Social Icons

கண்ணாமூச்சி ரே ரே - 4


 




அத்தியாயம் 8

அகழி வந்து ஒருநாள் கூட ஆகவில்லை.. அதற்குள்ளாகவே ஆதிராவின் மனதில் ஒரு கலக்கம் உருவாகி இருந்தது.. அவளுடைய மனம் ஒருவித குழப்பத்தில் உழல ஆரம்பித்திருந்தது..!! அகழி வருவதற்கு முன்பாக.. குறிஞ்சிதான் தாமிராவை கொண்டுபோய் விட்டாள் என்று கூறப்பட்டதை.. அவளால் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது..!!

ஆனால் இப்போது.. வனக்கொடி தான்கண்ட காட்சியினை மலையுச்சியில் வைத்து அவளுக்கு விவரித்தபிறகு.. வீட்டுக்குள் வீசிய அதே வாசனையை இந்த சிங்கமலையிலும் நுகரநேர்ந்தபிறகு.. ஆதிராவின் மனதில் சற்று ஆழமாகவே குறிஞ்சி இறங்கியிருந்தாள்.. குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தாள்..!! மனதில் இருந்த குழப்பத்தை வெளியில் சொல்ல ஆதிரா விரும்பவில்லை.. அதேநேரம், அந்த குழப்பத்திற்கான விடையை தெரிந்துகொள்கிற ஆர்வமும், அவளுக்குள் இப்போது மூண்டிருந்தது..!! குழப்பத்தையும் ஆர்வத்தையும் மனதுக்குள் போட்டு மூடியவள்.. வனக்கொடியிடம் திரும்பி வறண்ட குரலில் சொன்னாள்..!!

"நேரமாச்சும்மா.. கெளம்பலாம்..!!"

"ம்ம்.. சரி ஆதிராம்மா.. கெளம்பலாம்..!! சிபித்தம்பி வேற எந்திரிச்சிருக்கும்னு நெனைக்கிறேன்..!!"

ஆதிராவும் வனக்கொடியும் சிங்கமலையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார்கள்.. சரிவாகவும் சறுக்கலாகவும் இருந்த அந்த குறுகியபாதையில் மிகப்பொறுமையாக இறங்கினார்கள்.. ஆதிரா முன்னால் நடக்க, அவள் பின்னே வனக்கொடி..!!

ஆதிராவின் கால்கள் நடைபோட்டுக் கொண்டிருந்தாலும்.. அவளுடைய மனம் வேறெதையோ அசைபோட்டுக் கொண்டிருந்தது.. அந்த மனம் முழுதையும் அவளுடைய தங்கையே இப்போது ஆக்கிரமித்திருந்தாள்..!! ஆதிராவும் தாமிராவும் சிறுமிகளாக இருந்தபோது.. இந்த மலைப்பாதையிலும், அந்த காட்டுமரங்களுக்கு இடையிலும்.. இருவரும் ஓடித்திரிந்து விளையாடியதெல்லாம் இப்போது ஆதிராவின் ஞாபகத்திற்கு வந்தன..!!


அடர்ந்த மரங்களும் அதிகாலைப் பனியும் செறிந்திட்ட அந்த மலைப்பாதையில்.. ஆதிரா இப்போது நடந்துசெல்ல.. அவளுக்கு எதிரே உதயமானாள் சிறுமி தாமிரா..!! எட்டுவயது குட்டிப்பெண்ணாய்.. பட்டுப்பாவாடை கட்டிக்கொண்டு.. ரெட்டைஜடை போட்டுக்கொண்டு.. கைவிரல்களை விரித்து ஆட்டிக்கொண்டு.. கண்ணிமைகளை வெடுக்கென வெட்டிக்கொண்டு.. மழலைக்குரலில் பாட்டொன்றை பாடிக்கொண்டு..!!

"ஆக்குபாக்கு வெத்தலபாக்கு தாம்தூம் தஸம்..!!"

தங்கை பற்றிய நினைவுடனே நடந்து சென்ற ஆதிராவுக்கு.. எட்டுவயது தாமிரா நிஜமாகவே எதிரேதோன்றி பாடுவது போல ஒரு மாயத்தோற்றம்..!!

"தஸ்ஸைதூக்கி மேலபோட்டா செட்டியார்வீட்டு நண்டு..!!"

பாடலுடன் சேர்த்து நளினமாக ஆடிக்கொண்டே.. அந்த மலைப்பாதையில் ஆதிராவை வழிநடத்தி கூட்டிச்செல்வது போல ஒரு மருட்சி..!!

