Social Icons

அன்புள்ள ராட்சசி - 1







'அன்புள்ள ராட்சசி' - நான் அடுத்து எழுத நெனைச்சிருக்குற கதை..!! ரொம்ப சிம்பிளான கதைதான்.. என்னோட எழுத்து மூலமா சுவாரசியமாக்க முடியும்ன்ற நம்பிக்கைல.. கைல எடுத்திருக்குறேன்..!! கதை தலைப்புலேயே ஓரளவு க்ளூ கொடுத்திருக்கேன்.. ஆரம்பத்துல சில ஜாலியான விஷயங்களும், போக போக சில காதல் உணர்வுகளையும் கதைல கலக்க நெனச்சிருக்கேன்..!! என்னோட எல்லா முயற்சிக்கும், அன்போட ஆதரவளிக்கும் நண்பர்கள்.. இந்தக்கதைக்கும் என்னோட துணை இருப்பாங்கன்னு நம்பி.. இந்த முயற்சில இறங்குறேன்..!! நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்



அத்தியாயம் 1

"உ..உங்க பேரே மறந்து போச்சு..!!" பிரமிட் நடராஜன் சாயலில் இருந்த பரந்தாமன் நெற்றியை தடவியவாறே சொன்னார்.

"அ..அசோக்..!!" அவருக்கு பதிலளித்த அசோக் அல்லு அர்ஜுன் சாயலில் இருந்தான்.

"ஆங்.. கரெக்ட் கரெக்ட்.. அசோக்..!! இப்போ ஞாபகம் வந்துடுச்சு..!! ஹாஹா.. வயசாயிடுச்சுல..??"

"ம்ம்..!! அதனால என்ன ஸார்..?? பரவால..!!"

"வந்து ரொம்ப நேரம் ஆச்சோ..??"

"இல்ல ஸார்.. ஒரு பத்து நிமிஷம் இருக்கும்.. அவ்வளவுதான்..!!"

"ம்ம்.. காஃபி, டீ ஏதும் சாப்பிடுறீங்களா..??" அவர் சம்பிரதாயமாக கேட்க,

"இ..இல்ல ஸார்.. பரவால..!!" அசோக் புன்னகையுடன் தவிர்த்தான்.

"வெயில்ல அலைஞ்சு வந்திருப்பீங்க போல.. கொஞ்சம் தண்ணியாவது குடிங்க..!!" அவர் கண்ணாடி தம்ளரில் இருந்த தண்ணீரை அசோக்கின் பக்கமாக நகர்த்தினார்.

"பரவால ஸார்.. இருக்கட்டும்..!!" அசோக் அதை தொட்டுக்கூட பார்க்காமல் சொன்னான்.

"ஹ்ம்ம்.. சொல்லுங்க தம்பி.. கிஷோர் தம்பி உங்களை பத்தி ஆஹா ஓஹோன்னு சொன்னாரு.. நானும் 'சரி அனுப்பி வைங்க.. பேசிப்பாக்குறேன்..'னு சொல்லிருந்தேன்..!!" அவருடைய பேச்சில் ஒரு அலட்சியம் தெரிந்தது. இருந்தாலும்,

"ரொம்ப தேங்க்ஸ் ஸார்.. எனக்காக உங்களோட டைம் ஒதுக்கித் தந்ததுக்கு..!!" அசோக் நிஜமான நன்றியுணர்வுடன் சொன்னான்.

"பரவால தம்பி..!! மொதல்ல.. உங்களை பத்தி கொஞ்சம் சொல்லுங்க..!!"

அன்புள்ள ராட்சசி - 2







அத்தியாயம் 3

வடபழனியில் இருந்து வளசரவாக்கம் வருவதற்குள்ளாகவே அசோக் கண்ணயர்ந்திருந்தான். அவனுடைய தலை கார் சீட்டில் சாய்ந்து அண்ணாந்திருக்க, வாய் 'ஆ'வென்று பிளந்திருந்தது. ஆல்கஹாலால் குழம்பிப் போயிருந்த அவனது மூளை, அன்று முழுதும் அவனை பாதித்த விஷயங்களை எல்லாம், கடுகளவும் லாஜிக் இல்லாமல் கண்களுக்குள் படமாக ஓட்டிக்கொண்டிருந்தது.

கொட்டும் மழையில்.. கோரமான பற்களுடனும்.. கொலைவெறி கொப்பளிக்கும் விழிகளுடனும்.. பரந்தாமன் ஷிவாவையும், ப்ரியாவையும்.. கோடாரியுடன் விரட்டினார்..!! 'யாரைப்பாத்து ஆண்ட்டின்னு சொன்ன..? யாரைப்பாத்து சொன்ன..? இனிமே சொல்லுவியா..? சொல்லுவியா.. சொல்லுவியா..??' என்று சாலமனின் ஆள் 'குண்டு' கேத்தரினா.. பற்களை நறநறவென கடித்தவாறு.. அசோக்கின் முகத்திலேயே பாக்ஸிங் பழகினாள்..!! 'இவன் ஆளு ரொம்ம்ம்ப வயலண்டா இருக்காடா..' என்று கிஷோர் யாரிடமோ செல்போனில் சொல்லிக்கொண்டிருந்தான்..!!

இந்த லட்சணத்தில்.. இவர்கள் சரக்கடித்த பாரில்.. எய்ட்டி ஃபோர் இன்ச் எல்.ஈ.டி டிவியில் ஓடிய.. ஐ.பி.எல் மேட்சின் எஃபக்ட் வேறு.. அவனுடைய கனவில் தெரிந்தது..!! வான்கடே மைதானத்தின் மையத்தில்.. வானை முட்டிவிடுவது மாதிரி நின்றது.. ஒரு ராட்சத வடிவ ராயல் சேலன்ச் குவார்ட்டர் பாட்டில்..!! தந்தூரி அடுப்பில் சுடப்பட்டு கருகிப்போன லெக்பீஸ் ஒன்று, அந்த பாட்டில் மீது ஸ்டைலாக சாய்ந்திருந்தது..!! ஃபுட் கோர்ட்டில் பார்த்த அந்த ஸ்ட்ரேஞ்சர் அழகி (நம்ம ஹீரோயின்தான்).. சியர்லீடர் கெட்டப்பில் மஞ்சள் நிற கச்சையும், குட்டைப்பாவாடையும் அணிந்து கொண்டு.. கையில் சிவப்பு நிற பாம்பாம்களுடன்.. முகத்தை வேறு சோகமாக வைத்துக்கொண்டு.. ராட்சத ராயல் சேலன்ச் பாட்டிலை சுற்றி சுற்றி வந்து.. கிறிஸ் கெயிலுடன் கங்ணம் ஸ்டைல் டான்ஸ் ஆடினாள்..!! இதெல்லாம் பத்தாதென்று, எந்த சம்பந்தமுமே இல்லாமல்.. ஹர்பஜன் சிங் வேறு இடையில் புகுந்து.. 'ஹே.. பல்லே பல்லே பல்லே..' என்று ஏற்றிக்கட்டப்பட்ட லுங்கியுடன் தவ்வித்தவ்வி குதித்துக் கொண்டிருந்தார்..!!

