான அசோக் கண்ட்ரோல் இழந்து போய், அந்த ஆளுடைய சட்டையை பிடித்துவிட்டான்.

"என்னடா கேட்ட..?????" என்று பற்களை கடித்தான். அந்த ஆளோ அசோக்கின் திடீர் கோவத்தில் மிரண்டு போனான்.

"ஸார்.. என்னா ஸார் இது.. நெருப்புதான கேட்டேன்..?? இஷ்டம்னா குடுங்கோ.. இல்லனா விடுங்கோ.. எதுக்கு சொக்காலாம் புடிக்கிறீங்கோ..??" அசோக்கை ஒருமாதிரி ஏற இறங்க பார்த்தவாறே, அந்த இடத்தை விட்டு அகன்றான்.

எஸ்...!!! கேட்கும் ஒலிகளில் கூட..!!


அசோக்கின் நண்பர்கள் அன்று முழுக்க செம குஷியில் இருந்தார்கள்..!! 'மாட்டுனான்டா ஒரு மானஸ்தன்' என்பது மாதிரியான குஷி..!! அன்று முழுதும் அந்த செருப்பு மேட்டரை சொல்லியே, அசோக்குக்கு வெறுப்பு மேல் வெறுப்பு ஏற்றினார்கள்..!! 'கூந்தல் கருப்பு.. குங்குமம் சிகப்பு..' பாடலை ரீமிக்ஸ் செய்து பாடி.. கடுப்பு மேல் கடுப்பு கூட்டினார்கள்..!! சாலமன் பாட..

"டி-ஷர்ட்டு கருப்பு..!!"

"ஆஹா..!!" வேணு ஒத்து ஊதினான்.

"அவ கையில செருப்பு..!!"

"ஓஹோ..!!"

"அடங்கிப்போச்சு.. பையன் கொழுப்பு..!!"

"ஓஹொஹோஹஹோ.. ஹோஹஹஹொஹோ..!!"

"ஹாஹாஹாஹாஹாஹா..!!"

கிஷோர் மட்டும் கிண்டலில் கலந்து கொள்ளாமல் சிரிக்க மாத்திரம் செய்தான். அன்று அவர்கள் காட்டில் அடைமழை என்பதை உணர்ந்து கொண்ட அசோக்கும், அமைதி காப்பதே நலம் என்று முறைப்போடு மட்டும் நிறுத்திக் கொண்டான். வாய் திறந்து வார்த்தைகள் எதுவும் சிந்தவில்லை. அசோக்கின் அமைதி அவர்களுக்கு மேலும் உற்சாகத்தையே தந்தது. சீண்டலும் கேலியும் தொடர்ந்தன.

அத்தனை எரிச்சலிலும்.. கிஷோர் கிண்டல் செய்யாமலிருந்தது.. அசோக்குக்கு ஒரு சிறு நிம்மதியை தந்திருந்தது..!! ஆனால்.. அன்று மாலை அவன் வீட்டுக்கு சென்றபோது.. அந்த சிறு நிம்மதியும் சீட்டுக்கட்டு கோபுரமாய் சரிந்து போனது..!! 'அமைதியா இருக்கான் பாரு.. அவன்தான்டா என் நண்பன்..' என்று கிஷோரை பற்றி நினைத்திருந்தான்..!! அப்புறந்தான் தெரிந்தது அவன் ஆப்பை வேறிடத்தில் வைத்திருக்கிறான் என்று..!!

"ஏண்டா.. ஒரு பொண்ணைப்பாத்து.. அவ கண்ணு அழகா இருக்கு, காது அழகா இருக்குன்னு சொல்லலாம்.. சிரிப்பு கூட அழகா இருக்குன்னு சொல்லிருக்கலாம்..!! போயும் போயும் அவ செருப்பு அழகா இருக்குன்னு சொன்னியாம்.. அவளும் செருப்பை கழட்டி 'யா.. லுக் அட் மை ப்யூட்டிஃபுல் செப்பல்..'னு உன் மூஞ்சிக்கு முன்னாடி நீட்டுனாளாம்..??"

சங்கீதா சிரிப்பை அடக்கிக்கொண்டே கிண்டலாக கேட்டபோது.. அசோக்குக்கு அவள் மீது கோவம் வந்தது என்றால்.. கிஷோர் மீது கொலைவெறியே வந்தது..!! சங்கீதாவுக்கு தன் மீதிருந்த வெறுப்பை மறக்கடிக்கவே.. கிஷோர் அந்த செருப்புக்கதையை உபயோகித்திருக்கிறான் என்று புரிந்து கொண்டான்..!! தங்கையை சில வினாடிகள் முறைப்பாக பார்த்தவன்,

"ஒன்னு சேந்துட்டிங்களாக்கும்..??" என்றான் கடுப்பாக.

"ம்ம்... யெஸ்..!!" சங்கி இமைகள் மூடி, சைனீஸ் பொம்மை போல் தலையாட்டினாள்.

"ஹ்ம்ம்..!! இந்த செருப்பு மேட்டர்லாம் உன்னோட வச்சுக்கோ சங்கு.. டாடிட்டயோ மம்மிட்டயோ சொல்லிட்டு இருக்காத.. புரியுதா..??" கெத்தான குரலிலேயே கெஞ்சினான் அசோக்.

"ம்ம்ம்...!! அது.. அந்த பயம் இருக்கணும்..!!"

சங்கீதா திமிராக சொன்னாள். அதற்கு மேல் அவளிடம் எதுவும் பேச விருப்பம் இல்லாதவனாய், அசோக் அந்த இடத்தை விட்டு நகர முயன்றான். சங்கீதா அவனுக்கு குறுக்காக ஓடி வந்து வழி மறித்தாள்.

"ஏய்ஏய்ஏய்.. இருடா.. எங்க கெளம்பிட்ட.. உங்கிட்ட நான் என்னன்னவோ கேக்கனும்னு நெனச்சேன்..!!"

"என்ன..??"

"அந்தப்பொண்ணைப் பத்தி கொஞ்சம் சொல்லேன்..?? அவ பாக்குறதுக்கு எப்படி இருந்தா..?? ஹைட்டா குள்ளமா.. கலரா கருப்பா..??"

சங்கீதா அவ்வாறு ஆர்வமாக கேட்கவும், அசோக்கிற்கு பட்டென அவனுடைய மனது லேசாகிப்போனது மாதிரி ஒரு உணர்வு..!! இதயத்தை அந்தப் பெண்ணுடைய ஞாபகம் வந்து ஈரமாய் நனைத்தது..!! அவனையும் அறியாமல்.. உதட்டில் ஒரு புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது..!! தலையை சற்றே சாய்த்து.. ஏதோ அந்தரத்தில் பார்வையை நிறுத்தி.. குரலில் ஒரு மென்மையை கூட்டிக்கொண்டு.. ரசனையுடன் சொல்ல ஆரம்பித்தான்..

"அ..அவ.. அவ எப்படின்னா.. அவளை பத்தி சொல்லனும்னா.. அவ ஒரு.." அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சங்கீதா அவனை இடைமறித்து,

"டேய்.. இரு இரு..!! ரொம்ப கஷ்டப்படாத.. அவளை பத்தி நமக்கெதுக்கு இப்போ..?? விடு.. நீயே அவளை ஒழுங்கா பாத்தியோ இல்லையோ..?? நீநீநீ..." என்று இழுத்தவள், அப்புறம் பட்டென

"அந்த செருப்பை பத்தி சொல்லு.. எப்படி இருந்துச்சு அந்த செருப்பு..?? ப்ளாக்கா.. ப்ரவுனா..?? பேட்டாவா.. பேரகனா..??"

என முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு கேட்கவும், அசோக் இப்போது உலகமகா கடுப்புக்கு உள்ளானான். தங்கையை ஏறிட்டு வெறுப்பாக முறைத்தான். அவளோ சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு, அப்படியும் முடியாமல் கொஞ்ச சிரிப்பை உதடுகள் வழியே சிந்திக்கொண்டு, அண்ணனையே குறும்பாக பார்த்துக் கொண்டிருந்தாள். அசோக் எதுவும் பேசவில்லை. தன் வலது உள்ளங்கையை அகலமாக விரித்து, அதையே பார்த்தான்.

"என்னடா.. நான் கேட்டுட்டு இருக்கேன்.. நீ கையையே பாத்துட்டு இருக்குற..??" சங்கீதா சீண்டினாள்.

"இங்க பாரு சங்கு.. இப்படியே ஒரு அறை வுட்டேன்னு வச்சுக்கோ.. நாலு நாளைக்கு எந்திரிக்க மாட்ட..!! காது பஞ்சர் ஆயிடும்.. அப்புறம் நீ பாடுற பாட்டை உன்னாலேயே கேட்க முடியாது..!!"

அசோக் அந்த மாதிரி டென்ஷன் ஆனது சங்கீதாவுக்கு ஒரு குதுகலத்தையே அளித்தது. வாயைப் பொத்திக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்தாள். நாக்கை வெளியே துருத்தி பழிப்பு காட்டினாள். அசோக்கால் அவளை எதுவும் செய்ய முடியவில்லை. அமைதியாக அந்த இடத்தை விட்டு அகன்றான்.

என்ன செய்வது..?? அசோக்கிற்கு அப்படிப்பட்ட ஒரு நாளாக அது அமைந்துபோனது. எப்போதும் டிவியில் விளம்பரங்கள் ஓடுகையில் யாரையும் சேனல் மாற்ற விடமாட்டான். அடுத்தவர்கள் வெறுப்பாக இவனை முறைக்க, இவன் விருப்பமாக விளம்பரங்கள் பார்த்து ரசிப்பான். ஆனால் அன்று.. அந்த டிவியில் விளம்பரத்தை பார்த்ததும் எரிச்சலின் எல்லைக்கே சென்றான்.

"பேரகன் எந்தன் தோழன்.. எந்தன் தோழன் பேரகன்..!!"

"ஷ்ஷ்ஷ்ஷ்.... அந்த சேனலை மொதல்ல மாத்துங்க தாத்தா..!!"

என்று தாத்தாவிடம் எரிந்து விழுந்தான். பேரனையே ஓரிரு வினாடிகள் வியப்பாக பார்த்த தாத்தா, அப்புறம் சேனலை மாற்றினார். மாற்றப்பட்ட சேனலில் ஏதோ சீரியல் ஓடியது. அசோக் சற்றே நிம்மதியடைந்தவனாய்.. கண்களை மூடி.. தலையை சோபாவில் சாய்த்து.. அலைபாய்ந்த மனதை ஆசுவாசப்படுத்தலானான்..!! அரை நிமிடம் கூட ஆகியிருக்காது..

"இவனைலாம் செருப்பாலேயே அடிக்கணும்..!!" பாட்டி திடீரென வெறுப்பாக சொல்ல, இவன் பதறிப்போய் படக்கென நிமிர்ந்து அமர்ந்தான்.

"யா..யாரை சொல்ற பாட்டி..??" என்று பாட்டியை பார்த்து கலவரமாக கேட்டான்.

"இந்த செல்லம்மா புருஷனைத்தான் சொல்றேன்.. பாவிப்பய..!!" பாட்டி சீரியலில் வரும் கேரக்டரை சீரியஸாக திட்டினாள். அசோக் நொந்து போனவனாய் தலையை பிடித்துக் கொண்டான்.

இந்த மாதிரி ஆளாளுக்கு அசோக்கை போட்டு பாடாய் படுத்தி, அவனுடைய நிலையை மிகக் கவலைக்கிடமாய் ஆக்கி வைத்திருந்தனர். அவனுடைய மனது ஒருவித குழப்பத்தில் சிக்கி தவித்தது. 'பேய் இருக்கா இல்லையா.. பாத்திருக்காய்ங்களா பாக்கலையா.. நம்பலாமா நம்பப்படாதா..?' என்று வடிவேலுவுக்கு வந்த சந்தேகம் மாதிரி, அசோக்குக்கும் 'அவ பொண்ணா பிசாஸா.. அவ மேல எனக்கு லவ் இருக்கா இல்லையா.. இதை கண்டின்யூ பண்ணலாமா வேணாமா..' என்று சந்தேகம் வந்திருந்தது. 'ஒரு நாள் பேசணும்னு நெனச்சதுக்கே செருப்பு லெவலுக்கு வந்துடுச்சே.. இதை கண்டின்யூ பண்ணினா எங்க போய் முடியும்னு தெரியலையே..??'

இந்த மாதிரி குழப்பமான எண்ணங்கள் அன்றைய அவனது தூக்கத்தை வெகுவாக பாதித்தன. சரியாக உறக்கம் இல்லாமல்.. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்..!!