"நண்டைதூக்கி மேலபோட்டா நாகரத்ன பாம்பு..!!"

அழகாக கைவிரல்களை ஆட்டிஆட்டி குட்டித்தாமிரா பின்னோக்கி நடந்து செல்ல.. ஆதிரா அவளுடைய முகத்தை ஏக்கமாக பார்த்துக்கொண்டே முன்னோக்கி நடந்தாள்..!!

"பாம்பைதூக்கி மேலபோட்டா பஞ்சவர்ணக் கிளி..!!"

பச்சரிசி பல்வரிசை மின்ன காந்தச்சிரிப்பு சிரித்தாள் தாமிரா..!! தளர்வாக நடைபோட்ட ஆதிராவின் உதடுகள் இப்போது தடதடத்தன.. 'தாமிராஆஆ' என்று ஒருவித ஆதங்கத்துடன் முணுமுணுத்தன..!! நெஞ்சைப் பிசைவது மாதிரியாய் அவளுக்குள் ஒரு உணர்வு..!!

"கிளியைதூக்கி மேலபோட்டா கிருஷ்ணனோட கொண்டை..!! ஹாஹாஹாஹா.. ஹாஹாஹாஹா..!!" பாடிமுடித்த தாமிரா கலகலவென கைகொட்டி சிரித்தாள்.

"தாமிராஆஆஆ..!!"

வாய்விட்டே அழைத்துவிட்ட ஆதிரா, கைநீட்டி வேறு தங்கையின் மாயவுருவை பிடிக்க முயன்றுவிட்டாள்..!! அவளுடைய கைக்குள் அகப்படாமல் தாமிரா பட்டென்று மறைந்துபோக.. அடுத்தகணமே நிஜவுலகுக்கு வந்து ஆதிரா திருதிருவென விழித்தாள்..!!

"ஆதிராம்மாஆஆ.. என்னம்மா ஆச்சு..??" பின்னால் நடந்து வந்த வனக்கொடி, பதற்றத்துடன் வந்து ஆதிராவின் தோள்பற்றினாள்.

"ஒ..ஒன்னும்.. ஒன்னும் இல்லம்மா..!! ஏ..ஏதோ.. பழைய ஞாபகம்..!! வா..வாங்க.. போலாம்..!!"

தடுமாற்றமாகவும் சமாளிப்பாகவும் சொன்ன ஆதிரா.. தாமதம் சிறிதும் செய்யாமல் விடுவிடுவென முன்னால் நடந்தாள்..!! அவள் செல்வதையே ஓரிரு வினாடிகள் திகைப்பாக பார்த்த வனக்கொடி.. பிறகு ஓடிச்சென்று அவளுடன் இணைந்துகொண்டாள்.. ஆறுதலாக ஆதிராவின் கையை பற்றிக்கொண்டாள்.. இப்போது இருவரும் சேர்ந்து நடைபோட்டார்கள்..!! வனக்கொடி அவ்வாறு வந்து கைபற்றிக்கொண்டது, ஆதிராவுக்கு இதமாக இருந்தது.. அவளுடைய மனதில் மெலிதாக ஒரு நிம்மதி பரவியது..!!

வீட்டை நெருங்க சற்று தொலைவு இருக்கையிலேயே.. தோட்டத்தில் நின்றிருந்த சிபி இவர்களது பார்வையில் பட்டான்.. கூடவே.. அவனுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த திரவியமும்..!! திரவியம் தணிகைநம்பியின் தொழில்முறை நண்பர்.. வயதில் அரைச்சதம் அடித்தவர்..!! தென்றல் இருவருக்கும் தேநீர் தயாரித்து கொடுத்திருக்கவேண்டும்.. இருவருடைய கையிலும் வெண்ணிற பீங்கான் கோப்பை..!!