"மச்சி வீடு வந்துடுச்சுடா..!!"

அன்புள்ள ராட்சசி - 3


 




அத்தியாயம் 4

அடுத்த நாள் காலை அசோக் கண்விழித்தபோது, அவனது தலைக்கடியில் இரண்டும், பக்கவாட்டில் இரண்டுமாய் நான்கு தலையணைகள் வைக்கப்பட்டிருந்தன. இரவு ஒரு மூலையில் கிடந்த அந்த போர்வை, இப்போது அவன் உடலை முழுவதுமாய் போர்த்தி, காலைக்குளிருக்கு இதமாக கதகதப்பை வழங்கிக் கொண்டிருந்தது. இரவில் பளிச்சென்று எரிந்த குழல்விளக்கு இப்போது அணைந்துபோயிருக்க, கண்ணை உறுத்தாத வெளிச்சத்தை வெளியிட்டுக் கொண்டிருந்தது இரவு விளக்கு ஒன்று..!!

கண்விழித்ததுமே மனதுக்குள் ஒரு புத்துணர்வும் புதிதாய் விழித்துக் கொண்டதை அசோக்கால் உணர முடிந்தது. தலையை திருப்பி மணி பார்த்தான். ஏழரை என்று காட்டியது கடிகாரம்..!! அவனுக்கும் அன்றிலிருந்து ஏழரை ஸ்டார்ட் ஆகப்போகிறது என்பதை அறியாதவனாய், படுஉற்சாகமாகவே படுக்கையை விட்டு எழுந்தான். பாத்ரூமுக்குள் புகுந்தவன் கால் மணி நேரம் கழித்து, கமகமவென வாசனையாக வெளிப்பட்டான். வேறு உடைகளை பரபரவென அணிந்துகொண்டு அவனுடைய அறையை விட்டு வெளியேறினான். கிச்சனுக்குள் நுழைந்தான். பொங்கிய பாலின் கொதிப்பை அடக்குவதற்காக, குனிந்து ஸ்டவ் ரெகுலேட்டர் திருகிக் கொண்டிருந்த பாரதி, மகன் உள்ளே நுழைந்ததும் அவனை ஏறிட்டு புன்னகைத்தாள்.

"என்னடா.. பொழுது விடிஞ்சிருச்சா..??"

"ம்ம்.. அரை மணி நேரத்துக்கு முன்னாடியே..!!"

"நல்லா தூக்கமா..??"

"செம தூக்கம்..!! தலை வச்சு படுத்தது என் மம்மி மடியாச்சே.. எந்த கவலையும் இல்லாம நிம்மதியா தூங்கினேன்..!!"

அன்புள்ள ராட்சசி - 4


 




அத்தியாயம் 6

அந்த நாளும் அடுத்த நாளும் அசோக்கிற்கு ஒருவித பிரம்மையும் பிரச்னையுமாகவே கழிந்தன..!! ஆசைஆசையாக பேச சென்றவனின் மனதை.. அந்தப் பெண்ணுடைய அனல் கக்கும் பார்வையும்.. அவள் கழற்றி கையிலெடுத்த செருப்பும்.. அந்த செருப்பின் அகலமான அடிப்புறமும்.. அதில் ஓரமாய் ஒட்டியிருந்த பபிள்கமும்.. என எல்லாமும் சேர்ந்து.. ரொம்ப.. ரொம்பவே பாதித்துவிட்டன..!! அந்த பாரதிக்கு.. 'பார்க்கும் மரங்கள் எல்லாம் பச்சை நிறம்' தோன்றிய மாதிரி.. இந்த பாரதி மைந்தனுக்கு.. காணும் இடங்கள் எல்லாம் கலர் கலராய் செருப்புகள்தான் தோன்றின..!!

"என்னடா.. வெறும் சாதத்தையே சாப்பிட்டுட்டு இருக்குற.. இந்தா.. இதை கொஞ்சம் கடிச்சுக்கோ..!!" என்றவாறு, அசோக்கின் அம்மா அவனுடைய வாய்க்கருகே செருப்பை நீட்டினாள்.

"மம்மீஈஈ..!!!!" அலறியே விட்டான் அசோக். அவனுடைய முகம் பட்டென வியர்த்துப் போனது.

"அ..அசோக்கு... அசோக்கு... என்னப்பா ஆச்சு..??" பாரதி பதற்றமும் பயமும் தொற்றிக்கொண்டவளாய் கேட்டாள்.

"ஒ..ஒன்னும்.. ஒ..ஒன்னும் இல்ல மம்மி..!!"

அம்மாவின் கையில் இருப்பது அப்பளம்தான் என்று புரிந்ததும், சற்றே நிம்மதியடைந்த அசோக், சமாளிக்கும் விதமாய் சொன்னான். ஆனால் அப்புறமும் பாரதி சமாதானம் ஆகாமல்,

"எ..என்னடா நீ... இந்தா.. இந்த தண்ணியை கொஞ்சம் குடி..!!"

என்றவாறே, தண்ணீர் டம்ளரை எடுத்து அவளே தன் மகனுக்கு நீர் புகட்டினாள். அன்று மாலை அசோக் வீடு திரும்பியதில் இருந்தே, அவனிடம் ஒரு வித்தியாசத்தை உணர்ந்திருந்த பாரதி, 'எம்புள்ளைக்கு என்னாச்சுன்னு தெரியலையே..?? எதைப்பாத்து பயந்தான்னு புரியலையே..?? ஒத்தை ஆளா எத்தனை பேய்ப்படம் வேணா பார்ப்பானே..?? இன்னைக்கு அப்பளத்தை பாத்தாலே அனகோண்டாவை பாத்தவன் மாதிரி அலர்றானே..?? காளியாத்தா மாரியாத்தா.. காமாட்சி மீனாட்சி.. கருமாரி மகமாயி.. நீங்கதான் எம்புள்ளைக்கு தொணை இருக்கணும்டியம்மா..' என்று மனதுக்குள்ளாகவே கவலையும் ரகசியமுமாய் வேண்டிக்கொண்டாள்.

அன்புள்ள ராட்சசி - 5


 




அத்தியாயம் 8

அன்று மாலை அசோக்கின் வீட்டில்.. அவனுக்கு வரலாறு காணாத வரவேற்பு அளிக்கப்பட்டது..!! மலர் மாலை அணிவித்து.. மங்கள ஆரத்தி எடுக்காத குறைதான்..!! பந்தயம், பரிட்டோ, செருப்பு, முறைப்பு என.. சில சிக்கலான விஷயங்களை மட்டும் தவிர்த்துவிட்டு, மீதி விஷயங்களை எல்லாம்.. ஒன்றுவிடாமல் அசோக்கின் குடும்பத்துக்கு ஒலிபரப்பு செய்திருந்தது.. தி கிரேட் கிஷோர் FM..!! 'அசோக் ஒருபெண்ணை பலநாட்களாக பார்வையாலேயே காதலித்தான்.. இன்று பத்தே நிமிடம் அவளிடம் பேசி.. பதிலுக்கு அவளையும் ஐ லவ் யூ சொல்ல வைத்துவிட்டான்..' என்ற அளவில்தான் செய்தி ஒலிபரப்பு செய்யப்பட்டிருந்தது..!!