அடுத்த நாள் காலை.. அசோக்கின் அறை..!! அசோக் அப்போதுதான் குளித்து முடித்து ஃப்ரெஷாக இருந்தான். ஆடை அணிந்து கொண்டிருந்தான். சட்டையை அணிந்து பட்டன்கள் இட ஆரம்பித்தபோது, அறைக்கதவு தட்டப்பட்டது. பட்டன் போடுவதை நிறுத்தி, பனியன் மூடிய மார்புடனே அசோக் சென்று கதவை திறந்தான். பாரதி வெளியே நின்று கொண்டிருந்தாள்.

"என்ன மம்மி..??"

"பால் இல்லடா.. காலைல பால் பாக்கெட் போடாமலே போயிருக்கான்.. என்னன்னு தெரியல..!! உனக்கு காபி வேணும்னா சொல்லு.. மம்மி கடைல போய் பால் பாக்கெட் வாங்கிட்டு வரேன்..!!"

"இல்ல மம்மி.. காபிலாம் ஒன்னும் வேணாம்.. நீ டிபன் ரெடி பண்ணு.. எனக்கு டைமாச்சு.. சாப்பிட்டு கெளம்புறேன்..!!"

"ம்ம்.. சரிடா..!!"

சொல்லிவிட்டு நகர நினைத்த பாரதி, எதேச்சையாக மகனின் தலையை பார்த்தாள். உடனே அவளுடைய முகத்தில் ஒருவித சலிப்பும் எரிச்சலும்..!! அறைக்குள் நுழைந்தவள், அசோக்கின் தலையில் 'நறுக்' என்று ஒரு குட்டு வைத்தாள்.

"ஆஆஆஆ..!!! என்ன மம்மி...??" அசோக் தலையை தேய்த்தவாறே கேட்டான்.

"பனை மரத்துல பாதி நிக்கிற.. தலை எப்படி தொவட்டனும் கூட தெரியாதா உனக்கு..??"

"அ..அதுலாம் நல்லா தொவட்டியாச்சு..!!"

"என்னத்த நல்லா தொவட்டுன.. ஒரே ஈரமா இருக்கு..!!" அசோக்கின் தலைமுடியை கலைத்து விட்டவாறே சொன்ன பாரதி,

"உக்காரு.. நான் தொவட்டி விடுறேன்..!!"

என்று அசோக்கை தோள்ப்பட்டையை பிடித்து அமுக்கி, வலுக்கட்டாயமாக அவனை கட்டிலில் அமர வைத்தாள். அருகில் இருந்த டவலை எடுத்து அவனுடைய தலையை, ஈரம் நீங்க துவட்டி விட ஆரம்பித்தாள்.

"அப்படியே ஈரத்தலையோட போக வேண்டியது.. அப்புறம் இருமலு காச்சலுனு வந்து நிக்க வேண்டியது..!!"

அம்மா அந்த மாதிரி அன்பான அர்ச்சனையுடன் தலை துவட்டிவிட, அசோக்குக்கு திடீரென குழந்தையாகிப் போன மாதிரியான உணர்வு..!! 'மனதில் இருக்கும் குழப்பத்தை அம்மாவிடம் சொல்..' என்று அந்த குழந்தை மனம் அவனை உந்தித் தள்ளியது. பாரதியின் கை அசைவுக்கு ஏற்ப, அவனது தலையும் அப்படியும் இப்படியுமாக ஆடிக்கொண்டிருக்க, அதனுடனே மெல்லிய குரலில் ஆரம்பித்தான்.

"மம்மீ..!!!"

"ம்ம்..!!"

"உன்கிட்ட ஒன்னு கேக்கணும்..!!"

"என்ன..??"

"அ..அந்தப் பொண்ணு இல்ல.." என்று இழுத்தான்.

"எந்தப் பொண்ணு..??"

"அ..அதான்.. அன்னைக்கு நீ கேட்டியே.. 'இதுவரை யாருமே உன்னை அட்ராக்ட் பண்ணினது இல்லையா..'ன்னு.. அப்போ என் மனசுல பட்டுன்னு ஞாபகத்துக்கு வந்த பொண்ணு..!!"

அசோக் அந்த மாதிரி குழந்தை குரலில் குழைந்தவாறே சொல்ல, பாரதிக்கு சுரீர் என்று இருந்தது. மகன் பேசப் போகிற விஷயத்தின் தீவிரத்தை உடனடியாய் உணர்ந்து கொண்டாள். தலை துவட்டுவதை ஓரிரு வினாடிகள் நிறுத்தி வைத்திருந்தவள், இப்போது மீண்டும் அதை தொடர்ந்தாள். கவனம் முழுவதும் மகன் பேசப் போகிற விஷயத்தில் நிலைத்திருக்க, குரலில் மட்டும் அந்த ஆர்வத்தை காட்டிக்கொள்ளாமல் மிக இயல்பாக கேட்டாள்.


"ஓ..!! யாரு அவ..??"

"அவ பேர்லாம் தெரியாது மம்மி.. அவ கூட நான் பேசினது கூட கிடையாது..!!"

"ம்ம்.. அப்புறம்..??"

"நாங்க டெயிலி லஞ்ச் சாப்பிட போவோம்ல.. அந்த ஃபுட் கோர்ட்கு அவளும் வருவா.. அப்போ அவளை அடிக்கடி பாத்திருக்கேன்..!!"

"ஓ..!! சரி.. இப்போ அவளுக்கு என்ன பிரச்னை..??"

"ஐயோ.. அவளுக்கு ஒன்னும் பிரச்னை இல்ல மம்மி..!!"

"அப்புறம்..??"

"அ..அது.. எப்படி சொல்றது...?? ம்ம்ம்ம்.... அன்னைக்கு நீ சொன்னேல..?? 'யாராவது பொண்ணை பாத்து.. அழகா இருப்பான்னு தோணிருக்கும்.. நல்ல பொண்ணா இருக்காளேனு தோணிருக்கும்.. பேசிப்பழகலாம்னு தோணிருக்கும்..' அப்டின்னு மூணு விஷயம் சொன்னேல..??"

"ஆமாம்..!!"

"அந்த மூணுமே எனக்கு அவளை பாத்து தோணுச்சு மம்மி..!!"

"ம்ம். நல்ல விஷயந்தான..??"

"ஆ..ஆனா.."

"ஆனா..??"

"ஆனா.. இப்போ.. நேத்துல இருந்து.. மனசுக்குள்ள ஒரு சந்தேகம்..!!"

"என்ன சந்தேகம்..??"

"அந்த மூணு விஷயத்துல ரெண்டாவது விஷயம்..!!"

"எது..?? அந்தப் பொண்ணு நல்ல பொண்ணா இல்லையான்னா..??"

"அ..அப்படி சொல்ல முடியாது..!! அந்தப் பொண்ணு எனக்கு ஒத்து வருவாளா இல்லையான்னு..!!"

"ஓ.. ஏன் அப்படி நெனைக்கிற..??" பாரதி அப்படி கேட்கவும், அசோக்கும் ஏதோ ஒரு ஆர்வத்தில்

"செருப்ப எடுத்து இப்படி காட்டுறா மம்மி.. இப்படி.. இங்க.. மூஞ்சிக்கு முன்னாடி..!!"

என்று தன் முகத்துக்கு நேராக கை நீட்டிக்காட்டி சொல்லியே விட்டான். பாரதி சற்றே அதிர்ந்து போனாள்.

"யாரு..?? உன் மூஞ்சிக்கு முன்னாடியா..??" என்று அவள் அவசரமாய் கேட்கவும், அசோக் இப்போது சுதாரித்துக் கொண்டான்.

"ஐயையே.. எ..என் மூஞ்சிக்கு முன்னாடி இல்ல மம்மி..!! யா..யாரோ.. வேறொரு பையன்.. அவன் மூஞ்சிக்கு முன்னாடி..!! நான் கொஞ்சம்.. தூரமா இருந்து.. இதெல்லாம் பாத்துட்டு இருந்தேன்..!!"

"ஓ..!! அதுசரி.. அவ ஏன் அப்படி பண்ணினா..??"

இப்போது அசோக் முந்தைய நாள் நடந்த அந்த சம்பவத்தை, பாரதிக்கு பொறுமையாக எடுத்துரைத்தான். நண்பர்கள் வைத்த பந்தயத்தையும், செருப்பு நீண்டது தன் முகத்துக்கு முன்புதான் என்பதையும் மட்டும் மறைத்து விட்டான். மகனுக்கு தலை துவட்டுவதை நிறுத்திவிட்டு, எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்டாள் பாரதி. கேட்டு முடித்து சில வினாடிகள் யோசனையாய் இருந்தவள், பிறகு அசோக்கை ஏறிட்டு நிதானமான குரலில் கேட்டாள்.

"ம்ம்ம்...!! சரி.. இதுக்கும்.. அந்த பொண்ணு உனக்கு ஒத்துவருவாளான்னு உனக்கு சந்தேகம் வந்ததுக்கும் என்ன சம்பந்தம்..??"

"என்ன மம்மி இப்படி கேக்குற..?? ஒரு பப்ளிக் ப்ளேஸ்ல.. அவ்வளவு பேர் பாத்துட்டு இருக்குறப்போ.. ஒருத்தனை செருப்பை கழட்டி அடிக்கப் போறா..!! யப்பா.. எனக்கு அவளை பாக்குறதுக்கே.. அப்படியே திக்குன்னு இருந்தது..!!" அசோக் அவ்வாறு ஒரு மிரட்சிப் பார்வையுடன் சொல்ல,

"ஹாஹாஹாஹாஹாஹா..!!" பாரதி சிரித்தாள்.

"ப்ச்.. என்ன மம்மி.. நான் சீரியஸா சொல்லிட்டு இருக்கேன்.. நீ சிரிக்கிற..??"

"பின்ன என்ன..?? நீ சொல்றதை கேட்டா சிரிப்புதான் வருது..!! ம்ம்ம்ம்.... அம்மா ஒன்னு சொல்லவா..??"

"என்ன..??"

"பாவம் செஞ்சவங்கதான் சாமியை பாத்து பயப்படனும்.. தப்பே செய்யாதவங்க எதுக்கு பயப்படனும்..?? நீ பயப்படுறதும் எனக்கு அந்த மாதிரிதான் இருக்கு..!! மனசுல தப்பான எண்ணம் இருக்குறவங்கதான்.. அந்தப் பொண்ணை கண்டா மெரளனும்.. நீ எதுக்கு மெரள்ற..?? நல்லவங்களுக்கு சாமி எப்போவுமே கைக்கொழந்தை மாதிரி..!!"

"என்ன மம்மி நீ.. அவளை போய் சாமி கூட கம்பேர் பண்ணிட்டு இருக்குற..??"

"ஏன்.. என்ன தப்பு..?? தப்பை தட்டிகேக்குற எல்லாருமே சாமிக்கு சமானம்தாண்டா..!!"

"அப்போ.. அவ அந்த மாதிரி நடந்துக்கிட்டது சரிதான்னு சொல்றியா..??"

"அதுல என்ன உனக்கு சந்தேகம்..?? அம்மா இன்னொன்னு சொல்லவா..??"

"சொல்லு..!!"

"ஆம்பளைங்களுக்கு அழகுன்னு ஒரு பழமொழி சொல்வாங்களே.. தெரியுமா..??"

"ம்ஹூம்..!!"

"அதாண்டா.. ஏதோ புருஷலட்சணம்னு சொல்வாங்க..!!"

"ஆமாம்.. உத்தியோகம் புருஷலட்சணம்..!!"

"ம்ம்ம்.. கரெக்ட்..!! ஆம்பளைங்களுக்கு அழகு உத்தியோகம்.. அதாவது உழைப்பு...!! அதுமாதிரி பொம்பளைங்களுக்கு எது அழகு தெரியுமா..??"

"எது..??"

"தைரியம்..!!!!!" பாரதி சற்றே அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.

"ம்ம்..!!"

"தைரியமா இருக்குறவதாண்டா பொம்பளை.. அந்த தைரியமே அவளுக்கு ஒரு தனி அழகை கொடுக்கும் தெரியுமா..!! அவ்வளவு பேர் இருக்குற ஒரு பொது எடத்துல.. ஒருத்தன் செஞ்ச தப்பை தாங்கிக்க முடியாம செருப்பை கைல எடுத்தா பாத்தியா.. அவதாண்டா பொண்ணு... எந்தப் பொண்ணுக்குமே அந்த தைரியம் அவசியமா இருக்கணும்..!!"

"ம்ம்..!!"

அம்மா சொல்கிற விஷயங்கள் அசோக்கின் புத்திக்குள் இறங்கிக் கொண்டிருக்க, அவன் அமைதியாக 'உம்' கொட்டிக் கொண்டிருந்தான். பாரதியோ இப்போது பட்டென பழைய நினைவுகளில் மூழ்கிப் போனாள். எங்கேயோ பார்த்தபடி தனது இளமைப்பருவ அனுபவத்தை மகனிடம் சொன்னாள்.