அகழியில் தணிகைநம்பிக்கு சொந்தமாக ஒரு டீ எஸ்டேட் இருக்கிறது.. அதுவல்லாமல், திரவியத்தின் மேலாண்மையிலும் மேற்பார்வையிலும் இயங்குகிற டீ பேக்டரியிலும் கணிசமான ஒரு முதலீட்டுப்பங்கு அவருக்குண்டு..!! ஆதிராவின் குடும்பம் மைசூருக்கு புலம்பெயர்ந்தபிறகு.. அவர்களுடைய மாளிகைவீட்டை பராமரிக்கிற பொறுப்பு வனக்கொடிக்கு வழங்கப்பட்டது போல.. தணிகைநம்பியின் பிற சொத்துக்களை நிர்வகிக்கிற பொறுப்பு திரவியத்திற்கு வந்துசேர்ந்திருந்தது..!! தணிகைநம்பி அவ்வப்போது அகழி வந்து, ஓரிரு நாட்கள் தங்கியிருந்து, கணக்குவழக்கு பகுப்பாய்வதோடு சரி..!! மற்றபடி.. தணிகைநம்பியின் சொத்துக்கள் அனைத்தையும் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருப்பது..

"என்னம்மா.. காலங்காத்தாலேயே காட்டுக்குள்ள போய் சுத்திட்டு வர்றீங்க..??" என ஆதிராவைப் பார்த்து இதமான புன்னகையுடன் கேட்ட இந்த திரவியம்தான்..!!.

"ஒ..ஒன்னும் இல்ல அங்கிள்.. சும்மா.. சிங்கமலை வரை போயிருந்தோம்..!! நீங்க எப்ப வந்தீங்க..??"

"வந்து அரைமணி நேரம் ஆச்சுமா.. காலைலயே உன்கையால சூடா ஒரு காபி குடிக்கலாம்னு நெனச்சு வந்தேன்.. கடைசில வழக்கம்போல தென்றல் போட்ட டீயையே குடிக்கவேண்டியதா போய்டுச்சு..!! டயர்டா தூங்கிட்டு இருந்த உன் புருஷனையும் தட்டியெழுப்புற மாதிரி ஆய்டுச்சு..!! காலங்காத்தாலேயே வந்து கடுப்பை கெளப்புற இந்த அடியேனை மன்னிச்சுக்கங்க ரெண்டுபேரும்....!! ஹாஹா..!!" சொல்லிவிட்டு வசீகரமாக ஒரு சிரிப்பு சிரித்தார் திரவியம்.

"நாங்க அகழி வந்திருக்கிறது உங்களுக்கு எப்படி தெரியும் அங்கிள்..??"

ஆதிரா திடீரென அவ்வாறு கேட்க, திரவியத்தின் சிரிப்பு பட்டென்று நின்று போனது.. அவருடைய நெற்றிப்பரப்பில் சுருக்கக் கோடுகள்..!! அவளிடம் இருந்து அந்த கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை என்பது.. திகைத்துப் போய் பார்த்த அவருடைய முகத்திலேயே தெளிவாக தெரிந்தது..!!

"அ..அது.. நம்ம வனக்கொடிதான்.."

என்று தடுமாற்றமாக அவர் இழுக்க, ஆதிரா உடனே திரும்பி வனக்கொடியை கேள்வியாக பார்த்தாள்..!! திரவியத்திடம் காணப்பட்ட அதே திகைப்பு, இப்போது வனக்கொடியிடமும்..!! ஆதிராவுக்கு அவள் சொன்ன பதிலிலும் அவருடைய அதே தடுமாற்றம்..!!

"அ..அது.. நேத்து மரகதம்மாவை மார்க்கெட்ல பார்த்தேன்மா.. அ..அப்படியே பேச்சுவாக்குல நீங்க ஊருக்கு வந்திருக்குறதையும் சொல்லிட்டேன்..!! சொல்லக்கூடாதுன்னு ஒன்னும் இல்லையே..??"

மரகதம் என்பது திரவியத்தின் மனைவி..!! வனக்கொடியின் முகத்தில் காணப்பட்ட அந்த அவஸ்தையை.. ஆதிரா ஓரிரு வினாடிகள் சலனமில்லாமல் பார்த்தாள்..!! பிறகு..

"இ..இல்லம்மா.. அப்படிலாம் ஒன்னும் இல்ல..!! ஹ்ம்ம்ம்ம்.. சரி.. நீங்க போய் டிஃபன் ரெடி பண்ணுங்க.. போங்க..!!" என்று அவள் அமர்த்தலாக சொன்னதும்,

"சரிம்மா..!!" வனக்கொடி அங்கிருந்து நகர்ந்தாள்.

"நீங்களும் இருந்து சாப்பிட்டு போங்க அங்கிள்..!!" ஆதிரா அவ்வாறு புன்னகையுடன் சொல்ல, திரவியம் இப்போது இயல்புக்கு வந்தார்.