விஷயம் கேள்விப்பட்டதில் இருந்தே.. வீட்டில் அனைவருக்குமே அப்படி ஒரு சந்தோஷம்.. குதுகலம்.. மகிழ்ச்சி..!! அனைவரது முகத்திலுமே அப்படி ஒரு பூரிப்பு.. சிரிப்பு.. மலர்ச்சி..!! பொசுபொசுவென, வெள்ளை வெளேரென இருக்கும் பொமெரேனியன்கள் இரண்டும் கூட.. வாசலில் போடப்பட்டிருந்த ரங்கோலியில் புரண்டு எழுந்து.. அன்று கலர்ஃபுல்லாய் காட்சியளித்தன..!! அசோக் வீட்டிற்குள் நுழைந்ததுமே ஓடிச்சென்று.. அவனுடைய காலை சுற்றி சுற்றி வந்து.. முகர்ந்து முகர்ந்து பார்த்தன..!! அனைவருமே அவசரமாய் சென்று அசோக்கை சூழ்ந்து கொண்டனர்.. அன்புடன் கட்டிக்கொண்டனர்.. கைகுலுக்கினர்.. 'கலக்கிட்டடா' என்று கன்னம் கிள்ளினர்..!!

தன் குடும்பத்தினரிடம் இருந்து, அத்தகைய வரவேற்பை அசோக் எதிர்பார்த்திருக்கவில்லை.. திணறிப் போனான்..!! ஏற்கனவே அந்த மீரா தனது காதலை சொல்லிச் சென்றவிதத்தில், அவனுடைய மனம் ஒருவித குழப்பத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தது.. இதில் இவர்கள் வேறு ஆளாளுக்கு கலாட்டா செய்ய.. செய்வதறியாது திருதிருவென விழித்தான்..!! அவனுடன் எப்போதும் சண்டை போடுகிற சங்கீதா கூட.. அன்று அண்ணனின் காதல் கணிந்துவிட்டதென மிக சந்தோஷத்தில் இருந்தாள்..!! அசோக்கை பார்த்து கண்சிமிட்டியவாறே, தனது இனிய குரலால் பாடினாள்..!!

"பெண்கள் பின்னால் சுற்றாமல்.. பெண்ணே சுற்றும் பேரழகன் எவனோ ஓ ஓ ஓ.. அவனே காதல் மன்னன்... காதல் மன்னன்.. காதல் மன்னன்..!!"

அன்புள்ள ராட்சசி - 6


 




அத்தியாயம் 10


வீங்கிப்போன முகத்துடன், அசோக்குக்கு மூக்கும் சேர்ந்து கிழிந்திருந்தது. அவனுடைய உருண்டையான நீளமான மூக்கின் மையப்பகுதியில், குறுக்குவாக்கில் ஒரு கீறல். தோல் பெயர்ந்து வந்திருக்க, அதன் வழியே ரத்தம் துளிர்த்திருந்தது. அன்டர்டேக்கர் தன் விரலில் அணிந்திருந்த மண்டையோடு மோதிரம்தான் அதற்கு காரணமாயிருக்க வேண்டும். அசோக் மூக்கை இருபுறமும் பிடித்துக்கொண்டு, 'உஷ்.. உஷ்.. உஷ்..' என உதடுகள் குவித்து காற்று ஊதிக்கொண்டிருந்தான். மீரா தன் பேகை கையிலெடுத்து பக்கவாட்டு ஜிப்பை திறந்தாள். உள்ளே விதவிதமாய் மாத்திரைப் பட்டைகள்.. ஒன்றிரண்டு ஆய்ன்மென்ட்கள்.. பேண்டேஜ்.. பிளாஸ்டர்..!!

"ம்ம்.. கையை எடு..!!" மீரா சொல்ல, அசோக் மூக்கிலிருந்து கைகளை விலக்கிக் கொண்டான்.

மீரா அசோக்கின் மூக்கில் கொஞ்சமாய் கொப்பளித்திருந்த ரத்தத்தை பஞ்சால் துடைத்து சுத்தம் செய்தாள். அப்புறம் ப்ளாஸ்டர் பிரித்து, சரக்கென இழுத்து, அசோக்கின் மூக்குக்கு குறுக்காக அழுத்தமாக ஒட்டிவிட்டாள்.

அன்புள்ள ராட்சசி - 7


 




அத்தியாயம் 12

வயலினும், புல்லாங்குழலும் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்து தேனிசையை கசிய.. கூடவே 'திம்.. திம்.. திம்..' என்று ட்ரம்ஸின் மெலிதான தாளமும் சேர்ந்து கொள்ள.. ஒரு ஆணுடைய மெலிதான, ஹஸ்கியான, ஏக்கமான குரலில் ஆரம்பமானது அந்தப் பாடல்..!!

'என்னோடு வந்திடு எனதுயிரே.. என் வாழ்வை நிரப்பிடு எனதுறவே..!!'

வீட்டு சுவரேறி வெளியே குதித்த அவள்.. தடுமாறி கீழே விழுந்தாள்..!! உடனே எழுந்து.. முழங்கையில் ஏற்பட்ட சிராய்ப்பை தடவிக்கொண்டே.. உற்சாகமாக ஓடி வந்தாள்..!! அவன் கிக்கரை உதைத்தான்.. ஆக்சிலரேட்டரை முறுக்கினான்..!! அவள் ஓடி வந்து பின் சீட்டில் அமர்ந்து கொண்டு.. 'போ.. போ..' என்று அவனுடைய தோளை தட்டி அவசரப் படுத்தினாள்.. பைக் பறந்தது..!! மொட்டைமாடியில் நின்று.. யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டிருந்த அவளுடைய அரசியல்வாதி அப்பா.. எதேச்சையாக இந்த காட்சியை காண நேரந்ததும்.. உடனடியாய் அவரிடம் ஒரு பதற்றம்..!! ஆத்திரம் அப்பிய முகத்துடன் படிக்கட்டில் தடதடவென இறங்கினார்.. தன்னுடைய அடியாட்களை அழைத்து.. கையை அப்படியும் இப்படியுமாய் ஆட்டி ஆட்டி.. கோபம் கொப்பளிக்க சில உத்தரவுகள் பிறப்பித்தார்..!! பிறகு அவர்களுடன் அந்த டாடா சுமோவில் வேகமாய் கிளம்பினார்..!!