"அப்போ... எங்க வீட்டுக்கு பின்னாடி வைகை ஆறு ஓடும் அசோக்.. பக்கத்துல இருக்குற ஆத்துக்கு தண்ணி எடுக்குறதுக்கு கூட.. எங்க வீட்டுல என்னை தனியா அனுப்ப மாட்டாங்க..!! அதே பாரதிதான்.. ஒத்தை ஆளா.. உசுரை கைல புடிச்சுட்டு.. தன்னந்தனியா மெட்ராஸ் வந்து சேர்ந்தேன்..!! எப்படி..?? தைரியம்..!!!"

"ம்ம்..!!"

"உங்க தாத்தா வீட்டுல.. காம்பவுண்டு சுவர் நல்லா ஏழடி உசரத்துக்கு இருக்கும்.. சுவர் மேல கொஞ்சம் கூட இடைவெளி விடாம.. கண்ணாடி பீங்கான் வச்சு பூசிருப்பாங்க.. அந்த சுவரை ஏறி குதிக்கனும்னா எவ்வளவு ரத்தத்தை கீழ சிந்தனும் தெரியுமா..?? கை கால்லாம் கிழிஞ்சுபோய்.. ரத்தக்களரியாதாண்டா உன் அப்பாகிட்ட வந்து சேர்ந்தேன்..!! ஏன்..?? தைரியம்..!!!"

"ம்ம்..!!"

"அன்னைக்கு எனக்கு அந்த தைரியம் இருந்ததாலதான்.. இன்னைக்கு எனக்கு கைல வச்சு தாங்குற புருஷன் கெடைச்சிருக்காரு.. கண்ணுமணிக மாதிரி ரெண்டு புள்ளைங்க கெடைச்சிருக்கீங்க.. கவலைன்னா என்னன்னே தெரியாத மாதிரி ஒரு குடும்பமும், வாழ்க்கையும் கெடைச்சிருக்கு..!!"

பாரதி மிக உணர்ச்சிவசப்பட்டுப்போய் சொல்லிக்கொண்டிருந்தாள். அசோக்கோ எந்த உணர்ச்சியும் காட்டாமல், அந்தப் பெண்ணின் நினைவில் மூழ்கியிருந்தான். கொஞ்ச நேரம் இடைவெளிவிட்ட பாரதி மீண்டும் ஒரு நீண்ட பெருமூச்சுடன் ஆரம்பித்தாள்.

"ம்ஹ்ஹ்ஹ்ம்...!! உங்க தாத்தா.. பச்சைக்கலர்ல பட்டையா ஒரு பெல்ட் இடுப்புல கட்டிருப்பாரு.. ட்ரன்க் பெட்டிக்குள்ள நான் ஒளிச்சு வச்சுருந்த போஸ்ட் கார்ட்லாம் அவர் கைல கெடைச்ச அன்னைக்கு என்ன செஞ்சாரு தெரியுமா.. அந்த பெல்ட்டை கழட்டி.."

"ஐயையையெ... போதும் மம்மி.. மொக்கை தாங்க முடியல..!!" அசோக் இப்போது பொறுமையில்லாமல் சொன்னான். பாரதி சலிப்பானாள்.

"ம்க்கும்... ஏண்டா சொல்ல மாட்ட.. நான் பட்ட வேதனைலாம் உனக்கு மொக்கையாத்தான் தெரியும்..!!"

"ப்ச்... உன் கதையை விடு மம்மி.. அந்தப் பொண்ணை பத்தி சொல்லு..!!"

"இன்னும் அவளை பத்தி என்ன சொல்லனும்..?? நான் சொல்லவேண்டியதுலாம் சொல்லிட்டேன்.. இனிமே நீதான் நல்லா யோசிச்சு முடிவெடுக்கணும்..!! நான் போய் சட்னியை அரைக்கிறேன்.. நீ சட்டுன்னு கெளம்பி வா..!!"

சொன்ன பாரதி அவசரமாய் அங்கிருந்து நகர்ந்தாள். வாசலை அடைந்தவள் ஒருகணம் தயங்கி நின்றாள். பிறகு அப்படியே திரும்பி மகனை பார்த்து, புன்னகையுடன் சொன்னாள்.

"எனக்கென்னவோ.. அந்தப் பொண்ணு மருமகளா வர்றதுக்கு.. இந்த வீடு குடுத்து வச்சிருக்கணும்னு தோணுது அசோக்..!! உன்னால முடிஞ்சா.. அந்த பாக்கியத்தை இந்த குடும்பத்துக்கு குடு..!!"

அம்மா அந்தமாதிரி தெள்ளத்தெளிவாக சொல்ல, அசோக்கும் இப்போது மனக்கலக்கம் நீங்கியவனாய் அவளைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தான். அந்தப் பெண்ணை மீண்டும் சந்திக்க நேர்ந்தால், அவளுடன் பேசுகிற வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டான். ஆனால் அவளை மீண்டும் சந்திக்கிற வாய்ப்பு கிட்டுமா என்று ஒரு கேள்வியும் கூடவே மனதில் எழுந்தது. எனக்கென விதிக்கப்பட்டவளாய் இருந்தால், நிச்சயம் என் எதிரே தோன்றுவாள் என்று அந்த மனதை சமாதானம் செய்தான். 'அவளை அனுப்பி வை..!!' என்று ஆண்டவனிடம் ஒருமுறை வேண்டிக் கொண்டான்.



அத்தியாயம் 7

அன்று மதியம். அதே ஃபுட் கோர்ட். அசோக்கும் நண்பர்களும் அப்போதுதான் உணவருந்த ஆரம்பித்திருந்தார்கள். முதல் வாய் எடுத்து வைத்து, சுவைத்து பார்த்ததுமே அசோக் சலிப்பாக சொன்னான்.

"ப்ச்.. பார்டா இவனுகளை.. பாஸ்தால உப்பே போடல.. சப்புன்னு இருக்கு..!!" அசோக் சொல்ல, வேணு அதற்காவே காத்திருந்தவன் மாதிரி

"ம்ம்.. நீ சொரணை கெட்ட பயன்னு அவனுகளுக்கும் தெரிஞ்சு போச்சு போல இருக்கு மச்சி..!!" என்று பட்டென கிண்டலாக சொன்னான்.

"ஹாஹா.. ஹாஹா..!!" கிஷோரும் சாலமனும் சிரித்தார்கள். அசோக் நிஜமாகவே கடுப்பாகிப் போனான்.

"ங்கொய்யால.. கொலைகாரனாக்காதிங்கடா என்னைய..!! நல்லா உங்க ஆசை தீர.. ஒருநாள் ஃபுல்லா என்னை ஓட்டிட்டிங்க.. போதும்.. அத்தோட விட்ருங்க..!!" என்று சூடாக சொன்னான்.

"ஒய்.. என்ன... ஓவரா சலம்புற..?? ஒருநாள் ஓட்டுனதுக்கே உனக்கு இவ்வளவு எரியுதா..?? நாங்கள்லாம் உன்கிட்ட எவ்வளவு வாங்கிருப்போம்..?? எங்களுக்கு எவ்வளவு எரியும்.??"

"ஹ்ஹ.. சும்மாவா ஓட்டுனேன்.. நீங்க பண்ணின காமடி அப்படி..!!" அசோக் டேபிளில் இருந்த அந்த துளையிட்ட சீசாவை எடுத்து, பாஸ்தாவில் உப்பு தூவிக்கொண்டே சொன்னான்.

"அப்போ நீ பண்ணினது காமடி இல்லையா..?? நாங்களாவது லவ் பண்ண ஆரம்பிச்சப்புறம் அவளுகளுக்கு பயந்து சாகுறோம்..!! நீ பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே.. பின்னங்கால் பிடரில அடிக்க ஓடி வந்தியே மச்சான்.. அந்த காமடியை எங்க போய் சொல்றது..?? நாங்க அப்படித்தான் ஓட்டுவோம்.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ..!!" - இது சாலமன்.

"சரிடா.. ஓட்டுங்கடா..!! ஆனா.. ஓட்டுறது ஒரு அர்த்தத்தோட ஓட்டுங்க.. சும்ம்ம்மா ஏதாவது சொல்லனுமேனு சொல்லாதீங்க..!!"

"இப்போ என்ன நாங்க ஓட்டுனதுல உனக்கு அர்த்தம் புரியல..??"

"ம்ம்ம்...?? சரி.. நேத்து நான் பயந்து போய் திரும்ப வந்துட்டேன்.. ஒத்துக்குறேன்..!! ஆனா.. சொரணை கெட்ட பயன்னு சொன்னா என்ன அர்த்தம்..?? அப்படி என்ன சொரணை கெட்டு போயிட்டேன்..??"

"பின்ன என்ன..?? நீதான நேத்து பெரிய புடுங்கி மாதிரி.. 'அந்தப் பொண்ணை லவ் பண்ண வச்சு காட்டுறேன் பாருங்கடா'னு.. சவால் விட்டுட்டு போன..?? 'சப்பை.. சப்பை மேட்டர்'னு.. சவடாலா பேசுன..?? அப்புறம் பேசாம பம்மிட்டு.. ஆல் ஹோல்ஸையும் அமுக்கி பொத்திட்டு திரும்ப வந்துட்டா.. உன்னை சொரணை கெட்ட பயன்னு சொல்லாம வேற என்ன சொல்றது..?? பேசுனா.. பேசுன மாதிரி செய்யணும்டா..!!"

"ஹேய்..!!! கொஞ்சமாவது மனசாட்சியோட பேசுங்கடா..!! கையில செருப்பை எடுத்து என் மூஞ்சிக்கு முன்னாடி ஆட்டுறா.. காளி மாதிரி அப்படியே ஆவேசமா நிக்கிறா.. அவகிட்ட போய் 'ஹாய்.. ஹவ் ஆர் யூ.. ஐ லைக் யூ..' அப்படின்னு இளிச்சுக்கிட்டே டயலாக் பேச சொல்றீங்களா..??"

"பேசிருக்கணும் மச்சி.. சொரணை இருக்குறவனா இருந்தா பேசிருக்கணும்.. அந்த செப்பலால ரெண்டு அப்பு வாங்கிருந்தா கூட தப்பே இல்ல..!!" சாலமன் கிண்டலாக சொல்ல,

"ம்ம்.. உனக்கு வேணா உன் ஆளுட்ட வாங்கி வாங்கி.. செருப்படி படுறதுலாம் சகஜமாகிப் போயிருக்கலாம்.. என்னாலலாம் முடியாது..!! நேத்து அவ ஏதோ பேட் மூட்ல இருந்தா.. அதான் பேசாம பேக் அடிச்சுட்டேன்.. வேணுன்னா இன்னைக்கு அவ வரட்டும்.. கண்டிப்பா போய் பேசுறேன்.. அவளை லவ் பண்ண வச்சு காட்டுறேன்..!!" அசோக் பொறுமையாக பதிலளித்தான்.

"அவதான..?? வருவா வருவா..!! நல்லா வாயை ஆ'ன்னு பொளந்துட்டு உக்காந்திரு..!!"

"நான் வாயை பொளந்துட்டு உக்கார்றது இருக்கட்டும்.. நீ மொதல்ல வாயை மூடிட்டு சாப்பிடு..!!"

அசோக் சலிப்பாக சொல்லிவிட்டு அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான். ஸ்பூனால் கொஞ்சம் கொஞ்சமாய் பாஸ்தா அள்ளி வாய்க்குள் திணித்துக் கொண்டான். நண்பர்களை பார்ப்பதை தவிர்த்து, பார்வையை வேறெங்கோ செலுத்தியபடியே சாப்பிட்டான். மற்றவர்களும் இப்போது எதுவும் பதில் பேசவில்லை. அமைதியாக அவரவர் உணவை உண்ண ஆரம்பித்திருந்தனர்.

ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. சாலமன் மீண்டும் கேலியான குரலில் அசோக்கிடம் சொன்னான்.

"மானகெட்ட மாப்ள.. அந்த சால்ட் டப்பாவை கொஞ்சம் எடுக்குறியா..??" அவ்வளவுதான்.. அசோக் படுடென்ஷனாகிப் போனான்..!!

"த்தா.. சொல்லிட்டே இருக்குறேன்..!! மசுரு..!!"

என்று கத்தியவாறு உப்பு டப்பாவை எடுத்து சாலமனின் அடிவயிறை குறி பார்த்து எறிந்தான். சாலமன் அவசரமாய் கைகளை நகர்த்தி, அடி படாதவாறு அந்த டப்பாவை கேட்ச் பிடித்துக் கொண்டான்.