"இல்லம்மா.. சாப்பிடுறதுக்குலாம் எனக்கு டைம் இல்ல.. ஃபேக்டரிக்கு கெளம்பனும்..!! திருவிழா வருது.. ஃபேக்டரியை வேற ரெண்டு நாள் க்ளோஸ் பண்றோம்.. சம்பளத்தை முன்னக்கூட்டியே குடுக்கனும்னு லேபர்ஸ்லாம் கேட்ருக்காங்க.. பணம் பட்டுவாடா பண்ணனும்.. நெறைய வேலை இருக்கு..!! அடுத்தவாரத்துல ஒருநாள் வந்து பொறுமையா உன்கையால சாப்பிடுறேன்..!!"

"அடுத்தவாரமா.. அடுத்தவாரம் நாங்க இருக்க மாட்டோமே அங்கிள்..?? அஞ்சுநாள்தான எனக்கு டைம் குடுத்திருக்காரு என் வீட்டுக்காரர்..!!" ஆதிரா சலிப்பாக சொல்ல, திரவியம் சிரித்தார்.

"ஹாஹா..!! ஏன்பா சிபி.. கூட நாலுநாள் இருந்துட்டு போகலாம்ல..??" என்று சிபியிடம் திரும்பி கேட்டார்.

"என்ன ஸார் நீங்களும்..?? இந்த அஞ்சுநாள் இங்க வந்ததே மாமாக்கு தெரியாது.. தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவார்..!! இதுல இன்னும் நாலுநாளா..?? சான்ஸே இல்ல..!!" சிபி நிதானமாகவே பதில் சொன்னான்.

"ஹ்ம்ம்.. அகழி வந்தது அப்பாக்கு தெரியாதாம்மா..??" திரவியம் இப்போது ஆதிராவின் கண்களை கூர்மையாக பார்த்து கேட்டார்.

"தெ..தெரியாது அங்கிள்..!!"

"ஓ.. அதுக்காகத்தான் வனக்கொடியை அப்படி மொறைச்சியா..?? நீங்க வந்திருக்குறதை எங்க நான் உன் அப்பாட்ட சொல்லிடுவேனோன்னு..??"

"ஐயோ.. அப்படிலாம் இல்ல அங்கிள்..!!" ஆதிரா பதற்றமாக மறுத்தாள்.

"ஹாஹா.. பரவாலம்மா.. எனக்கு தெரியும்..!! ஹ்ம்ம்ம்ம்.. சரி.. நான் உன் அப்பாட்ட இதுபத்தி மூச்சு விடல.. போதுமா..??"

"தேங்க்ஸ் அங்கிள்..!!"

"பட்.. என்னை பொறுத்தவரை.. எதையும் மறைச்சு பண்றது அவ்வளவு நல்லதில்லைன்னு தோணுது.. நீங்களே அவர்ட்ட சொல்லிடுறது பெட்டர்..!!"

"சொல்லலாம் அங்கிள்.. ஆனா அப்பா புரிஞ்சுக்கமாட்டாரு.. தேவையில்லாம பயப்படுவாரு.. உடனே மைசூர் கெளம்பி வான்னு சொல்லிடுவாரு..!! எனக்கு இங்க ஒரு அஞ்சாறு நாளாவது இருக்கணும்னு ஆசை அங்கிள்..!!"

"எனக்கு புரியுதும்மா..!! ஆனா.. உன் அப்பாவைப் பத்திதான் உனக்கே நல்லா தெரியுமே.. அவருக்குத்தான் பொய் சொன்னாலே பிடிக்க மாட்டேன்னுதே..?? பொய் சொல்லிட்டோம்னு தெரிஞ்சா மனுஷனுக்கு அவ்வளவு கோவம் வருது..!!"

"தெரியும் அங்கிள்..!!"

"ரெண்டுமாசம் முன்னாடி பிசினஸ்ல ஒரு பெரிய சிக்கல்.. நாமளே சமாளிச்சிடுறது நல்லதுன்னு அவர்ட்ட ஒரு பொய் சொல்ற மாதிரி நெலமை.. வேறவழியில்லாம சொல்லிட்டேன்.. கடைசில என்னாச்சு தெரியுமா..?? போனதடவை அவர் அகழிக்கு வந்திருக்குறப்போ எனக்கும் அவருக்கும் பெரிய சண்டையே வந்துடுச்சு.. உனக்குத்தான் தெரியும்ல..??" திரவியம் இயல்பாக கேட்க,

"ம்ம்..!!" அவர் எதைப் பற்றி கேட்கிறார் என்று தெரியாமலே தடுமாற்றமாக சொன்னாள் ஆதிரா.