குறுக்கும் மறுக்குமாய் வாகனங்கள் வர.. அதற்குள் லாவகமாக புகுந்து ஓடியது பைக்.. அந்த பைக்கை விடாமல் துரத்தியது டாடா சுமோ..!! அவனுடைய இடுப்பை அவள் இறுக்கி பிடித்துக்கொள்ள.. சர்ரென சீறிப்பறந்த பைக் சென்றதுமே.. படக்கென விழுந்தது சிவப்பு சிக்னல்..!! 'ச்சே..' என்று வெறுப்பாக தொடையை தட்டிக் கொண்டார் அரசியல்வாதி அப்பா..!!

இருபுறமும் பச்சை பசேலென அடர்த்தியான மரங்களுடன்.. நேர்வகிட்டு கூந்தல் போல நீளமாய் கிடந்த.. அந்த அழகான ஆளரவமற்ற தார்ச்சாலையில்.. அவன் பைக்கை கவனமாக செலுத்திக் கொண்டிருக்க.. இவள் கைகள் இரண்டையும் அகலமாய் விரித்து.. அப்படியே ஆனந்தத்தில் திளைத்தாள்..!!

'என்னோடு வந்திடு எனதுயிரே.. என் வாழ்வை நிரப்பிடு எனதுறவே..!!'

அன்புள்ள ராட்சசி - 8


 




அத்தியாயம் 14

அதன்பிறகு வந்த சில நாட்கள்.. மீரா என்ற புதிருக்கான விடையை அறிந்து கொள்வதில்.. அசோக்கிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்துகிற நாட்களாகவே அமைந்தன..!! முன்பிருந்தது போலல்லாமல்.. முற்றிலும் மாறுபட்ட ஒரு மீராவை அசோக் அந்த நாட்களில் காண நேர்ந்தது..!! அவளுடைய நடவடிக்கைகளின் அர்த்தத்தை.. அவ்வளவு எளிதாக அசோக்கால் விளங்கிக் கொள்ள முடியவில்லை..!! ஏரியின் மீது நின்று தான் பேசிய ஆவேச பேச்சு.. ஏதோ ஒருவகையில் மீராவை பாதித்திருக்கிறது என்பது மட்டுமே அசோக்குக்கு புரிந்தது..!! அது எந்தவகை பாதிப்பு.. அந்த பாதிப்பின் பலன் பாஸிட்டிவா, நெகட்டிவா.. என்பதை எல்லாம் சரியாக அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை..!!

அன்று அவன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியபோது.. ஒன்று.. மீரா தன்னை புரிந்து கொள்ளாமல் எரிந்து விழப் போகிறாள்.. இல்லை என்றால்.. தன் தவறை உணர்ந்து, மனமுருக மன்னிப்பு கேட்கப் போகிறாள்.. என்றுதான் அசோக் எதிர்பார்த்திருந்தான்..!! எதற்கும் சம்பந்தமில்லாமல்.. எங்கோ பார்த்துக்கொண்டு.. அவள் 'ச்சோ.. ச்ச்வீட்..' என்று சொன்னதை.. அவன் சற்றும் எதிர்பார்த்திரவில்லை..!! அப்படி சொல்கையில் அவளுடைய முகபாவனை வேறு.. அசோக்கை சற்று மிரள செய்திருந்தது.. அவளுடைய கண்ணீர் மட்டும் அவனுடைய மனதை பிசைவதாக இருந்தது.. ஆனால், அவளிடம் மேற்கொண்டு எதுவும் கேளாமல் மவுனமாகவே இருந்தான்..!! 'ச்சோ.. ச்ச்வீட்..' என்று சொல்லிவிட்டு.. கொஞ்ச நேரம் அமைதியாக ஆகாயத்தையே வெறித்து பார்த்துவிட்டு.. அடுத்து அவள் பேசிய வார்த்தைகள்..

"கெளம்பலாம்.. டைம் ஆச்சு..!!" என்பதுதான்.

சொல்லிவிட்டு அசோக்கை எதிர்பாராமலே, பைக் நோக்கி விடுவிடுவென நடந்தாள். அசோக்குக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதும் புரியவில்லை..!! அவஸ்தையுடன் அவளையே பார்த்தவன், பிறகு அவளின் பின்னால் நடந்தான்.. பில்லியனில் அவள் ஏறிக்கொள்ள.. பைக்கை உதைத்து கிளப்பினான்..!!

வாகன போக்குவரத்து அதிகமில்லாத தார்ச்சாலையில்.. வண்டி மிதமான வேகத்திலேயே சென்று கொண்டிருந்தது..!! ஏரியில் நனைந்த இருவரது உடல்களும்.. எதிரே வீசிய குளிர்ந்த காற்றுக்கு.. லேசாய் வெடவெடத்தன..!! அதே நேரம் இருவருடைய இதயங்களும்.. ஒருவித வெப்பத்தில் தகித்துக் கொண்டிருந்தன..!! இருவரும் ஒரு இறுக்கமான மனநிலையுடன்.. எதுவுமே பேசாமல்தான் சென்று கொண்டிருந்தனர்..!! அசோக்தான் மீராவின் அமைதியை நெடுநேரம் பொறுக்க முடியாமல்.. முதலில் பேச ஆரம்பித்தான்..!!

அன்புள்ள ராட்சசி - 9


 




அத்தியாயம் 16

அடிவயிற்றில் சென்ஸார் தாங்கியிருந்த அந்த நீர்க்குழாய்.. அசோக்கின் கைகள் குறுக்காக வந்ததுமே.. சரியாக புரிந்துகொண்டு சர்ரென நீர்க்கற்றையை கொட்டியது..!! கைகளை முதலில் கழுவிக்கொண்ட அசோக்.. பிறகு கழுவிய கைகளில் கொஞ்சமாய் நீர் தேக்கி.. வாயும் கொப்பளித்துக் கொண்டான்..!! டிஷ்யூ பேப்பர் உருவி, கைகளை துடைத்துக்கொண்டே.. கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தை கவனமாக பார்த்தான்..!! சற்றே கலைந்து ஒதுங்கியிருந்த முடிக்கற்றையை.. கைவிரல்களாலேயே ஒழுங்கு படுத்திக் கொண்டான்..!! சுருட்டப்பட்ட டிஷ்யூ பேப்பரை டஸ்ட் பின்னில் எறிந்துவிட்டு.. விருட்டென வாஷ்ரூம் கதவு திறந்து வெளியேறினான்..!!