"ஹேய்.. ஏண்டா இப்படி டென்ஷன் ஆகுற..??" வேணு அசோக்கிடம் சீறினான்.

"பின்ன என்னடா..?? சும்மா சும்மா.. சொரணை கெட்டவன், மானம் கெட்டவன்னுட்டு..?? அதான் இன்னைக்கு அவ வந்தா போய் பேசுறேன்னு சொல்லிட்டேன்ல..?? அத்தோட விடுவீங்களா...??"

"ஆமாம்.. டெயிலி வர்றதுக்கு அவ என்ன ந்யூஸ் பேப்பரா..?? அவள்லாம் இனி வர மாட்டா.. அவ்வளவுதான்..!!" சாலமன் எரிச்சலாக கத்த, அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த கிஷோர் இப்போது வாயை திறந்தான்.

"ஏய்.. மேட்டர் தெரியாம பேசாதீங்கடா..!! அந்தப் பொண்ணு கண்டிப்பா வருவா..!!"

கிஷோர் அந்த மாதிரி அமைதியாக சொல்லவும், இப்போது மற்ற மூன்று பேரும் திரும்பி அவனுடைய முகத்தை குழப்பமாக ஏறிட்டனர். வேணுதான் அந்த குழப்பம் கலந்த குரலிலேயே கிஷோரிடம் கேட்டான்.

"எ..எப்படிடா சொல்ற..??"

"நம்ம பையனுக்கும் அந்தப் பொண்ணுக்கும் ஒரு Wi-Fi கனெக்ஷன் இருக்கு மச்சி.. நம்ம கண்ணுக்குலாம் தெரியாது அந்த கனெக்ஷன்..!!"

"பு..புரியலடா..!!"

"நான் அந்த பொண்ணை செலக்ட் பண்றதுக்கு முன்னாடியே.. நம்ம பையன் பலநாளா அவளை சைலண்டா சைட் அடிச்சிருக்கான்..!! உங்கள்ல யாருக்காவது தெரியுமா..?? ம்ம்..?? எனக்கும் இத்தனை நாளா தெரியாது.. எவ்வளவு பெரிய கேடின்னு பாரு இவன்..??"

"ஏய்.. இ..இவன் என்னடா சொல்றான்..??"

வேணுவும், சாலமனும் குழப்பமாய் அசோக்கை பார்த்தனர். அவனோ கிஷோரையே எரிச்சலாக முறைத்துக் கொண்டிருந்தான். இத்தனை நாட்களாக சங்கீதாவிடம் சொல்கிற விஷயங்கள்தான் கிஷோருக்கும் சென்றுவிடும். இன்று அம்மாவிடம் பேசிய விஷயமும் அவனை வந்து அடைந்திருக்கிறதே என்ற எண்ணத்தில் வந்த எரிச்சல் அது.

"என்னடா மொறைக்கிற..??" கிஷோர் அசோக்கை சீண்டும் விதமாய் கேட்டான்.

"உளறிட்டாங்களா உன்கிட்ட..??" அசோக்கின் குரலில் ஒருவித கடுப்பு கலந்திருந்தது.

"டேய்.. ஆன்ட்டியை கொறை சொல்லாத.. அவங்க நெலமைல இருந்து கொஞ்சம் யோசிச்சு பாரு..!! இன்னைக்கு எங்கிட்ட பேசுறப்போ எவ்வளவு சந்தோஷமா பேசினாங்க தெரியுமா.. அவங்க இவ்வளவு சந்தோஷப்பட்டு நான் பாத்ததே இல்ல..!! அந்த பொண்ணை பத்தி விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டாங்க.. 'என் புள்ளை அந்த பொண்ணை லவ் பண்றான் போல இருக்கு.. நீங்க ஃப்ரண்ட்ஸ் தடிப்பசங்கள்லாம் முடிஞ்ச வரை அந்த லவ்வுக்கு ஹெல்ப் பண்ணுங்கடா'ன்னு கேட்டுக்கிட்டாங்க..!!"

"லவ்வாஆஆ..????" வேணுவும் சாலமனும் வாயை பிளந்தனர்.

"ஏய்.. அதெல்லாம் ஒன்னும் இல்லடா..!!" அசோக் பலவீனமாக மறுத்தான்.

"இருக்கு மச்சி.. உனக்கும் அந்தப் பொண்ணுக்கும் ஏதோ ஒரு லிங்க் இருக்கு..!! அப்புறம் எப்புடி கரெக்டா அவளை நான் செலக்ட் பண்ணி காட்டனும்..??"

"ம்ம்ம்.. அப்புறம் எதுக்கு அவ கரெக்டா செருப்பை தூக்கி காட்டனும்..??"

"ப்ச்.. எல்லாத்துக்கும் ஏதாவது காரணம் இருக்கும்டா..!! நீ வேணா பாரு.. அவ கண்டிப்பா வருவா..!!'

"ம்.. ம்.. வந்தா பாத்துக்கலாம்..!!" அசோக் அசால்ட்டாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சாலமன் திடீரென உற்சாகமாக கத்தினான்.

"மச்சீஈஈ..!!!!"

"என்னடா..??"

"வந்துட்டா மச்சி.. வந்துட்டா..!!"

சாலமன் சொல்லவும், இப்போது அனைவரும் படக்கென திரும்பி அவன் பார்வை சென்ற திசையை பார்த்தார்கள். அங்கே அவள் வந்துகொண்டிருந்தாள். நேற்று மாதிரியே கூந்தலும், காதுவளையமும் காற்றில் ஆட.. குதிரை கணக்காக வந்து கொண்டிருந்தாள்..!! டி-ஷர்ட் ஜீன்ஸ்.. தோளில் பேக்.. கையில் ஒரு பெரிய பிளாஸ்டிக் ப்ளேட்.. அதன்மேல் ஒரு சிறிய உணவு ப்ளேட்..!!

அவளை பார்த்த மாத்திரத்திலேயே அசோக்கின் இதயம் கிடந்தது தாறுமாறாய் துடிக்க ஆரம்பித்திருந்தது. நாடித்துடிப்பு எல்லாம் கன்னாபின்னாவென்று எகிற ஆரம்பித்தது. ஆச்சரியம், சந்தோஷம், நிம்மதி, பயம் என பலவித உணர்வுகள் கலந்துகட்டி அவனை தாக்கின. பதித்த பார்வையை எடுக்க மனமில்லாமல், அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் இவர்களை கடந்து சென்றாள். ஓரமாக யாருமற்று கிடந்த அந்த டேபிளில் சென்று அமர்ந்து கொண்டாள். பேகை பக்கத்து சேரில் வைத்துவிட்டு, ப்ளேட்டை பார்த்து குனிந்து கொண்டாள்.

இவர்கள் நால்வரும் இன்னுமே அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்க, வேணுதான் முதலில் வாய் திறந்தான்.

"மச்சீஈஈ.. என்ன டைமிங்டா இது..?? சான்சே இல்ல போ..!! நீ சொன்னது நூத்துக்கு நூறு உண்மைடா.. இவனுக்கும் அவளுக்கும் ஏதோ ஒரு வயர்லஸ் நெட்வொர்க் இருக்குது மச்சி..!!"

"ஃபேக்ட்.. ஃபேக்ட்.. ஃபேக்ட்..!!" சாலமனும் ஆமோதித்தான்.

"ஏய்.. போடா.. போய் அவகிட்ட பேசு.. போ..!!" கிஷோர் அசோக்கை தூண்டினான்.

"ஆமாம் மச்சி.. போடா.. போய் பேசு.. எந்திரி..!!" வேணும், சாலமனும் கிஷோருடன் சேர்ந்து கொண்டார்கள்.

"ஹேய்.. எ..எனக்கு ஒரு மாதிரி இருக்குதுடா..!!" அசோக்கிற்கு நிஜமாகவே உதறலாக இருந்தது.

"ப்ச்.. ஒன்னும் வொர்ரி பண்ணிக்காத மச்சி..!! நீ சொன்ன மாதிரி.. நேத்து அவ ஏதோ பேட் மூட்ல இருந்திருக்காடா.. அதான் அப்படிலாம் நடந்துக்கிட்டா..!! இன்னைக்கு நல்ல மூட்ல இருக்கா.. தைரியமா போய் பேசு..!!" என்றான் வேணு.

"அவ நல்ல மூட்ல இருக்கான்னு உனக்கு எப்படி தெரியும்..??"

"எ..எல்லாம்.. ஒரு சில அறிகுறிகளை வச்சு சொல்றதுதான்..!! நேத்து அவ என்ன கலர் டி-ஷர்ட் போட்டுட்டு வந்தா..??"

"ப்ளாக்..!!"

"ப்ளாக்னா என்ன அர்த்தம்..?? துக்கம்.. தடங்கல்… அமங்களம்..!! இன்னைக்கு பாரு.. வொயிட் டி-ஷர்ட்.. மங்களகரமா வந்திருக்கா.. நல்ல அறிகுறிடா.. போய் பேசு போ..!!"

"வெள்ளை.. மங்களகரமா..?? மஞ்சளைத்தான அப்படி சொல்வாங்க..??"

"ஓ..!! அப்போ வெள்ளைக்கு என்ன..?? ஆங்.. சாந்தம்.. சமாதானம்..!! அவ நல்ல மூட்ல இருக்கான்றதுக்கு இதைவிட வேற என்னடா ப்ரூஃப் வேணும்..?? கெளம்புடா.. டைம் வேஸ்ட் பண்ணாத..!!"

ஏதேதோ லாஜிக் எல்லாம் சொல்லி, நண்பர்கள் மூவரும் அசோக்கை ஏற்றிவிட, அவனோ இன்னும் தயக்கத்துடனே அமர்ந்திருந்தான். நேற்று பார்த்த அவளுடைய ஆவேசமும், அந்த ஒற்றைக்கால் செருப்பும், இன்னுமே அவனுடைய மூளையை தாக்கி இம்சை செய்தன. உடலிலும் மனதிலும் ஒரு படபடப்பை கிளறி விட்டிருந்தன. சில வினாடிகள் அவ்வாறு தடுமாறியவன், அப்புறம் சற்றே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு எழுந்தான்.

"மச்சீஈஈ.. எல்லாம் எனக்காக நல்லா வேண்டிக்கங்கடா..!!" சொல்லிவிட்டு அசோக் நகர முயல,

"ஏய் ஏய்.. இந்தாடா.. இதையும் எடுத்துட்டு போ..!!" என்று கிஷோர் பாஸ்தா ப்ளேட்டை அவன் கையில் திணித்தான்.

"டேய்... நே..நேத்து மாதிரி எதுவும் ஆயிடாதுல..??" அசோக் பரிதாபமாக கேட்க,

"ஐயே... தைரியமா போ மச்சி..!! சத்தியமா நேத்து மாதிரி நடக்க சான்சே இல்ல.. எல்லாம் நான் அப்போவே நல்லா பாத்துட்டேன்..!!" உறுதியான குரலில் சொன்னான் சாலமன்.

"ந..நல்லா பாத்துட்டியா..?? எதை..??" அசோக் குழப்பமாய் நெற்றி சுருக்கினான்.

"அவ காலை..!! இன்னைக்கு ஷூ போட்டுட்டு வந்திருக்கா மச்சி.. சத்தியமா நேத்து மாதிரி நடக்க சான்சே இல்ல..!!"

சாலமன் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு சொல்ல, அசோக் அவனை எரித்து விடுவது போல முறைத்தான். கையிலிருந்த பாஸ்தாவை அப்படியே அவன் தலையில் கொட்டிவிடலாமா என்று யோசித்தான். அப்புறம் 'மவனே.. உன்னை வந்து வச்சுக்குறேன்..!!' என்று சன்னமான குரலில் அவனை எச்சரித்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தான்.

தடதடத்த இதயத்துடனே நடந்து சென்று, அந்தப்பெண் அமர்ந்திருந்த டேபிளை நெருங்கினான். அருகே நிழலாடவும், அவள் தலையை நிமிர்த்தி இவனை ஏறிட்டாள். அவளுடைய திராட்சை விழிகளில், இப்போது தன் பிம்பம் விழுந்திருக்கிறது என்ற உணர்வே, அசோக்கின் மனதை சில்லிட்டுப்போக வைத்தது. அவன் இப்போது ஒரு அசட்டுப் புன்னகையை சிந்தியவாறே,

"ஹாய்..!!!!" என்று இளித்தான்.

அவள் இவனை ஒருவித சலனமற்ற பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒருவேளை முறைக்கிறாளோ என்று கூட அசோக்குக்கு தோன்றியது. புருவத்தை ஒருமாதிரி உயர்த்தி, 'என்ன..??' என்று அந்த புருவ அசைவாலேயே கேட்டாள்.

