Social Icons

அன்புள்ள ராட்சசி - 17







அத்தியாயம் 30

காதலியின் புகைப்படத்தை கையில் ஏந்தியிருந்த அசோக்.. இதயத்தை ஆட்கொண்ட அந்த இன்ப அதிர்ச்சியில்.. சில வினாடிகள் சிலை போலவே உறைந்திருந்தான்..!! வெகுதூரம் ஓடிக்களைத்தவன் போல அவனுக்கு மூச்சிரைப்பு ஏற்பட்டது.. வெடவெடத்த விரல்களால் புகைப்படத்தை பற்ற கடினமாயிருந்தது..!! உடலெல்லாம் ஜிலீரென்று ஒரு சிலிர்ப்பு.. உள்ளமெல்லாம் ஜிவ்வென்று ஒரு பூரிப்பு..!! சில வினாடிகள்தான்.. உடனடியாய் அவனை ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது..!!

"மம்மிஈஈஈஈ..!!" என்று கத்திக்கொண்டே உள்ளறைக்கு ஓடினான்.

"என்னடா..??" பாரதி கிச்சனில் இருந்து எட்டிப் பார்த்தாள்.

"மீ..மீரா.. மீரா மம்மி..!!" நடுநடுங்கிய கையிலிருந்த புகைப்படத்தை அவளிடம் நீட்டினான்.

"மீ..மீராவா..??" புகைப்படத்தை கையில் வாங்கிப் பார்த்த பாரதிக்கு எதுவும் புரியவில்லை.

"இ..இந்த ஃபோட்டோ.. இ..இது.. இது மீரா மம்மி.. இ..இது.. எ..என் மீராதான்.. ச..சந்தேகமே இல்ல..!!" உள்ளத்தில் இருந்த தவிப்பில் உதடுகள் படபடக்க, வார்த்தைகள் தெளிவாக வெளிவர மறுத்தன.

"ஓ..!! இ..இது.. இது எப்படி..??" பாரதி சந்தோஷமும், குழப்பமுமாய் மகனை ஏறிட்டாள்.

"நா..நான்.. நான் உன்கிட்ட சொல்லிருக்கேன்ல.. அ..அந்தப்பொண்ணு.."

"எந்தப்பொண்ணு..??"

"அ..அதான் மம்மி.. அந்த மும்தாஜ்.. எ..எனக்கு யோகா சொல்லி தந்த பொண்ணு..!!"

"ஆமாம்..!!"

"அ..அந்தப்பொண்ணுதான்.. அ..அவ... அவங்க.. படிக்கிறதுக்கு எனக்கு ஒரு புக் தந்தாங்க மம்மி.. அ..அந்த புக்குக்குள்ளதான் இந்த ஃபோட்டோ இருந்தது..!!"

"அ..அப்படினா..??"

"ஆமாம் மம்மி..!!! அ..அந்த மும்தாஜ்க்கு மீரா பத்தி தெரிஞ்சிருக்கணும்.. அவங்கட்ட விசாரிச்சா மீராவை எப்டியாவது கண்டுபுடிச்சுடலாம்..!! யெஸ்.. யெஸ்.. யெஸ்..!!!!"


இப்போது பதற்றம் சற்றே குறைந்து நம்பிக்கை தெறிக்கிற குரலில் அசோக் உற்சாகமாக சொன்னான். அவனது உற்சாகம் அவனுடைய அம்மாவிற்கும் தொற்றிக்கொண்டது.

"நெ..நெஜமாத்தான் சொல்றியாடா.. எ..என்னால நம்பவே.."

ஆச்சரியத்தில் பேச்சு வராமல் பாரதியும் தடுமாறினாள்..!! அசோக்கும் அவளுடைய பேச்சுக்கு காது கொடுக்கிற நிலையில் இல்லை.. அவசரமாக அடுத்த அறைக்கு ஓடினான்.. சார்ஜரை பிடுங்கி எறிந்து தனது செல்ஃபோனை தனியே பிரித்தெடுத்தான்.. பதற்றத்தில் நடுங்கிய விரல்களுடன் மும்தாஜின் தொடர்பு எண்ணை தேடினான்..!!

இவர்களது பேச்சு சப்தம் கேட்டு வெளியே வந்த அசோக்கின் குடும்பத்தினர் அனைவரும்.. இப்போது ஹாலில் ஒன்றாக குழுமியிருந்தனர்..!! நடந்த விஷயத்தை பாரதியே அவர்களுக்கு விளக்கி சொல்ல.. எல்லோருடைய முகத்திலுமே அப்படி ஒரு ஆச்சரியமும் மலர்ச்சியும்..!! அவள்தான் வேண்டும் என்று அசோக் ஒற்றைக்காலில் நின்றதற்கு.. இப்போது நல்லதொரு பலன் கிடைத்திருப்பதாக அனைவருக்குமே ஒரு திருப்தி..!!

அவ்வாறு அவர்கள் பூரிப்பில் திளைத்திருந்தபோதே..

"ச்சே..!!" அசோக் சலிப்பான குரலுடன் ஹாலுக்குள் பிரவேசித்தான்.

"என்னடா ஆச்சு..??" மகனை கேட்டாள் பாரதி.

"ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்காங்க மம்மி.. யோகா க்ளாஸ்ல இருப்பாங்கன்னு நெனைக்கிறேன்..!!"

"ஓ..!! கொஞ்ச நேரம் கழிச்சு கால் பண்ணிப் பாரேன்..!!"

"இல்ல மம்மி.. நான் உடனே கெளம்புறேன்.. நேர்லயே போய் அவங்களை பாத்து பேசிடுறேன்..!!" பரபரப்பு குறையாதவனாய் பைக் சாவி எடுக்க கிளம்பியவன்,

"இ..இது அண்ணிதானாடா.. நல்லா தெரியுமா..?? கண்ணு மட்டுந்தான் தெரியுது..??"

என்று ஃபோட்டோவை பார்த்தபடியே சங்கீதா சந்தேகக்குரல் எழுப்பியதும் அப்படியே நின்றான். தங்கைக்கு அசோக் பதில் சொல்ல வாயெடுக்கும் முன்பே, அவனுடைய தாத்தா அவனது உதவிக்கு வந்தார்.

"ப்ச்.. காதலிக்கிறவன் அவன் சொல்றான்.. கரெக்டாத்தான் இருக்கும்..!! கண்ணை பார்த்து கண்டுபிடிக்கிறது என்ன கஷ்டமா.. நான்லாம் காத்துல வர்ற வாசனையை வச்சே இவளை கண்டுபிடிச்சுடுவேன்..!!" நாராயணசாமி அவ்வாறு சிரிப்புடன் சொல்ல,

"ச்சீய்.. போங்க..!!"

அசோக்கின் பாட்டி அழகாக வெட்கப்பட்டாள். அந்த வெட்கத்தில் ஒருவித பெருமிதமும் ஏராளமாய் கலந்திருந்தது. அவளது வெட்கத்தை பார்த்து, 'ஹாஹாஹா' என்று அனைவருமே இப்போது அடக்கமுடியாத ஒரு சிரிப்பினை உதிர்த்தனர். அசோக்குமே தனது பதற்றம் தணிந்து மெலிதாக ஒரு புன்னகையை வெளிப்படுத்தினான். இப்போது மணிபாரதி சற்றே நகர்ந்து அசோக்கை நெருங்கினார். மகனுடைய தோளில் கைபோட்டவர், இதமான குரலில் சொன்னார்.

"போடா.. போய் என் மருமகளை கூட்டிட்டு வா.. போ..!!"

தங்கையின் கையிலிருந்த புகைப்படத்தை பிடுங்கிய அசோக், பைக் சாவி எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்.. வாசலுக்கு வந்த அவனது குடும்பத்தினர் அனைவரும், அவன் கிளம்புவதையே எதிர்பார்ப்பும் சந்தோஷமுமாய் பார்த்தனர்..!! பைக்கை கிளப்பிய அசோக் ஆக்சிலரேட்டரை முறுக்கி பறக்க ஆரம்பித்தான்..!! தொலைந்துபோன காதலியை காணப்போகிற அவனது வேகத்தை.. அவனுடைய பைக்குக்கும் சரியாக புரிந்து கொண்டிருந்தது.. சாலையில் சர்ர்ர்ரென சீறிப் பாய்ந்தது..!!



பத்தே நிமிடத்தில்.. அந்த தற்கொலை தடுப்பு ஆலோசனை மைய வளாகத்தின் முன்பாக வந்து நின்றது அசோக்கின் பைக்..!! வண்டியில் இருந்து இறங்கியவன், வராண்டாவை அடைந்து வேகமாக நடைபோட்டான்.. நீளமான காரிடாரின் கடைசி அறைக்குள் புயலென புகுந்தான்..!! மார்பிள் பதித்த தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்த பத்துப் பேரும்.. அவர்களுக்கு எதிர்ப்புறம் அதே தோற்றநிலையில், தனியாக அமர்ந்திருந்த மும்தாஜும் காணக்கிடைத்தனர்.. அனைவருமே ஆழ்ந்ததொரு தியானத்தில் திளைத்திருந்தனர்..!!

அங்கு நிலவிய அமைதியை குலைக்க அசோக் சற்றும் தயங்கவில்லை..!!

"மும்தாஜ்..!!!"

என்று சத்தமிட்டுக்கொண்டேதான் அந்த அறைக்குள் நுழைந்தான்..!! படக்கென விழிகள் திறந்து அனைவரும் அசோக்கை குழப்பமாய் பார்க்க.. மும்தாஜோ முகத்தில் ஒரு திகைப்புடன் அவனை ஏறிட்டாள்..!!

"அசோக்..!!"

அசோக் மும்தாஜை நெருங்கி அவளது புஜத்தை பற்றினான்.. தரையில் இருந்து எழுப்பினான்..

"எ..என்னாச்சு அசோக்..??"

"வாங்க சொல்றேன்..!!"

எதுவும் புரியாமல் விழித்த மும்தாஜை, அந்த அறைக்கு வெளியே இழுத்து வந்தான்.. அவளது புஜத்தை விடுவித்தவன், கையிலிருந்த புகைப்படத்தை அவளிடம் நீட்டி, பதற்றமும் பரிதவிப்பும் கலந்த குரலில் கேட்டான்..!!

"இ..இது.. இது யாரு மும்தாஜ்..??"

இப்போது அந்த புகைப்படத்தின் மீது பார்வையை வீசிய மும்தாஜ், உடனே நெற்றியை சுருக்கினாள்.

"இ..இது.. இ..இந்த ஃபோட்டோ எப்படி உங்கட்ட..??"

"நீங்க எனக்கு ஒரு புக் தந்திங்கல்ல.. அதுக்குள்ள இருந்தது..!!"

"ஓ..!! இ..இது.. ஆனந்த விகடன் ஃபோட்டோக்ராஃபி கான்டஸ்ட்க்காக நான் எடுத்த ஃபோட்டோ..!! ஆல்பத்துல வச்சிருந்தேன்.. இ..இது எப்படி அந்த புக்குக்குள்ள.."

"ஹையோ.. அதை விடுங்க மும்தாஜ்..!! இ..இந்த பொண்ணு யாருன்னு சொல்லுங்க..!!"

"எ..எனக்கு தெரிஞ்ச பொண்ணுதான்.. எதுக்கு கேக்குறீங்க..??"

"தெ..தெரிஞ்ச பொண்ணுனா..??"

"இ..இங்க கவுன்சிலிங் வந்த பொண்ணு..!! என்னை மாதிரிதான் இவளும்.. சூஸயிட் அட்டம்ப்ட் பண்ணி.. இங்க கவுன்சிலிங் வந்து.. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மனசு மாறி..!! நான்தான் இவளுக்கு யோகாலாம் சொல்லி தந்தேன்.. கொஞ்சநாள் இங்க ஆர்ட் ஆஃப் லிவிங் ட்யூட்டரா கூட வொர்க் பண்ணினா.. அப்டித்தான் எங்களுக்குள்ள பழக்கம்..!!"

மும்தாஜ் சொன்ன விஷயங்கள்.. அசோக்கிற்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஒருசேர அளித்தன..!! அவனுடைய முகம் ஒருவித திகைப்பு சாயம் பூசிக்கொண்டது..!!

"இ..இப்போவும் இங்க வொர்க் பண்றாளா..??"

"இல்ல.. இப்போ கொஞ்ச நாளா வர்றது இல்ல..!!"

"ஓ..!!"

"எ..எனக்கு எதுவும் புரியல அசோக்.. எதுக்கு இதெல்லாம் கேக்குறீங்க..??"

மும்தாஜ் இப்போது பொறுமையில்லாமல் கேட்டுவிட்டாள். அவளுடைய கேள்விக்கு அசோக் ஒரு பெருமூச்சை வெளிப்படுத்திவிட்டு பதில் சொன்னான்.

"நான் மீரா மீரான்னு சொல்வேனே.. அது இவதான் மும்தாஜ்..!! நான் லவ் பண்றவ.. என் மனசு பூரா நெறைஞ்சிருக்குறவ.. என்ன ஏதுன்னு எதுவுமே சொல்லாம என்னைவிட்டு பிரிஞ்சு போனவ..!! இத்தனை நாளா இவளை தேடிக்கண்டுபிடிக்கத்தான் பைத்தியம் மாதிரி அலைஞ்சிட்டு இருக்குறேன் மும்தாஜ்.. நான் இங்க கவுன்சிலிங் வர்ற மாதிரியான நெலமைக்கு காரணமே இவதான்..!!" ஆதங்கத்துடன் அசோக் சொல்ல, மும்தாஜ் அப்படியே ஆச்சரியப்பட்டு போனாள்.

"இ..இவளா.. இவளா உங்க மீரா..?? எ..என்னால நம்பவே முடியல அசோக்..!!"

"சொல்லுங்க மும்தாஜ்.. இ..இவளை எப்டி பாக்கலாம்.. எப்டி கான்டாக்ட் பண்றது..?? இ..இவ அட்ரஸ்.. ஃபோன் நம்பர் ஏதாவது..??" அசோக்கின் குரலில் அடக்கமுடியாத ஒரு தவிப்பு.

"டோன்ட் வொர்ரி அசோக்.. இவ ரெகார்ட்ஸ் கண்டிப்பா இங்க இருக்கும்..!! நாம பவானி அக்காவை போய் பாக்கலாம்.. வாங்க..!!"

சொன்ன மும்தாஜ்.. அசோக்கின் பதற்றத்தை தனக்குள் வாங்கியவளாய்.. அவசரமாய் திரும்பி அந்த காரிடாரில் நடக்க ஆரம்பித்தாள்..!! ஓரிரு வினாடிகள் கழித்துதான்.. அசோக் புரிந்துகொண்டு அவளை பின்தொடர ஆரம்பித்தான்..!! நடக்க ஆரம்பித்தவனுக்கு திடீரென ஏதோ ஞாபகம் வர..

"மும்தாஜ்..!!" என்று அழைத்தான்.

"ம்ம்..??" மும்தாஜ் திரும்பி பார்த்தாள்.

"இ..இவ.. இவ பேர் என்ன மும்தாஜ்..??"

அசோக் அந்தமாதிரி ஏக்கமான குரலில் கேட்க.. மும்தாஜ் ஒருகணம் திகைத்துப் போனாள்..!! உள்ளம் நிறைய இவனுக்கு அவள் மீது காதல் இருந்தாலும்.. உயிரையும் அவள் இல்லாத ஏக்கத்தில் விட துணிந்திருந்தாலும்.. அவளது உண்மையான பேர் இவனுக்கு தெரியாது என்கிற நிதர்சனம்.. உடனடியாய் மும்தாஜுக்கு உறைக்க மறந்ததால் வந்த திகைப்பு அது..!! பிறகு அந்த உண்மை உறைத்ததும்.. உதடுகளுக்கு ஒரு உலர்ந்த புன்னகையை கொடுத்தவள்..

"நித்தி..!!!!" என்று உங்களது நீண்டகால கேள்விக்கான பதிலை உச்சரித்தாள்.

இருவரும் பவானியின் பிரத்தியேக அறைக்கு சென்று அவளை சந்தித்தனர்.. விஷயத்தை இருவரும் அவளுக்கு விளக்கி சொல்ல, அவள் மும்தாஜை விட பலமடங்கு ஆச்சரியத்திற்கு உள்ளானாள்..!!

"இவளா..?? இவளா நீ சொன்ன மீரா..?? ஐ கான்ட் பிலீவ் திஸ்..!!! இவளையா இத்தனை நாளா நீ உருகி உருகி லவ் பண்ணிட்டு இருந்த..??" - நம்பமுடியாதவளாய் அசோக்கை திரும்ப திரும்ப கேட்டாள்.

"பாரு மும்தாஜ்.. கடைசில.. இவனை இத்தனைநாளா சுத்தல்ல விட்டது நம்ம நித்திப்பொண்ணு..!!" - மும்தாஜிடம் ஆச்சரியத்தை பகிர்ந்துகொண்டாள்.

பிறகு அசோக்கின் அவசரத் தூண்டுதலால்.. தனது அலுவலகக் கணிணியை இயக்கியவள்.. மீரா (அலையாஸ்) நித்தியின் தொடர்பு விவரங்களை.. வெண்திரையில் வெளிக்கொணர்ந்தாள்..!! அதில் தரப்பட்டிருந்த மொபைல் நம்பருக்கு.. தனது செல்ஃபோனில் இருந்து பவானி டயல் செய்ய.. அசோக் அவளை அவசரமாக தடுத்தான்..!!

"வேணாம்க்கா.. ஃபோன் பண்ண வேணாம்.. அட்ரஸ் இருக்குல.. நேர்லயே போயிறலாம்..!!"

"ஏன்டா..??"

"எவ்வளவுதான் அவ விலகி போனாலும்.. எங்களோட லவ், எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கும்னு நான் அவகிட்ட சொன்னேன்..!! அந்த லவ்வுக்கு சக்தி இருந்தா எங்களை நேருக்கு நேர் சந்திக்க வைக்கட்டும்னு.. அவ பதிலுக்கு சவால் விட்டா..!! இப்போ.. திடீர்னு அவ முன்னாடி போய் நிக்கனும்னு எனக்கு ஆசையா இருக்குக்கா.. சர்ப்ரைஸா..!!!! அ..அதும் இல்லாம.. அவளோட கான்டாக்ட் டீடெயில்ஸ நான் கண்டுபிடிச்சுட்டேன்னு தெரிஞ்சா.. அவ எங்கயாவது எஸ்கேப் ஆகி ஓடுறதுக்கு கூட சான்ஸ் இருக்கு..!! I don't want to miss her again..!!" அசோக் சொன்னதை கேட்டு பவானி மெலிதாக புன்னகைத்தாள்.

இரண்டே நிமிடங்களில் அசோக்கும் பவானியும் அங்கிருந்து காரில் கிளம்பினார்கள்.. பவானியுடைய கார்தான் அது..!! அவளே கார் ஓட்டினாள்.. அருகிலிருந்த இருக்கையில் அசோக் அமர்ந்திருந்தான்..!!

பவானி காரை மிதமான வேகத்தில் செலுத்திக்கொண்டே.. மீராவின் குடும்ப சூழ்நிலை பற்றியும்.. தற்கொலைக்கு அவள் தள்ளப்பட்ட கதையினையும்.. பிறகு தங்களது மனோதத்துவ சிகிச்சையால் அவள் மனதைரியம் பெற்றதையும்.. அசோக்கிற்கு சுருக்கமாக எடுத்துரைத்தாள்..!! எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக்கொண்ட அசோக்கிற்கு.. இதயத்தில் ஒரு இனம்புரியாத வலி..!! மீராவுக்கு வேதனையான ஒரு பின்புலம் இருக்கும் என்று, ஏற்கனவே அவன் கணித்திருந்தான்.. ஆனால் அந்த பின்புலத்தில் வேதனை தவிர வேறேதும் இருக்காது என்று அவன் நினைத்தேயிரவில்லை..!! காதலி அனுபவித்த கடுந்துயரினை கேட்க கேட்க.. கண்களில் அவனுக்கு நீர் முட்டிக்கொண்டு வந்தது.. கஷ்டப்பட்டு அதை கட்டுப்படுத்திக் கொண்டான்..!!

ஆர்காட் ரோட்டில் அந்தக்கார் விரைந்துகொண்டிருந்த அதே சமயத்தில்.. சிந்தாதிரிப்பேட்டையில்.. மீரா தனது வீட்டு ஹாலின் மையத்தில் நின்றிருந்தாள்..!! துடைத்து எடுக்கப்பட்டது போல வீடு வெறுமையாக இருந்தது.. வீட்டு சுவர்களையே வெறித்துக் கொண்டிருந்த மீராவுடைய பார்வையிலும் ஒரு வெறுமை..!! அவள் பிறந்து வளர்ந்த வீடு.. தவழ்ந்து ஓடிய வீடு.. தாயுருவில் நீலப்ரபா என்ற தெய்வம் வாழ்ந்த வீடு.. மனம் விட்டு இருவரும் அழுவதற்கு, மறைவாக நான்கு சுவர்களைத் தந்த வீடு..!! இனி இந்த வீடு அவளுடைய வாழ்வில் இல்லை..!!