"ஹ்ம்ம்.. நான் ஏதோ அவரை ஏமாத்தி பணத்தை சுருட்டுற மாதிரி நெனச்சுட்டு இருக்காரு.. என்ன சொன்னாலும் நம்ப மாட்டேன்றாரு..!! எல்லாத்துக்கும் காரணம் என்னன்னா நான் சொன்ன அந்த பொய்தான்..!! அதுக்குத்தான் சொல்றேன்..!!"

"புரியுது அங்கிள்.. பாத்துக்குறோம்..!! இன்னும் நாலைஞ்சு நாள்தான..?? மைசூர் போனதும் மொதவேலையா எல்லாத்தையும் சொல்லிடுறேன்..!!"

"ம்ம்.. சரிம்மா.. பாத்துக்கோ..!!"

ஆதிரா இப்போது சிபியிடம் திரும்பி,

"என்னங்க.. காலைல போலீஸ் ஸ்டேஷனுக்கு கால் பண்ணனும்னு சொன்னனே.. பண்ணுனிங்களா..??" என்று கேட்டாள்.

"இல்லடா.. இன்னும் பண்ணல..!! எழுந்ததே இப்போத்தானே..??" சிபி சொல்லிக்கொண்டிருக்கையிலேயே,

"போ..போலீஸ் ஸ்டேஷனுக்கா..?? போலீஸ் ஸ்டேஷனுக்கு எதுக்குமா..??" என்று திரவியம் இடையில் புகுந்து கேட்டார்.

"ஒன்னுல்ல அங்கிள்.. தாமிரா கேஸ்ல இம்ப்ரூவ்மன்ட் பத்தி தெரிஞ்சுக்கத்தான்..!!"

"என்னம்மா நீ..?? இன்னுமா தாமிரா பத்திலாம் யோசிச்சுட்டு இருக்குற.. இன்னுமா அவ கெடைப்பான்ற நம்பிக்கை உனக்கு இருக்கு..?? வனக்கொடி உன்கிட்ட எதும் சொல்லலையா..??"

"சொன்னாங்க அங்கிள்..!! ஆனா.. அவங்க சொன்னதை அப்படியே நம்பிட்டு சும்மா இருக்க என்னால முடியல..!! தாமிரா கெடைப்பாளா மாட்டாளான்லாம் நான் யோசிக்கல.. ஆனா.. அவளுக்கு உண்மையில என்ன நடந்துச்சுன்னு உறுதிபண்ணிக்க ஆசைப்படுறேன்.. அவ்வளவுதான்..!!"

ஆதிரா தீர்க்கமாக சொல்ல.. அவளுடைய கண்களையே சிறுது நேரம் கூர்மையாக பார்த்தார் திரவியம்..!! பிறகு நீளமாக ஒரு பெருமூச்சை உதிர்த்தவர்.. கவலை தொனிக்கிற குரலில் ஆரம்பித்தார்..!!

"ஹ்ம்ம்ம்ம்..!! பார்த்துக்கோமா.. தாமிராவை நெனைச்சு ஏற்கனவே நீ ஒருவருஷம் ரொம்ப கஷ்டப்பட்டுட்ட..!! திரும்ப அதேநெலமைல உன்னை பாக்குறதுக்கு.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. அதான் சொன்னேன்..!! உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கு.. சிபி மாதிரி ஒரு நல்லபையன் புருஷனா கெடைச்சிருக்கான்.. இந்த அகழி, குறிஞ்சி, தாமிரா.. இதெல்லாம் மறந்துட்டு நிம்மதியா.."

"என்னால அப்படி இருக்க முடியல அங்கிள்..!!"

"புரியுதுமா..!! தாமிரா போனது எங்களுக்குலாம் பழகிப்போச்சு.. பழசாய்டுச்சு..!! ஆனா.. உனக்கு அப்படி இல்ல.. உன்னை பொறுத்தவரை அது ரொம்ப புது விஷயமா இருக்கு..!! உன்னோட ஆதங்கத்துக்கும் வேகத்துக்கும் அதுதான் காரணம்..!! ஹ்ம்ம்ம்ம்.. நடந்ததை ஏத்துக்குற பக்குவம் கூடிய சீக்கிரமே உனக்கு வரணும்னு, அந்த ஆண்டவனை நான் வேண்டிக்கிறேன்..!!"