"அ..அது.. ஆக்சுவலா.. அ..அங்க எங்கயுமே உக்காரதுக்கு இடம் இல்லங்க.. இஃப் யூ டோன்ட் மைண்ட்.. இ..இங்க நான் உக்காந்துக்கலாமா..??"

அசோக் தட்டு தடுமாறி கேட்டான். அவள் எதுவுமே சொல்லவில்லை. ஓரிரு வினாடிகள் அவன் முகத்தையே அமைதியாக பார்த்தவள், பிறகு மீண்டும் தனது தட்டை பார்த்து குனிந்து கொண்டாள். அசோக்கும் இப்போது தைரியம் பெற்றவனாய் அவளுக்கு எதிரே கிடந்த சேரில் அமர்ந்துகொண்டான். பாஸ்தாவை ஒரு ஸ்பூன் அள்ளி வாய்க்குள் தள்ளியவன், மெல்ல தலையை நிமிர்த்தி எதிரே இருந்தவள் மீது பார்வையை வீசினான்.

அவள் இவனை நிமிர்ந்தே பார்க்கவில்லை. சாப்பாட்டிலேயே கவனமாக இருந்தாள். மழுங்கிப்போன கத்தியால் பிஸ்ஸாவை துண்டம் செய்வதும், ஃபோர்க்கால் அந்த துண்டை குத்தி எடுத்து வாய்க்குள் திணிப்பதும், உதடுகள் அழகாக அசைய அந்த உணவை சுவை பார்ப்பதுமாக இருந்தாள். மேலும் சில வினாடிகள்..!! பிறகு அவள் ஒருமுறை எதேச்சையாக இவன் முகத்தை ஏறிட்ட போது, அசோக் அதற்காகத்தான் காத்திருந்த மாதிரி அவசரமாக சொன்னான்.

"ஹாய்..!! ம்ம்ம்ம்... எ..எனக்கு.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..!!"

அவள் இப்போது நெற்றியை சுருக்கி 'என்ன..?' என்பதுபோல இவனை பார்க்க, அசோக்கே தொடர்ந்தான்.

"ஆ..ஆக்சுவலா நான் ஒரு த..தத்தி.. எனக்கு இதுலாம்.." அசோக் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,

"வாட்..??" அவள் இடைமறித்து கேட்டாள்.

"இ..இல்லைங்க.. ஆக்சுவலா.."

"ஹலோ.. கொ..கொஞ்சம் சத்தமா பேசுறீங்களா.. ப்ளீஸ்..?? எ..எனக்கு காதுல கொஞ்சம் ப்ராப்ளம்.. காது சரியா கேட்காது..!!"

அவள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு, பரிதாபமான குரலில் சொல்ல, அசோக் இப்போது மெலிதாக அதிர்ந்தான். 'என்னது..?? காது.. கேக்காதா..?? இது என்னடா புதுப்பிரச்னை..??' என்று ஓரிரு வினாடிகள் தடுமாறினான். அவளை ஒருமுறை இரக்கமாக ஒருபார்வை பார்த்தான். அப்புறம் உடனடியாய் சமாளித்துக் கொண்டு, சற்றே சத்தமான குரலில் மீண்டும் ஆரம்பித்தான்.

"ஒ..ஒன்னுல்லங்க.. நான் என்ன சொல்ல வந்தேன்னா.. நான் ஒரு.."

"இல்லைங்க.. எனக்கு சுத்தமா கேக்கல.. இன்னும் கொஞ்சம் சத்தமா.. ப்ளீஸ்..!!" அவள் கெஞ்சலாக சொல்ல, குழம்பிப்போன அசோக்

"ஹையோ.. நான் ஒரு தத்தின்னு சொன்னேங்க..!!" என்று கத்தியே விட்டான்.

உடனே அந்த இடத்தில் சட்டென்று ஒரு நிசப்தம்..!! அவர்கள் அமர்ந்திருந்த டேபிளை சுற்றிய ஐந்தாறு டேபிளில் அமர்ந்திருந்தவர்கள்.. சாப்பிடுவதையும் பேசுவதையும் நிறுத்திவிட்டு.. சடக்கென திரும்பி அசோக்கை பார்த்தார்கள்..!! அசோக்கிற்கு ஒருகணம் எதுவும் புரியவில்லை..!! 'எல்லாரும் ஏன் என்னையே பார்க்கிறார்கள்..??' என.. சிலவினாடிகள் திருதிருவென விழித்தவனுக்கு.. அப்புறம்தான் 'தானே தன்னைப் பற்றி கேவலமாக சொல்லி கத்திவிட்டோம்' என்ற உண்மை உறைத்தது..!!

"ஹாஹாஹாஹாஹாஹா..!!!!"

சிரித்தது வேறு யாரும் அல்ல.. இவனுக்கு எதிரே அமர்ந்திருந்தவள்தான்..!! அவளுடைய பற்கள் எல்லாம் பளீரிட.. எளிறுகள் எல்லாம் பளிச்சென தெரிய.. ஒரு கையால் வயிறை பிடித்தவாறு.. இவனைப்பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்..!! அசோக்கிற்கு லேசாக அடிவயிறில் கிலி கிளம்ப ஆரம்பித்தது..!! 'என்ன இது.. ஆரம்பமே ஒன்னும் சரி இல்லையே..??' என்று விளக்கெண்ணெய் குடித்துவிட்டவன் மாதிரி 'பே' என்று விழித்தான். எல்லோரும் இன்னும் இவனையே பார்த்துக் கொண்டிருக்க, இப்போது அசோக் அவர்கள் எல்லாரையும் தனித்தனியாக பார்த்து ஒரு அசட்டுப் புன்னகையை சிந்தி, அவரவர்களின் பார்வையை திருப்பிக் கொள்ள செய்தான்.

"ஹாஹாஹாஹாஹாஹா..!!!!" அவள் இன்னும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தாள். அசோக் இப்போது சற்றே கடுப்பாக அவளை பார்த்தான்.

"ஹலோ ஹலோ.. போதுங்க.. நிறுத்துங்க..!!"

"ஹையோ.. கடவுளே.. முடியல என்னால.. ஹாஹா..!!"

"ஷ்ஷ்... ப்பா.. ஏங்க இப்படிலாம்..??"


"எப்படிலாம்..??" அவள் இப்போது சிரிப்பை நிறுத்திவிட்டு இவனை கூர்மையாக பார்த்தாள்.

"உங்களுக்கு காது நல்லா கேட்குந்தான..??" அசோக் சற்றே எரிச்சலுடன் கேட்க,

"கண்டுபிடிங்க பாக்கலாம்..!! உங்களுக்கு மூளை நல்லா வேலை செய்யுந்தான..??" அவள் கிண்டலாகவே பதில் சொன்னாள்.

"என்னங்க நீங்க.. வந்ததுல இருந்து ஏடாகூடமாவே பேசிட்டு இருக்கீங்க..??"

"ம்ம்.. நீங்களுந்தான் வந்த விஷயத்தை மறந்துட்டு ஏதேதோ பேசிட்டு இருக்கீங்க..??"

"ஹையோ.. அதைத்தாங்க சொல்ல வந்தேன்.. அதுக்குள்ள நீங்க.."

"சரி.. இப்போ சொல்லுங்க..!!" அவள் படக்கென சொல்லிவிட்டு அசோக்கின் கண்களையே கூர்மையாக பார்க்க,

"அ..அது.. நான் என்ன சொல்ல வந்தேன்னா.. ஆக்சுவலா நான் ஒரு தத்.." என்று ஆரம்பித்த அசோக் பட்டென நிறுத்தி,

"இல்ல.. நான் வேற எங்கயாவது இருந்து ஆரம்பிக்கிறேன்..!!" என்று பரிதாபமாக சொன்னான்.

"ஹாஹாஹாஹாஹாஹா..!!!!"

"ஹலோ.. சிரிக்காதிங்க ப்ளீஸ்..!!"

"சரி சிரிக்கல.. மேல சொல்லுங்க..!!"

அப்படி சொன்னாலும், அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வாயைப் பொத்தியவாறு சிரித்துக் கொண்டேதான் இருந்தாள். அசோக் இப்போது சற்று நிதானித்தான். ஆரம்பத்திலேயே அவள் செய்த கலாட்டா, அவனுக்குள் ஒரு படபடப்பை கிளப்பி விட்டிருந்தது. பேச வேண்டும், ஆனால் எங்கிருந்து ஆரம்பிப்பது என்று குழம்பினான். பிறகு அந்த குழப்பத்துடனே..

"மொ..மொதல்ல ரெண்டு விஷயங்க.." என்று ஆரம்பித்தான்.

"என்ன..??"

"ஒன்னு... நா..நான்.. நான் ரொம்ப ரொம்ப அன்பானவன்ங்க..!! ரெண்டு.. எ..என்னை கட்டிக்கப் போற பொண்ணை ரொம்ப பத்திரமா.. ரொம்ப பாதுகாப்பா பாத்துப்பேன்..!!"

"பாதுகாப்பா பாத்துப்பிங்களா..?? ஹ்ஹ.. அதுலாம் ஒரு பெரிய விஷயமாங்க..??" அவள் அசால்ட்டாக சொல்ல,

"என்னங்க இப்படி சொல்லிட்டிங்க..??" அசோக் வியப்பாக கேட்டான்.

"ஆமாம்..!! ஒரு கோல்கேட் பேஸ்ட் வாங்கி குடுத்தா மேட்டர் முடிஞ்சது.. அவங்களே பாதுகாப்பு வளையம்லாம் குடுப்பாங்களே.. ப்ராப்ளம் சால்வ்ட்..!!"

"என்னது..????" அசோக் முகத்தை ஒருமாதிரி அஷ்டகோணலாக சுளித்தான்.

"அதுசரி.. இதுலாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்கீங்க..??"

"அ..அது.. வேற ஒன்னுல்ல.. நீ.. நீ..நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கள்ல.. அதனால.." என்று அவசரமாய் சொல்லிவிட்டவன், பிறகு "ஸாரி.." என்று திருட்டு முழி முழித்தான்.

"அடடா.. அதுக்கு நாந்தான தேங்க்ஸ் சொல்லணும்.. நீங்க ஏன் ஸாரி சொல்றீங்க..??"

"இ..இல்ல.. ஒருவேளை நீங்க வேற யாரையாவது லவ் பண்ணிட்டு இருந்தா..??" படபடப்பில் அசோக் உளறி கொட்ட ஆரம்பித்திருந்தான்.

"வாட்..?? நான் யாரை லவ் பண்றேன்..??"

"ஹையோ.. அதான் ஒருவேளைன்னு சொன்னேனே.. ஒரு சந்தேகந்தாங்க..!! அ..அப்படி யாராவது இருக்காங்களா..??" அசோக்கின் குரலில் ஒரு குறுகுறுப்பு.

"ஹாஹா.. இல்ல...!!" அவள் புன்னகையுடன் மறுக்க,

"வாவ்..!! தேட்ஸ் நைஸ்.. தேட்ஸ் ரியல்லி நைஸ் யு நோ..!!" அசோக் உற்சாகமானான்.

"அதுக்கு ஏன் நீங்க இவ்வளவு சந்தோஷப் படுறீங்க..??"

"எனக்கு அப்போவே தெரியுங்க.. நீங்க யாரையும் லவ் பண்ணிட்டு இருக்க மாட்டீங்கன்னு..!! இந்த சாலமன் நாயிதான் என்னை கன்ஃயூஸ் பண்ணிவிட்டுட்டான்..!!"

"என்ன கன்ஃயூஸ் பண்ணான்..??"

"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. இத்தனை நாளா உங்களை யாரும் விட்டு வச்சிருக்க மாட்டாங்கன்னு சொல்லி.. ரொம்ப கன்ஃயூஸ் பண்ணிவிட்டுட்டான்..!!"

"ஓ..!! அதுசரி.. அது யாரு அந்த சாலமன் நாயி...??"

"ஹாஹா.. அது என் ஃப்ரண்டுங்க.. அதோ.. அங்க உக்காந்திருக்கான்.. அவன்கூட ரெண்டு பேர் உக்காந்திருக்குறாங்களே.. அவங்களும் என் ஃப்ரண்ட்ஸ்தான்..!!"

"ஓ..!!"

"ஆக்சுவலா அவங்கதான்.. உங்களை பாத்து செலக்ட் பண்ணி.." உளறிவிட்ட அசோக் உடனே நாக்கை கடித்துக் கொண்டான். வாயிலேயே பட் என்று தட்டிக் கொண்டான்.

"வாட்..??" அவளுடைய முகத்தில் எக்கச்சக்க குழப்பம்.