மாலைநேரம் அது.. மஞ்சள்நிற நியான் விளக்குகளை ஸீலிங்கில் தாங்கிய காரிடார் அது.. கால்களை கவ்வியிருந்த கேன்வாஸ் ஷூ, டைல்ஸ் தளத்தில் அழுந்தி 'டக்.. டக்..' என சப்தம் எழுப்ப.. கைவிரல்கள் கோர்த்து சொடுக்கெடுத்தவாறே அசோக் மெல்ல நடந்தான்..!! சிறிது தூரம் நடந்து இடப்பக்கம் திரும்பியதுமே.. ஃபுட்கோர்ட்டின் அந்த விஸ்தாரமான மையப்பகுதி பார்வைக்கு வந்தது..!! தூரத்தில் மீரா தெரிந்தாள்.. அவள் வழக்கமாக அமர்கிற அதே டேபிளில்.. கைகள் ரெண்டையும் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு.. அவளை நோக்கி நடந்து செல்கிற இவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..!! அவளுக்கு எதிரே கிடந்த சேரில் சென்று இவன் அமர்ந்ததுமே.. அவளை ஏறிட்டு அவசரமாக சொன்னான்..!!

"ம்ம்.. சாப்பிட்டும் முடிச்சாச்சு.. இப்போவாவது சொல்லு..!!"

அன்புள்ள ராட்சசி - 10


 




அத்தியாயம் 18

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில்.. அதிக சலசலப்பு இல்லாமல் சாந்தமாகவே காட்சியளித்தது அந்த கட்டிடம்.. வடபழனி R-8 காவல் நிலையம்..!! கட்டிடத்துக்குள்ளே.. கைதிகளை அடைத்து வைக்கிற ஸெல்லுக்குள்.. செங்கலாலும், சிமெண்டாலும் ஆன அந்த மேடை மீது.. சற்றே வாயை பிளந்து வைத்தவாறு உறங்கிக்கொண்டிருந்தார் ஸ்ரீனிவாச பிரசாத்..!! எஸ்.ஐ ஆக இருக்கையிலேயே.. எல்லோரும் அவரை எஸ்.பி என்று அழைக்கிறார்கள் என்றால்.. தாய், தந்தை வைத்த தனது பெயருக்குத்தான் அவர் நன்றி கூற வேண்டும்..!! 'எஸ்.பி ஸார் வர்றார்.. எஸ்.பி ஸார் போறார்..' என்பது மாதிரி கான்ஸ்டபிள்கள் தங்களுக்குள் பேசி.. அந்த ஸ்டேஷனுக்கு புதிதாக வருகை தந்திருக்கிற நபர்களை.. புரியாமல் தலை சொறிய வைப்பார்கள்..!!

மஃப்டி உடையிலே உறங்கிக்கொண்டிருந்தார் ஸ்ரீனிவாச பிரசாத்.. மார்பு திறந்திருக்க, சட்டையின் மேலிரண்டு பட்டன்கள் கழன்டிருந்தன.. தடித்த தங்கச்சங்கிலி ஒன்று அவரது கழுத்தில் தகதகத்தது..!! அசதியால் ஏற்பட்டிருந்த அவருடைய ஆழ்ந்த உறக்கத்தை.. ஸ்டேஷனுக்கு முன்புறம் இருந்து, சலசலவென வந்த அந்த சப்தம்.. சற்றே அசைத்து கலைத்துப் பார்த்தது..!! கான்ஸ்டபிள் கனகராஜன்.. கம்ப்ளைன்ட் கொடுக்க வந்த யாரிடமோ.. அசுவாரசியமான குரலில் விசாரித்துக் கொண்டிருந்தார்..!!

"ஓடிப்போயிட்டாளா..??"

"கா..காணாமப் போயிட்டாங்க..!!"

"ரெண்டும் ஒன்னுதானய்யா..??"

"இ..இல்ல ஸார்.. ரெண்டும் வேற வேற..!!"

முன்பிருந்து வந்த சப்தம் மட்டும் இல்லாமல்.. அவருடைய முகத்துக்கு முன்பாக 'ஈஈய்ங்.. ஈஈய்ங்..' என்று இரைச்சலிட்டவாறே சுற்றி சுற்றி வந்த ஈ ஒன்று.. இப்போது அவரது மூக்கிலேயே சென்று அமர.. அவருடைய உறக்கம் முழுமையாக கலைந்து போனது..!! 'ப்ச்..' என்று சலிப்பான குரலுடன் முகத்துக்கு முன்பாக கையை வீசியவர்.. தலையை சிலுப்பியவாறே எழுந்து அமர்ந்தார்..!! கண்கள் தூக்கத்தால் இன்னும் சுருங்கிப்போயிருக்க.. முரட்டுத்தனமான அவருடைய முகவெட்டில் இப்போது ஒருவித கடுகடுப்பு..!! ஈ மீது எழுந்த கடும் எரிச்சலுடன்.. பக்கத்து அறையில் இருந்து வந்த கனகராஜனின் கட்டைக்குரல் வேறு அவருக்கு கடுப்பை கிளப்ப..

"ஏய்ய்ய்..!!!"

என்று இங்கிருந்தே அந்த அறையைப் பார்த்து கத்தினார்..!! இவருடைய குரல் கனகராஜனின் காதில் விழவில்லை போலிருக்கிறது.. எந்த தடையும் இல்லாமல் தனது எகத்தாளப் பேச்சை அவர் தொடர்ந்துகொண்டிருந்தார்..!!

"என்னய்யா.. வெளையாடுறீங்களா..?? எல்லாம் தண்ணி போட்டு வந்திருக்கீங்களா..??"

"ஐயோ.. இ..இல்ல ஸார்..!!"

"அப்புறம்..?? பேர் என்னன்னு கேட்டா இந்தாள் மீரான்றான்.. நீ என்னடான்னா மீரா இல்லைன்ற..??"

அன்புள்ள ராட்சசி - 11


 




அத்தியாயம் 20

தும்பைப்பூவின் வண்ணத்துடன் மிக தூய்மையாகவே காட்சியளித்தது அந்த அறை..!! திரும்புகிற பக்கம் எங்கெங்கிலும்.. வெண்ணிறமே பொங்கி வழிந்தது அந்த அறையில்..!! வெள்ளி நிலவை வெட்டிக்கொணர்ந்து.. பாலீஷிட்டு பதித்திட்டமாதிரி.. தளத்தில் அணிவகுத்திருந்த டைல்ஸ்..!! கறந்த பாலை நிறமியாக்கி.. பெயிண்ட் என்ற பெயரில் தடவினார்களோ என தடுமாறும் அளவிற்கு.. சுவற்றிலும் ஸீலிங்கிலுமான வர்ணப்பூச்சு..!! சிறிய அறைதான்.. அதன் பெரும்பான்மையான பரப்பு வெறும்பான்மையாகவே காட்சியளித்தது..!! ஓரமாக கிடந்த படுக்கையும், சாய்வாக நின்றிருந்த இருக்கையும்.. வெண்ணிற விரிப்பையே வெளிப்புறம் போர்த்தியிருந்தன..!! வெண்மையான வெளிச்சத்தை மட்டுமே கசிவேனென்று.. ஒற்றைக்காலில் நின்று அடம்பிடித்தது மின்விளக்கொன்று..!! அந்த அறைக்குள் உலவித் திரிந்தால்.. உடைத்த தேங்காய்க்குள் ஊர்ந்து திரிகிற.. ஒரு கட்டெறும்பின் உணர்வு கிட்டுவது கட்டாயம்..!!