மீராவின் முகத்தில் தெரிந்த இறுக்கத்திற்கு காரணம்.. பிறந்த வீட்டை பிரிந்து செல்கிற சோகம் மட்டும் அல்ல.. அசோக்கின் நினைவுகள் அவளுக்கு அளித்த வேதனையும்தான்..!! ஏதாவது ஒரு அதிசயம் நடந்து.. அவனுடன் இணைந்துவிட மாட்டோமா என்று.. ஐந்து நாட்களாக அவளுமே ஏங்கியிருந்தாள்..!! இந்த நொடி வரை எதுவும் நடக்கவில்லை.. இனி நடப்பதற்கும் வாய்ப்பு இல்லை என்றே அவளது மனம் அவளுக்கு உரைத்தது..!! அசோக் இனி அவளது வாழ்வில் இல்லை என்கிற நினைவுதான்.. அவளுக்கு அதிகப்படியான வேதனையை அளிப்பதாக இருந்தது..!!

"ரொம்ப ஏக்கமா இருந்தா.. இங்கயே இருந்திடவேண்டியதுதான..??"


சப்தம் கேட்டு மீரா திரும்பிப் பார்த்தாள். மனோகர் பல்லிளித்தவாறு நின்றிருந்தான். அவனுடைய கண்களில் டன் டன்னாய் காமம். மீரா அவனுடைய முகத்தை ஏறிட்டு முறைத்தாள். அவனது இளிப்பிற்கு பதில் ஏதும் சொல்லாமல், தனது கையில் இருந்த வீட்டுச்சாவியை அவன் கையில் திணித்தாள். தோளில் அணிந்த பேகுடன், விடுவிடுவென வீட்டு வாசலை நோக்கி நடந்தாள்.

"நீ எப்போவேணா திரும்ப வரலாம் நித்தி.. நானும் ரெடியா இருப்பேன்.. இந்த வீடும் ரெடியா இருக்கும்..!!"

மனோகரின் பேச்சை கண்டுகொள்ளாமல், மீரா வீட்டை விட்டு வெளியே வந்தாள். தயாராக இருந்த டாக்ஸியில் ஏறிக்கொண்டாள். கதவை அறைந்து சாத்தினாள்.

"கெளம்பலாமா மேடம்..??" என்று கேட்ட ட்ரைவருக்கு,

"ம்ம்..!!" என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள்.

டாக்ஸி சீரான வேகத்துடன் அண்ணாசாலையில் ஊர்ந்து கொண்டிருந்தது.. மீராவின் மனநிலையோ சீரற்றுப்போய் ஒருவித இனம்புரியாத அழுத்தத்தில் சிக்கி தத்தளிக்க ஆரம்பித்திருந்தது.. இறுகிப்போன முகத்துடனே சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

தேனாம்பேட்டை சிக்னலை அடைந்தபோது பலத்த போக்குவரத்து நெரிசலில் டாக்ஸி சிக்கிக்கொண்டது..!! வாகனங்களுக்கு மத்தியில் அந்த டாக்ஸி அசையாமல் நின்றிருந்த நேரத்தில்.. எதிர்ப்புறம் இருந்து அந்த கார் மெல்ல மெல்ல நகர்ந்து.. மீராவின் டாக்ஸிக்கருகே பக்கவாட்டில் வந்து நின்றது.. அந்தக்காருக்குள் அமர்ந்திருந்தான் அசோக்..!!!!

இருவரில் ஒருவர் தலையை திருப்பி பார்த்தால் கூட.. அடுத்தவர் முகத்தை கண்டுகொள்கிற மாதிரியான நெருக்கமான நிலை..!! ஆனால்.. இருவருக்கும் ஏனோ அச்சமயத்தில் முகம் திருப்ப தோன்றவில்லை..!! மணிக்கட்டை திருப்பி நேரம் பார்த்து டென்ஷனான மீராவின் கவனமோ.. போக்குவரத்து விளக்குகளின் மீதே படிந்திருந்தது..!! அவளுக்கு ஒரு மீட்டர் தொலைவில் அமர்ந்திருந்த அசோக்கோ.. அருகிலிருந்த பவானியிடம் தவிப்பான குரலில் பேசிக்கொண்டிருந்தான்..!!

"சிந்தாதிரிப்பேட்டைல ஒரு வீடு விடாம சலிச்சு எடுத்தாச்சுக்கா.. இவ வீடு மட்டும் எப்படி மிஸ் ஆச்சுன்னு தெரியல..!!"

"ம்ம்..!! போய் பாக்கலாம் அசோக்.. பொறுமையா இரு..!!"

"வேடிக்கையை பாரேன்.. கம்ப்யூட்டர் க்ளாஸ் அட்டண்ட் பண்றதுக்காக, அவ டெயிலி வடபழனி வந்துபோயிட்டு இருக்கான்னு நான் நெனச்சுட்டு இருந்தேன்.. அவ என்னடான்னா.. உங்க சென்டர்ல ஆர்ட் ஆஃப் லிவிங் க்ளாஸ் எடுக்குறதுக்காக வந்துபோயிட்டு இருந்திருக்கா..!!"

"ம்ம்.. எங்ககிட்ட கவுன்சிலிங் வந்தப்புறம், அவளுக்கு யோகால ரொம்ப ஈடுபாடு வந்திருச்சு அசோக்.. எங்க சென்டர்ல அவளுக்கு ஏதோ ஒரு அமைதி கெடைச்சிருக்கனும்..!! அவளே வாலன்டியரா வந்து ட்யூட்டரா இருக்க ஆசைப்படுறேன்னு சொன்னா.. ரொம்ப நாள் ரெகுலராவும் வந்துட்டு இருந்தா..!! இப்போ கொஞ்ச நாளாத்தான் வர்றது இல்ல.. அவ அம்மா இறந்ததுல இருந்து..!!"

"அ..அவங்க எப்போ இறந்தாங்க..??"

அசோக்கின் கேள்விக்கான பதிலை பவானி தோராயமாக சொல்ல.. சிறு யோசனைக்கு பிறகு அவனால் அந்த காலகட்டத்தை கண்டறிந்துகொள்ள முடிந்தது..!! முன்பொருநாள் பாரில்.. மூச்சுமுட்ட குடித்துவிட்டு மீரா உளறியவையெல்லாம் இப்போது அவனுடைய ஞாபகத்துக்கு வந்தன..!!

"ம்ஹூம்.. வீடு வேணாம்.. நோ வீடு.. வீடு எனக்கு புடிக்கல..!!"

"என்ன வெளையாடுறியா.. வீட்டுக்கு போகலனா உன்னை தேட மாட்டாங்க..??"

"தேட மாட்டாங்க.. வீட்ல யாரும் இல்ல.. நான் மட்டுந்தான்..!!"

அன்றே.. தனியறையில் அவள் தவிப்பும் ஏக்கமுமாக சொன்னதும் இப்போது நினைவுக்கு வந்தது..!!

"என்னை பத்தி கவலைப்பட யாரும் இல்ல.. என் மேல அன்பு காட்டுறதுக்கும் யாரும் இல்ல.. எனக்குன்னு யாருமே இல்லடா..!!"

அந்த நினைவு வந்ததுமே அசோக்கின் மனதை ஒரு இனம்புரியாத உணர்வு அழுத்தி பிசைந்தது..!!

'ஆறுதலுக்கென்று இருந்த அம்மாவையும் தொலைத்துவிட்ட அவள்.. அன்று எவ்வளவு வேதனையான ஒரு மனநிலையில் இருந்திருப்பாள்..?? அத்தனையும் மனதிலேயே போட்டு புதைத்துக்கொள்ள எப்படி முடிந்தது அவளால்..?? சரியான நெஞ்சழுத்தக்காரி..!!'

இவனுடைய மனநிலை அறியாத பவானி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்..!!

"அம்மான்னா அவளுக்கு அவ்ளோ பிடிக்கும்.. உலகத்துல அவளுக்குன்னு இருந்த ஒரே ஜீவன் அவ அம்மா மட்டுந்தான்.. அவங்களும் இல்லைன்னதும் ரொம்ப உடைஞ்சு போயிட்டா..!!"

"..................."

"அவளை ஏமாத்திட்டுப்போன அந்தப்பையனை பத்தி நாங்க எவ்ளோ கேட்ருப்போம் தெரியுமா.. எதுவுமே அவ சொன்னது இல்ல..!! ஏமாந்துட்டமேன்றதுக்காக கூட அவ சூசயிட் அட்டம்ப்ட் பண்ணிக்கல அசோக்.. 'தன்னோட நெலமை தன் மகளுக்கும் வந்திருச்சே'ன்னு அவ அம்மா பட்ட வேதனையை தாங்கிக்க முடியாமத்தான்.. அந்த ஸ்ட்ரெஸ் அதிகமாகித்தான்.. கத்தியால கை நரம்பை கட் பண்ணிக்கிட்டா..!! இதோ.. இந்த எடத்துல.. இப்படி..!!"

பவானி சொல்ல.. அசோக்கின் மனதுக்குள் பளிச்சென்று ஒரு மின்னல்..!! முன்பொருமுறை மீராவுடன் ஃபுட்கோர்ட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது.. தனது கற்பனை அப்பாவின் காதல் வெறுப்பினைப்பற்றி அவள் கதையடித்ததுக்கு இடையில்..

"நான் செகண்ட் இயர் படிக்கிறப்போ.. ஒருதடவை அப்பா என்னை பாக்குறதுக்காக எங்க காலேஜுக்கு வந்திருந்தாரு.. அந்த நேரம் பார்த்து நான் என் க்ளாஸ்மேட் பையன் ஒருத்தன்ட்ட சப்ஜக்ட் பத்தி சந்தேகம் கேட்டுட்டு இருந்தேன்.. நாங்க பேசிட்டு இருக்குறதை அப்பா பாத்துட்டாரு..!! அன்னைக்கு நைட்டு அப்பா என் கைல போட்ட சூடுதான் இது..!!"

இடது கையில் இருந்த தழும்பை காட்டி.. அவள் அப்போது அப்பாவியாக சொன்னது.. இப்போது அசோக்கின் நினைவுக்கு வர.. அவன் தலையை பிடித்துக் கொண்டான்..!! 'இன்னும் என்னவெல்லாம் புதிர் ஒளித்து வைத்திருக்கிறாயடி பிசாசே..??' என்பது மாதிரியான சலிப்புடன்.. பிடித்த தலையை பிசைந்து விட்டுக் கொண்டான்..!!

போக்குவரத்து நெரிசல் சற்றே குறைய.. இரண்டு கார்களும் மெல்ல மெல்ல நகர.. அசோக்கும், மீராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலே.. எதிரெதிர்த்திசையில் பயணிக்க ஆரம்பித்தினர்..!!

அசோக்கும் பவானியும் சிந்தாதிரிப்பேட்டை வீட்டை சென்றடைய மேலும் இருபது நிமிடங்கள் ஆயின..!! வீட்டை பார்த்ததுமே அசோக்கால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.. அவனது தேடுதல் வேட்டையின் முதல் வீடே அதுதானே..??

'அப்படியானால்.. அன்று கண்ணாடியில் நான் கண்ட பிம்பம் என் மீராவுடையதுதானா..?? வீட்டுக்குள் ஒளிந்துகொண்டேதான் இல்லையென்று சொல்ல சொல்லியிருந்தாளா..?? இரக்கமற்ற இராட்சசி..!!!'

ஒருபக்கம் மீராவின்மீது அவனுக்கு எரிச்சல் ஏற்பட்டிருந்தாலும்.. இன்னொரு பக்கம், இப்போது அவளை நேரிலேயே காணப்போகிற சந்தோஷமும் அவனுக்குள் எக்கச்சக்கமாய் ஏறிப்போயிருந்தது..!! அவர்களுக்கு முன்பாக தோன்றி மனோகர் சொன்ன செய்தி.. அத்தனை சந்தோஷத்தையும் மொத்தமாய் வடிந்து போக வைத்தது..!!

"ஹேய்.. நீ.. அந்த நித்தி வளைச்சுப்போட்ட பையன்ல..?? என்ன இந்தப்பக்கம்..??"

மனோகரின் ஆரம்பமே அசோக்கின் கோபத்தை கிளறிவிடுவதாய் இருந்தது.. அதை கட்டுப்படுத்திக்கொண்டுதான் அவன் மீரா பற்றி விசாரித்தான்..!! மனோகரோ அலட்சியமாகவே அவனுக்கு பதில் சொன்னான்..!!

"எந்த நாட்டுக்கு போறா.. எத்தனை மணிக்கு ஃப்ளைட்.. எத்தனை வருஷம் இருக்கப் போறா.. எப்போ திரும்பி வருவா.. எதுவும் எனக்கு தெரியாது..!!"

அவனுடைய பதிலில் அசோக் நொந்துபோனான்.. அவனுடைய மனதில் மெலிதாக ஒரு பதற்றம் பரவ ஆரம்பித்தது..!!

"அ..அக்கா.. அவ நம்பருக்கு கால் பண்ணிப் பாருக்கா..!!"

பதற்றத்துடனே அசோக் சொன்னதும்.. பவானி தனது எண்ணிலிருந்து மீராவின் மொபைல் நம்பருக்கு கால் செய்தாள்..!! இரண்டு மூன்று முறை முயற்சி செய்து பார்த்தவள்.. பிறகு அசோக்கிடம் திரும்பி சலிப்பாக சொன்னாள்..!!

"ரிங் போகுது அசோக்.. எடுக்க மாட்டேன்றா..!! ட்ராவல்ல இருக்குறா.. கவனிக்கல போல..!!"

"ப்ச்..!!"

அசோக்கின் பதற்றம் இப்போது இன்னும் அதிகமாயிருந்தது..!! 'மீண்டும் அவளை மிஸ் செய்துவிடுவோமோ..?' என்பது மாதிரி அவனுக்குள் ஒரு கிலி கிளம்ப ஆரம்பித்தது..!! மனோகரிடம் திரும்பி கெஞ்சலாக கேட்டான்..!!

"ஸார்.. ப்ளீஸ் ஸார்..!! நான் எப்படியாவது அவளை மீட் பண்ணியாகணும்.. ஃப்ளைட் ஏர்றதுக்குள்ள அவளை புடிச்சாகனும்..!! உங்களுக்கு ஏதாவது யூஸ்ஃபுல் இன்ஃபர்மேஷன் தெரிஞ்சா சொல்லுங்க.. ப்ளீஸ்..!!"

"ப்ச்.. நான்தான் எனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்றேன்ல..?? வேலை விஷயமா வெளிநாட்டுக்கு போறாளா.. இல்ல.. வேற ஏதும் தொழில் பண்ணப் போறாளான்னு கூட எனக்கு தெரியாது..!!"

மனோகரின் வக்கிரமான வார்த்தைகள் அசோக்கை உக்கிரமாக்கின.. சட்டென அவனுக்குள் ஆத்திரம் பீறிட்டு கிளம்ப, 'ஏய்ய்..!!' என்று கத்தியவாறு மனோகருடைய சட்டையை கொத்தாகப் பிடித்தான்..!! பதிலுக்கு மனோகரும் 'ஹேய்.. என்ன..?' என்று சூடாக.. பவானிதான் இடையில் புகுந்து அசோக்கை தடுத்தாள்..!!

"விடு அசோக்.. விடுன்றேன்ல..!! சொன்னா கேளு.. இப்போ இதுக்குலாம் நேரம் இல்ல..!! இந்தா.. நீ உடனே கெளம்பு.. ஏர்ப்போர்ட் போய் அவளை ஸ்டாப் பண்ணு.. போ..!!"

என்றவாறு கையில் இருந்த கார்ச்சாவியை அசோக்கிடம் நீட்டினாள்..!! அசோக் இன்னும் ஆத்திரம் தணியாதவனாய், மனோகரை முறைத்தவாறே ஒரு சில வினாடிகள் யோசித்தான்.. பிறகு ஒரு முடிவுக்கு வந்தவன், கார்ச்சாவியை கையில் வாங்கிக்கொண்டான்.. பவானியுடைய செல்போனையும் அவளிடமிருந்து பிடுங்கிக்கொண்டான்.. பதற்றத்தில் துடிக்கிற மனதுடன், கேட் திறந்து வெளியேறினான்..!!

அசோக்கின் அவசரத்துக்கு, தான் இடையூறாக இருப்போம் என்று கருதியே.. பவானி அவனை தனியாக கிளம்ப சொன்னாள்..!! காரில் ஏறி அமர்ந்த அவனும்.. வண்டியை கிளப்பியதுமே சர்ரென்று புயல் வேகத்தில் பறந்தான்..!!

கார் காற்றைக் கிழித்துக்கொண்டு அண்ணாசாலையில் சீறியது..!! பயமும் தவிப்புமாய்.. 'படக் படக்' என அடித்துக்கொள்கிற இருதயமுமாய்.. உச்சபட்ச வேகத்தில் காரை செலுத்திக் கொண்டிருந்தான் அசோக்..!! 'கீய்ங்.. கீய்ங்..' என்று ஹார்ன் ஒலியெழுப்பி முன்னால் சென்ற வாகனங்களை முந்திச்சென்றான்.. பவானியின் செல்ஃபோனில் இருந்து மீராவின் எண்ணுக்கு அவ்வப்போது கால் செய்து பார்த்து, 'ப்ச்' என்று சலிப்பை உதிர்த்தான்.. சிக்னலிலோ, ட்ராஃபிக்கிலோ மாட்டிக்கொள்ள நேர்ந்தபோது, 'ஷிட்' என்று ஸ்டியரிங்கை குத்தினான்..!!

கத்திப்பாரா ஜங்க்ஷனை கடந்து இடது புறம் திரும்பியதுமே.. தூரத்தில் அந்த ஆள் தெரிந்தான்..!! கொள்ளைகொள்ளையாய் தாடிமயிர்களும்.. கொழுகொழுவென்ற சதைப்பிதுக்கங்களும்.. கோணிப்பை மாதிரியான கால்ச்சட்டையும்.. கோழிமுட்டை கண்ணுக்கு கண்ணாடியுமாக..!! ப்ரேக்டவுன் ஆகிப்போன ஆல்ட்டோவுக்கு அருகே.. முதுகில் பெரிய மூட்டையுடன் நின்றிருந்தான்..!! கையை இவனது காருக்கு குறுக்கே காட்டி..

"லிஃப்ட்.. லிஃப்ட்.. ப்ளீஸ்..!!"

என அந்த ஆள் பரிதாபமாக கத்தியது அசோக்கின் காதில் விழவே செய்தது.. அவனுக்கு உதவவேண்டும் என்கிற எண்ணம் கூட அசோக்கிற்கு தோன்றியது..!! இருந்தாலும் இது சமயமில்லை என்ற எண்ணத்துடன்.. அந்த ஆளின் கதறலை அசோக் அலட்சியம் செய்தான்.. காரின் வேகத்தை சற்றும் குறைக்காமல் 'விஷ்க்க்' என கடந்து சென்றான்..!!

அடுத்த பத்தாவது நிமிடம்.. மீனம்பாக்கம் இன்டர்நேஷனல் ஏர்ப்போர்ட்டில் இருந்தான் அசோக்..!! பார்க்கிங் ஏரியாவில் காரை விட்டவன்.. பரபரப்பாக ஏர்ப்போர்ட் என்ட்ரன்ஸுக்குள் நுழைந்தான்..!! மீரா எங்காவது தென்படுகிறாளா என்று.. தவிப்புடன் தலையை திருப்பி திருப்பி பார்த்தான்..!! விமான பயணச்சீட்டு இல்லாமல்.. பயணிகள் அமர்ந்திருக்கிற பகுதிக்கு அனுமதிக்க முடியாது என்று.. அசோக்கை தடுத்தார் ஏர்போர்ட் செக்யூரிட்டி ஒருவர்..!! அசோக் அவரிடம் கெஞ்சினான்..!!

"ப்ளீஸ் ஸார்.. என்னை உள்ள அலவ் பண்ணுங்க.. அவளை நான் பார்த்தே ஆகணும்.. இது என் லைஃப் பிரச்சினை ஸார்.. கொஞ்சம் புரிஞ்சுக்கங்க.. ப்ளீஸ்..!!"

"உன்னை உள்ளவிட்டா என் வேலை போய்டும்பா.. எனக்கும் இது லைஃப் பிரச்சினைதான்.. நீ கொஞ்சம் புரிஞ்சுக்கோ.. ப்ளீஸ்..!!"