"ஐயோ.. கோவப்படாதிங்க.. நா..நான் அதுக்கு முன்னாடியே உங்களை பாத்துட்டேன்.. ப்ராமிஸ்..!!"

"நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்கு ஒன்னும் புரியல..!!" அவள் சலிப்பாக தலையசைத்து கொண்டாள்.

"இ..இல்லைங்க.. ஆ..ஆக்சுவலா நான் என்ன சொல்லவந்தேன்னா.. ம்ம்ம்ம்.. என்ன சொல்ல வந்தேன்..?? ம்ம்ம்ம்.. நான் உங்களை இங்க அடிக்கடி பாத்திருக்கேங்க.. அழகா இருக்கீங்கன்னு தோணும்.. நல்ல பொண்ணுன்னு தோணும்.. பேசிப்பாக்கலாம்னு தோணும்..!!"

"ஓ..!!"

"ஆ..ஆனா.. நீங்கதான் என்னை கவனிச்சிருக்கீங்களான்னு எனக்கு தெரியலை..!! நான் கூட இங்க அடிக்கடி… ஆங்... நேத்து நீங்க செருப்பை எடுத்து காட்டுனீங்கள்ல.. அது என் மூஞ்சிக்கு முன்னாடிதான்..!!"

ரொம்ப பெருமையாக சொல்லிமுடித்தான் அசோக். உளறலின் உச்சபட்சத்தை எட்டியவன், லூசுத்தனமாக பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை கூட உணரவில்லை. தன்னைப் பற்றி அவளுக்கு நினைவூட்டியாயிற்று என்று அவன் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம். அவளுக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை. தான் அவனை டேமேஜ் செய்ததை விட, அவன் தன்னைத்தானே இன்னும் அதிகமாய் டேமேஜ் செய்து கொள்கிறானே என்பதை நினைக்கையில், அவளுக்கு சிரிப்பு பீறிட்டு கிளம்பியது. முன்பை விட அதிகமாக சிரித்தாள்.. வாய் விட்டு.. கலகலவென..!!

"ஹாஹாஹாஹாஹாஹா..!!!!"

அவள் சிரிக்கையில் மிகவும் அழகாக இருந்தாள். ஒரு குழந்தையின் குதுகலம் அவளுடைய முகத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் தெரிந்தது. அவளுடைய முத்துப்பற்களின் ஜொலிஜொலிப்பும்.. ஆரஞ்சு அதரங்களின் மினுமினுப்பும்.. பளிங்கு கண்களின் பளபளப்பும்.. அருகில் இருந்து பார்த்த அசோக்கின் மனதுக்குள் அதகளம் செய்தன..!! அவள் சிரித்துக்கொண்டே இருந்தாள். தத்துபித்தென்று உளறிவிட்டோம் என்பதை தாமதமாக புரிந்து கொண்ட அசோக், இப்போது ஒரு அசட்டுப் புன்னகையுடன்..

"ஹலோ.. சிரிக்காதிங்க ப்ளீஸ்..!! நான் உங்கட்ட நெறைய விஷயம் சொல்லனும்னு நெனச்சேன்.. எல்லாம் இப்படி ஆர்டர் மிஸ் ஆகி.. அதது இஷ்டத்துக்கு வெளில வருது..!!" என்று பரிதாபமாக சொன்னான்.

"ஹாஹாஹாஹாஹாஹா..!!!!"

அவள் அதற்கும் சிரித்தாள். மேலும் சிறிது நேரம்..!! நன்றாக ஆசைதீர மனம்விட்டு சிரித்தவள், பிறகு மெல்ல மெல்ல அந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள். ப்ளேட்டில் கிடந்த அந்த மிளகாய் துகள் பாக்கெட்டை கிழித்து, அவள் தட்டில் மீதமிருந்த பிஸ்ஸாவின் மேனியெங்கும் மெல்ல தூவினாள். தூவிக்கொண்டே.. இவனை நிமிர்ந்து பாராமலே.. மிக கேஷுவலான குரலில் கேட்டாள்..!!

"லவ் பண்றீங்களா என்னை..??"

அசோக் சுத்தமாக அந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. பக்கென்று அதிர்ந்து போய் அவளை பார்த்தான். பட்டென்று அவனுக்கு நாக்கு வறண்டு போன மாதிரியிருந்தது.

"அ..அது... அ..அதுலாம்.. அது.."

என்ன சொல்வதென்று புரியாமல் தடுமாறினான். அவனுடைய விரல்கள் கூட இப்போது நடுங்க ஆரம்பித்திருந்தன. அவள் இப்போது நிமிர்ந்து இவனுடைய முகத்தை ஏறிட்டாள். இவனுடைய கண்களையே ஷார்ப்பாக ஒரு பார்வை பார்த்தாள். குரலில் ஒரு புதுவித கடுகடுப்புடன் சொன்னாள்.

"இங்க பாருங்க.. மனசுல நெனச்சதை வெளில சொல்ல துப்பு இல்லாதவன.. நான் ஆம்பளையாவே கன்சிடர் பண்றது இல்ல..!! அப்புறம் உங்க இஷ்டம்..!!"

அசோக்கிற்கு வேறு வழி இருக்கவில்லை..!! இப்போது இல்லை என்று சொல்லிவிட்டு.. பிறகு ஏதாவது வில்லங்கம் நேர்ந்துவிட்டால்..?? இவளுடைய குணம் வேறு படுடெரராக இருக்கிறது..?? கிடைத்த குறுகிய நேரத்திலேயே.. யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவன்.. இப்போது தட்டுத்தடுமாறி சொன்னான்..!!

"ஆ..ஆமாங்க.. ப..பண்றேன்...!!"

"பண்றீங்களா.. என்ன பண்றீங்க..?? தெளிவா சொல்லுங்க..!!" அவள் விரட்டினாள்.

"ல..லவ்வுங்க.. லவ் பண்றேங்க.." அவசரமாகவும், பரிதாபமாகவும் சொன்ன அசோக்..

"ஐ.. ஐ லவ் யூங்க..!!" என்றான் தாழ்ந்த குரலில்.

"ம்ம்.. தேட்ஸ் லைக் எ குட்பாய்..!!" அவள் புன்னகையும், திருப்தியுமாக சொன்னாள்.

சொல்லிவிட்டு மீண்டும் அவளது உணவுத்தட்டை பார்த்து குனிந்துகொண்டாள். பிஸ்ஸாவை துண்டம் செய்தாள்.. வாயில் திணித்து சுவைத்தாள்..!! 'என் இதயத்தில் நீ இருக்கிறாய்' என்று இவன் உரைத்திருக்கிறான். ஆனால்.. அவன் ஏதோ 'எங்க ஏரியாவுல இன்னைக்கு பவர் கட்..' என்று சொன்னதை போலத்தான் அவளுடைய செய்கை இருந்தது. அவன் சொன்ன விஷயத்திற்கு அந்த அளவிலான ஒரு உணர்ச்சியையே முகத்தில் பிரதிபலித்தாள். அசோக்கோ அவள் என்ன பதில் சொல்லப் போகிறாள் என்ற ஆர்வத்துடன், அவளுடைய முகத்தையே ஆர்வமாக, 'பே' என்று பார்த்தவாறு அமர்ந்திருந்தான். ஒரு சில வினாடிகளில் பொறுமை இழந்து போய்..

"எ..என்னங்க.. ஒண்ணுமே சொல்ல மாட்டேன்றிங்க..??" என்று கேட்டே விட்டான்.

"என்னை 'நீ வா போ'ன்னே சொல்லலாம்..!!"

"ஐயையோ.. ப..பரவாலைங்க.. இருக்கட்டும்.."

"இல்ல.. நான் இனிமே உன்னை அப்படித்தான் கூப்பிடப் போறேன்.. வேணும்னா நீயும் என்னை அப்படி கூப்பிட்டுக்கோ..!! இல்ல கஷ்டமா இருக்குனா 'நீங்க வாங்க'ன்னே கண்டின்யூ பண்ணு.. எதுனாலும் எனக்கு ஓகே..!!" அவள் கூலாக சொல்ல, 'என்ன குசும்பு இவளுக்கு..' என்று அசோக் மனதில் நினைத்துக் கொண்டான்.

"சரிங்.. சரி.. ட்ரை பண்றேன்..!!"

"குட்..!!"

"அதுலாம் இருக்கட்டுங்.. நான் கேட்டதுக்கு எதுவுமே சொல்லலையே..??"

"ம்ம்.. சொல்றேன்.. இரு..!! ம்ம்ம்ம்ம்... ஃபஜிட்டா பன்னீர் ஸ்டஃப்ட் பரிட்டோ.. அப்டின்னு ஒன்னு இருக்கு தெரியுமா..??"

"ம்ஹூம்.. என்ன அது..??" அசோக் நெற்றியை சுருக்கினான்.

"நெறைய வெஜிடபிள்ஸ்.. பன்னீர்.. பீன்ஸ்.. ரைஸ்.. ச்சீஸ்.. எல்லாம் உள்ளவச்சு.. சப்பாத்தி மாதிரி ஒன்னுல ரோல் மாதிரி ராப் பண்ணி தருவாங்க.. அதை ரெட் சில்லி சாஸ் தொட்டுக்கிட்டு ஒரு கடி கடிச்சோம்னு வச்சுக்கோ.. அப்படியே யம்மியா இருக்கும்..!!" அவள் அப்படியே அனுபவித்து ஆசையாக சொன்னாள்.

"ஓ..!! அ..அது சரி.. அதுலாம் எதுக்கு இப்போ எங்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்.. இ..இருக்க..??"

"அது.. அங்க டேகோ பெல்னு ஒரு ரெஸ்டாரன்ட் கவுன்ட்டர் இருக்குல.. அங்க கெடைக்கும்.. போய் எனக்கு ஒன்னு வாங்கிட்டு வர்றியா..??" அவள் மிக இயல்பாக சொல்ல, இவன் தலையை சொறிந்தான்.

"என்னங்க நீங்க.. நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன்.. நீங்.. நீ என்னடான்னா.. பரிட்டோ சொறிட்டோன்னுட்டு..??"

"இங்க பாரு.. மேற்கொண்டு நான் பேசணும்னா.. போய் எனக்கு ஒரு பரிட்டோ வாங்கிட்டு வா.. இல்லனா எடத்தை காலி பண்ணு.. கெளம்பு..!!"

சொல்லிவிட்டு அவள் பிஸ்ஸா சாப்பிடுவதில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தாள். இவனை கண்டுகொள்ளவே இல்லை. அசோக் என்ன செய்வது என்று தெரியாமல், சிறிது நேரம் திருதிருவென விழித்தபடி அமர்ந்திருந்தான். பிறகு வேறு எந்த வழியும் இருப்பதாக அவனுக்கு தோன்றாமல் போகவும், ஒரு முடிவுக்கு வந்தவனாய்..

"ச..சரி.. போய் வாங்கிட்டு வர்றேன்.." என்றுவிட்டு எழுந்தான். சலிப்பாக தலையை அசைத்தவாறே, அந்த கவுன்ட்டர் நோக்கி நடந்தான்.

"ஹலோ.. அப்படியே ஒரு கோக் டின்..!!" அவள் பின்னால் இருந்து இரைந்தாள்.

"சரீஈ..!!" அசோக் திரும்பி பார்க்காமலே வெறுப்பாக கத்தினான்.

"டயட் கோக்..!!" அவள் இன்னும் பெரிதாக இரைய,

"சரீஈஈஈ...!!"

அசோக் இன்னும் வெறுப்பாக கத்தியவாறே வேகமாக நடந்தான். 'ஷ்ஷ்ஷ்ஷ்..' என்று தலையை ஒருமுறை உலுக்கிக் கொண்டான். 'ச்சே.. என்ன எழவுடா இது..?? கொஞ்ச நேரம் பேசுனதுக்கே காதுலாம் 'கொய்ய்ய்ங்'னு இருக்குது.. இவனுகள்லாம் எப்படி மணிக்கணக்குல பேசுறானுக..?? இதுக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே.. இவளை எப்படி பேசி சமாளிச்சு லவ் பண்ண வைக்கப் போறேன்..?? இவனுகள்லாம் எப்படி இந்த ஸ்டேஜை க்ராஸ் பண்ணி நெக்ஸ்ட் ஸ்டெப் போனானுக..?? பருப்பு பரதநாட்டியம் ஆடும்னு கிஷோர் சொன்னானே.. இதானா அது..??'

எரிச்சலுடனே சென்று அசோக் அந்தப்பெண் சொன்ன ஐட்டங்களை வாங்கிக்கொண்டான். திரும்பி நடந்து வருகையில், 'என்னடா இதுலாம்..??' என்று சைகையால் கேட்ட நண்பர்களுக்கு, 'நத்திங்..' என்று சைகையாலே தோளை குலுக்கி புன்னகைத்தான்.