அறையின் நிறம் மட்டுமல்ல.. அதன் மையத்தில் அமர்ந்திருக்கிற.. மீராவுடைய அகத்தின் நிறமும் அஃதேதான்..!!

திரைச்சீலை விலகியிருந்த அறையின் ஜன்னல்.. கதிரவனின் வெளிச்சத்தையும், காலைநேர காற்றினையும்.. அறைக்குள் ஒருசேர அனுப்பிக்கொண்டிருந்தது..!! மீரா தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள்..!! வலது கால் இடது தொடையின் மீது.. இடது கால் வலது தொடையின் மீது.. தளிர்ப்பாதங்கள் இரண்டும் தடம்புரண்டு மேலே பார்த்தன..!! முழங்கால் தரையை தீண்டியிருக்க.. முதுகுத்தண்டு விறைப்பாய் நின்றிருக்க.. மூக்கு சீராக மூச்சினை வெளியிட்டது..!! இமைகள் விழிகள் மீது முழுமையாய் கவிழ்ந்திருந்தன.. இரண்டு கைகளும் மார்பின் குறுக்கே மையமாய் குவிந்திருந்தன..!! குழைவான இடுப்பின் சதைப்பிதுக்கத்தில்.. துளிர்த்திருந்த சில வியர்வை முத்துக்கள்.. ஜன்னல் வெளிச்சத்துக்கு மின்னிக் கொண்டிருந்தன..!! புஜங்கள் அணையிட்ட நெஞ்சத்தடாகத்தில்.. பூத்திருந்த இரு தாமரை மொக்குகள்.. விடுகிற மூச்சுக்கு விரிந்து கொண்டிருந்தன..!!

அன்புள்ள ராட்சசி - 12


 




அத்தியாயம் 21

மனிதர்களை போல அவர்களுடைய மனதிற்கு ஒற்றை முகம் கிடையாது.. அது எப்போதும் பன்முகங்கள் கொண்டதாகவே இருக்கிறது.. அறுதியான ஒரு வரையறைக்குள் அகப்பட மறுக்கிறது..!! 'ஒருவன் மனது ஒன்பதடா.. அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா' என்று கவியரசர் சொன்னது உங்களுக்கு ஞாபகம் வரலாம்..!! பலதரப்பட்ட சூழ்நிலைகளில்.. பலவிதமான முகங்களை மனிதமனம் மாட்டிக்கொள்கிறது.. அது எல்லோருமே அறிந்த ஒன்றுதான்..!!

நான் இங்கே சொல்லவிருப்பது சற்று வித்தியாசமானது..!! எதிர்பாராத இக்கட்டான ஒற்றைச்சூழலில்கூட.. மனிதருடைய ஒற்றைமனம்.. இந்த மாதிரி பன்முகங்களை.. ஒரே நேரத்தில் வெளிக்காட்டக் கூடும்..!! இக்கட்டான ஒரு சூழ்நிலையில்.. நம்மில் எத்தனை பேரால் தெளிவாக சிந்திக்க முடிகிறது..?? ஒருமனதாக ஒரு முடிவெடுக்க தடுமாறுகிறோமே..?? ஏன் அப்படி..??

'மனம் என்பது மூளையில் எழுகிற எண்ணங்களின் தொகுப்புதான்' என்கிறது அறிவியல் ஆராய்ச்சி..!! எதிர்பாராத ஒரு நிகழ்வினால்.. எண்ணங்களில் ஏற்படுகிற குளறுபடியினால்.. மனம் ஒரே நேரத்தில் பலவித முகங்களை உடனுக்குடன் மாற்றிக்கொள்ளலாம்..!! தூரத்தில் அசோக்கை பார்க்க நேரிட்ட மீராவுக்கும் அதுதான் நேர்ந்தது..!!

பார்த்த விழிகள் பார்த்தபடியே இருந்தன.. ஜன்னல் கம்பிகளை பற்றிய விரல்கள் பற்றியபடியே இருந்தன.. மீராவுடைய உடலும் பார்வையும் உறைந்து போயிருக்க.. அவளுடைய உளமும் சிந்தனையும் உலுக்கிவிடப் பட்டிருந்தன..!! அடுக்கடுக்காய் பல குழப்பக் கேள்விகள் அவசரமாய் கிளம்பி.. அவளுடைய மனதின் மையத்தில் குவிய ஆரம்பித்தன..!!

அன்புள்ள ராட்சசி - 13


 




அத்தியாயம் 22

வடபழனி NGO காலனி மெயின் ரோட்..!! வளர்ந்து அடர்ந்திருந்த பச்சை மரங்கள்.. வழிநெடுக தார்ச்சாலைக்கு குடைவிரித்திருந்தன..!! கிளைகளையும், இலைகளையும் ஊடுருவ முடியாத சூரியக்கதிர்கள்.. செறிவற்ற வெளிச்சத்தையே செல்கிற பாதையில் தெளித்திருந்தன..!! மத்தியில் வெண்ணிறப்பட்டை இழைக்கப்பட்ட கருஞ்சாலையின் தேகம் எங்கும்.. மஞ்சள் நிறத்திலான இலைதழைகள் மண்டிப்போய் கிடந்தன..!! சன்னமாய் புகை துப்பியவாறே அசோக்கின் பைக்.. சரக்கென அச்சாலையில் சீறியபோது.. பதறிப்போன மஞ்சள் இலைகள்.. பறந்து சிதறி.. பாதையில் இருந்து விலகி வழிவிட்டன..!!

வண்டியின் வேகத்தை அதிகம் குறைக்காமல்.. வலதுபுறம் செல்கிற சாலையில் அசோக் திரும்பினான்..!! எதிர்பாராத விதமாய் ஒரு ஆட்டோ.. எதிர்ப்புறம் இருந்து வெளிப்படவும்.. ஷகிரா இடுப்பசைப்பது மாதிரியான ஒரு லாவகத்துடன்.. பைக்கை நெளித்து சுளித்து வளைத்து.. ஆட்டோவின் மூக்குரசி முத்தமிடுவதை இறுதி நொடியில் தவிர்த்தான்..!! சடனாக பிரேக்கிட்ட ஆட்டோ ட்ரைவர்.. சத்தமாய் உதிர்த்த கெட்ட வார்த்தை.. காற்றோடு கலந்து காதில் விழுவதற்குள்.. காத தூரம் பறந்திருந்தான்..!!