அசோக்கின் நிலையை ஓரளவு புரிந்துகொண்ட அந்த செக்யூரிட்டி.. மிஞ்சுவதற்கு பதிலாக கெஞ்சலாய் சொல்ல.. அதற்கு மேலும் என்ன செய்வது என்று புரியாமல், அசோக் நெற்றியைப் பற்றி பிசைந்தான்..!! மீரா தென்படுகிறாளா என்று மீண்டும் ஒருமுறை அவன் தலையை திருப்பி பார்க்க.. அவனுக்கு பின்பக்கமாக அந்த ஆள் வந்து 'பொத்'தென்று மோதினான்..!! சற்றுமுன் சாலையில் லிஃப்ட் கேட்ட அந்த கொழுகொழு ஆசாமி..!!

"ஹலோ கண்ணு தெரியாதா உங்களுக்கு..??" ஆளை அடையாளம் கண்டுகொண்டும், அசோக் எரிச்சலாகவே எகிறினான்.

"ஸாரி ஸார்.. ஸாரி..!! ஃப்ளைட்க்கு லேட் ஆய்டுச்சு.. அதான்..!! ஸாரி ஸாரி ஸாரி..!!"

ஸாரிக்களை மானாவாரியாக இறைத்தவாறு.. அந்த ஆள் நிற்கக்கூட நேரமின்றி அவசரமாக உள்ளே ஓடினான்..!! ஒருசில வினாடிகள் செயலற்றுப் போய் நின்றிருந்த அசோக்.. பிறகு, 'போர்டிங் ஏரியா தவிர வேறு எங்காவது மீரா இருந்தால், அவளை பிடிக்கலாமே..' என்பது மாதிரியான எண்ணத்துடன்.. விசிட்டர்கள் ஏரியா பக்கமாக ஓடினான்..!!

அதே நேரம்..

போர்டிங் ஏரியாவுக்குள்.. இரண்டாவது மாடியில் இருந்த அந்த புக் ஸ்டாலில்.. மீரா நின்றுகொண்டிருந்தாள்..!! ட்ராவல் பேகை அவள் செக்கின் செய்திருக்க.. தோளில் மட்டும் அந்த சிறிய பேக்..!! ஃப்ளைட்டில் அனுமதிக்கப்பட இன்னும் சிறிது நேரமே இருக்கிற நிலைமையில்.. திடீர் யோசனை தோன்றியவளாய் அந்த புக் ஸ்டாலுக்கு வந்திருந்தாள்..!! சவூதி அரேபியா பற்றிய உபயோகமான தகவல்கள் அடங்கிய அந்தப் புத்தகத்தை வாங்கியிருந்தாள்..!! பில்லுக்கு பணம் எடுத்து கொடுத்துவிட்டு.. புத்தகத்தை பேகுக்குள் திணித்தபோதுதான்.. அவளுடைய கவனத்தை அது ஈர்த்தது.. பேகுக்குள் கிடந்த அவளுடைய செல்ஃபோன்..!!

எதேச்சையாக எடுத்துப் பார்த்தவள்.. பவானியின் நம்பரில் இருந்து ஏகப்பட்ட மிஸ்ட் கால்ஸ் வந்திருப்பதை கவனித்தாள்..!! 'இவர்கள் எதற்கு இந்த நேரத்தில்?' என ஓரிரு வினாடிகள் குழம்பினாள்.. புக் ஸ்டாலை விட்டு அவசரமாக வெளியே வந்தாள்.. வெளியே வந்ததுமே பவானியின் நம்பருக்கு கால் செய்தாள்..!!

அதே நேரம்.. விசிட்டர் ஏரியாவில்..

ஏக்கமும் தவிப்புமாய் மீராவை தேடிக்கொண்டிருந்த அசோக்கின் கையில் இருந்த செல்ஃபோனுக்கு.. அவளிடமிருந்தே கால் வர.. அந்த நொடியில் அவன் அடைந்த மகிழ்ச்சியை அளவிடவே முடியாது..!! அவனது முகம் பட்டென பரவசத்துக்கு செல்ல.. காலை உடனே பிக்கப் செய்து காதில் வைத்தான்..!!

"ம்ம்.. சொல்லுங்கக்கா.. கால் பண்ணிருந்தீங்களா..??"

எதிர்முனையில் மீராவின் குரல்.. அந்தக்குரலை கேட்டதும் அசோக்கின் உள்ளத்தில் பலவகை உணர்ச்சி அலைகள்..!!

"மீ..மீரா.. மீரா.."

வார்த்தைகள் வெளிவராமல் தவித்தான்.. அவளுடைய உண்மையான பெயர் நித்தி என்று மூளைக்கு தெரிந்திருந்தும்.. அவனுடைய மனம் என்னவோ 'மீரா மீரா' என்றே இன்னும் அலறியது..!! அடுத்த முனையில் அவனுடைய குரலை கேட்ட மீராவும்.. பலத்த அதிர்ச்சிக்கும், ஆச்சரியத்துக்கும் உள்ளானாள்.. அவளும் வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கியவளாய் தடுமாறினாள்..!!

"அ..அசோக்.. அசோக் நீயா..??"

"நா..நான்.. நான்தான் மீரா..!!"

"அசோக்.. நீ.. நீ எப்படி..??"

"எ..எங்க.. நீ எங்க மீரா இருக்குற..??"

"நா..நான்.. நான் உன்னை விட்டு தூரமா போறேன் அசோக்.. இன்னும் பத்து நிமிஷத்துல.. எனக்கு.."

"தெரியும் மீரா.. நீ ஏர்ப்போர்ட்ல இருக்குறன்னு எனக்கு தெரியும்.. நானும் இப்போ ஏர்ப்போர்ட்லதான் இருக்குறேன்..!! ஏர்ப்போர்ட்குள்ள எங்க இருக்குறன்னு சொல்லு மீரா.. நான் உன்னை பாக்கணும்.. உன்கூட பேசணும்..!! ப்ளீஸ் மீரா.. போயிடாத.. மறுபடியும் என்னை தவிக்கவிட்டுட்டு போயிடாத.. என்கிட்ட வந்துடு.. ப்ளீஸ்..!!"

அசோக்கின் குரல் தழதழத்துப் போய் ஒலிக்க.. அடுத்த முனையில் அதைக்கேட்ட மீரா அப்படியே உருகிப்போனாள்..!! 'தன்மீது எத்தனை காதல் இருந்தால்.. தன்னை தேடிக்கண்டுபிடிக்க இவன் இத்தனை முயற்சிகள் எடுத்துக் கொண்டிருப்பான்..?' என்பது மாதிரியான எண்ணம் அவளுக்குள் தோன்ற.. உள்ளத்தில் அசோக்கின்மீது பீறிட்டு கிளம்பிய காதல் ஊற்றினை.. அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை..!! கண்களுக்குள் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.. உதடுகளை பற்களால் அழுந்த கடிக்கவும்.. இமைகளை பொத்துக்கொண்டு கண்ணீர் வெளிச்சிந்தியது..!!

இந்தப்பக்கம் இவளது உணர்சிகளை, அந்தப்பக்கம் அறியாத அசோக்.. அவளது அமைதியை மட்டும் தவறாக அர்த்தம் எடுத்துக்கொண்டு.. பதற்றம் கொப்பளிக்கிற குரலில் மீராவை கெஞ்சினான்..!!

"ப்ளீஸ் மீரா.. ஏதாவது பேசு.. ஃபோனை மட்டும் கட் பண்ணிடாத.. ப்ளீஸ்..!! எ..என்னை.. என்னை விட்டு போயிடாத மீரா.. என்னால தாங்கிக்கவே முடியாது.. ப்ளீஸ் மீரா.. என்னை விட்டு போயிடாத.. ப்ளீஸ்..!!!"

கரகரத்த குரலில் அசோக் அவ்வாறு கெஞ்ச.. முன்பொருமுறை தனது மடியில் மடியில் சரிந்து மயங்கிப் போவதற்கு முன்பாக.. அவன் கெஞ்சிய வார்த்தைகள் மீராவின் காதுக்குள் இப்போது மீண்டும் ஒலித்தன..!!

"போ..போகாத மீரா..!! எ..எனக்கு நீ வேணும் மீரா..!!"

அவ்வளவுதான்..!! அதற்கு மேலும் உள்ளுக்குள் பொங்கிய உணர்சிகளை மீராவால் அடக்கிக்கொள்ள முடியவில்லை.. இதற்கு மேலும் இவனை தவிக்க விடுவது தவறென்று உணர்ந்துகொண்டாள்..!!

'இல்ல அசோக்.. உன்னை விட்டு போக மாட்டேன்டா.. எப்போவும் போக மாட்டேன்..!!' என்று கத்துவதற்காக அவள் வாயெடுத்தபோதுதான்.. அவள் மீது தொம்மென்று வந்து இடித்தான் அந்த ஆள்.. சற்றுமுன் அசோக்கை இடித்த, அதற்குமுன் அசோக்கிடம் லிஃப்ட் கேட்ட அதே கனத்ததேக ஆசாமி..!! அவன் இடித்த வேகத்தில்.. மீராவின் கையிலிருந்த செல்ஃபோன் எகிறி.. எங்கோ அந்தரத்தில் பறந்தது..!! இரண்டாவது மாடியிலிருந்து கீழ்நோக்கி நழுவி.. தரைத்தளத்தில் சென்று ஜிலீரென மோதி.. இரண்டு மூன்று பாகங்களால தெறித்து.. மூலைக்கொன்றாக சிதறி ஓடியது..!!

"ஸாரி மேடம்.. ஸாரி ஸாரி ஸாரி.. ஐ'ம் இன் எ ஹர்ரி... ஸாரி..!!"

வழக்கமான வார்த்தைகளை உதிர்த்துவிட்டு.. தனது பின்புற சதைகள் குலுங்க குலுங்க.. அந்த ஆள் எங்கேயோ ஓட ஆரம்பித்தான்..!!

அவனுடைய மன்னிப்பை கேட்டுக்கொள்கிற மனநிலையில் மீரா இல்லை.. காதலும், ஏக்கமும், தவிப்பும் அவள் நெஞ்சை கொள்ளை கொள்ளையாய் அடைத்திருந்தன.. படக்கென ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டவளாய் படிக்கட்டு நோக்கி ஓடினாள்.. கால்கள் ரெண்டும் பிண்ணிக்கொள்ள, தடதடவென படியிறங்கினாள்.. இறங்குகையிலேயே, கீழே விழுந்த செல்ஃபோன் கண்ணில் தட்டுப்படுகிறதா என்று தவிப்பாக பார்த்தாள்..!!

இவளுடைய நிலையை அறியாத அசோக்.. மீராதான் காலை கட் செய்துவிட்டாள் என்று நினைத்துக் கொண்டான்..!! நடுங்கிய விரல்களுடன் மீண்டும் கால் செய்து பார்க்க.. ஸ்விட்ச் ஆஃப் என்று வர..

"ஷிட்..!!!"

என்று கத்தியவன்.. ஏதோ ஒரு வேகத்தில் செல்ஃபோனை தரையில் ஓங்கி அடித்து விசிறினான்..!! தேங்காய் உடைத்தது போல.. பவானியின் செல்ஃபோன் சில்லு சில்லாக சிதறி ஓடியது..!!

'இன்னும் பத்து நிமிடங்கள்தான் உள்ளன.. எங்கே என்றே தெரியாத ஒரு வெளிநாட்டுக்கு, என்னருமைக்காதலி தப்பிச்செல்லப் போகிறாள்.. செல்ஃபோனை வேறு ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டாள்.. எப்படியாவது அவளை தடுத்தாக வேண்டும்.. என்ன செய்வது இப்போது..??'

எதுவும் புரியாமல் அசோக் நெற்றியை பிசைந்துகொண்டான்..!! எதேச்சையாக அவன் திரும்புகையில்தான்.. அந்த விளம்பரம் அவனுடைய பார்வையில் விழுந்தது..!! அதை பார்த்ததுமே அவனுடைய மூளையில் பளிச்சென்று ஒரு யோசனை..!! செய்யலாமா வேண்டாமா என்று சிந்திக்கக்கூட அவகாசம் ஒதுக்காமல்.. செய்துவிடவேண்டும் என்கிற உறுதியான முடிவுடன்.. தலையை சுழற்றி சுழற்றி எதையோ தேடினான்..!! அவன் தேடியது கிடைக்காமல் போகவும்.. அவசரமாக ஏர்போர்ட் என்ட்ரன்சை விட்டு வெளியே வந்தான்..!! வெளியே ஓடிய சிமெண்ட் சாலைக்கு அந்தப்பக்கமாக அவன் தேடியது காட்சியளித்தது.. அந்த கண்ணாடிக்கூண்டு.. பப்ளிக் டெலிஃபோன் பூத்..!!

அதே நேரத்தில்.. ஏர்ப்போட்டுக்குள்ளே.. உடலின் அத்தனை உறுப்புகளிலும் பதற்றம் தொற்றிக்கொண்டவளாய் மீரா தனது செல்ஃபோனை தேடிக்கொண்டிருந்தாள்..!! அவளுடைய கண்களில் பொலபொலவென கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.. புறங்கையால் அந்தக் கண்ணீரை அவ்வப்போது துடைத்துக் கொண்டாள்.. உதடுகள் அடிக்கடி 'அசோக்.. அசோக்..' என்று உச்சரித்துக் கொண்டிருந்தன..!! கீழ்த்தளத்தில் இருந்த இருக்கைகள், மேஜைகள், இண்டு இடுக்குகள் எல்லாம்.. தரையில் அமர்ந்து குனிந்து குனிந்து தேடினாள்..!!

"என்னம்மா.. என்ன தேடுறீங்க..??" அவளை கவனித்த ஒரு செக்யூரிட்டி வந்து கேட்டார்.

"எ..என் செல்ஃபோன்.. என் செல்ஃபோன் மேல இருந்து கீழ விழுந்துடுச்சு..!!"

மீராவுக்கு அந்த செக்யூரிட்டி உதவி செய்தார்.. அவளுடன் சேர்ந்து அவரும் செல்ஃபோன் தேட ஆரம்பித்தார்..!! சிதறிப்போன செல்ஃபோன் பாகங்களை.. இருவருமாக தேடிக்கண்டுபிடித்து ஒன்றிணைக்க.. ஐந்து நிமிடங்கள் ஆகிப் போயின..!!

"சென்னையிலிருந்து ரியாத்துக்கு செல்கிற ஏர்-இண்டியா விமானத்தின் பயணிகள்.. உடனடியாக ட்ரான்ஸ்போர்ட் டெஸ்கை அணுகவும்..!!"

மீரா பயணிக்கவிருந்த விமானம் புறப்பட தயார் நிலையில் இருக்கிற விஷயம்.. ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட்டது..!! அதைக் கண்டுகொள்ளாமல்.. அவசரமாக பவானியின் எண்ணுக்கு கால் செய்த மீராவுக்கு.. ஏமாற்றமே பரிசாக கிடைத்தது.. செல்ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாக செய்தி..!!

"ப்ளீஸ் அசோக்.. பிக்கப்.. பிக்கப்..!!!!"

தவிப்பும் பதற்றமுமாய் அழுகையுடன் கதறிய மீரா.. திரும்ப திரும்ப அந்த எண்ணுக்கு கால் செய்து கொண்டிருந்தாள்..!! அப்போதுதான் திடீரென..

"கீய்ங்க்.. கீய்ங்க்.. கீய்ங்க்.. கீய்ங்க்..!!!!!"

என ஏர்ப்போர்ட்டுக்குள் எமர்ஜன்ஸி அலார்ம் அடித்தது.. ஆங்காங்கே சிவப்பு விளக்குகள் பளிச் பளிச்சென்று மின்னின.. அனைவரையும் உடனே ஏர்ப்போர்ட்டை விட்டு வெளியேற அறிவுறுத்திய அவசரகால அறிவிப்பு..!!

"ஏதோ பிரச்சினைன்னு நேனைக்கிறேன்மா.. வா வெளில போயிடலாம்..!!" மீராவுக்கு உதவிய அந்த செக்யூரிட்டி பதற்றமாக சொன்ன அதே நேரத்தில்..

"ஏர்ப்போர்ட்ல பாம் வச்சிருக்காங்களாம்.. இன்னும் அஞ்சு நிமிஷத்துல வெடிக்கப் போகுதாம்.. எல்லாரும் ஓடுங்க.. ஓடுங்க..!!"

வெளியில் கசிந்த விஷயத்தை அறிந்துகொண்ட யாரோ.. டப்பிங் பட டயலாக் எஃபக்டில் கத்தினார்கள்..!!

அவ்வளவுதான்..!! அத்தனை நேரம் தேகத்தில் மழை பெய்த எருமை மாடுகளாய், அங்குமிங்கும் ஊர்ந்துகொண்டிருந்த மனிதர்கள்.. பட்டென வாலில் தீப்பிடித்துக்கொண்ட குரங்குகளாக மாறிப்போயினர்.. ஏர்ப்போர்ட் என்ட்ரன்ஸ் நோக்கி திமுதிமுவென ஓடினர்..!! அத்தனை பேரின் மனதிலும் ஒரு உயிர்ப்பயம்.. அனைவரது முகத்திலும் ஒரு மரணபீதி..!! பயம்.. குழப்பம்.. அவசரம்.. இடைஞ்சல்.. நெரிசல்.. தள்ளுமுள்ளு..!!

எதுவும் புரியாமல் திகைத்தவாறு நின்றிருந்த மீராவை, அந்த செக்யூரிட்டியே..

"வாம்மா..!!" என்றவாறு கைபிடித்து இழுத்து சென்றார்.

ஏர்ப்போர்ட் என்ட்ரன்ஸ்க்கு வெளியே.. அசோக் டெலிஃபோன் பூத்துக்கு அருகாகவே நின்று காத்திருந்தான்..!! எந்த நேரமும் வாசலை கிழித்துக்கொண்டு மனிதக்கும்பல் வெளிப்படும் என்று எதிர்பார்த்திருந்தான்..!!

"அஞ்சு நிமிஷத்துல பாம் வெடிக்கப் போகுது.. ஏர்ப்போர்ட் மொத்தமும் இடிஞ்சு தரைமட்டம் ஆகப்போகுது.. எத்தனை பேரை காப்பாத்த முடியுமோ அத்தனை பேரை காப்பாத்திக்கோங்க..!! எங்களை பகைச்சுக்குற வரைக்கும் இந்தியாவுக்கு இதே நெலமைதான்..!!"

பப்ளிக் டெலிஃபோன் பூத்தில் இருந்து.. ஏர்ப்போர்ட் அத்தாரிட்டிக்கு வடஇந்தியரின் ஸ்லாங்கில் அவன் விடுத்த எச்சரிக்கை.. நிச்சயம் பலனளிக்கும் என்றே அவன் எதிர்பாத்திருந்தான்..!! அவனுடைய எதிர்பார்ப்பு சற்றும் வீணாகவில்லை.. புற்றில் இருந்து புறப்பட்ட ஈசல்களாய்.. அந்த சிறிய நுழைவாயிலில் இருந்து புசுபுசுவென மனிதர்கள் வெளிப்பட்டு.. இவனை நோக்கி ஓடிவந்தனர்..!!

ஆனால்.. ஒருவகையில் அசோக்கிற்கு ஏமாற்றம்தான்..!! அமைதியாய் இயங்கிக்கொண்டிருந்த அந்த ஏர்ப்போர்ட்டுக்குள்.. அத்தனை மனிதர்கள் அடங்கியிருப்பார்கள் என்று அவன் கொஞ்சமும் நினைத்திரவில்லை..!! ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும்.. அடுத்தடுத்து.. வரிசையாகவும் வேகமாகவும் வெளிப்பட.. அவர்களுக்குள் மீராவின் முகத்தை தேடிக்கண்டுபிடிப்பது அவனுக்கு சிரமமாக இருந்தது..!! கருவிழிகளை அப்படியும் இப்படியுமாய் அசைத்து.. காதலியின் அழகுமுகத்தை அந்த மனிதத் தலைகளுக்குள் காணத்துடித்தான்..!!

ஒருவரை ஒருவர் இடித்து தள்ளிக்கொண்டு பயணிகள் அங்குமிங்கும் ஓடினர்.. அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய செக்யூரிட்டி கார்ட்களும் அவர்களுடன் சேர்ந்து ஓடினர்..!! இடையில் இருந்த சாலையில்.. பாம்ஸ்குவாட் வாகனங்கள்.. தலையில் ஒளிர்ந்த சிவப்பு விளக்குகளுடன்.. 'வீல்.. வீல்..' என்று அலறிக்கொண்டு.. எதிர்ப்புறம் சர்ர் சர்ர்ரென விரைந்தன..!!