"தேங்க்ஸ் அங்கிள்..!!"

"ஹ்ம்ம்ம்ம்..!! எனிவே.. நீங்க இன்னைக்கு ஸ்டேஷன் போனாலும் இன்ஸ்பெக்டரை மீட் பண்ண முடியாது..!!"

"ஏன்..??"

"அவர் ஊர்ல இல்ல..!!"

"உ..உங்களுக்கு எப்படி தெரியும்..??"

"ஹாஹா.. எனக்கு எல்லாம் தெரியும்மா..!! நீ ஊருக்கு வந்திருக்கிறதை வனக்கொடி சொன்னமாதிரி.. அவர் ஊர்ல இல்லைன்றதையும் அவரேதான் சொன்னாரு..!! ஆக்சுவலா நானும் இன்னைக்கு வேற ஒருவிஷயமா ஸ்டேஷன் போறதா இருந்தேன்.. காலைலதான் அவரே ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னாரு..!! நாளைக்கு இருப்பாரு.. நாளைக்கு போய் பாருங்க..!!"

"ச..சரி அங்கிள்.. நாங்க அப்போ நாளைக்கே போறோம்..!!"

"சரிம்மா.. எனக்கும் டைமாச்சு.. நான் அப்படியே கெளம்புறேன்..!!"

"ஓ..!! ஓகே அங்கிள்..!!"

"புதுசா கல்யாணமான புள்ளைகளுக்கு விருந்து வைக்கனும்னு மரகதம் ஆசைப்படுறாம்மா.. சொல்ல சொன்னா.. சொல்லிட்டேன்..!! இருக்குற நாலஞ்சு நாள்ல ஒருநாள், எங்க வீட்டுப்பக்கமும் கொஞ்சம் எட்டிப்பாருங்க.. சரியா.. ஹாஹாஹாஹா..!!"

"ஹஹா.. கண்டிப்பா அங்கிள்.. வர்றோம்..!!"

திரவியத்தை வழியனுப்பி வைத்துவிட்டு ஆதிராவும் சிபியும் வீட்டுப்பக்கமாக திரும்பி நடந்தார்கள்..!! இருவரும் வீட்டுத் தாழ்வாரத்தை அடைந்து நடைபோடுகையில்.. ஆதிரா சிபியிடம் மெல்ல கேட்டாள்..!!

"அப்பாவுக்கும் அங்கிளுக்கும் என்ன பிரச்சினை அத்தான்..?? எதுக்கு சண்டை போட்டாங்க..??"

"எனக்கும் முழுசா எதும் தெரியாது ஆதிரா..!! மாமா போனதடவை அகழிலருந்து மைசூர் வந்ததும்.. இதைப்பத்தி சொல்லி பொலம்பிட்டு இருந்தாரு..!! நீயுந்தான் அப்போ கூட இருந்த.. இப்போ உனக்கு மறந்திருக்கும்னு நெனைக்கிறேன்..!!"

"ஆ..ஆமா.. எனக்கு இப்போ ஞாபகம் இல்ல..!!"

"ஹ்ம்ம்..!! கம்பனி அக்கவுண்ட்ஸ்ல ஏதோ மிஸ்மாட்ச் போல.. திரவியம் அங்கிள் ஏமாத்துறதா மாமாவுக்கு ஒரு டவுட்.. அவ்வளவுதான் எனக்கு தெரியும்..!!"

"ம்ம்ம்ம்..!! ரெண்டு பேரும் எவ்வளவு க்ளோஸா இருப்பாங்க.. அவங்களுக்குள்ள சண்டைன்னா என்னால நம்பவே முடியல..!!"

"என்னாலயுந்தான் ஆதிரா..!! ரெண்டு பேரும் சண்டை போட்டாங்கன்னு தெரிஞ்சு மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தது..!! பட்.. என்ன பண்றது.. பிசினஸ்ல இந்த மாதிரி மிஸ்-அண்டர்ஸ்டாண்டிங் வர்றது சகஜம்தான்.. கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாயிடும்னு நம்புவோம்..!!"

"ம்ம்..!!"