அடுத்த இரண்டாம் நிமிடத்தில்.. அசோக்கின் பைக் அந்த தெருவுக்குள் நுழைந்தது..!! அப்படி நுழைந்ததுமே.. அந்த தெருவில் நிலவிய ஒருவித அமைதியை.. அசோக்கால் உடனடியாக உணர முடிந்தது..!! வீதியின் இருபுறமும் கோடிகளை தின்று கொழுத்துப் போயிருந்த வீடுகள்..!! எல்லா வீடுகளுக்கு முன்பாகவும், ஏதாவது ஒரு காஸ்ட்லி கார் மினுமினுப்புடன் நின்றிருந்தது..!! அந்த வீடுகளை விடுத்து வெளிப்பட்டிருந்த மனித தலைகள்.. கேட்டுக்கருகே கொத்துக்கொத்தாய் குழுமியிருந்தன.. கிசுகிசுப்பான குரலில் ஏதோ ரகசியம் பேசிக்கொண்டிருந்தன..!!

அன்புள்ள ராட்சசி - 14


 




அத்தியாயம் 23

மனித மனதில் ஒரு மாற்றத்தை விதைப்பதென்பது.. மலையைக் குடைந்து பாதை அமைப்பதற்கு சமானம்..!! அந்த மனம் அத்தனை நாளாய் நம்பியிருந்த சித்தாந்தங்கள்.. எல்லாவித நிகழ்விற்குமான அந்த மனதின் எதிர்வினை சிந்தனைகள்.. இயல்பான அதன் அணுகுமுறைகள்.. இறுகிப்போன அதன் குணநலன்கள்.. இவை எல்லாவற்றையும் தகர்த்து எறிந்தால் மட்டுமே.. எந்தவொரு ஒரு மனிதனின் மனதையும் மாற்றிவிடுகிற சூத்திரம் மட்டுப்படக்கூடும்..!! சாத்தியமான காரியமே எனினும்.. சாதாரணமான காரியம் என இயலாது..!!

கடினமான அந்த காரியத்தை, மிக எளிதாக செய்து முடிக்கிற ஒன்று.. அண்டத்தில் உண்டெங்கில், அதனை அன்பென்றுதான் சொல்ல வேண்டும்..!! ஒரு உயிர் இன்னொரு உயிர் மீது கொண்ட உறுதியான அன்பென்பது.. உன்னதமானது மட்டுமல்ல.. சக்தி வாய்ந்தது.. வலிமை கொண்டது.. அளப்பரிய ஆற்றல் படைத்தது..!! அன்பினை ஒரு வேதியியல் வினையூக்கியுடன் ஒப்பிடலாம்.. அது மனித மனதில் ரசாயன மாற்றத்தை விளைவிக்க வல்லது.. அந்த மாற்றம் நேர்மறையானதாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.. எதிர்மறையான மாற்றமாகக்கூட இருக்கலாம்..!! அன்பு.. மனதை இளக, உருக செய்கிறது.. இறுக, உறைய வைக்கிறது.. மென்மையாக்குகிறது.. வன்மையாக்குகிறது.. மூர்க்கமாக்குகிறது.. சில சமயங்களில் முட்டாளாக்குகிறது..!! ஒரு வடிவத்தில் இருக்கிற மனதினை.. வேறொரு வடிவத்துக்கு சுலபமாக மாற்றுகிற பண்பு.. அன்பின் அனுகூலங்களில் ஒன்று..!!

'காதல் வீரனை கோழையாக்கும்.. கோழையை வீரனாக்கும்..' என்கிற பிரபலமான மேற்கோள் வாசகத்தில்.. காதல் என்ற சொல்லுக்கு பதிலாக, அன்பு என்ற சொல்லை பயன்படுத்தலாம் என்பது எனது அபிப்ராயம்.. நம்மூரில் காதல் என்கிற சொல், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான அந்தரங்க அன்பை மட்டுமே குறிக்கிற சொல்லாக இருப்பதாலேயே இதை சொல்கிறேன்..!! எந்தவகை அன்புக்குமே மனிதமனத்தை மாற்றிவிடுகிற வல்லமையுண்டு.. சங்ககாலத்தில் முறத்தால் அடித்து புலியை விரட்டியவள் ஒரு தமிழ்த்தாய்தானே ஒழிய.. தமிழ்க்காதலி அல்ல..!!

அன்புள்ள ராட்சசி - 15


 




அத்தியாயம் 24

'கண்ணிழந்தான்.. பெற்றிழந்தான்.. எனவுழந்தான்..' என்கிற கம்பராமாயண வரிகள் கொண்டு.. அசோக்கின் மனநிலையை கொஞ்சமேனும் அளந்திட, அறிந்திட முயலுவோம்..!! கண்பார்வையற்ற மனிதவாழ்வு மிகவும் கொடுமையானதொரு வாழ்வுதானே.. கனவென்ற போலிமகிழ்ச்சி பெறவும் கொடுத்துவைத்திடாத வாழ்வுதானே..?? பிறவியிலிருந்தே பார்வையற்ற ஒருவனின் மனநிலை எப்படி இருக்கும்.. தொடுகிற பொருட்களின் தோற்றம் கண்டிட துடிக்கும் அவனது ஏக்கம் எப்படி இருக்கும்..?? துயரம்தானே..??

அதைவிட பெருந்துயரம் எது தெரியுமா..?? மண்ணில் ஜீவித்த நாள்முதலாய், கண்ணில் ஜீவனன்றி வாழும் ஒருவனுக்கு.. விழிகளில் ஒளி கொடுத்து.. வெளிச்ச வெள்ளத்தில் அவனை நனைத்து.. உலகின் அழகை அவனுக்கு உணர்த்தி.. வண்ணங்களின் அற்புதத்தை அக்கண்களில் வார்த்து.. கண்பார்வையின் அருமையை முழுதாக அறியவைத்து.. பிறந்ததன் பலனை அடைந்துவிட்டதாய் அவன் பறந்து திரிகையில்.. மீண்டும் அவனது பார்வையை பறித்து இருளில் தள்ளினால்.. அவனது மனநிலை எப்படி இருக்கும்..?? முன்பிருந்ததைவிட பெருந்துயரம்தானே..??

காதலும் கூட கண்பார்வை போன்றதுதான்.. அசோக்கின் நிலையும்கூட கிட்டத்தட்ட அத்தனை கொடிதுதான்..!! பெரியவன் ஆனதிலிருந்தே பெண் நட்பு அறியாதவன்.. காதலர்களுக்கு மத்தியிலே காலம் சென்றாலும், அவனுக்கென்று ஒரு காதல் அமையப் பெறாதவன்.. வெளியிலே வெறுப்பென்று நடித்து திரிந்தாலும், உள்ளுக்குள் காதலுக்காக உண்மையாய் ஏங்கியவன்..!! தேடியிருந்த தேவதையாய் மீரா அவன் வாழ்வில் வந்தாள்.. பெண்ணின் ஸ்பரிஸத்தை அவனுக்கு உணர்த்தினாள்.. காதலெனும் உன்னத உணர்வை அவனுக்குள் ஊற்றினாள்.. அந்த உணர்வு தந்த ஆனந்தத்தில் அவன் திளைத்துக் கொண்டிருக்கும்போதே.. கண்ணைப் பிடுங்கிப் போனது மாதிரி.. அவனது காதலைப் பறித்துச் சென்றால்..??