அப்போதுதான்.. இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி, கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து வெளியே வந்த மீராவின் முகம்.. அசோக்கின் பார்வையில் விழுந்தது..!! அவளை கண்டுகொண்டதுமே அசோக்கிற்கு அப்படியொரு சந்தோஷம்..!!

"மீரா...!!!!!"

என்று கத்தியே விட்டான். அவன் கத்தியதை மீரா கவனிக்கவில்லை.

"மீரா...!!!!!"

மீண்டும் பெருங்குரலில் கத்தினான்.. இப்போது மீராவின் காதுகளில் இவனது சப்தம் கேட்டுவிட்டது.. உடனே திரும்பி பார்த்தாள்.. அசோக்கின் முகத்தை கண்டதும் அவளுக்குள் ஒரு திகைப்பு கலந்த பூரிப்பு..!!


"அசோக்...!!!!!"

அவளும் பதிலுக்கு அந்தப்பக்கம் இருந்து கத்தினாள்..!! குழப்பத்துடன் முண்டியடித்த ஜனங்களை விலக்கிக்கொண்டு.. அசோக்கின் பக்கமாக வரமுனைந்தாள்..!! ஆனால்.. அசோக்கிற்குத்தான் சற்றும் பொறுமை இல்லை.. உடனே அவளிடம் சென்று, அவளை தன்வசப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது மாதிரியாக அவனுக்குள் ஒரு உந்துதல்..!!

போக்குவரத்து தடுப்பை தடுப்பை தாண்டி குதித்தான்.. 'மீரா...!!' என்று கத்திக்கொண்டே சாலையின் குறுக்காக, மீராவை நோக்கி ஓடினான்.. விர்ரென்று சீறிக்கொண்டு வந்த அந்த கருநீல நிற வாகனத்தை கவனிக்க மறந்தான்..!! படுவேகத்தில் வந்த அந்த ஜீப் அசோக் மீது பலமாக மோதியது.. மோதியவேகத்தில் 'கிர்ர்ர்ர்ர்ர்ர்' என்று பிரேக்கடித்து நின்றது..!! ஆகாயத்தில் அசோக் தூக்கி எறியப்பட்டான்.. அவனுடைய தலை தரையில் சென்று நச்சென்று அடித்தது.. முகம் சிமெண்ட் சாலையில் உரசி உராய்ந்தது.. உடல் கடகடவென உருண்டு ஓடியது..!!

"அசோக்..!!!"

பார்த்த காட்சியில் பதறிப்போன மீரா.. அலறிக்கொண்டே அவள்பக்கம் இருந்த போக்குவரத்து தடுப்பில் ஏறி குதிக்கவும்.. அம்பு தைத்த பறவையாய், அவளுடைய காலடியில் சென்று அசோக் சொத்தென்று விழுவதற்கும்.. சரியாக இருந்தது..!!

"அசோக்..!!!"

மீரா அவசரமாய் குனிந்து அசோக்கை கையில் அள்ளிக்கொண்டாள்.. அவனுடைய முகத்தில் சிராய்ப்பு ஏற்பட்டு, ஆங்காங்கே தோல் பெயர்ந்து வெளிறிப் போயிருந்தது.. நெற்றியில் அடிப்பட்ட இடத்திலிருந்து சிவப்பாய் ரத்தம் வழிந்தது.. அவனுடைய கண்கள் பாதி செருகிப் போயிருந்தன.. மார்புகள் படக் படக்கென காற்றுக்காக அடித்துக்கொண்டன..!! அத்தனை வேதனையிலும் அவனுடைய முகத்தில் மட்டும் ஒரு அசாத்திய நிம்மதி.. நினைத்ததை சாதித்துவிட்ட நிம்மதி..!!

"ஐயோ.. ரத்தம்..!!!!" மீரா அழுகுரலில் அலறினாள்.

"எ..என்னடா இது.. ஏன்டா இப்படிலாம் பண்ற..??" புலம்பி அரற்றினாள்.

பாதி செருகிய விழிகளுடனும்.. படபடக்கிற உதடுகளுடனும்.. அசோக் இப்போது திக்கி திணறி பேசினான்..!!

"நா..நான்.. நான்தான் சொன்னேன்ல.. ந..நம்ம காதல் நம்மள சேர்த்து வைக்கும்னு..!! ந..நம்மள.. நேருக்கு நேர்.. மீட் பண்ண வச்சிருச்சு பாத்தியா..??"

"ஐயோ.. அசோக்..!!!!" அலறிய மீரா அசோக்கை தன் மார்போடு இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

"போ..போயிடாத மீரா.. எ..என்னை விட்டு போயிடாத.. ப்ளீஸ்..!!" கெஞ்சலாக கேட்டுக்கொண்டே.. அசோக் கொஞ்சம் கொஞ்சமாக மயக்கத்துக்கு சென்றான்..!!

"இல்லடா.. போகமாட்டேன்.. உன்னை விட்டு எங்கயும் போகமாட்டேன்..!!"

அவனது தலையை தாங்கிப் பிடித்திருந்த மீராவின் உள்ளங்கையில்.. ஈரமாய் எதுவோ பிசுபிசுக்க.. கையை வெளியே எடுத்து பார்த்தாள்..!! ரத்தம்..!!! அவனுக்கு பின்னந்தலையிலும் அடிபட்டிருக்கிறது என்று மீராவுக்கு புரிய.. நெஞ்சுக்குள் அடைத்த துக்கத்துடன் 'ஓ' வென்று கத்தினாள்..!!!

"யாராவது ஹெல்ப் பண்ணுங்களேன்.. ப்ளீஸ்..!!!"

அங்குமிங்கும் அவசரமாக ஓடிக்கொண்டிருந்த மக்களைப் பார்த்து மீரா கெஞ்சலாக அலற.. அவளுடைய குரல்கேட்டு முதல் ஆளாக உதவிக்கு ஓடிவந்தான் அவன்.. அசோக்கையும் மீராவையும் ஆக்சிடன்டலாக இடித்து தள்ளிய அதே குண்டு ஆசாமி..!!

ஆழ்ந்த மயக்கத்தில் அசோக் இருந்திருந்தாலும்.. அந்த மயக்கம் முழுவதையும் மீராவே நிறைத்திருக்க வேண்டும்..!! அவள் தன்னுடன் இருப்பாளா.. இல்லை விட்டுச் சென்றுவிடுவாளா என்கிற ஏக்கம் அந்த மயக்கமும் முழுவதிலும் விரவிக் கிடந்திருக்க வேண்டும்..!! அதனால்த்தான்.. மயக்கத்தில் இருந்து விடுபட்டதுமே..

"மீரா..!!!"

என்று பதறியடித்துக்கொண்டே எழுந்தான்.. எழுந்ததுமே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது.. எதிரே கவலையாக அமர்ந்திருந்த பாரதியும், மணிபாரதியும் காணக்கிடைத்தார்கள்.. ஆனால் அவனுடைய கண்களோ மீராவையே பரிதவிப்புடன் தேடின..!!

"மீ..மீரா.. மீரா எங்க மம்மி.. மீரா.. மீரா..!!"

அவனுடைய பார்வை அங்குமிங்கும் அலைபாய்ந்தது..!! திடீரென எழுந்ததுமே மகன் இவ்வாறு தவிக்கிற தவிப்பை பார்த்ததும்.. பெற்றோர்கள் இருவருக்கும் ஒருவகை திகைப்பு.. அவர்கள் பேச வாயெடுக்கும் முன்பாகவே..

"நா..நான் இங்க இருக்குறேன்..!!"

அசோக்கின் பின்புறமிருந்து மீராவின் குரல் கேட்டது.. எழுந்ததுமே அவளை எதிரே தேடினானே ஒழிய, தனது தலைக்கருகே அவள் அமர்ந்திருக்கிறாள் என்பதை அவன் கவனிக்கவில்லை.. இப்போது அவளது குரல் கேட்டதும், படக்கென திரும்பி பார்த்தான்..!! மீரா தன்னை விட்டுச்செல்லவில்லை, தன்னுடன்தான் இருக்கிறாள் என்ற உண்மை புரிந்ததும்.. அவனுடைய முகத்தில் ஒருவித நிம்மதியும் பரவசமும் ஒரே நேரத்தில் பரவின..!!

மீராவோ காதலும், கருணையும், ஏக்கமுமாய் இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. அத்தனை உணர்சிகளும் கலந்துகட்டி அவளுடைய முகத்தில் கொப்பளித்தன..!! இரண்டடி நகர்ந்து முன்னால் வந்தவள்.. அசோக்கின் பெற்றோர்கள் அங்கிருக்கிறார்கள் என்பதைக்கூட மறந்துபோய்.. அவனை அப்படியே இறுக்கி அணைத்துக் கொண்டாள்..!! அசோக்கும் அந்த நொடிக்காகத்தான் காத்திருந்தவன் போல.. தனது கரங்களுக்குள் வைத்து அவளை பூட்டிக் கொண்டான்..!!

இணைந்துவிட்ட இளங்காதலர்கள் இருவரையும்.. முதிர்ந்த காதலர்கள் இருவரும் ஓரிரு வினாடிகள் பெருமிதமாக பார்த்தனர்..!! பிறகு முகத்தை திருப்பி ஒருவரை ஒருவர் பார்த்து மெலிதாக புன்னகைத்துக் கொண்டனர்..!! இருவருக்கும் இப்போது ஒரு முழு நிம்மதி வந்திருக்க.. 'இடத்தை காலி செய்வது நல்லது' என்று புரிந்துகொண்டு.. அந்த அறையை விட்டு வெளியேறினர்..!!

அசோக்கும் மீராவும் பேசிக்கொள்ளவே இல்லை.. இறுக்கி அணைத்துக் கொண்டவர்கள், அப்படியே உறைந்து போய் அமர்ந்திருந்தனர்..!! ஒருவருடைய கைவிரல்கள் அடுத்தவரின் முதுகைப் பற்றி பிசைந்தன.. ஒருவருடைய மார்புத்துடிப்பை அடுத்தவரின் மார்புகொண்டு உணர முடிந்தது.. ஒருவருடைய சுவாசத்தில் அடுத்தவருடைய மூச்சுக்காற்று கலந்திருந்தது..!! செயலற்றுப்போய் அவர்கள் அவ்வாறு அமர்ந்திருந்தாலும்.. அவர்களுடைய உதடுகள் மட்டும் ஒரே வாக்கியத்தை திரும்ப திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்தன..!!

"ஐ லவ் யூடா.. ஐ லவ் யூ..!!"

நீண்ட நேரத்திற்கு பிறகு.. மகனும் மருமகளும் ஓரளவு பேசி ஓய்ந்திருப்பார்கள் என்கிற நம்பிக்கையுடன், பாரதி அந்த அறைக்குள் மீண்டும் நுழைந்தாள்..!! அவர்களோ இன்னும் அதே நிலையில் அமர்ந்திருக்க.. ஒருகணம் திகைத்துப் போனாள்.. பிறகு..

"ம்க்கும்..!!" என்று சப்தமெழுப்பி அவர்களை இந்த உலகுக்கு இழுத்து வந்தாள்..!!

அணைத்திருந்தவர்கள் உடனே விலகிக் கொண்டனர்.. அசோக் அசட்டுத்தனமாய் ஒரு புன்னகையை சிந்தினான்.. மீரா வெட்கப்பட்டு தலையை குனிந்துகொண்டாள்..!!

"அவனுக்கு சாப்பிட குடுக்கலாம்னு சொல்லிட்டாங்கம்மா.. அதான் சாதம் கலந்து எடுத்துட்டு வந்தேன்..!!"

"எங்கிட்ட குடுங்க அத்தை.. நான் பாத்துக்குறேன்..!!"

சொன்ன மீரா.. பாரதியின் கையிலிருந்த பவ்லை வாங்கிக்கொண்டாள்..!! 'தனக்கப்புறம்.. தன் மகனுக்கு.. தன்னிடத்தில் இன்னொருத்தி..' என்பது மாதிரியான உணர்வு பாரதிக்கு தோன்ற.. ஸ்னேஹமான ஒரு புன்னகையுடன் மீராவின் கேசத்தை வருடிக் கொடுத்தாள்..!! இருவரையும் மீண்டும் தனிமையில் விட்டு.. அந்த அறையினின்றும் அகன்றாள்..!!

பருப்புடன் சேர்த்து கூழ் மாதிரி கரைக்கப்பட்டிருந்த சாதம்.. அதை ஸ்பூனில் அள்ளி மீரா நீட்ட, அசோக் ஆசையாக வாய் திறந்து வாங்கிக்கொண்டான்.. மீராவின் முகத்தை காதலாக பார்த்துக்கொண்டே வாயை அசைபோட்டான்..!! அவனுடைய தலையில் போடப்பட்டிருந்த கட்டு.. நெற்றி, கன்னம், கை, முழங்கால் என்று ஆங்காங்கே பஞ்சு வைத்து ஒட்டப்பட்டிருந்த ப்ளாஸ்டர்கள்.. எதையும் கவனிக்கிற நிலையில் அவன் இல்லை.. அவனது கவனம் முழுதும் மீராவை ஆசையும், ஏக்கமுமாக பார்ப்பதிலேயே இருந்தது..!!

"ரொம்ப பயந்துட்டேன் மீரா.. எங்க மறுபடியும் உன்னை மிஸ் பண்ணிடுவேனோன்னு..!!"

"ம்ம்.. தெரிஞ்சது..!! ஜீப் வர்றதுகூட கண்ணு தெரியாம அப்படியே தாண்டி குதிச்சு ஓடி வர்றான்.. லூசு..!!"

"ஹ்ஹாஹ்..!!"

"சிரிக்காத..!! அப்படி என்ன அவசரம்..?? உன்னை அந்தக்கோலத்துல பாத்தப்போ எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா..?? கொஞ்ச நேரம் என் உசுரே எங்கிட்ட இல்ல அசோக்..!! அழுறேன்.. அலர்றேன்.. என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியல..!! நல்லவேளை.. ஒரு நல்ல மனுஷன் ஹெல்ப் பண்ணாரு.. உடனே உன்னை ஹாஸ்பிடல்ல சேர்க்க முடிஞ்சது..!! பவானி அக்கா ஆபீஸ்க்கு கால் பண்ணினேன்.. எல்லாரும் உடனே கெளம்பி வந்துட்டாங்க..!! இப்போ வெளில இருக்காங்க..!!"

"ம்ம்..!!"

"அவ்வளவு பிடிக்குமாடா என்னை..??" மீரா ஏக்கமாக கேட்க,

"ம்ம்.. ரொம்ப ரொம்ப பிடிக்கும்..!!" அசோக்கின் குரல் காதலாக ஒலித்தது.

"நெனச்சதை சாதிச்சுட்டேல நீ..?? சொன்ன மாதிரியே என் எதிர வந்து நின்னுட்டல..?? எப்படியோ கஷ்டப்பட்டு என்னை தேடிக் கண்டுபிடிச்சுட்ட..!!"

"நான் கண்டுபிடிக்கல.. நம்ம காதல்தான் உன்னை காட்டிக் குடுத்துடுச்சு..!! உன் மேல இருக்குற காதலாலதான், உன் கண்ணை வச்சே உன்னை.."

"ம்ம்.. அத்தை எல்லாம் சொன்னாங்க..!! எப்படிலாம் என்னை தேடின.. என்னல்லாம் கஷ்டப்பட்டேன்னு..!! தூக்க மாத்திரை டப்பாலாம் தூக்கிட்டு போனியாம்..??"

"ஓ.. அதையும் சொல்லிட்டாங்களா..??"

"அப்படியே அறையணும்..!!"

"அறைஞ்சுக்கோ..!!"

அசோக் கூலாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே, மீரா பாய்ந்து சென்று அவனது உதடுகளை கவ்விக் கொண்டாள்..!! அவன் சற்றும் எதிர்பார்த்திராத வகையில்.. ஒரு அழுத்தமான, ஆவேசமான முத்தம்..!! அவனுக்கு மூச்சுத் திணறிப் போகிற மாதிரி.. அவனது உதட்டு ஈரத்தை அப்படியே உறிஞ்சி எடுத்தாள்..!! ஆரம்பத்தில் திகைத்த அசோக்.. அப்புறம் தனது உதடுகளை அவளுக்கு சுவைக்க கொடுத்துவிட்டு.. அதில் விழைந்த இனிப்பினையும், இன்பத்தினையும் மட்டும் அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தான்..!!

அரை நிமிடம் கழித்துத்தான் அவர்களது உதடுகள் தனித்தனியே பிரிந்தன..!! மீரா அசோக்கின் முகத்தையே இன்னும் காதலாக பார்த்துக்கொண்டிருக்க.. அவன் தனது உதடுகளை மடித்து நாக்கினால் சுவைத்து பார்த்து.. கண்ணிமையை சிமிட்டி குறும்பாக சொன்னான்..!!

"ச்சோ.. ச்ச்வீட்..!!"

"ச்சீய்.. போடா..!!"

தனது பழைய டயலாக்கை அசோக் நினைவுபடுத்த.. மீராவின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்து போயின..!! இருவரும் இறுக்கம் தளர்ந்து சிரித்துக் கொண்டார்கள்..!!

"ம்ம்.. இதுதான் உங்க ஊர்ல அறையுறதா..??" அசோக் கேலியாக கேட்க,

"ஹ்ம்ம்ம்ம்... ஆ..மாம்..!!" மீராவும் குறும்பாகவே சொன்னாள்.

"வாவ்..!! இந்த மாதிரி உன்கிட்ட நெறைய அறை வாங்கணும் போல இருக்கே..??"

சொல்லிக்கொண்டே அசோக் உதடுகளை குவித்து மீராவை நெருங்க, அவள் அவனது நெஞ்சில் கைவைத்து அவனுடைய முன்னேற்றத்தை தடுத்தாள்.

"நோ நோ..!! கல்யாணம் ஆகுற வரை.. ஒரு நாளைக்கு ஒரு அறைதான்.. இன்னைக்கு கோட்டா ஓவர்..!!" மீரா கறாராக சொல்ல,

"ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்..!!" அசோக் சிறுபிள்ளையாக சிணுங்கினான்.

அவன் அவ்வாறு சிணுங்கிக் கொண்டிருந்தபோதே..

"இன்று மாலை, சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, மர்ம நபர் ஒருவர்..."

அறைக்குள் இருந்த டிவியில் ந்யூஸ் வாசிக்கப்பட... இருவரும் கவனம் கலைந்து, டிவியை திரும்பி பார்த்தார்கள்..!! அசோக்தான் கேஷுவலான குரலில் ஆரம்பித்தான்..!!

"இவங்களுக்கு இதே வேலையா போச்சுல மீரா.. யாராவது ஃபோன் பண்ணி எதையாவது சொன்னா.. அதை அப்படியே நம்பிடவேண்டியது.. ஆர்ப்பாட்டம் பண்ணவேண்டியது..!! பாரு.. எல்லாரையும் என்ன பாடு படுத்திருக்காங்கன்னு..!!"

"அதுக்காக.. அந்த காலை அப்டியே கண்டுக்காம விட்ருக்கனும்னு சொல்றியா..?? ஏற்கனவே.. சென்னைல டெரரிஸ்ட் அட்டாக் பண்ண ப்ளான் பண்ணிருக்காங்கன்னு.. இண்டெலிஜண்ட் ரிப்போர்ட் வேற வந்திருக்கு..!! இப்படிப்பட்ட நேரத்துல இந்த மாதிரி ஃபோன் கால்லாம் எப்படி கேஷுவலா எடுத்துக்குறது..?? ஏர்ப்போர்ட் அத்தாரிட்டி பண்ணினது சரிதான்..!!"

இயல்பான குரலில் சொல்லிவிட்டு மீரா சாதம் எடுத்து ஸ்பூனில் நீட்ட.. அசோக் வாயை திறக்காமல் இவளையே குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்தான்.. அவனுடைய உதடுகளில் வேறு ஒரு குறும்புப் புன்னகை வழிந்தது..!! அவனது செய்கைகளின் அர்த்தம்.. ஆரம்பத்தில் மீராவுக்கு புரியவில்லை.. அசோக்கையே குழப்பமாக பார்த்தாள்..!! அப்புறம் அதன் அர்த்தம் புரிந்ததும்.. அவளுடைய முகத்தில் பட்டென ஒரு திகைப்பு.. அவளது உதடுகள் 'ஓ'வென்று குவிந்துகொண்டன..!!

"ஏய்ய்ய்.. ஏர்ப்போர்ட்ல பாம் வச்சிருக்காங்கனு கால் பண்ணது நீதானா..??"

"ஹேய்ய்ய்.. சத்தம் போடாத..!! போலீஸ்க்கு தெரிஞ்சதுன்னா.. அப்புறம் என்னை புடிச்சுட்டு போய்டுவாங்க..!!"