வாங்கி சென்ற ஐட்டங்களை அவளிடம் சென்று கொடுத்தான். அவள் ஆர்வமாக அதை பிரித்து உண்ண ஆரம்பித்தாள். பிஸ்ஸாவை ஒரு கவ்வு.. பரிட்டோவை ஒரு கடி.. கோக்கை ஒரு குடி.. கலந்துகட்டி அடித்தாள்..!! அசோக் அவள் சாப்பிடுவதையே பாஸ்தா மென்றுகொண்டு, பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

"எனக்கும் உன்னை ஞாபகம் இருக்கு.." அவள் அசை போட்டுக்கொண்டே திடீரென சொன்னாள்.

"வாட்..??"

"இல்ல.. நானும் உன்னை இங்க அடிக்கடி பாத்திருக்கேன்.. உன்னை நல்லா எனக்கு ஞாபகம் இருக்குன்னு சொன்னேன்..!!" அவள் அவ்வாறு சொன்னதும், இப்போது அசோக்கிடம் ஒரு திடீர் உற்சாகம்.

"ஓ..!! இஸ் இட்..??" என்று வாயெல்லாம் பல்லாக கேட்டான்.

"ம்ம்..!! நல்ல பையன் மாதிரி இருக்கான்னு தோணும்.. அப்புறம்.."

"ம்ம்..?? அப்புறம்..??"

"நல்லா ஸ்மார்ட்டா இருக்கான்னு தோணும்..!!" சொல்லிவிட்டு அவள் கண்சிமிட்ட, அசோக்குக்கு ஜிவ்வென வானத்தில் பறப்பது மாதிரி இருந்தது.

"நெ..நெஜமாவா சொல்ற..??"

"உனக்கு நம்புறதுக்கே கஷ்டமா இருக்குல..??" அவளுடைய வார்த்தையில் இருந்த குறும்பை உணராமல், அசோக்கும்

"ம்ம்.. யெஸ்..!!!" என்று இளித்தான்.

"பட்.. அதுதான் உண்மை.. நானும் உன்னை சைட் அடிச்சிருக்கேன்..!!"

"ஓ..!!" அசோக் வாயை பிளந்தான்.

"இதுலாம் தப்பு இல்லையா..??"

"ஐயோ.. இதுல என்ன தப்பு இருக்கு..?? நீ சைட் அடிக்க நான் குடுத்து வச்சிருக்கணும்.. நீ எவ்ளோ வேணா என்னை சைட் அடிச்சுக்கோ.. எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல..!!"

"ப்ச்.. நான் அதை சொல்லல..!!"

"அப்புறம்..??"

"யாரு என்னன்னு தெரியாம சைட் அடிக்கிறது என்னவோ சகஜந்தான்.. ஆனா.. என்னை பத்தி எதுவுமே தெரியாம.. என்னை லவ் பண்றேன்னு சொல்றியே..?? அதை கேட்டேன்..!! தப்பு இல்லையா..??"

"எதுவே தெரியாம வர்றதுக்கு பேருதான் காதல்.. எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு வந்தா அதுக்கு பேரு கால்குலேஷன்..!!"

"ஓ..!! இது ஏதோ விக்ரமன் படத்துல வர்ற டயலாக்தான..??"

"ஐயையோ.. இது என்னோட ஒரிஜினல் டயலாக்.. நான் தமிழ்ப்படம் பாக்குறதே இல்ல.. அதுவும் விக்ரமன் படம் பாக்குறதே இல்ல..!!"

"ம்ம்ம்.. அப்போ.. என்னை பத்தி எதுவுமே உனக்கு தெரியவேணாம்.. அப்படியா..??"

"அடடடா.. தெரிஞ்சுக்கனும்பா.. அதுக்காகத்தான இவ்வளவு கஷ்டப்பட்டு பேசிட்டு இருக்கேன்..??"

"ஓ..!! அப்போ.. என்கூட பேசுறது உனக்கு கஷ்டமா இருக்கு.. இல்ல..??"

"ஷ்ஷ்.. என்னால முடியல..!! இப்படி குண்டக்க மண்டக்க கேட்டா.. நான் என்ன சொல்றது..??" அசோக் பரிதாபமாக கேட்க,

"உன்னை பத்தி சொல்லு..!!" அவள் பட்டென சொன்னாள்.

"ஆங்..??"

"மொதல்ல உன்னை பத்தி சொல்லு.. அதுக்கப்புறம் நான் என்னைப் பத்தி சொல்றேன்னு சொன்னேன்..!!"

"என்னை பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு..?? பேரு அசோக்.. வயசு இருபத்தஞ்சாகுது.. பொறந்து வளந்ததுலாம் சென்னைதான்.. விஷுவல் கம்யூனிகேஷன் முடிச்சிருக்கேன்.. ஃப்ரண்ட்ஸோட சேர்ந்து ஒரு அட்வர்டைஸிங் பிஸினஸ் பண்றேன்.. ஏதோ கடவுள் புண்ணியத்துல பிஸினஸ் நல்லபடியா போயிட்டு இருக்கு..!!"

"ம்ம்.. அசோக்கா உன் பேரு..?? நைஸ் நேம்..!!"

"ஹ்ஹ.. பிடிச்சிருக்கா..?? ஓகே.. உன் பேரு என்னன்னு தெரிஞ்சுக்கலாமா..??"

"உன் ஃபேமிலி பத்தி சொல்லு.. அப்புறம் சொல்றேன்..!!"

"ஃபேமிலி பத்தியா..?? அப்பா கனரா பேங்ல கரன்சி கவுண்ட் பண்றாரு.. அம்மா வீட்டுலையே கரண்டி உத்தியோகம் பாக்குறாங்க.. தங்கச்சி படிச்சு முடிச்சுட்டு வீட்டுல சும்மா இருக்குறா.. நல்லா சாப்பிடுவா, நல்லா தூங்குவா.. முழிச்சிருக்குறப்போ பாதி நேரம் பாடுவா.. மீதி நேரம் என்கூட சண்டை போடுவா..!! அப்புறம்.. தாத்தா பாட்டி.. ரெண்டு நாய்க்குட்டிங்க.. அவ்ளோதான் என் ஃபேமிலி..!!"

"ம்ம்.. இன்ரஸ்டிங் ஃபேமிலி..!!"

"ம்ம்.. வேற என்ன என்னைப் பத்தி தெரிஞ்சுக்கணும்..??"

"நீ போட்ருக்குற இந்த ஷர்ட்.. என்ன ப்ராண்ட்..??" அவள் திடீரென அவ்வாறு கேட்க,

"லீ..!! ஏன் கேக்குற..??" அசோக் குழப்பத்துடனே பதில் சொன்னான்.

"பேன்ட்..??"

"லீவைஸ்..!!"

"கால்ல போட்ருக்குற ஷூ..??" அவள் சற்றே தலையை சாய்த்து அவனுடைய காலை பார்த்தவாறே கேட்க,

"லீ கூப்பர்..!! ஏன் இதுலாம் கேக்குற..??" அசோக் புருவத்தை நெறித்தான்.

"லீ.. லீ.. லீ..!! எல்லா லீ'ஸ்மே காஸ்ட்லீஸ்.. இல்ல..??"

"ம்ம்..!! ஆமாம்..!!"

"அதுக்காகத்தான் கேட்டேன்..!!" அவள் சொன்னதை அசோக்கால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

"புரியல.. கொஞ்சம் எக்ஸ்ப்ளயின் பண்றியா...??"

"உனக்கு இப்போ எக்ஸ்ப்ளயின் பண்ணனுமா..?? இல்ல என்னை பத்தி சொல்லனுமா..??" அவள் அவ்வாறு கேட்கவும், அசோக் சற்றே குழம்பினான்.

"ச..சரி.. உன்னை பத்தி சொல்லு..!! உன் பேர் என்ன..??"

"ம்ம்ம்... மிர்ச்சி..!!" அவள் சொல்ல, அசோக் மெலிதாக அதிர்ந்தான்.

"மிர்ச்சியா..???? அப்டிலாமா பேர் வைப்பாங்க..??"

"சேச்சே.. அது என் நிக்நேம்..!! ஃப்ரண்ட்ஸ்லாம் அப்டித்தான் என்னை கூப்பிடுவாங்க...??"

"ஓ.. அப்போ.. அப்பா அம்மா வச்ச பேர்..??"

"மீரா..!!"

"வாவ்..!! நைஸ் நேம்..!! ஆக்சுவலா.. எனக்கு கூட கிருஷ்னு பேர் வைக்கனும்னுதான் என் தாத்தா ஆசைப்பாட்டாராம்.. ஐ மீன் கிருஷ்ணன்..!! அப்புறம் என் அம்மாதான் அடம்புடிச்சு அசோக்னு வச்சுட்டாங்க..!! ஹ்ம்ம்... மீரா அலையாஸ் மிச்சி.. லவ்லி.. நல்லாருக்கு..!! ம்ம்... என்ன படிச்சிருக்குற நீ..??"

"எஞ்சினியரிங்..!!"

"என்ன விஷயமா இங்க டெயிலி வர்ற..?? இங்க எங்கயும் வொர்க் பண்றியா..??"

"இல்ல..!! இ..இங்க.. ஆப்டெக் சென்டர் இருக்குதுல.. அங்க ஒரு கோர்ஸ் பண்ணிட்டு இருக்குறேன்..!!"

"ஓ..!! என்ன கோர்ஸ்..??"

"ம்ம்.. மாயா...!!!!"

"வாவ்.. அனிமேஷன் கோர்ஸ்ல..??"

"ஆ..ஆமாம்..!!"

"அனிமேஷன்ல இன்ட்ரஸ்ட் உண்டா..?? தேட்ஸ் நைஸ்..!! ஹ்ம்ம்... சென்னைதான் சொந்த ஊரா..??"

"இல்ல..!! பொறந்தது காரைக்குடில.. செட்டிலானது சென்னைல.. படிச்சது ஹைதராபாத்ல..!!"

"ஓ..!! அப்போ உனக்கு தெலுங்கு நல்லா தெரியுமா..??"

"ம்ம்.. தெரியும்..!! நோரு மூஸ்குனி அதுகு..!!"

"அப்படினா..??"

"வாயை மூடிட்டு மேல கேளுன்னு அர்த்தம்..!!"

"ஓ..!! சரிசரி.. சொல்லு..!!"

"எனக்கு ஒரு அண்ணன்.. ஒரு அக்கா.. ஒரு அப்பா.. ஒரு அம்மா..!!"

"ஹாஹா..!! அண்ணன் அக்கா ஓகே.. அப்பா அம்மா கூடவா அதே மாதிரி சொல்வ..??"

"ம்ம்..!! இப்போதைக்கு அவ்வளவுதான் என்னைப்பத்தி..!!"

"ஹ்ம்ம்.. எனக்கும் இப்போதைக்கு இவ்வளவு போதும்..!! அ..அப்புறம்.. இன்னொரு விஷயம் மீரா.."

"மிர்ச்சினு கூப்பிடேன்.. ப்ளீஸ்..!!"

"எ..எனக்கு மீரா பிடிச்சிருக்கே.. அப்படியே கூப்பிடுறேனே.. ப்ளீஸ்..!!"

"சரி.. உன் இஷ்டம்..!!"

"தேங்க்ஸ்..!!"

"சரி.. என்ன கேட்க வந்த..??"

"ஹ்ம்ம்.. அ..அது.. நான் சொன்னதை பத்தி ஏதும் யோசிச்சியான்னு கேட்க வந்தேன்..!!"

"என்ன சொன்ன..??"

"ஹையோ.. உன்னை லவ் பண்றேன்னு சொன்னேனேம்மா..??"

"அதுவா..?? ம்ம்ம்ம்.. என்ன சொல்றது.. நானும் லவ் பண்றதுக்கு எவனாவது கெடைக்க மாட்டானான்னுதான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..!!" அவள் அப்படி சொல்ல, அசோக் மிகவும் உற்சாகமானான்.

"ஓ.. இஸ் இட்..?? நீ என்னை லவ் பண்ணலாமே..?? அசோக் ரொம்ப நல்ல பையன் மீரா..!!"

"பாக்கலாம் பாக்கலாம்.. நீ எவ்வளவு தூரம் தாக்கு பிடிக்கிறேன்னு..!!"

"என்னது..????"

"ஐ மீன்.. நீ எவ்வளவு தூரம் நல்லா நடந்துக்குறேன்னு பாக்கலாம் சொன்னேன்..!!"

"கண்டிப்பா ரொம்ப நல்லா நடந்துப்பேன்.. என்னை மாதிரி ஒரு நல்ல பையனை நீ பாத்திருக்கவே மாட்ட..!!"