அன்புள்ள ராட்சசி - 16


 




அத்தியாயம் 27

இருட்டுக்குள் இப்போது மிக பிரகாசமாக நின்றிருந்தது அந்த விருந்தினர் மாளிகை.. கூரையில் இருந்து கீழ்தொங்கிய மின்விளக்குகள் வீட்டுக்குள்ளே வெளிச்சத்தை கிளப்பின என்றால்.. தரையில் இருந்து மேற்கிளம்பிய குமிழ்விளக்கு கம்பங்கள் வீட்டுக்கு வெளியே ஒளியை பரப்பிக் கொண்டிருந்தன..!! வாயிற்கதவுக்கருகே ஸ்ரீனிவாச பிரசாத்தின் ஜீப்போடு சேர்த்து.. இப்போது மேலும் இரண்டு போலீஸ் ஜீப்புகள், ஒரு ஒழுங்கற்ற கோணங்களில் நிறுத்தப்பட்டிருந்தன.. அதில் ஒரு ஜீப்பின் நெற்றியில், சிவப்பு விளக்கு இன்னும் ஒளிர்ந்து கொண்டிருந்தது..!! விஷயம் கேள்விப்பட்டு வீட்டுக்கு வெளியே குழுமியிருந்த ஜனங்களின் கண்களில்.. ஒருவித ஆர்வமும், மிரட்சியும் ஒருசேர காணக்கிடைத்தன..!! வீட்டை சுற்றி வளர்ந்திருந்த மரங்கள்.. சூழ்நிலையின் தீவிரம் உணர்ந்து.. அசையக்கூட மனமின்றி அப்படியே உறைந்து போயிருந்தன..!!

வீட்டுக்குள்ளே.. காவல்துறையை சேர்ந்த கைரேகை மற்றும் தடவியல் குழுவினர் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர்..!! அவர்களிடம், ரெட்ஹில்ஸ் இன்ஸ்பெக்டர் மலரவன் ஏதேதோ கேள்விகள் கேட்டுக்கொண்டும், உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டும்.. குற்றம் நடந்திருந்த இடத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்..!! ஆதாரங்கள் என்ற பெயரில் வீட்டிலிருந்த சில பொருட்கள் சேகரிக்கப்பட்டன.. ரத்தத்தில் நனைந்திருந்த மாய கிருஷ்ணனின் சிலை, பாலித்தீன் கவருக்குள் பத்திரமாக்கப்பட்டது..!! அறையின் ஒருமூலையில்.. எச்சில் வடிகிற நாக்கை நீளமாக தொங்கப் போட்டுக்கொண்டு அந்த மோப்ப நாய்.. வீட்டுக்குள் நுழைந்ததுமே வீராவேசமாக பின்பக்கம் ஓடி.. ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு சீறிப்பாய்ந்து.. பிறகு ஒரு புதரைக் கண்டதும் சிறுநீர் பெய்துவிட்டு.. மீண்டும் வீட்டுக்குள் வந்து ஓரமாக செட்டில் ஆகியிருந்தது..!!

உயிரற்ற உடல்கள் பிரேத பரிசோதனைக்கென மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்க.. அவை விழுந்து கிடந்த இடங்கள் சாக்பீஸால் மார்க் செய்யப்பட்டிருந்தன..!! எப்போதோ உறைந்து போயிருந்த கருஞ்சிவப்பு ரத்தச்சேற்றில்.. இப்போது ஈக்கள் ரீங்காரமிட்டபடி வந்தமர்ந்து, மொய்க்க ஆரம்பித்திருந்தன..!! காற்றில்கூட குருதியின் நெடி கலந்துபோய்.. சுவாசிப்பவர்களின் முகத்தை சற்றே சுளிக்க வைத்தது..!!

அன்புள்ள ராட்சசி - 17







அத்தியாயம் 30

காதலியின் புகைப்படத்தை கையில் ஏந்தியிருந்த அசோக்.. இதயத்தை ஆட்கொண்ட அந்த இன்ப அதிர்ச்சியில்.. சில வினாடிகள் சிலை போலவே உறைந்திருந்தான்..!! வெகுதூரம் ஓடிக்களைத்தவன் போல அவனுக்கு மூச்சிரைப்பு ஏற்பட்டது.. வெடவெடத்த விரல்களால் புகைப்படத்தை பற்ற கடினமாயிருந்தது..!! உடலெல்லாம் ஜிலீரென்று ஒரு சிலிர்ப்பு.. உள்ளமெல்லாம் ஜிவ்வென்று ஒரு பூரிப்பு..!! சில வினாடிகள்தான்.. உடனடியாய் அவனை ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது..!!

"மம்மிஈஈஈஈ..!!" என்று கத்திக்கொண்டே உள்ளறைக்கு ஓடினான்.

"என்னடா..??" பாரதி கிச்சனில் இருந்து எட்டிப் பார்த்தாள்.

"மீ..மீரா.. மீரா மம்மி..!!" நடுநடுங்கிய கையிலிருந்த புகைப்படத்தை அவளிடம் நீட்டினான்.

"மீ..மீராவா..??" புகைப்படத்தை கையில் வாங்கிப் பார்த்த பாரதிக்கு எதுவும் புரியவில்லை.

"இ..இந்த ஃபோட்டோ.. இ..இது.. இது மீரா மம்மி.. இ..இது.. எ..என் மீராதான்.. ச..சந்தேகமே இல்ல..!!" உள்ளத்தில் இருந்த தவிப்பில் உதடுகள் படபடக்க, வார்த்தைகள் தெளிவாக வெளிவர மறுத்தன.

"ஓ..!! இ..இது.. இது எப்படி..??" பாரதி சந்தோஷமும், குழப்பமுமாய் மகனை ஏறிட்டாள்.

"நா..நான்.. நான் உன்கிட்ட சொல்லிருக்கேன்ல.. அ..அந்தப்பொண்ணு.."

"எந்தப்பொண்ணு..??"

"அ..அதான் மம்மி.. அந்த மும்தாஜ்.. எ..எனக்கு யோகா சொல்லி தந்த பொண்ணு..!!"

"ஆமாம்..!!"

"அ..அந்தப்பொண்ணுதான்.. அ..அவ... அவங்க.. படிக்கிறதுக்கு எனக்கு ஒரு புக் தந்தாங்க மம்மி.. அ..அந்த புக்குக்குள்ளதான் இந்த ஃபோட்டோ இருந்தது..!!"

"அ..அப்படினா..??"

"ஆமாம் மம்மி..!!! அ..அந்த மும்தாஜ்க்கு மீரா பத்தி தெரிஞ்சிருக்கணும்.. அவங்கட்ட விசாரிச்சா மீராவை எப்டியாவது கண்டுபுடிச்சுடலாம்..!! யெஸ்.. யெஸ்.. யெஸ்..!!!!"

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...