"அடப்பாவி..!!! ஏண்டா அப்படி பண்ணின..??" மீரா இப்போது குரலை தாழ்த்திக் கொண்டாள்.

"பின்ன என்ன பண்றது.. நீ பாட்டுக்கு பத்து நிமிஷத்துல ஃப்ளைட்டுன்னு போனை கட் பண்ணிட்ட..!!"

"ப்ச்.. நான் ஃபோனலாம் கட் பண்ணல.. எருமை மாடு மாதிரி ஒருத்தன், என்மேல வந்து இடிச்சுட்டான்.. செல்ஃபோன் செகண்ட் ஃப்ளோர்ல இருந்து கீழ விழுந்துடுச்சு..!!"

"ஓ..!! எனக்கு எப்படி அதுலாம் தெரியும்.. எப்போவும் போல இப்போவும் நீ எஸ்கேப் ஆக நெனைக்கிறேன்னு நான் நெனச்சுட்டேன்..!! கொஞ்சநேரம் என்ன பண்றதுனே எதுவும் புரியல.. அப்புறந்தான் அந்த அட்வர்டைஸ்மன்ட் கண்ணுல பட்டுச்சு..!!"

"என்ன அட்வர்டைஸ்மன்ட்..??"

"அவசர தேவைக்கு அணுகவும்னு ஏர்ப்போர்ட் அத்தாரிட்டியோட அட்வர்டைஸ்மன்ட்..!! உடனே அணுகிட்டேன்..!!" அசோக் அப்பாவியாக சொல்ல, மீராவுக்கு சிரிப்பு வந்தது.

"ஹஹாஹா..!!! லூசு..!!!!"

"ஆமாம்.. உன் மேல..!!"

அசோக் அவ்வாறு பட்டென சொல்லவும்.. சிரித்துக்கொண்டிருந்த மீரா அமைதியானாள்..!! அவனுடைய முகத்தையே ஆசையாகவும், காதலாகவும் பார்த்தாள்.. அசோக்கும் மீராவை அதே மாதிரி ஒரு பார்வை பார்த்தான்..!! ஒருசில வினாடிகள்.. அப்புறம் அசோக் திடீரென கேட்டான்..!!

"நித்தியா உன் பேரு..??"

"ம்ம்..!! அம்மாவுக்கு சின்னு.. மத்தவங்களுக்கு நித்தி.. முழுப்பேர் ஸ்ரீநித்தி..!!"

"ஸ்ரீநித்தியா..?? ரொம்ப வித்தியாசமான பேரா இருக்கு..!!"

"ஹாஹா.. யெஸ்..!!"

மெலிதாக சிரித்த மீரா, பிறகு அசோக்கின் கண்களை ஒருமாதிரி குறுகுறுவென பார்த்தவாறே,

"எனக்கு இன்னொரு பேரு கூட இருக்கு..!!" என்றாள் பாட்ஷா ரஜினி ஸ்டைலில்.

"இன்னொரு பேரா.. என்னா அது..??"

"உனக்கு ரொம்ப பழக்கப்பட்ட பேர்தான்..!!"

"என்னன்னு சொல்லு..!!"

"ஸ்ரீனி..!!"

"ஸ்ரீனியா..??" அசோக் இப்போது குழப்பமாக நெற்றியை சுருக்கினான்.

"யெஸ்.. ஸ்ரீனி..!! ஸ்ட்ரைக் ஆகுதா..??"

மீரா கேட்டுவிட்டு கண்சிமிட்ட.. அசோக் இப்போது சற்றே நிதானித்தான்..!! புத்தியை கூர்மையாக்கி தீவிரமாக யோசித்தான்.. ஒரு சில வினாடிகளிலேயே அவனுடைய மூளையில் பளிச்சென்று ஒரு மின்னல்..!!

"ஹேய்.. என் டாடியை திட்டி லெட்டர் அனுப்புற அந்த.. அந்த லவ் பெயிலியர் ஃபேன்.. அது.. அந்த ஸ்ரீனியா..??"

"ஹாஹா.. எக்ஸாக்ட்லி..!!" மீரா கலகலவென சிரிக்க, அசோக் அதிசயித்துப் போனான்.

"அடிப்பாவி..!! அப்படினா.. அந்த லெட்டர்ல.."

"யெஸ்.. என் வீட்டு அட்ரஸ் இருக்கும்..!!"

அசோக் தலையை பிடித்துக்கொண்டான்..!! 'இவளுடைய முகவரி இத்தனை நாளாய் என் வீட்டு அலமாரியிலேயே இருந்திருக்கிறது.. அது புரியாமல் நான் உலகம் முழுக்க இவளை சல்லடை போட்டு தேடிக்கொண்டிருந்திருக்கிறேன்..!! இப்படியும் நடக்குமா..??' அசோக்கிடம் இப்போது ஒருவகை சலிப்பும், மீரா மீதான செல்லக்கோவமும்..!! அந்த செல்லக்கோவத்துடனே அவளை திட்டினான்..!!

"ராட்சசி.. ராட்சசிடி நீ..!!!"

"ஹாஹாஹாஹா..!!!" மீரா அழகாக சிரித்தாள்.

அத்தியாயம் 31

சென்ற அத்தியாத்திலேயே கதை முடிந்துவிட்டது..!! அறுசுவை விருந்தை பருகி முடித்த பின்பும்.. இறுதியில் கொஞ்சம் இனிப்பு சுவைக்க விரும்புவர்களுக்காக மட்டுமே இந்த அத்தியாயம்..!!

அடுத்தநாளே அசோக் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டான்..!! 'பின்னந்தலையில் அடிபட்டு அதிகப்படியான ரத்தம் வெளியானதால், ஒரு நீண்ட மயக்கம்..!! காயத்திற்கு கட்டு போட்டாயிற்று.. சிராய்ப்புகளுக்கு மருந்து பூசியாயிற்று..!! ஊடு கதிர்ப்படம் ஆராய்ந்து.. உட்காயம் ஏதுமில்லையென உறுதியும் செய்தாயிற்று..!! இனி அச்சப்படுவதற்கு அவசியம் ஒன்றும் இல்லை.. இரண்டு நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார்..!!' என்று சிகிச்சையளித்த மருத்துவர் தெளிவாகவே சொல்லிவிட்டார்..!!

சவூதியில் வேலைக்கான தனது ஒப்பந்தத்தை.. முறித்துக்கொள்வதாக மீரா முடிவெடுத்தாள்..!! அவளுக்கு வேலையும் விசாவும் ஏற்பாடு செய்திருந்த கன்ஸல்டன்ஸிக்கு.. நஷ்ட ஈடாக ஒரு கணிசமான தொகையை அழவேண்டி இருந்தது..!! கன்ஸல்டன்ஸியின் வாயை அடைக்கிற பணியை.. மீராவுக்கு அதிக சிரமம் தராமல், மணிபாரதியே கவனித்துக் கொண்டார்..!!

சவூதியில் உபயோகமாகும் என்று கருதி, மீரா வாங்கிய அந்த புத்தகம்.. திறக்கப்படாமல் மூடியே இருந்தது..!! செக்கின் செய்யப்பட்ட அவளுடைய ட்ராவல் பேக் மட்டும்.. ரியாத் வரை பயணித்து.. விமான நிலையத்தின் பொருள் பாதுகாப்பு அறையை நன்றாக சுற்றிப்பார்த்துவிட்டு.. ஒருவாரம் ஆனதும் வேறொரு ஃப்ளைட் பிடித்து சென்னை திரும்பியது..!!

மீராவின் வீடு அபகரிக்கப்பட்டதால்.. அசோக்கின் வீட்டிலேயே அவள் தங்கிக்கொள்ளுமாறு ஆகிப்போனது..!! சங்கீதாவின் அறையிலேயே அவளுக்கென்று ஒரு எக்ஸ்ட்ரா படுக்கை..!! மீரா அசோக்கிடம் சொன்ன நான்கு பெயர்களுடன்.. மீரா என்பதுமே அவளுக்கு ஐந்தாவது பெயராக மாறிப் போனது..!! அசோக்கின் குடும்பத்தினர்.. நித்தி என்று அழைப்பதைவிட.. மீரா என்றே பெரும்பாலும் அழைத்தனர்..!!

-----------------------------XXXXXXXXXXXXX-----------------------------

அசோக்கின் வீட்டில்.. மீராவை எல்லோரும் உள்ளங்கையில் வைத்து தாங்கினார்கள் என்றுதான் சொல்லவேண்டும்..!! அசோக்கிற்கு தான் பொருத்தமானவள் இல்லை என்று அவளுக்கு ஒரு நினைப்பிருந்தது அல்லவா..?? அந்த நினைப்பினை அவள் அறியாமலே தவிடுபொடியாக்க வேண்டும் என்பதுதான் அவர்களது திட்டமாக இருந்தது..!! சிற்சிறு உரையாடல்கள்.. சிற்சிறு நடவடிக்கைகள்.. சிற்சிறு அணுகுமுறைகள் என.. எல்லாவற்றின் மூலமாகவும்.. 'அசோக்கிற்கு மிகப் பொருத்தமானவள் அவள்தான்..' என்பதை அவளுக்கு உணர்த்திக்கொண்டே இருந்தனர்..!!

"உன்னை மாதிரி அகம் புடிச்ச கழுதைக்குலாம் மீரா மாதிரி ஆளுதான் சரி.. அவதான் பதிலுக்கு பதில் திருப்பி குடுப்பா..!!" - பாரதி மகனை செல்லமாக கடிந்துகொள்வாள்.

"இது உனக்கு சொந்தமானது மீராக்கண்ணு.. உன் கைல இருக்கனும்ன்றதுதான் விதி.. இனி எப்போவும் இதை கழட்டக் கூடாது.. சரியா..??" - அசோக்கின் பாட்டி அந்த பரம்பரை மோதிரத்தை, மீராவின் விரலிலேயே மீண்டும் மாட்டிவிட்டாள்.

"இது நான் எழுதுன லேட்டஸ்ட் நாவல்மா.. படிச்சு பாரு..!! ஹ்ம்ம்ம்ம்.. பிடிக்கலன்னா பிடிக்கலன்னு டீசண்டா சொல்லி பழகனும்.. கன்னாபின்னான்னு திட்டலாம் கூடாது.. மாமா பாவம்ல..!! ஹாஹா..!!" - சிரிப்புடனே மருமகளின் கையில் புத்தகத்தை திணித்து செல்வார் மணிபாரதி.

"எல்லாம்.. மீரா இந்த வீட்டுல அடி எடுத்து வச்ச நேரந்தான்..!!" - காதல் நாய்களுக்கு வாரிசு பிறந்தது முதல்.. காவிரி அணையில் தண்ணீர் திறந்தது வரை.. நடக்கிற நல்ல காரியங்கள் எல்லாவற்றையும்.. மீராவின் வருகையுடன் முடிச்சு போட்டார் அசோக்கின் தாத்தா..!!

அவர்களுடைய மாசற்ற அன்பு மீராவின் மனதை வெகுவாக மாற்றியது..!! தான் வாழவேண்டிய இடம் இதுதான் என்பதை.. அவளுடைய உள்ளமே மெல்ல மெல்ல நம்ப ஆரம்பித்தது.. இந்த இன்பம் என்றும் வேண்டும் என்று ஏங்க ஆரம்பித்தது..!! அசோக்கை விட்டு பிரிந்து செல்ல நினைத்தது, எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று.. அவளே விரைவில் புரிந்துகொண்டாள்..!!

-----------------------------XXXXXXXXXXXXX-----------------------------

கிஷோரின் பெற்றோர் அசோக்கின் வீட்டுக்கு வருகை தந்திருந்தனர்..!! 'இந்த வீட்டுக்கு மருமகன்னா.. எங்களுக்கு நீ மக மாதிரிதான்..' மீராவின் கன்னத்தை பற்றி அன்பை பொழிந்தாள் கிஷோரின் அம்மா..!! வந்தவர்கள் உண்டுமுடித்து கல்யாணப் பேச்சை எடுத்தபோது..

"எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்.. நான் டைரக்டரா ஆனப்புறந்தான் எல்லாம்..!!" அசோக் திடீரென குண்டை தூக்கிப் போட்டான்.

"ஆமாம்..!! நானும் ஒரு படம் தனியா சினிமாட்டோக்ராஃபி பண்ணப்புறந்தான் கல்யாணம் பண்ணிப்பேன்..!!" - அசோக்குடன் இணைந்துகொண்டான் அருமைத்தோழன் கிஷோர்.

இருவரையும் சமாதானம் செய்ய முயன்று.. இரண்டு குடும்பத்தினரும் தோற்றுப் போயினர்..!! வேறு வழியில்லாமல்.. 'எப்படியும் போங்க' என்று.. அவர்களுடைய எண்ணம்போலவே விட்டுவிட்டனர்..!!

பிறகு.. வேறொரு சந்தர்ப்பத்தில்.. தனிமையில் இருக்கையில்.. அசோக்கின் இடுப்பை இறுக்கிக்கொண்டு மீரா பெருமிதமாக சொன்னாள்..!!

"ஆமால்ல.. டைரக்டர் ஆகணும்ன்றது உன் கனவுல.. உன் லட்சியம்ல..?? நீ சொன்னது சரிதான் அசோக்.. உன் லட்சியத்துக்கு என்னால எந்த டிஸ்டர்பன்ஸும் இருக்கக்கூடாது..!! நீ டைரக்டர் ஆகுற வரை நான் வெயிட் பண்றேன்டா..!!"

"ஐயையே..!! லட்சியம், கனவு.. அதுலாம் ஒரு எழவும் இல்ல..!!" அசோக்கோ முகத்தை சுளித்தான்.

"எ..என்ன சொல்ற நீ..?? அ..அப்புறம்.. அப்புறம் எதுக்கு அத்தை, மாமாட்ட அப்படி சொன்ன..??"

"உடனே கல்யாணம் வேணாம்னு தோணுச்சு.. அதான்..!!"

"அதான் ஏன்னு கேக்குறேன்..??"


"எப்படி சொல்றது.. ம்ம்ம்ம்ம்... நாம இதுவரை சரியாவே லவ் பண்ணல மீரா.. நாம பழகுன காலத்துலலாம், எப்பப்பாரு உன்கிட்ட அடியும் திட்டும்தான் வாங்கிட்டு இருந்திருக்கேன்.. ரொமான்ஸ்ன்றது சுத்தமா இல்ல..!! இப்போத்தான் நீ அந்த ரொமான்ஸ் மூட்க்கே வந்திருக்குற.. இப்போப்போய் உடனே கல்யாணம்னா..?? அதான்.. கொஞ்சநாள் இப்படியே ஜாலியா ரொமான்ஸ் பண்ணிட்டு.. அப்புறமா மேரேஜ் பண்ணிக்கலாம்.. என்ன சொல்ற..??"

அசோக் இளிப்புடன் கேட்க.. மீரா அவனை உர்ரென்று முறைத்தாள்..!! சற்றுமுன் ஆசையாக தனது தோள் மீது எடுத்துப் போட்டிருந்த அவனது கையை.. இப்போது வெடுக்கென்று விசிறியடித்தாள்..!!

"சங்கீதா சொல்றது கரெக்ட்தான்டா.. சரியான கேடிப்பயடா நீ..!!"

"ச்சேச்சே.. அப்டிலாம் இல்ல மீரா..!!"

"ஹ்ம்ம்.. அந்தவகைல கிஷோர் அண்ணாவாவது லட்சியம், கனவுன்னு ஒரு குறிக்கோளோட இருக்குறார்..!!"

"ஹாஹா.. யார் சொன்னா..?? அவனுக்கும் அதுலாம் ஒன்னும் கெடையாது..!!"

"ஓ..!! அப்புறம் எதுக்கு அவரும் மேரேஜை தள்ளிப்போட்டாரு..??"

"பின்ன..?? மேரேஜ் ஆறதுக்கு முன்னாடியே.. இவ அவனைப்போட்டு இந்த காய்ச்சு காய்ச்சுறா.. மேரேஜ் மட்டும் ஆகிட்டா கேக்கவே வேணாம்..!! எவ்வளவுநாள் தள்ளிப் போகுதோ அவ்வளவுநாள் அவன் தலை தப்பிச்சது..!! அதான் பையனும் எனக்கு ஜால்ரா போட்டான்..!!"

"அடப்பாவிங்களா..!!!!!" மீரா வாயை பிளந்தாள்.

-----------------------------XXXXXXXXXXXXX-----------------------------

சங்கீதாவின் அறை மீராவின் அறையுமாகவும் ஆகிப்போனது என்று சொன்னேன் அல்லவா..?? சில சமயங்களில்.. அசோக் வந்து தங்கையின் அறைக்கதவை தட்டுவான்..!! கதவு திறக்கிற சங்கீதா கடுப்புடன் அண்ணனை முறைப்பாள்..!!

"என்ன வேணும்..??"

"மீரா இருக்குறாளா சங்கு..??" அசோக் குழைவான்.

"அண்ணி தூங்குறாங்க..!!"

"கொஞ்சம் எழுப்பேன்..!!"

"எதுக்குன்னு சொல்லு..!!"

"பேசணும்..!!"

"நைட் பதினோரு மணிக்கு என்ன பேச்சு வேண்டி கெடக்கு..?? காலைல பேசிக்கலாம்.. ரூமுக்கு போ..!!"

"கொஞ்ச நேரம் சங்கு..!!"

"ப்ச்.. சொல்றேன்ல..?? நைட் பத்து மணிக்கு மேல உன்னை அண்ணி பக்கத்துல விடக்கூடாதுன்னு மம்மியோட ஆர்டர்..!! போ போ.. எல்லாம் காலைல பேசிக்கலாம்..!!"

"ப்ளீஸ்டி..!!"

"இப்போ போறியா இல்லையா..??"

"ஹேய்.. கொஞ்ச நேரம்..!!"

"மம்மீஈஈஈ...!! இங்க வந்து பாரு உன் புள்ளைய..!!"

சங்கீதா அந்தமாதிரி சப்தம் எழுப்பியதும்.. அசோக் அலறியடித்துக்கொண்டு படிக்கட்டை நோக்கி ஓடுவான்..!! கதவை மூடிவிட்டு சங்கீதா படுக்கையில் சரிகையில்.. பக்கத்தில் படுத்திருக்கும் மீரா அவளுடைய புஜத்தை சொறிவாள்..!!

"சொல்லுங்க அண்ணி..!!"

"உங்க அண்ணனை பாத்தா பாவமா இருக்கு சங்கி..!!"

"அதுக்கு..??"

"நான்வேணா கொஞ்சநேரம் போய் பேசிட்டு வரனே..??"

மீரா ஏக்கமாக கேட்க, சங்கீதா அவளையும் ஒரிரு வினாடிகள் முறைப்பாள்.. பிறகு காட்டு கத்தலாக கத்துவாள்..!!

"மம்மீஈஈஈ...!! இங்க வந்து பாரு உன் மருமகள.!!"

அவ்வளவுதான்.. மீரா போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு சுருங்கிப் போவாள்..!!

-----------------------------XXXXXXXXXXXXX-----------------------------

அசோக்கும் மீராவும் ஒன்றிணைந்து ஒருவாரம் கழித்து..

அப்போதுதான் ரெட்ஹில்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீடு திரும்பியிருந்த அசோக்.. வந்ததுமே அலமாரியை துழாவி அன்றைய நாளிதழை வெளியே எடுத்தான்..!! காலையிலேயே வாசிக்காமல் விட்டதற்காக தன்னைத்தானே கடிந்துகொண்டு.. கவனமுடன் இப்போது அந்தச்செய்தியை வரிவரியாக வாசித்தான்..!!

"அப்படி என்ன இன்ட்ரஸ்டிங் ந்யூஸ்..??"

பின்பக்கம் இருந்து மீராவின் குரல் கேட்டதும்.. அசோக் பதறிப் போனான்..!! அவசரமாக அந்த நாளிதழை தனது முதுகுப்புறமாக மறைத்தவன்.. மீராவை ஏறிட்டு திணறலும், குழறலுமாய் சொன்னான்..!!

"ஒ..ஒன்னும்.. ஒன்னும் இல்ல மீரா..!!"

அவனுடைய திருட்டு முழியே, ஏதோ விஷயம் இருக்கிறது என்று மீராவுக்கு காட்டி கொடுத்துவிட்டது. குழப்பமாக புருவத்தை நெறித்தாள்.

"எ..என்னாச்சு.. ஏன் ந்யூஸ் பேப்பரை மறைக்கிற..??"

"நா..நான் எங்க மறைச்சேன்.. நா..நான் சும்மா.."

"இல்ல.. பொய் சொல்ற.. எதையோ மறைக்கிற.. ந்யூஸ் பேப்பரை குடு..!!"

"ப்ச்.. அதான் ஒன்னும் இல்லன்னு சொல்றேன்ல..!!"