பேசிக்கொண்டே இருவரும் ஹாலுக்குள் நுழைந்தார்கள்.. அவ்வாறு நுழைந்ததுமே ஆதிராவின் பார்வையை அந்தப்பொருள் வசீகரித்தது..!! ஹாலின் ஒருமூலையில் அந்த மூன்றடி உயர மரஅலமாரி.. அதன்மேலே அழகுற வீற்றிருந்த, முன்பு தாமிரா ஆசையாக பராமரிக்கிற, இப்போது வனக்கொடியின் கடமையாகிப் போய்விட்ட, வண்ணமீன்கள் நீந்துகிற அந்த கண்ணாடி மீன்தொட்டி.. அதனருகே தங்கநிற ஜிகினாத்தாளை சுற்றிக்கொண்டு காட்சியளித்த அந்த அன்பளிப்பு அட்டைப்பெட்டிதான் ஆதிராவின் கவனத்தை கவர்ந்த அந்தப்பொருள்..!!

"எ..என்னத்தான் இது.. கிஃப்ட் பாக்ஸ்லாம்..??"

"அதுவா.. அது திரவியம் அங்கிள் கொண்டுவந்தது.. நமக்கு ஏதோ ப்ரசன்ட்டாம்..!!"

"ஓ.. என்ன இருக்கு அதுக்குள்ள..??"

"ஹஹா.. எனக்கு தெரியலம்மா.. நீயே பிரிச்சுப்பாரு..!!"

சிரிப்புடன் சொல்லிவிட்டு சிபி அங்கிருந்து நகர, ஆதிரா அந்த ஜிகினா பெட்டியை திரும்பி பார்த்தாள்..!! அவ்வாறு பார்க்கும்பொழுதே.. ஆறேழு வருடங்களுக்கு முன்பாக.. அதே இடத்தில் காட்சியளித்த.. இதே திரவியம் வாங்கிவந்திருந்த அந்த அன்பளிப்புப்பெட்டி.. இப்போது ஆதிராவின் மனக்கண்ணில் தோன்றியது.. பழைய நினைவொன்றில் மூழ்க ஆரம்பித்தாள்..!!

திரவியத்தின் ஒரே மகன் அப்போதே அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டிருந்தான்..!! மனைவியுடன் அமெரிக்கா சென்று அவனை பார்த்து திரும்பிய திரவியம்.. இந்தியா வருகையில் அப்படியே தணிகை நம்பிக்கென அன்பளிப்பாக ஒரு பொருளை வாங்கி வந்திருந்தார்..!! அந்தப்பொருளும் இந்தமாதிரிதான் மினுமினுப்புத்தாள் சுற்றப்பட்டு இதே இடத்தில் வைக்கப்பட்டிருந்தது..!!

"என்ன வாங்கிட்டு வந்திருக்கான்னு தெரியல.. நீங்களே பிரிச்சு பாருங்க..!!"

தணிகைநம்பியும் சிபி மாதிரியே சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்..!! பாவாடை சட்டையில் இருந்த தாமிராவும், ரெட்டை ஜடை போட்டிருந்த ஆதிராவும்.. ஆவலாக அந்தப்பெட்டியை நோக்கி ஓடினார்கள்.. ஆசையாக அதன் உறையை கிழித்து எறிந்தார்கள்.. ஆர்வமாக அதனுள்ளே பார்வையை வீசினார்கள்..!! உள்ளே அந்த புத்தம்புது நோக்கியா செல்ஃபோன்..!!

ஆதிரா அப்போது கல்லூரியில் இரண்டாமாண்டு பயின்று கொண்டிருந்தாள்.. தாமிரா உயர்நிலைப்பள்ளியில் இறுதியாண்டு..!! அப்போதெல்லாம் செல்ஃபோன் புரட்சி ஏற்பட்டிருக்காத சமயம்.. அகழியிலும் செல்ஃபோன் வைத்திருந்தவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு.. அவையும் கருப்புவெள்ளை திரையும், கனமான எடையும் கொண்ட செங்கற்கட்டிகளாகவே இருக்கும்..!! ஆதிராவும், தணிகைநம்பியும்கூட அப்போது அந்தமாதிரி ஆளுக்கொரு செல்ஃபோன்கள் வைத்திருந்தனர்.. தாமிராவிடம் அதுவும் கிடையாது..!!