"ஓஹோ..?? ஓகே ஓகே..!!"

"சரி..!! இப்போ.. நாம கொஞ்சம் நம்மளை பத்தி தெரிஞ்சுக்கலாமா..??"

"எப்படி...??"

"நம்மோட இன்ட்ரஸ்ட்ஸ் ஷேர் பண்ணிக்கலாம்..!!"

"பண்ணிக்கலாமே..??"

"கேள்வியை நான் கேட்கவா.. நீயே கேட்கிறாயா..??"

"நீயே கேளு..!!"

"ஹ்ம்ம்.. ஓகே...!! ம்ம்ம்... உன்னோட ஃபேவரிட் மூவி எது..??"

"ம்ம்... டைட்டானிக்..!!"

"குட்..!! ஃபேவரிட் பொலிட்டிகல் லீடர்..??"

"ம்ம்... சோனியா..!!"

"நைஸ்..!!"

அசோக் அதன்பிறகும் மீராவை நிறைய கேள்விகள் கேட்டான். எல்லாமே அவளுடைய ஆசை, ஆர்வம், லட்சியம் பற்றிய கேள்விகள். அவளும் எல்லா கேள்விகளுக்கும், அமைதியாக பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டே இருந்தாள். அப்புறம் எதேச்சையாக மணிக்கட்டை திருப்பி பார்த்தவள், அவசரமாக சொன்னாள்.

"ஹேய்.. எனக்கு ரொம்ப டைமாச்சுபா.. நான் கெளம்புறேன்..!!"

"ஐயையோ.. இப்படி பொசுக்குனு எழுந்து போனா என்ன அர்த்தம்..??"

"வேற என்ன பண்ணனும்..??"

"நான் திரும்ப உன்னை காண்டாக்ட் பண்ணனும்னா எப்படி பண்றது..?? அட்லீஸ்ட் உன் ஃபோன் நம்பராவாது கொடுத்துட்டு போகலாமே..??"

"ஓ.. அட்லீஸ்ட் ஃபோன் நம்பரா..?? இரு.. தர்றேன்..!!" என்றவள், குனிந்து தனது பேகில் எதையோ தேடினாள். அப்புறம் அசோக்கிடம் திரும்பி,

"ம்ம்.. கையை நீட்டு..!!" என்றாள்.

அசோக் தனது கையை நீட்டினான். அவள் பட்டென்று அந்த கையை பற்றினாள். பேகில் இருந்து எடுத்த பால்பாயிண்ட் பேனாவால், அவனுடைய உள்ளங்கையில் கிறுக்க ஆரம்பித்தாள். அசோக்கிற்கு என்னவென்று சொல்ல முடியாத மாதிரியான ஒரு உணர்ச்சி..!! முதன்முறையாக அவளுடைய ஸ்பரிசம்.. அவளுடைய தளிர்க்கைகளின் மென்மை.. தனது உள்ளங்கையில் ஏற்பட்ட ஒரு குறுகுறுப்பு.. அவளுடைய நெருக்கத்தால் அவளிடம் இருந்து கிளம்பிய வாசனை..!! ரத்த ஓட்டம் படக்கென சொடுக்கிவிடப்பட்டிருக்க.. ஒருமாதிரி சொக்கிப்போய் அமர்ந்திருந்தான்..!!

"ம்ம்.. இதுதான் என் நம்பர்.. ஓகேவா..??"

அவள் எழுந்து கொள்ள முயல, அசோக் இப்போது உடனடியாய் சுதாரித்துக்கொண்டான். அவசரமாய் அவளை தடுத்து நிறுத்தினான்.

"ஹலோ ஹலோ.. ஒரு நிமிஷம்..!!"

"எ..என்ன..??"

மீரா குழப்பமாய் அசோக்கை பார்க்க, அவனோ தனது சட்டை பாக்கெட்டை துழாவி எதையோ தேடினான். பிறகு அந்த காகிதத்தை எடுத்தான். டேபிள் மீது வைத்தான். அதை அப்படியே மீராவின் பக்கமாய் நகர்த்தினான்.

"எ..என்ன இது..??" அவள் புரியாமல் கேட்டாள்.

"இதுவா..?? டேகோ பெல்லோட டேக் ஹோம் பில்..!! பரிட்டோ எயிட்டி ஃபைவ் ருபீஸ்.. டயட் கோக் ஒரு தேர்ட்டி த்ரீ.. டேக்ஸோட சேர்த்து.. ஒன் தேர்ட்டி ஃபோர்..!!" அசோக் புன்னகையுடன் சொல்ல, அவள் இவனை கடுப்புடன் முறைத்தாள்.

"பொண்ணுககிட்ட எப்படி பிஹேவ் பண்ணனும்னே உனக்கு தெரியாதா..??" என்று கடுமையாக கேட்டாள்.

'பொண்ணுககிட்ட எப்படி பேசணும்னே உனக்கு தெரியாதா..??' அந்த ரெட்டை ஜடை ப்ளஸ் டூ பெண் அசோக்கை பார்த்து, எப்போதோ கேட்ட கேள்வி, ஏனோ இப்போது அவனுடைய காதுக்குள் ரீங்காரமிட்டது. ஒருசில வினாடிகள் பழைய நினைவில் மூழ்கியவன், பிறகு சரக்கென தலையை சிலுப்பி நிகழ்காலத்துக்கு வந்தான். சற்றே தைரியமான குரலில் அவளிடம் கேட்டான்.

"ஹலோ.. இப்போ என்ன நான் மிஸ்பிஹேவ் பண்ணிட்டேன்..??"

"பின்ன..?? செலவும் பண்ணிட்டு.. பில்லும் நீட்டுற..??"

"வேற என்ன பண்றது..?? அட்லீஸ்ட் நீ என்னை லவ் பண்றேன்னு சொல்லிருந்தாலாவது.. நம்மோட லவ்வருக்கு செலவு பண்ணிட்டோம்னு மனசுல ஒரு திருப்தி இருக்கும்..!! ஆனா.. இப்போ வரைக்கும் நீ எனக்கு யாரோ ஒரு ஸ்ட்ரேஞ்சர்தான..?? உனக்கு செலவு பண்ணனும்னு எனக்கு என்ன தலையெழுத்தா..?? பணத்தை வச்சுட்டு கெளம்பு..!!"

'காசு வீணாக போகிறதே..' என்று ஏதோ ஒரு கடுப்பில் தைரியமாக அசோக் அவ்வாறு பேசிவிட்டான். ஆனால் பேசியபிறகு, அவள் எதுவும் கடித்து குதறி விட போகிறாளோ என சற்றே மிரட்சியாய் அவளை ஏறிட்டான். அவளும் இவனை உர்ரென்று முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் ஒருசில விநாடிகள்தான். பிறகு பட்டென முகம் மாறினாள். திடீரென அவளுடைய முகத்தில் ஒருவித மலர்ச்சி.. உதட்டில் ஒரு புன்னகை..!!

"ச்சோ.. ச்ச்வீட்..!!!!" என்றாள் அசோக்கை பார்த்து.

அசோக் ஒருகணம் குழம்பிப் போனான். 'கோபமாக சீறப் போகிறாள் என்று எதிர்பார்த்தால்.. கொஞ்சுகிறாளே..??'. வியப்பாக அவளை பார்த்தான். அவளோ இவனுடைய முகத்தையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தாள். என்னவென்று கண்டுபிடிக்க முடியாத மாதிரியான ஒருவித உணர்ச்சி அவளுடைய முகத்தில்.. இதழ்களில் இதயத்தை கொள்ளை கொள்கிற மாதிரியான ஒரு புன்சிரிப்பு.. கண்களில் ஒரு வசீகர மின்னல்..!! ஓரிரு வினாடிகள்.. அப்புறம் அந்த அழகு அதரங்களை அசைத்து.. தெள்ளத்தெளிவான குரலில் சொன்னாள்..!!

"ஐ லவ் யூ..!!!!!"


அசோக் அப்படியே ஆடிப்போனான்..!! ஓல்ட் மங்க் குவார்ட்டரை ஒரே கல்ப்பில் அடித்த மாதிரி குப்பென்று இருந்தது..!! இதயத்தில் ஒரு உற்சாக ஊற்று சர்ர்ர்ரென பீறிட்டு கிளம்பியது..!! காதில் வந்து விழுந்த வார்த்தைகளை நம்பவே முடியவில்லை அவனால்..!! விழிகள் விரிந்து போயிருக்க.. பேச வார்த்தை இல்லாதவனாய்.. மீராவின் முகத்தையே திகைப்பாக பார்த்தவாறு அமர்ந்திருந்தான்..!!

அவளுடைய முகத்தில் இப்போது ஒரு திருப்தி புன்னகை..!! தன் பக்கம் இருந்த அந்த பில்லை ஒற்றை விரலால் அழுத்தி.. இப்போது மீண்டும் அசோக்கின் பக்கமாய் நகர்த்தினாள்.. அமைதியாக புன்னகையுடன் சொன்னாள்..!!

"நவ்.. பே த பில்..!!!!"

சொல்லிவிட்டு ஒருநொடி கூட அவள் தாமதிக்கவில்லை. படக்கென சேரில் இருந்து எழுந்தாள். விடுவிடுவென நடக்க ஆரம்பித்தாள். அசோக் சிலவினாடிகள் செயலிழந்து போய் அமர்ந்திருந்தான். பிறகு சட்டென சுதாரித்துக்கொண்டு எழுந்தான். தூரத்தில் சென்ற அவளுடைய முதுகைப் பார்த்து கத்தினான்.

"ஹேய்..!!!!!"

அதற்குள்ளாகவே அவனுடைய நண்பர்கள் அவர்களுடைய இடத்தை விட்டு எழுந்து வந்திருந்தனர். அவசரமாய் வந்து இவனை சூழ்ந்து கொண்டனர். ஆர்வம் மிகுந்த குரலில், ஆளாளுக்கு இவனைப்போட்டு பிய்த்து எடுத்தனர்.

"டேய்.. மச்சி.. என்னாச்சுடா..?? பேசுனியா.. என்ன சொன்னா அவ..?? ஹேய்.. சொல்லுடா..!!"

அசோக் சில வினாடிகள் மீரா செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் மனதில் பலப்பல கேள்விகளுடனே, மெல்ல நண்பர்களிடம் திரும்பினான்.

"ஏய்.. சொல்லு மச்சி.. கேட்டுட்டு இருக்கோம்ல..?? என்ன சொல்லிட்டு போறா அவ..??" சாலமன்தான் மிகவும் ஆர்வமாக இருந்தான்.

"ஐ லவ் யூ'ன்னு சொல்லிட்டு போறடா.. அவ ஃபோன் நம்பர் குடுத்துட்டு போயிருக்கா..!!"
அசோக் கேஷுவலாக சொன்னவாறே தனது உள்ளங்கையை விரித்து காட்டினான்.

அவ்வளவுதான்..!! அவர்கள் மூவரும் வாழ்நாளில் மிகவும் மோசமான ஒரு அதிர்ச்சியை மொத்தமாக உள்வாங்கினர்..!! பின்னந்தலையில் யாரோ இரும்புத்தடியால் அடித்துவிட்டது போல.. சித்தம் கலங்கிப்போய்.. சீயான் பார்வை ஒன்றை வீசியவாறு நின்றிருந்தான் வேணு..!! 'பேசுனதுமே ஐ லவ் யூ சொல்லிருக்கா.. பேசாம நாம போட்டியில கலந்திருக்கலாமோ..??' என்று.. கேத்தரினாவை கூட மறந்து போய்.. கேவலமாய் ஒரு எண்ணத்தில் திளைத்திருந்தான் சாலமன்..!! கிஷோரின் நிலைதான் மிகவும் பரிதாபகரம்.. அவனுடைய மூளைக்குள்.. தங்லீஷில் யாரோ தாறுமாறாய் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்கள்..!!

'தி ஸோர்ஸ் ஆஃப் கீ இஸ்.. கேப்பை..!!'

'டிரைவர் ஆஃப் திஸ் ஏரோப்ளான் இஸ்.. எருமை..!!'

'பேர்ட் தேட் கேன் ஃப்ளை பேக்வேர்ட்ஸ் இஸ்.. காக்கை.!!'

மூன்று பேருமே மூன்றாம் பிறை கமலஹாசன் மாதிரி.. அசோக்கையே பரிதாபமாக பார்த்துக்கொண்டிருக்க.. சாலமன்தான் முதலில் அந்த நிலையை விட்டு சுதாரித்துக் கொண்டான்..!! தன் தலையில் 'நச்ச்ச்'சென்று அடித்தவாறே வெறுப்புடன் சொன்னான்..!!

"என்ன க்க்கொடுமை ஸார் இது..???"

 

No comments:

Post a Comment

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...