"ம்ஹூம்.. ஏதோ இருக்கு.. குடு அதை..!!"

"இல்ல மீரா..!!"

"ப்ச்.. குடுன்றேன்ல.. குடு..!!"

அசோக்கின் கையிலிருந்து அந்த நாளிதழை மீரா வலுக்கட்டாயமாக பிடுங்கினாள். முதல் பக்கத்திலேயே வெளியாகிருந்த அந்த செய்தியின் மீது பார்வையை வீசினாள்.

"ரெட்ஹில்ஸ் ரெட்டைக் கொலை வழக்கில் துப்பு துலங்கியது..!! கொடைக்கானலில் பதுங்கியிருந்த கொலையாளிகள் போலீசாரால் கைது..!!"

செய்தித் தலைப்புக்கு அருகிலேயே.. கைது செய்யப்பட்ட அந்த ஐந்து பேர்களின் பாஸ்ப்போர்ட் அளவு புகைப்படங்களும் அச்சிடப் பட்டிருந்தன..!! மீரா முணுமுணுப்பான குரலில் விரிவான செய்தியை மேலும் வாசித்தாள்..!!

"சென்னை நெற்குன்றத்தை சேர்ந்தவர் காசி (வயது 31). தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை கல்லூரி மாணவர்களுக்கும், பணக்கார இளைஞர்களுக்கும் சட்ட விரோதமாக விநியோகிப்பதை தொழிலாக கொண்டவர். பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர். கடந்த மாதம் 28-ந்தேதி, காசியும் அவரது நண்பர் விஜயசாரதி (வயது 27) என்பவரும், ரெட்ஹில்ஸில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். இது தொடர்பாக ரெட்ஹில்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். தீவிரமாக நடத்தப்பட்ட புலன்விசாரணையில் இரண்டு வாரங்களுக்கு பிறகு துப்பு துலங்கியிருக்கிறது. கொடைக்கானலில் பதுங்கியிருந்த கொலையாளிகளும் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.”

"கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய குற்றவாளியான அல்ஃபோன்ஸ்தான், வழக்கமாக காசிக்கு போதை மருந்து சப்ளை செய்பவர். இருவருக்கும் சில மாதங்களாகவே கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்திருக்கிறது. காசி தனக்கு நாற்பது லட்ச ரூபாய் பணம் தர வேண்டி இருந்ததாகவும், அதைத்தராமல் அவர் நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்ததாகவும், அந்த ஆத்திரத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து காசியை கொலை செய்ததாகவும் அல்ஃபோன்ஸ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இந்தப் பிரச்சினையில் சற்றும் சம்பந்தம் இல்லாத விஜயசாரதியும், காசியை கொலை செய்ய வந்தவர்களிடம் சிக்கி தானும் கொலையானதுதான் மிகவும் பரிதாபகரமான.." வாசித்தது போதுமென்று இடையில் நிறுத்திய மீரா,

"ஹ்ம்ம்.. இப்போவாவது ஒருவழியா கண்டுபிடிச்சாங்களே.. இந்தப் பிரச்சினையில தேவை இல்லாம நான் மாட்டிப்பனோன்னு ரொம்பவே பயந்துட்டேன் அசோக்..!! என் பக்கம் மட்டும் சந்தேகம் திரும்பி இருந்துச்சுன்னு வச்சுக்கோ.. அவ்வளவுதான் நான்.. காலி..!!" என்று நிம்மதியான குரலில் சொன்னாள்.

"ஏன் அப்டி சொல்ற..??"

"பின்ன என்ன..?? நான் கொலை பண்ணலைன்னு உன்னை நம்பவைக்கவே அவ்வளவு கஷ்டப்பட்டேன்.. போலீஸ்ட்ட என்னத்த சொல்லி நம்ப வைக்கிறது..??"

"என்ன பண்ண சொல்ற.. அந்த எடத்துல உன் பென்டன்ட் பாத்ததும் எனக்கு அப்படித்தான் தோணுச்சு..!!"

"எப்படி.. நான்தான் ரெண்டு பேரையும் கொலை பண்ணிருப்பேன்னா..??"

"ஆமாம்..!!"

"ஹ்ம்ம்.. ஆக்சுவலா அதுதான் நடந்திருக்கும்.. அந்தப்பொறுக்கியை போட்டுத்தள்ற ப்ளான்லதான் அங்க போனேன்.. அவ்ளோ ஆத்திரம் எனக்கு..!! ஆனா.. ஒரு அஞ்சு நிமிஷ கேப்புல.. எனக்கு முன்னாடி இவனுக முந்திக்கிட்டானுக..!! வீட்டுக்குள்ள நுழையுறேன்.. அந்தப்பொறுக்கி அப்படியே ரத்த வெள்ளத்துல கெடக்குறான்.. கூடவே இந்த காசி வேற.. செம ஷாக் எனக்கு..!!”

"ம்ம்..!!"

“சரி வந்ததுதான் வந்தோம்.. செல்ஃபோனை மட்டும் எடுத்துட்டு எஸ்கேப் ஆகலாம்னு வெளிய வந்தா.. உன் கன்ஃப்யூசன் வேற..!!"

"என் கன்ஃப்யூசனா..??"

"ஆமாம்.. அந்த எஸ்.பியும் நீயும் ஜோடி போட்டு நடந்து வர்றீங்க..!! எனக்கு கொஞ்ச நேரம் என்ன பண்றதுன்னே புரியல..!! அப்புறம் பட்டுன்னு சுதாரிச்சு.. பின்பக்கமா ஓடி எஸ்கேப் ஆனேன்..!! செமையா கொழப்பி விட்டுட்ட என்னை..!!"

"ம்க்கும்..!! நீ என்னை கொழப்பி விட்டதை விடவா..??"

"ஹாஹா..!! ஆனா ஒன்னு.. நீ பண்ணுன கொழப்பத்துல ஒரே ஒரு நல்ல காரியம் நடந்திருக்கு..!!"

"என்ன..??"

"ஹ்ம்ம்.. தங்கம் விக்கிற வெலைல.. ஆறு கிராம் இப்படி அநியாயமா தொலைஞ்சு போச்சேன்னு ரொம்ப கவலைல இருந்தேன்.. உன் மூலமா அது என்கிட்டயே திரும்ப வந்து சேர்ந்துடுச்சு..!!"

புன்னகையுடன் சொன்ன மீரா.. தனது வலது கையை உயர்த்தி அசைத்துக்காட்ட.. அந்தக்கையை தழுவியிருந்த புதியதொரு ப்ரேஸ்லட்டில்.. அந்த இதயவடிவ பென்டன்ட் ஊசலாடியது..!! அவள் சொன்னதைக்கேட்டு அசோக் சிரிக்க.. அவனுடன் சேர்ந்து மீராவும் சிரித்தாள்..!! ஒருசில வினாடிகள் மத்தாப்பு சிதறலாய் சிரித்தவள்.. திடீரென ஞாபகம் வந்து கேட்டாள்..!!

"அதுசரி.. இதுக்கெதுக்கு நீ ந்யூஸ் பேப்பரை மறைச்ச..??"

"ஒ..ஒன்னும் இல்ல..!!" அசோக்கிடம் மீண்டும் அதே திருட்டுமுழி.

"ஹேய்.. சொல்லுடா..!!"

"ஒன்னும் இல்லன்னு சொல்றேன்ல..!!"

"இல்ல.. ஏதோ இருக்கு.. சொல்லு..!!"

"ம்ம்ம்ம்ம்.. சொல்றேன்.. ஆனா.. நீ என்னை கிண்டல் பண்ணக்கூடாது..!!"

"என்ன.. ஓவரா பில்டப்லாம் குடுக்குற..!!"

"பண்ணமாட்டேன்னு சொல்லு..!!"

"சரி..!! பண்ணமாட்டேன்..!!"

"ப்ராமிஸ்..??"

"ப்ராமிஸ்டா..!! சொல்லு..!!"

அசோக் இப்போது சற்றே தயக்கத்துடன்.. அந்த நாளிதழை விரித்து மீராவிடம் காட்டினான்..!! அதில் அச்சிடப்பட்டிருந்த அந்த கொலையாளிகளின் புகைப்படங்களை சுட்டிக்காட்டி அவளிடம் கேட்டான்..!!

"இந்த மூஞ்சிகளை எல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கா..??"

அவன் அவ்வாறு கேட்டதும், மீராவின் முகத்தில் ஒரு குழப்பம்.

"இ..இல்லையே.. யார் இவங்க..??"

"ஹ்ம்ம்.. நீ வேணா மறந்திருக்கலாம்.. என்னால ஜென்மத்துக்கும் இந்த அழகு மூஞ்சிகளை மறக்கவே முடியாது..!!"

"நான் வேணா மறந்திருக்கலாமா..?? நா..நான் பாத்திருக்கேனா இவங்கள..??"

"ம்ம்.. ஆமாம்..!! ஒருதடவை KFCல வச்சு.. இவங்கள பாத்து.. 'நீங்க தேடிட்டு இருக்குற ஆள் இவன்தான்.. இவன்தான்'ன்னு கத்துனியே..!! ஞாபகம் இருக்கா..??" அசோக் அவ்வாறு சொன்னதும், இப்போது மீராவுக்கு பட்டென அந்த நிகழ்வு ஞாபகத்திற்கு வந்தது.

"ஹேய்ய்ய்.. அ..அது.. அவங்க.. நான் உன்கிட்ட குடுத்த தப்பான மொபைல் நம்பருக்கு கால் பண்ணி.. அதுல பிரச்சினையாகி.. உன்னை போட்டு தள்றதுக்காக ஒரு க்ரூப்.. டாடா சுமோல அலையுதுன்னு சொல்வியே.. அவங்கதான..??"

"ம்ம்ம்..!! ஆனா.. அவங்க என்னை போட்டு தள்றதுக்காக அலையலை..!!"

"அப்புறம்..??"

"இந்த காசியை போட்டு தள்றதுக்காகத்தான் அப்போ இருந்தே அலைஞ்சிருக்காங்க.. எனக்கே இன்னைக்குத்தான் தெரியும்..!!"

"எ..என்ன சொல்ற நீ..?? எனக்கு புரியல..!! உன்னை ஃபோன்ல மிரட்டுனாங்கன்னு.."

"ஆமாம் மீரா..!! ஃபோன்ல என்னை மிரட்டினது உண்மைதான்..!! ஆனா.. ஃபோன்ல மிரட்டினது வேற க்ரூப்பு.. டாடா சுமோல விரட்டினது வேற க்ரூப்பு..!! ஃபோன்ல பேசி முடிச்சதும், பக்கத்துல அந்த டாடா சுமோ வந்து நிக்கவும்.. ரெண்டும் ஒரே க்ரூப்புதான்னு நெனச்சு நான்தான் கொஞ்சம் கன்ஃப்யூஸ் ஆகிட்டேன்..!! ரொம்ப நாளா அவனுகள பாக்குறப்போலாம் பம்மிட்டு இருந்தேன்..!!"

அசோக் பரிதாபமாக சொல்லிக்கொண்டிருக்க, மீராவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வயிறை பிடித்துக்கொண்டு, வாயை பொத்திக்கொண்டு குலுங்கி குலுங்கி சிரித்தாள்.


"ஹாஹாஹாஹாஹாஹா..!!"

மீராவின் சிரிப்பு அசோக்கின் முகத்தை பட்டென சுருங்கிப் போக வைத்தது.

"ஹேய்... சி..சிரிக்காத மீரா.. ப்ளீஸ்..!!"

"ஹாஹா..!!! ஹையோ.. என் அறிவுக்கொழுந்தே.. முடியலடா..!! எவனோ எவனையோ கொலை பண்ண வெரட்டிருக்கான்.. நீ என்னடான்னா அவனுகளுக்கு பயந்துக்கிட்டு.. உன்னோட சிம் கார்ட்லாம் மாத்தி.. சிவன் கோயில்ல அங்க பிரதட்சணம்லாம் பண்ணி.. எந்த நேரமும் ஒரு மரண பீதியோடவே திரிஞ்சிருக்குற..!! எடுத்த கவாஸாகி ஆட்ல அந்த எஃபக்ட்லாம் வேற..!! ஹ்ம்ம்... வடிவேலை தூக்கி சாப்பிட்டுட்ட நீ..!! செம்ம காமடி போ..!! ஹாஹாஹாஹாஹா..!!" மீரா இடைவிடாமல் தொடர்ந்து சிரிக்க, எரிச்சலான அசோக்

"ப்ச்..!! பாத்தியா.. இதுக்குத்தான் உன்கிட்ட சொல்ல மாட்டேன்னு சொன்னேன்..!! போடீ..!!" கடுப்புடன் சொன்னவாறு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

"டேய் டேய்.. ஸாரிடா.. ஸாரிஈஈ..!! என் செல்லம்ல.. என் அம்முல..??" கொஞ்சிக்கொண்டே அவனை சமாதானம் செய்ய பின்னால் ஓடினாள் மீரா.

-----------------------------XXXXXXXXXXXXX-----------------------------

மீராவிடம் அன்று பல்பு வாங்கியிருந்தாலும்.. மலரவனிடம் அசோக் பாராட்டு வாங்கியிருந்தான்..!! ரெட்ஹில்ஸ் கொலை வழக்கில் அவனுடைய ஒத்துழைப்பை குறிப்பிட்டு.. காவல்த்துறை அவனுக்கு கடமைப்பட்டிருப்பதாக நன்றியுரைத்தார்..!!

அதன்பிறகும் இரண்டு மூன்று முறை.. அசோக் ஸ்ரீனிவாச பிரசாத்துடன் சென்று மலரவனை சந்திக்க நேர்ந்தது..!! விரைவிலேயே.. ஸ்ரீனிவாச பிரசாத்தை போலவே.. மலரவனும் அசோக்குக்கு நட்பாகிப் போனார்..!! மூவருக்குள்ளும் எந்த மாதிரி நட்பென்று சொல்லவேண்டுமானால்..

மாதவரத்தில் உள்ள ஒரு போலீஸ் குவார்டர்ஸில்.. மலரவனுக்கென்று அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட அப்பார்ட்மன்டில்.. மதுரையில் அழகர் ஆற்றில் இறங்குவதைக்காண மனைவியை அவர் அனுப்பி வைத்திருந்த சமயத்தில்.. இவர்கள் மூவரும் ஒன்றாக அமர்ந்து விஸ்கி சுவைக்கிற அளவுக்கு..!! சரக்கடித்து மட்டையாக நினைத்தவர்கள்.. தொட்டுக்கொள்ள ஊறுகாய் வேண்டுமென்று.. மணலி வரை சென்று மனோகரை பிக்கப் செய்துகொள்ளும் அளவிற்கு..!!

டீப்பாயில் இருந்த டீச்சர்ஸ் பாட்டில் பாதிக்கும் மேல் காலியாகி இருந்தது.. அருகிலேயே மூன்று கண்ணாடி டம்ளர்களும், மூடி திறக்கப்பட்ட ஐஸ் பெட்டியும்..!! டீப்பாயை சுற்றிக்கிடந்த மூன்று சோபாக்களில் டீச்சர்சை உள்ளே தள்ளிவிட்டு.. உச்சிவரை ஏறிய போதையுடன்.. உல்லாச நிலையில் அசோக்கும், ஸ்ரீனிவாச பிரசாத்தும், மலரவனும்..!! மனோகர் மட்டும் தரையில் ஜட்டியுடன் அமர்ந்திருந்தான்.. அவனுடைய முகம் அடியும், குத்தும், மிதியும் வாங்கி.. சிற்றெரும்பு புற்றுக்குள் தலையைவிட்ட குரங்கின் முகத்தைப்போல.. கோணல்மாணலாக வீங்கி சிவந்து கிடந்தது..!!

"இனி தண்ணி அடிக்கிறப்போலாம் இவனை இழுத்துட்டு வந்துரலாம் ஸார்.. செம்ம மஸாவா இருக்கு..!!"

மலவரன் குழறலாக சொன்னார். மனோகர் அவரை பரிதாபமாக பார்த்தான்.

"டேய்.. இது ரெண்டுல ஒன்னை தொடு..!!"

ஸ்ரீனிவாச பிரசாத்தும் வாய்க்குழறலோடு தனது வலதுகை விரல்களை மனோகரிடம் நீட்டினார். அவனும் தயங்கி தயங்கி ஒரு விரலை தொட்டுக்காட்ட, ஸ்ரீனிவாச பிரசாத் இப்போது மலரவனிடம் திரும்பி சொன்னார்.

"ம்ம்.. அவனே சொல்லிட்டான் ஸார்.. இவனை ப்ராத்தல் கேஸ்ல புக் பண்ணிற வேண்டியதுதான்..!! பொண்ணுகளை வச்சு பிசினஸ் பண்ணினான்.. ப்ரோக்கர் வேலை பாத்தான்னு சொல்லி ஒரு செட்டப் பண்ணி.. உள்ள தூக்கி போட்ருவோம்..!! 'மாமாப்பய.. மாமாப்பய..'ன்னு எல்லாரும் இவனை கூப்பிடனும்.. இவன் நாக்கை புடுங்கிட்டு சாவனும்..!!"

"ஐயையே.. அதுலாம் வேலைக்காவாது ஸார்.. அந்த மாதிரி செட்டப் பண்றதுலாம் ரொம்ப கஷ்டம்..!! பேசாம.. அந்தக்காசிப்பய மாதிரி இவனும் கஞ்சாப்பொட்டலம் வித்தான்னு சொல்லி செட்டப் பண்ணிரலாம்.. அதுதான் ரொம்ப ஈஸி..!! நார்கோடிக்ஸ் டிப்பார்ட்மண்ட்லதான் உங்களுக்கு தெரிஞ்ச ஆளுங்க நெறைய இருக்காங்களே.. வேலை ரொம்ப ஈசியா முடிஞ்சிடும்..!! எனக்கு புழல் ஜெயில்ல நெறைய ஆளுங்க இருக்காங்க.. நம்ம பையன் உள்ள இருக்குற ஒவ்வொரு நாளையும் மறக்க முடியாத மாதிரி பண்ணிருவோம்.. வெளில வர்றப்போ எல்லாம் சூம்பி சுருங்கிப் போய்தான் வருவான்..!! என்ன சொல்றீங்க..??"

"இல்ல ஸார்.. ப்ராத்தல் கேஸ்தான் ரொம்ப கேவலமான கேஸ்.. அதுலதான் இவனை உள்ள போடுறோம்.. நான் டிஸைட் பண்ணிட்டேன்..!!"

"இல்ல ஸார்.. கஞ்சா கேஸ்தான்..!!"

எந்த கேஸில் தன்னை உள்ளே தூக்கிப் போடுவது என்று.. இரண்டு இன்ஸ்பெக்டர்களும் சண்டையிட்டுக் கொண்டிருக்க.. மனோகரோ மிரண்டு போய் அவர்களை பார்த்தான்..!!

"ஸார் ஸார்.. அப்டிலாம் பண்ணிராதிங்க ஸார்.. இனி நான் எந்த தப்பும் பண்ண மாட்டேன்.. ப்ளீஸ் ஸார்..!!"

என்று கெஞ்சினான்.. கையெடுத்து அவர்களை கும்பிட்டான்..!! அவனுடைய கண்களில் கண்ணீர் அரும்ப, ஸ்ரீனிவாச பிரசாத்துக்கு அவன் மீது சற்றே இறக்கம் வந்தது..!! இறக்கம் வந்தும்..

"நம்பலாமா..??" என்று முறைப்பாகவே கேட்டார்.

"நம்பலாம் ஸார்.. சத்தியமா இனிமே நல்ல புள்ளையா நடந்துக்குறேன்..!!"

"ம்ம்ம்ம்.. தட்டிக்கேட்க ஆளு இல்லன்னா, சேட்டை பண்ண தோணுது உங்களுக்குலாம்.. இல்ல..?? இனிமே எந்தப் பொண்ணுட்டயாவது வாலாட்டுனன்னு தெரிஞ்சுச்சு.. அப்புறம் மவனே ஆட்டுறதுக்கு எதுவுமே இருக்காது உன்கிட்ட..!! புரியுதா..??" ஸ்ரீனிவாச பிரசாத் நாக்கை துருத்தி எச்சரித்தார்.

"புரியுது ஸார்..!!"

"அப்படியே பிதுக்கிப்புடுவேன் பிதுக்கி..!! அடுத்த ரவுண்டு ஊத்து..!!"

ஸ்ரீனிவாச பிரசாத் ஆர்டர் போட.. மனோகர் அதற்காகத்தான் காத்திருந்தவன் போல.. விஸ்கி பாட்டில் திறந்து.. க்ளாஸில் ஊற்றி.. ஐஸ்க்யூப்ஸ் அள்ளிப்போட்டு.. பவ்யமாக அவரிடம் நீட்டினான்..!! நீட்டியவன்.. அப்படியே முகத்தை திருப்பி.. அசோக்கை ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்தான்..!! அசோக்கோ.. அங்கு நடக்கும் சம்பவங்களுக்கும் அவனுக்கும் சற்றுகூட சம்பந்தம் இல்லாதவன் மாதிரி.. வாங்கி வந்திருந்த சிப்ஸை வாய் நிறைய போட்டு அரைத்துக் கொண்டிருந்தான்..!!

-----------------------------XXXXXXXXXXXXX-----------------------------

தி.நகரில் நகைக்கடை வைத்திருக்கிற மாணிக்சந்த் சேட்டிற்கு.. கருப்புப்பணத்தின் வைத்திருப்பு அதிகமாகிப் போய்.. பெருத்த அவஸ்தையில் இருந்தார்..!! எப்படியாவது அவற்றை வெள்ளைப்பணமாக மாற்றிவிடவேண்டும் என்ற எண்ணத்துடன்.. அவருடைய ஜ்வல்லரி ஷாப் விளம்பரத்தை, ஸ்னேஹாவை வைத்து முடித்துக் கொடுத்ததன் மூலம் நட்பாகியிருந்த மோகன்ராஜிடம்.. அடுத்த விளம்பரத்திற்கு அனுஷ்காதான் என்று தீர்க்கமாக சொல்லிவிட்டு.. அவருடைய அவஸ்தைக்கான ஆலோசனையும் கேட்டார்..!! அவருக்கு ஆலோசனை சொன்ன மோகன்ராஜ்..

"எனக்கு தெரிஞ்ச ஒரு பையன் இருக்குறான்.. நாளைக்கு அவனை அனுப்பி வைக்கவா..??" என்று கேட்டார்.

அடுத்த நாள் காலையே.. மாணிக்சந்த்தின் அலுவலக அறையில்.. அசோக் அவருக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தான்..!!

"செனைப்பன்னிங்க மாதிரி ரெண்டு பேரு ஸார்.. ஒவ்வொருத்தனும் ஒரு முன்னூறு கிலோ இருப்பானுகன்னு வச்சுகோங்க.. வயிறுலாம் அப்படியே வாட்டர் டேங்க் மாதிரி இருக்கு.. கைலாம் கர்லா கட்டை மாதிரி இருக்கு.. காட்டெருமைங்க நாட்டுக்குள்ள தப்பிச்சு வந்தா எப்டி இருக்கும்.. அந்த மாதிரி..!! ரெண்டு பேரும் ஒரே நேரத்துல கையை மடக்கி.. நம்ம ஹீரோ மூஞ்சில ஓங்கி ஒரு குத்து விடுறானுக..!! அவ்வளவுதான்.. நம்ம ஹீரோ அப்படியே ஏர்ல பாஸாகி வந்து.. ஹீரோயின் இருக்குற டேபிள்ளயே டமால்னு விழுறான்..!! ஹீரோயின் சீக்ரட்டா சிரிக்குறா.. அந்த செனைப்பன்னிங்க ரெண்டும் முறைக்குதுங்க..!!" அசோக் ஆக்ஷனுடன் காட்சியை விவரிக்க..

"ஹாஹாஹா.. மஸா ஹே.. பஹுத் மஸா ஆ ரஹா ஹே..!! ஹாஹாஹா..!!" மாணிக்சந்த் தனது தொப்பை குலுங்க சிரித்துக் கொண்டிருந்தார்.

"இப்போ அந்த காட்டுப்பன்னிங்க ரெண்டு பேரும்.." அசோக் மேலும் ஆர்வமாக ஆரம்பிக்க,

"ஆங்.. ஆவ் பேட்டா ஆவ்..!!"

மாணிக்சந்த் அவனுக்கு பின்புறமாக பார்த்து சொன்னார்.. உடனே அசோக்கும் பின்னால் திரும்பி பார்த்தான்.. பார்த்தவன் அப்படியே பக்கென மிரண்டு போனான்..!! அங்கே.. அவர்கள்.. அந்த அண்டர்டேக்கரும், ஜான் ஸீனாவும்.. மீராவின் சில்மிஷத்தால், அசோக்கின் முகத்தில் நிஜமாகவே பஞ்ச் விட்டவர்கள்.. இப்போது இவனை எரித்துவிடுவதுபோல முறைத்துக் கொண்டிருந்தனர்..!!

'இவர்களா..?? இவர்கள்தான் இந்த மாணிக்சந்த் பெற்றெடுத்த பேட்டாக்களா..??' அசோக் திருதிருவென விழித்தான்..!!

இவ்வளவு நேரமும் அசோக் அவர்களைப் பற்றி வர்ணித்ததை எல்லாம்.. அவர்களும் கேட்டுக் கொண்டுதான் இருந்திருப்பார்கள் போல.. நடந்துவரும்போதே அசோக்கை உர்ரென முறைத்துக்கொண்டேதான் வந்தார்கள்..!! அசோக் அவர்களைப் பார்த்து 'ஹிஹி..' என்று அசட்டுத்தனமாய் இளிக்க.. அவர்கள் அப்பாவை நெருங்கி ஆளுக்கொரு பக்கமாய் அமர்ந்துகொண்டார்கள்..!!

"இவுருதான் நம்ப டைரக்ட்டர்.. பேரு அசோக்..!!" மகன்களுக்கு அசோக்கை அறிமுகப்படுத்தினார் மாணிக்சந்த்.

"இது நம்ப பெருசு பையன் பிரேம்சந்த்.. இது நம்ப சிறுசு பையன் தீப் சந்த்.. !! பிரேம்சந்த்தான் நம்ப பட்துகூ எக்ஸிக்யூட்டிவ் ப்ரொட்யூசர்..!!" அசோக்கிற்கும் அவர்களை அறிமுகம் செய்துவைத்தார்.

"ம்ம்.. ஸ்டோரியை கண்டின்யூ பண்ணுங்கோ..!!" கடுப்புடனே அசோக்கிடம் சொன்னான் பிரேம்சந்த்.

-----------------------------XXXXXXXXXXXXX-----------------------------

அசோக் சொன்ன கதை.. மாணிக்சந்த்திற்கும் அவரது மகன்கள்சந்த்திற்கும் மிகவுமே பிடித்துப் போனது.. அந்தக்கதையை படமாக்கலாம் என்று மகிழ்வுடன் முடிவெடுத்தார்கள்..!! அன்றே அக்ரிமன்ட்டும் போட்டு.. அட்வான்ஸ் செக்கையும் அசோக்கின் கையில் திணித்தார்கள்..!! நடிகர், நடிகைகளை தாங்களே முடிவு செய்வதாக சொன்னவர்கள்.. டெக்னிகல் டீமை மட்டும் அசோக்கே தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதித்தார்கள்..!! அவனுடைய டெக்னிகல் டீமில் முதல் ஆளாய் சேர்ந்தவன் கிஷோர்தான்.. தனி ஒளிப்பதிவாளனாய்..!!

அந்தவாரத்தின் இறுதியிலே ஒருநாள்.. படத்திற்கான டைட்டில் குறிப்பிடப்படாமலே.. வடபழனி வாஹினி ஸ்டுடியோவில் படத்திற்கு பூஜையும் போடப்பட்டது..!! அத்தனை நாளாய் வீட்டிற்கு டிமிக்கி கொடுத்த அசோக்காலும், கிஷோராலும்.. அதன்பிறகும் தப்பிக்க இயலவில்லை..!! 'அதான் இப்போ ரெண்டு பேர் நெனச்சதும் நடந்துடுசுல.. அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணத்தை வச்சிர வேண்டியதுதான்..!!' என்று ஆளாளுக்கு பேசி.. அவர்கள் இருவரையும் கோழியை அமுக்குவதுபோல அமுக்கினர்..!!

இயக்குனராக ஒப்பந்தமான இரண்டே வாரங்களில்.. வளசரவாக்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில்.. மங்கள வாத்திய மேளம் முழங்கியது.. ஒரே மேடையில் இரு ஜோடிகளுக்கு கல்யாணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..!! அசோக், கிஷோரின் குடும்பத்தினர் தவிர்த்து.. அசோக்கின் நண்பர்கள், மும்தாஜ், ஸ்ரீனிவாச பிரசாத், மலரவன், மாணிக்சந்த், மோகன்ராஜ் என.. அனைவருமே திருமணத்திற்கு வருகை தந்திருந்தனர்.. அடுத்தடுத்து முன்வரிசையில் அமர்ந்திருந்தனர்..!!

"கெட்டி மேளம்.. கெட்டி மேளம்..!!"


ஐயர் கத்தினார்.. மங்கள மேளம் ஒலித்தது..!! மலர்மாலைகள் தாங்கிய தோள்களுடன்.. அசோக் மீராவின் கழுத்தில் தாலி கட்டினான்.. கிஷோர் சங்கீதாவின் கழுத்தில் மாங்கல்யம் பூட்டினான்..!! வந்திருந்தவர்களின் அட்சதை ஆசீர்வாதத்தில்.. மணமேடையில் பூமழை பொழிந்தது..!!

-----------------------------XXXXXXXXXXXXX-----------------------------
அசோக்கிற்கும் மீராவுக்கும் திருமணம் முடிந்த மூன்றாம் நாள்..

'கீழை நாடுகளின் வெனிஸ் நகரம்' என்று அழைக்கப்படுகிற.. கேரளா மாநிலத்தை சேர்ந்த எழில்மிகு ஆலப்புழா..!! சூரியனின் ஆட்சிக்காலம் முடிந்துபோய்.. சந்திரன் தன் ஆளுமையை இவ்வுலகில் செலுத்த ஆரம்பித்திருந்த சமயம்..!! இந்தியாவின் மிக நீளமான ஏரியான வெம்பநாடு ஏரி.. இப்போது இருளில் நனைந்த நீரினால் நிரம்பியிருந்தது..!!

கருநீல நிறத்தில் தழும்பிய காயல் நீரில்.. வெண்ணிலாவின் வெளிச்சம் சிதறி தகதகத்தது..!! கரி அப்பிக்கொண்டு ஏரியின் ஓரத்தில் அணிவகுத்திருந்த தென்னை மரங்கள்.. காற்றுக்கு தங்களது கிளைக்கைகளை அசைத்துக் கொண்டிருந்தன..!! காற்றில் சம்பா மலர்களின் வாசனை..!! ஏரியிலிருந்து வெளிக்கிளம்பி மொட்டையாக நின்ற கட்டை மரமொன்றில்.. ஏறியமர்ந்து தலைசிலுப்பிய கரிச்சான் குருவியொன்று.. 'கீச்.. கீச்.. கீச்..' என்று ஒலி கிளப்பியது..!!

இருண்டுபோன ஏரியின் மையத்தில்.. பளிச்சென்ற வெளிச்சத்துடன் மிதந்து கொண்டிருந்தது அந்த படகுவீடு..!! கெட்டு வள்ளம் என்று அழைக்கப்படுகிற நீளமான, அகலமான மரப்படகு.. அதன்மீது மூங்கிலாலும், பனை ஓலையாலும் கூரை வேயப்பட்ட அழகுவீடு..!! உட்புறம் ஒளிர்ந்த விளக்குகள் அந்த படகுவீட்டை பிரகாசமாக்கியிருந்தன.. வெளிப்புறம் கசிந்த மஞ்சள் வெளிச்சம் அப்பகுதியின் இருள் போக்க உதவியிருந்தது..!! தண்ணீருக்குள் தங்கத்தேர் என சுருக்கமாக அவ்வீட்டை வர்ணிக்கலாம்..!!

படகின் முற்பகுதி.. பக்கவாட்டில் தடுப்பற்று விடப்பட்டிருந்தது.. பிரம்பு நாற்காலிகள், மர மேஜைகளுடன் உணவு உண்ணுவதற்கான வசதியுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது..!! கூரையில் தொங்கிய குழல் விளக்குகள்.. படகு விளிம்பை ஒட்டிக்கிடந்த வெல்வெட் சோபாக்கள்..!! அதைக்கடந்து.. எதிர்ப்படும் மூங்கில்க்கதவை திறந்தால்.. வீட்டுக்குள் பிரவேசிக்கலாம்..!! உள்ளே.. பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு அறைகள்.. நடுவே நீளமாய் சிவப்புக் கம்பள விரிப்பு..!!

இடதுபுறம் இருக்கிற அறைக்குள் நுழைந்தோமானால்..

அறையின் மையத்தில் கிடந்த அந்த மெத்தையில்.. அசமஞ்சமான ஒரு வெளிச்சத்தில்.. அரைநிர்வாண நிலையில்.. அமாவாசையிரவு பாம்புகளாய்.. இரண்டு மனித உடல்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து நெளிந்து கொண்டிருந்தன..!! அவர்களுக்கு அருகே சென்று உற்றுப்பார்த்தோமானால்..

ஸாரி.. தப்பான ரூமுக்குள்ள வந்துட்டோம் போல இருக்கு.. இது கிஷோரும், சங்கீதாவும்..!! அப்படியே ட்ராலி பேக்வேர்ட் போங்கப்பா..!! ஹிஹி..!!

அறைக்கு வெளியே வந்து.. அப்படியே ஒரு யூ டர்ன் அடித்து.. எதிரே தெரிகிற கதவை திறந்து.. சப்தமிடாமல் உள்ளே நுழைந்தோமானால்..


மல்லிகை மலர்கள் தூவிய மஞ்சத்தில்.. மதமதப்புடன் வீற்றிருந்த மீரா பார்வைக்கு வந்தாள்..!! மஞ்சள் நிறத்தில் புடவையும் ரவிக்கையும் அணிந்திருந்தாள்.. கழுத்திலும், காதிலும், கைகளிலும் பொன் நகைகள்..!! கூந்தல் நீளமாக பின்னப்பட்டு.. இறுதியில் குஞ்சம் சேர்க்கப்பட்டிருந்தது..!! மெத்தையில் உதிரியாய் சிதறிக்கிடந்த மல்லிகை.. அவளது கூந்தலில் கொத்துக் கொத்தாய்.. சரம் சரமாய்..!! பக்கவாட்டில் இருந்த மின்விசிறி காற்றெழுப்ப.. அந்தக்காற்றுக்கு அவளுடைய புடவை மேற்கிளம்பி.. ஒற்றைப்பக்க மார்பினையும், வளைவுகுழைவான இடுப்பினையும்.. வஞ்சனையில்லாமல் வெளிக்காட்டியது.. புடவையை இறக்கி தொப்புள் தெரிய கட்டியிருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள முடிந்தது..!! அழகுற வீற்றிருந்தவள்.. அவ்வப்போது பக்கவாட்டில் திரும்பி எரிச்சலாக பார்த்தாள்..!!

அவளுடைய பார்வை சென்ற இடத்தில்.. ஒரு பிரம்பு நாற்காலியில் அசோக் அமர்ந்திருந்தான்.. அவன் முன்பாக இருந்த மரமேஜையில் அவனுடைய லேப்டாப் விரித்து வைக்கப்பட்டிருந்தது.. இரவு விளக்கு குனிந்து ஒளி கிளப்பிக் கொண்டிருந்தது..!! அசோக் தனது இமைகளை மூடியிருந்தான்.. தலையை 45 டிக்ரி கோணத்திற்கு டேப்பராக திருப்பியிருந்தான்.. ஏதோ கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவன் போல காணப்பட்டான்..!! உதட்டை அசைத்து ஏதோ முணுமுணுத்துக் கொண்டான்.. உடலை அவ்வப்போது வெடுக்வெடுக்கென சிலிர்த்துக் கொண்டான்..!! வெட்கத்தில் சிவந்தும் பூரித்தும் போன முகத்துடன்.. தனக்கு முன்பிருந்த இரவு விளக்கை இரு கையாளும் அணைத்துக்கொண்டு.. உதடுகள் குவித்து அந்த விளக்கின் தலையில் முத்தமும் வைத்தான்..!!

அவ்வளவு நேரமும் அவனையே கடுப்புடன் முறைத்துக் கொண்டிருந்த மீரா.. இப்போது பொறுமை இழந்து போனாள்..!! தனது தலையில் சூடியிருந்த மல்லிகைச்சரத்தில்.. கொஞ்சமாய் ஒரு கொத்தை பிய்த்து.. அசோக்கை நோக்கி சரக்கென விட்டெறிந்தாள்..!! அந்த மல்லிகை கொத்தும்.. அவனது முகத்தை சென்று 'சத்'தென்று அறைந்தது..!! அசோக் உடனே உறக்கத்தில் இருந்து விழித்தவன் போல.. படக்கென தனது இமைகள் திறந்தான்.. பக்கவாட்டில் திரும்பி மீராவை முறைத்தான்..!!

"ஏய்..!!"

"என்னடா பண்ணிட்டு இருக்குற.. லூஸு..!!" மீரா எரிச்சலாக கேட்டாள்.

"ஸீன் யோசிச்சுட்டு இருக்கேன்டி.. டிஸ்டர்ப் பண்ணாத..!!"

"ஸ்க்ரிப்ட் எல்லாம் பக்காவா ரெடின்னு சொன்ன.. இன்னும் என்ன ஸீன் யோசிக்கிற நீ..??"

"ஹஹ.. இது ஃபைனல் ஸீன்..!! லாஸ்ட்டா.. அப்டியே ரொமாண்டிக்கா.. ஒரே கிளுகிளுப்பா.. ஹீரோக்கும் ஹீரோயினுக்கும் ஃபர்ஸ்ட் நைட் ஸீன்..!! அதைத்தான் அப்டியே இன்வால்வ் ஆகி யோசிச்சுட்டு இருக்கேன்..!!" அசோக் இளிப்புடன் சொன்னான்.

"ஓஹோ..??" மீராவின் முறைப்பு மேலும் கடுமையானது.

"ஆக்சுவலா.. நாம ஆலப்பே வந்ததுக்கு காரணமே அதுதான் மீரா..!! இதே மாதிரி ஒரு நைட் எஃபக்ட்ல.. இதே மாதிரி ஒரு போட்-ஹவுஸ்லதான்.. ஹீரோக்கும் ஹீரோயினுக்கும் நான் ஃபர்ஸ்ட் நைட் ஏற்பாடு பண்ணிருக்கேன்..!! ஆலப்பேலதான் அந்த ஸீன் ஷூட் பண்ணப்போறோம்.. நாம இங்க லொகேஷன் பாக்க வந்ததே அதுக்குத்தான்..!!"

"ஒய்.. என்ன.. லொகேஷன் பாக்க வந்தோம்னு எங்களையும் உங்க கூட சேர்த்துக்குற..?? நாங்கல்லாம் இங்க லொகேஷன் பாக்க வரல..!!"

"சரி விடு.. தெரியாம சொல்லிட்டேன்..!!"

"ச்சை.. சரியான கஞ்சப் பிசினாரிங்கடா ரெண்டு பேரும்..!!"

"யாரை சொல்ற..??"

"உன்னையும் கிஷோரையும்தான்..!!"

"ஏன்..??"

"பின்ன என்ன..?? ஹனிமூனுக்கு செலவாகும்னு.. ப்ரொட்யூசர் காசுல.. லொகேஷன் பாக்கப் போறோம்ன்ற பேர்ல.. ஹனிமூன் காசை மிச்சம் பண்ணிட்டிங்கல்ல ரெண்டு பேரும்..??"

"ஹாஹா.. இதைத்தான் தமிழ்ல 'புத்தியுள்ளவன் பலவான்'ன்னு சொல்வாங்க மீரா..!!"

"ம்ம்..?? இதைத்தான் தெலுங்குல தெங்கனா கொடுக்கான்னு சொல்வாங்க..!!"

"தெங்கனாவா..?? தெலுங்கானா தெரியும்.. அதென்னா தெங்கனா..??"

"தெரியலைல.. விட்ரு..!!"

"சொல்ல மாட்டியா.. சரி போ..!! ம்ம்ம்ம்ம்... எனக்கு வேலை இருக்கு மீரா.. இந்த ஸீன் எழுதி முடிக்கணும்.. உனக்கு தூக்கம் வந்தா நீ தூங்கு..!! காலைல மாணிக்சந்த்தோட பையன் வந்திருவாரு.. அவர் வர்றப்போ ஸ்க்ரிப்ட் பக்காவா ரெடியாயிருக்கணும்..!!"

"ம்க்கும்.. பேரைப் பாரு.. மாணிக்சந்த்தாம் மாணிக்சந்த்..!! பையன் பேர் என்ன.. பான்பராக்கா..??" மீரா கிண்டலாக கேட்க, அசோக் சிரித்துவிட்டான்.

"ஹாஹா..!! பான்பராக்லாம் இல்ல.. அவர் பேர் பிரேம்சந்த்..!! நீ அவரை பாத்தது இல்லைல.. நாளைக்கு பாரு.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு..!!"

"என்ன சர்ப்ரைஸ்..??"

"நாளைக்கு அவரை பாத்து தெரிஞ்சுக்கோ..!!"

"ம்ம்..!! அந்த ஆளு எதுக்கு திடீர்னு இங்க வர்றான்..??"

"லொகேஷன் பாக்கத்தான்..!!"

"ஏன்.. நீங்க பாக்குறது பத்தாதா..??"

"அப்டி இல்ல..!! ஆக்சுவலா.. இந்த ஃபர்ஸ்ட் நைட் ஸீன் மட்டுந்தான் மொதல்ல இங்க ப்ளான் பண்ணிருந்தோம்..!! இப்போ அதோட சேர்த்து.. இன்னொரு டூயட் சாங் கூட இங்கயே ஷூட் பண்ணலாம்னு அவர் அபிப்ராயப் படுறாரு..!! 'தேன் குடிச்ச நிலவு.. விழி மயங்கும் இரவிது.. தினம்தோறும் திருவோணம்தான்..' அந்த ஸ்டைல்ல..!! அதான்.. அவரே நேர்ல லொகேஷன் பாக்க வர்றாரு..!!"

"குத்துப்பாட்டா...??" மீரா முகத்தை சுளித்தவாறு கேட்டாள்.

"எஸ்..!!" அசோக் இளிப்பாக பதில் சொன்னான்.

"எப்புடி.. அந்த கொலை ஸீன் முடிஞ்சதும்.. நீயும் நானும் கனவுல குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுறமா..??"

"ஐயையே.. தப்பா புரிஞ்சுக்கிட்ட.. நீயும் நானும் இல்ல..!!"

"அப்புறம்..??"

"நானும் மும்தாஜும்..!!" அசோக் கூலாக சொல்ல,

"என்னது..????" மீரா உக்கிரமாக அவனை முறைத்தாள். அசோக் உடனே பம்மினான்.

"அமலா பாலோட ரசிகர்களை திருப்தி படுத்துறதுக்காக-மா..!! படத்துல கொஞ்சம் தூக்கலா.. சும்மா நச்சுனு காமிக்க நெனைச்சிருக்கோம்..!! ஐ மீன்.. அந்த மும்தாஜ் கேரக்டரை..!!"

"ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம்..!! அப்படி ஏதாவது டூயட் சாங் எடுக்கணும்னா.. அந்த இத்துப்போன இலியானாவோடவே எடுத்து தொலை..!!"

"ஒய்.. என்ன..?? நான் டைரெக்டரா.. நீ டைரெக்டரா.. உன் இஷ்டத்துக்கு ஸ்க்ரிப்டை மாத்துற..??"

"செருப்பு பிஞ்சுடும் ராஸ்கல்..!!" மீரா கத்த,

"என்னது..???" அசோக் வெலவெலத்து போனான்.

"பின்ன என்ன..?? உன்னோட டர்ட்டி ஆசையலாம்.. இந்த மாதிரி படமா எடுத்து தீத்துக்கலாம்னு பாக்குறியா.. பிச்சுப்புடுவேன் பிச்சு..!!!"

"ஐயையே.. இதுல என் ஆசைலாம் எதுவும் இல்ல மீரா.. எல்லாம் ப்ரொட்யூசரோட விருப்பம்..!!"

"அந்தாளுக்கும் செருப்பு பிஞ்சுடும்னு சொல்லி வையி..!! என் ஸ்டோரியை படமா எடுத்து காசு சம்பாதிக்கப் போறீங்க.. எந்த டேமெஜும் பண்ணாம உள்ளதை உள்ளபடி எடுக்கணும் சொல்லிப்புட்டேன்..!!"

"என்ன மீரா..??" அசோக் உடனடியாய் குழைய,

"என்ன.. நொன்ன மீரா..??" மீரா எரிச்சலாக சொன்னாள்.

அப்போதுதான்.. 'ஆஆஆவ்வ்வ்..' என்று பக்கத்து அறையில் இருந்து சங்கீதா எழுப்பிய சத்தம்.. இந்த அறைக்குள் சன்னமாக ஒலித்தது..!! அந்த சத்தத்தில் இருவரும் கவனம் கலைந்து போனார்கள்..!! அந்த சத்தத்தின் அர்த்தத்தை மீரா உடனடியாய் புரிந்துகொண்டாள்.. அசோக்குக்குத்தான் அதன் அர்த்தமும் புரியவில்லை.. அதை எழுப்பியவள் தன் தங்கைதான் என்பதும் புரியவில்லை..!!

"என்னமோ சத்தம் கேட்ட மாதிரி இருந்ததுல..??" என்றவாறு ஜன்னல் கதவை திறந்து வெளியே எட்டி எட்டி பார்த்தான்.

"ப்ச்.. ஒன்னும் இல்லடா.. விடு..!!" மீரா அதட்டியதும்தான் தேடுவதை கைவிட்டு திரும்பினான். அவன் திரும்பவும்,

"ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்....!!" திடீரென நீளமாக பெருமூச்சு விட்டாள் மீரா.

"என்னாச்சு... ஏன் பெருமூச்சு..??" அசோக் புரியாமல் கேட்டான்.

"என்னதான் இருந்தாலும்.. சங்கி குடுத்து வச்சவதான்..!!" மீரா குறும்பாக சொன்னாள்.

"ஹாஹா..!! சங்கி மட்டுமா.. கிஷோரும் குடுத்து வச்சவன்தான்..!! என் தங்கச்சி மாதிரி ஒரு பொண்ணு கெடைக்க.. அவன் நெஜமாவே ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்..!!" அசோக் அப்பாவியாக சொல்ல, மீரா கடுப்பானாள்.

"அடச்சீ.. தத்திலயும் தத்தி, உன்னை மாதிரி தட்டுக்கெட்ட தத்திய நான் பாத்ததே இல்ல..!!"

"ஒய்.. எதுக்கு இப்போ திட்டுற..?? நான் ஒன்னும் தத்திலாம் இல்ல..!!"

"ம்க்கும்..!! லட்டு மாதிரி நான் இங்க ஒருத்தி உக்காந்திருக்கேன்.. நீ நைட் லேம்போட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்குற.. உன்னை தத்தின்னு சொல்லாம வேற என்ன சொல்றது..??"

மீரா அவ்வாறு சொன்னதும், அசோக் இப்போது சற்றே நிதானித்தான்.. அவனுடைய முகத்தில் பட்டென ஒரு காதல் உணர்வு.. மீராவின் முகத்தை ஏறிட்டு, ஏக்கமாக ஒரு பார்வை பார்த்தான்..!!

"ஹ்ம்ம்.. என்ன பண்ண சொல்ற..?? எனக்கு மட்டும் ஆசை இல்லையா..?? அன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ள எவ்ளோ ஆசையா வந்தேன் தெரியுமா..?? நீதான் வீட்டுக்கு தூரம்னு ஓரமா போய் உக்காந்துக்கிட்ட..!! நானும் நாலு நாளா ஆசையை அப்படியே அடக்கி வச்சுக்கிட்டு இருக்குறேன்..!!"

"என்ன சொன்ன.. என்ன சொன்ன..??"

"அன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ள.."

"அது இல்ல.. லாஸ்டா என்ன சொன்ன..??"

"நானும் நாலு நாளா ஆசையை அப்படியே அடக்கி வச்சுக்கிட்டு இருக்குறேன்னு சொன்னேன்..!!"

"இன்னொரு தடவை சொல்லு..!!"

"நானும் நாலு நாளா ஆசையை அப்படியே அடக்கி வச்சுக்கிட்டு இருக்குறேன்..!! எதுக்கு திரும்ப திரும்ப அதையே சொல்ல சொல்ற..??"

"நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம்..??"

"என்ன அர்த்தம்..??"

"ம்ம்..??? மூணு நாள் முடிஞ்சு போச்சுடா முண்டம்னு அர்த்தம்..!!"

அவ்வளவுதான்.. பல்பு போட்ட மாதிரி அசோக்கின் முகம் பட்டென பிரகாசமானது.. 'வாவ்' என்று வாயை திறந்தான்.. படக்கென சேரில் இருந்து எழுந்தான்..!! உடலுக்குள் புது ரத்தம் பாய்ந்தவனாக,

"மீராஆஆ..!!" என்று உற்சாகமாக கத்தினான்.

"ம்ம்..!!" மீராவுக்கோ உடனடியாய் ஒரு வெட்கம். அவளும் மெத்தையில் இருந்து எழுந்துகொண்டாள்.

"அப்படினா.. இன்னைக்கு உண்டா..??"

"ஆ..ஆமாம்..!!"

"இன்னைக்குத்தான் நமக்கு ஃபர்ஸ்ட் நைட்டா...??"

"யெஸ்..!! நான் ரெடியாகி உக்காந்திருக்குறதை பாத்தாலே உனக்கு புரியலையா..??"

"ச்ச.. இவ்வளவு முக்கியமான விஷயத்தை எப்படி நான் மிஸ் பண்ணினேன்..??" தன்னைத்தானே நொந்துகொண்ட அசோக்கால்,

"ஐ.க்யு லெவல் கம்மியா இருந்தா இதெல்லாம் சகஜம்தான் அசோக்.. விடு..!!" மீராவின் கிண்டலை புரிந்துகொள்ள முடியவில்லை.

இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்கினார்கள்.. ஒருவர் முகத்தை ஒருவர் ஆசையும் ஏக்கமுமாக பார்த்தார்கள்..!! மீராவுடைய விருப்பத்துடனோ, விருப்பம் இல்லாமலோ அவளுடைய புடவைத்தலைப்பு கீழே நழுவியது.. அதை தடுத்து நிறுத்தி மேலே போர்த்திக் கொள்கிற எண்ணம்கூட இல்லாதவளாய் அப்படியே அசையாமல் நின்றிருந்தாள்..!! மஞ்சள்நிற ரவிக்கைக்குள் மாங்கனிகள் ரெண்டு விம்மிக்கொண்டிருந்தன.. முகத்தை ரசித்துக்கொண்டிருந்த அசோக்கின் விழிகள், இப்போது சற்றே கீழிறங்கி அந்த மாங்கனிகளை மேய்ந்தன..!!

மனைவியின் மார்பழகை சிலவினாடிகள் வெறித்துப் பார்த்த அசோக்.. இப்போது கைகள் இரண்டையும் உயர்த்தி.. அவளுடைய கன்னங்களை பற்றிக்கொண்டான்..!! அவன் அவ்வாறு பற்றிக்கொண்டதும்.. மீரா தனது இமைகளை மெல்ல மூடிக்கொண்டாள்.. தித்தித்திடுகிற ஒரு முத்தச்சுவைக்கு உடனடியாய் தயாரானாள்.. எந்த நொடியும் கணவனின் இதழ்கள், தனது இதழ்களை வந்து கவ்வலாம் என்று ஆசையாக காத்திருந்தாள்..!!

"ஆனா.. நான் ஸ்க்ரிப்டை முடிக்கணுமே..??"

அசோக் முத்தமிடாமல் அவ்வாறு கவலையாக சொன்னதும்.. மீரா எரிச்சலாகிப்போய் படக்கென இமைகள் திறந்தாள்..!! அந்த எரிச்சலுடனே..

"எல்லாம் காலைல எழுதிக்கலாம்டா..!!" என்றாள்.

"காலைல நான் நல்லா தூங்குவனே..??"

"கவலையே படாத.. உன் டிக்கிலயே நாலு மிதி மிதிச்சு.. நான் உன்னை எழுப்பி விடுறேன்..!!"

"ப்ச்.. அந்தாளு ஆறு மணிக்குலாம் வந்துடுவான் மீரா..!!"

"ஷ்ஷ்ஷ்ஷ்ஷப்பாஆஆ..!!"

காலநேரம் தெரியாமல் கடுப்படிக்கும் கணவனை.. மீரா உர்ரென்று முறைத்தாள்..!! 'இனியும் வெக்கப்பட்டால் வேலைக்காவாது' என்பதை உணர்ந்தவள்.. உடனடியாய் ஒரு முடிவுக்கு வந்தாள்..!! பாய்ந்து சென்று.. இவளே அவனது உதடுகளை கவ்விக்கொண்டாள்..!!

"மீராஆஆஹ்க்க்....!!!!!"

ஆரம்பத்தில் பதறிய அசோக், அப்புறம் அப்படியே அடங்கிப் போனான்..!! தனது பிடரி மயிரினைப் அழுத்தமாக பற்றியிழுத்து.. தனது இதழ்களை ஆவேசமாக கவ்வியுறிஞ்சுகிற மீராவுக்கு.. அவனால் என்ன எதிர்ப்பு காட்டிவிட முடியும்..?? கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கிப்போய்.. அவளுடைய இடுப்பினை பிடிமானமாக பற்றிக்கொண்டான்..!! வாய்வழியே அவனுக்கு அமுதூட்டி.. தனது நாக்கினை அவனுடையதில் தடவவிட்டு.. நீண்டநேர எச்சில் வர்த்தகம் செய்து முடித்து.. மெல்ல மெல்ல மீரா தனது உதடுகளை பிரித்தெடுத்தபோது.. அசோக் விழிகள் செருக நின்றிருந்தான்.. சுர்ரென்று ஏறிய முத்தபோதையில் கிர்ரென்று கிறங்கிப் போயிருந்தான்..!! அந்த கிறக்கத்துடனே..

"லா..லாஸ்ட் ஸீன்.. இ..இன்னும் மிச்சம் இருக்கு மீரா.." என்று திணறலாக சொன்னான்.

"நீ வாடி செல்லம்.. நான் உனக்கு லாஸ்ட் ஸீன் காட்டுறேன்..!!"

குறும்பாக சொன்ன மீரா.. அப்படியே அசோக்கின் மீது சாய்ந்தாள்..!! பேலன்ஸ் இழந்த அசோக் பொத்தென்று மெத்தை மீது வீழ்ந்தான்.. அவன் கூடவே சரிந்த மீரா அவன் மீதே வீழ்ந்தாள்..!! வீழ்ந்த வேகத்தில் அவளது மார்புக்கலசங்கள் ரெண்டும்.. அசோக்கின் நெஞ்சில் சென்று நச்சென்று மோதின.. மெத்தென்று இருந்தது அவனுக்கு..!! சுருக்கென்று ஒரு அதிர்வலை அவனது நாடிநரம்பெல்லாம் பாய்ந்து.. படக்கென அவனுடைய ஆண்மையை விழித்தெழ செய்தது..!! அவ்வாறு எழுந்த ஆண்மையை அவன்மீது படர்ந்திருந்த மீராவின் பெண்மை அழுத்தி அடக்கியது..!!

அசோக் அணிந்திருந்த சட்டையின் மேலிரண்டு பட்டன்கள் விடுபட்டுப் போயிருக்க.. அதன் வழியே அவனது இடதுபுற மார்புக்காம்பு பழுப்பு நிறத்தில் பளிச்சென வெளித்தெரிந்தது.. மீராவுடைய கவனமும் அந்தக் காம்பிலேதான் நிலைத்திருந்தது.. தனது உதட்டாலே அந்த மார்புக்காம்பினை குறிபார்த்தாள்..!!

"ஹேய்.. நம்ம படத்துக்கு டைட்டில் டிஸைட் பண்ணியாச்சு தெரியுமா..??" அசோக் இன்னும் ஸ்க்ரிப்ட் நினைவாகவே இருந்தான்.

"என்ன டைட்டில்..?? ஆயிரம் உதைவாங்கிய அசோக்கு சிந்தாமணியா..??" மீராவிடமும் கேலி குறையவில்லை.

"ச்சேச்சே.. அ..அப்டிலாமா பேர் வைப்பாங்க..?? இது ஆக்சுவலா நானே.." அசோக் திணறலாக சொல்ல,

"ப்ச்.. கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டு கம்முனு இருக்கியா..??" அவனுடைய தொடையை தனது தொடையால் அழுத்தி நசுக்கிக்கொண்டே மீரா சொன்னாள்.

"இதை மட்டும் சொல்லிக்கி.."

அசோக் சொல்லி முடிப்பதற்கு முன்பே.. மீரா தான் குறிவைத்ததை தனது உதடுகளால் கவ்வியிருந்தாள்.. அவனது மார்புக்காம்பினை அவ்வுதடுகளால் அழுத்தமாக மூடி, சர்ரென உறிஞ்சினாள்..!! அவ்வளவுதான்.. அசோக் சப்த நாடியும் ஒடுங்கிப் போனான்.. சப்தமே எழுப்பாமல் மீராவுடன் ஒத்துழைக்க ஆரம்பித்தான்..!! அவனது இடது கை.. மீராவின் இடுப்பை விட்டு கீழிறங்கி.. அவளது பின்புறத்தை தடவியது..!! அவனது இன்னொரு கை.. மீராவின் இடுப்புக்கு மேலே சென்று.. அவளது ஒருபக்க மார்பினை பற்றிக் கொண்டது..!! இதயத்தால் ஒன்றிணைந்த இருவரும்.. இப்போது தங்களது உடல்களையும் ஒன்றிணைக்கிற உத்வேகத்தில்.. அதற்கான செயல்முறையில் ஈடுபட ஆரம்பித்திருந்தனர்..!!

மரமேஜையில் திறந்து வைக்கப்பட்டிருந்த அசோக்கின் லேப்டாப்.. இன்னும் வெள்ளை நிறத்தில் வெளிச்சத்தை சிந்திக்கொண்டிருந்தது..!! திரையில் காட்சியளித்த அவன் எழுதிக்கொண்டிருந்த ஸ்க்ரிப்டின் உச்சியில்.. பச்சை நிறத்தில் அந்த டைட்டில் அட்டகாசமாய் பளிச்சிட்டது..!!

"அன்புள்ள ராட்சசி..!!"



[ சுபம் ]

17 comments:

  1. Hai screw extradinary performence for ur anbulla ratshasi... Awesome update... Thanks thala... HATS OF U THALA..:)

    ReplyDelete
  2. Good story dude. Try to make this as a movie

    ReplyDelete
  3. Hi,

    Really exciting after reading this Story.

    Wonderful finishing.

    Such a romance scenes between Ashok & Meera.

    Some scenes are happened as same in my life.

    Lots of Hats Off to you.

    Kaadhalin Kaadhalan (GSMSK)

    ReplyDelete
  4. Romba nala iruku sir.Next story yepo
    sir.adutha kadhai inum sirapaga amaya valthukal sir..oru request sir unga unmayana name yena sir?

    ReplyDelete
  5. Thank you so much for the lovable story.....! Ungaludaya arumayana eluthu nadayil ANBULLA RAATCHASI , migavum azhagana kathai, manathirku niraivana mudivu......!

    ReplyDelete
  6. super screw, love and love.only matiri kathai.fullum only love ,semaya panirugenga big story ,love na ithan love ,asokin ovoru thedalilim avalavu love theriuthu tnks super story kuduthahuku by raja

    ReplyDelete
  7. Chance less screw.. I loved all your stories... can I call you Tamil's durjoy dutta.. may be a lesser comparison but tats wat my level ... I dono words to describe how close I feel to ur stories... I love the way give comparisons... started like u for illusionist prof pic... will b happy to hear from u

    ReplyDelete
  8. Hi
    very nice story thala . ,Its always been a cherishing memory & exiting experience to read your love stories.Especially in this story I never able to forget meera.Barathi's puthumai pen.

    ReplyDelete
  9. Thala.
    very very intresting love stories. After finishing this. In my mind fully occupied for your all characters especially ashok and meera
    .welldone thala.

    ReplyDelete
  10. super story thoza........romba azaga solirkenga........
    sex dhan love nu suthitu iruka pasangaluku
    indha story oru mesg...........awesome i love it bro.............
    al d best ...........

    ReplyDelete
  11. SUPERRRb screw, ungala mathi yaralayum love story elutha mudiyathu, chancey illa ji...

    ReplyDelete
  12. Anbulla ratchasi. Ennai muluthaga aakiramitha kadhai... nan love ah feel panni kanneer sindhina kadhai. I cant forget two charecters meera and ashok

    ReplyDelete
  13. I have read lot of love stories. But, this is something different, in screen play and dialogue. Though every one know the result, the thrill was their, up to the last episode. Some humorous dialogues, made me laughing alone. Such a nice realistic characters. Seems to be, some characters are real in your daily life, screw sir.
    Overall great story, priceless, humourstic, .
    Hats off to you "screwdriver" sir.

    ReplyDelete
  14. You bloody screw.. I don't have words to praise you... keep ur journey... don't stop at any cost....

    ReplyDelete
  15. Super entertaining and engaging story. It just like James hadley chase novels of olden era. Wish you to continue of more to come from u. Good job.

    ReplyDelete
  16. ஒரு முழு நீள கதை எங்கும் தொய்வின்றி எழுதிய திரு ஸ்குருடிரைவர் ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள் பல

    ReplyDelete

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...