திரவியம் அமெரிக்காவில் இருந்து வாங்கி வந்திருந்த இந்த புது செல்ஃபோனோ.. கலர் டிஸ்ப்ளேயுடன் கவர்ச்சியாக காட்சியளித்தது.. ஸ்லைட் வடிவமைப்புடன் ஸ்டைலாக பளபளத்தது.. FM, MP3 சப்போர்ட் எல்லாம் உண்டு.. முன்னொன்றும் பின்னொன்றுமாக இரண்டு கேமராக்கள் உண்டு..!! ஆதிராவுக்கும் தாமிராவுக்கும் அந்த மாதிரியொரு சூழலிலும் பருவத்திலும்.. அந்த செல்ஃபோனைப் பார்த்து ஒரு ஈர்ப்பு வந்ததில் ஆச்சர்யம் எதுவுமில்லை..!!


"வாவ்..!! சூப்பரா இருக்குதுக்கா.. அப்பாட்ட சொல்லிட்டு இதை நானே வச்சுக்கப் போறேன்..!!"

"ஹேய் ப்ளீஸ்டி.. நான் வச்சுக்குறேன்டி.. நீ என் செல்ஃபோனை எடுத்துக்கோ.. ஓகேவா..??"

"ஐயே.. உன் ஓட்டை ஃபோன் யாருக்கு வேணும்..?? எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு.. என் ரேஞ்ச்க்குலாம் இதுதான் சூட் ஆகும்..!!"

"ப்ச்.. நீ இதை வச்சு என்ன பண்ணப்போற..?? நானாவது சாங்க்ஸ்லாம் கேட்பேன்..!!"

"ம்க்கும்.. காலேஜ்ல போய் நல்லா ஸீன் போடுவேன்னு சொல்லு..!! உனக்கு சாங்க்ஸ்னா எனக்கு கேமரா.. நம்ம ஊரோட அழகைலாம் அப்படியே சுட்டுத்தள்ளப்போறேன்..!!"

"சொன்னா கேளுடி.. அக்காக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ப்ளீஸ்..!!"

"தேவையில்லாம கெஞ்சிட்டு இருக்காத.. நான் முடிவு பண்ணிட்டேன்.. எனக்குத்தான் இது..!!"

தாமிரா அலட்சியமாக சொல்ல, ஆதிரா அவளையே எரிச்சலாக முறைத்தாள். பிறகு,

"போடி.. நான் அப்பாட்டயே கேட்டுக்குறேன்..!!"

என்றுவிட்டு அவசரமாக அப்பாவின் அறைக்கு விரைந்தாள்.. ஓரிரு வினாடிகள் கழித்தே சுதாரித்துக்கொண்ட தாமிராவும் அவளுக்கு பின்னால் ஓடினாள்..!! முதலில் யார் சென்று அப்பாவிடம் முறையிடுவது என்று இருவருக்கும் போட்டி.. மாடிப்படிகளில் ஒரு ஓட்டப்பந்தயம்..!! மூச்சிரைக்க ஓடிச்சென்று தணிகைநம்பியிடம் இருவரும் முறையிட்டார்கள்.. அவரோ தாமிராவுக்குத்தான் சாதகமாக பேசினார்..!!

"தாமிராவே வச்சுக்கட்டும்மா.. அவகிட்டத்தான ஃபோனே இல்ல..!!"

"அதான் என் ஃபோனை அவளுக்கு தர்றேன்னு சொல்றேன்ல..??"

"போடி.. எனக்கு இந்த ஃபோன்தான் வேணும்..!!"

மல்லுக்கு நின்றனர் இருவரும்..!! மகள்களின் கூச்சலில் எரிச்சலான தணிகைநம்பி,

"அடடடடா.. சின்னப்புள்ளைங்க மாதிரி சண்டை போடாதீங்க..!!" என்றவர் ஆதிராவிடம் திரும்பி,

"இங்கபாரு ஆதிரா.. உன் தங்கச்சி சரின்னு சொன்னான்னா நீ வச்சுக்கோ.. இல்லன்னா அவகிட்டயே குடுத்திடு.. அவ்வளவுதான்.. போங்க ரெண்டு பேரும்.. வேலை இருக்கு எனக்கு..!!"

என்று தனது இறுதிமுடிவை சொன்னார். ஆதிராவின் முகம் இப்போது பட்டென வாடிப்போனது. தாமிராவை பரிதாபமாக ஏறிட்டாள்.

"ப்ளீஸ்டி..!!"

என்று கடைசியாக ஒருமுறை கெஞ்சிப்பார்த்தாள்..!! ஏக்கமும், ஏமாற்றமும் கொப்பளித்த அக்காவின் முகத்தைப் பார்க்க, தாமிராவுக்கு இப்போது பாவமாக இருந்தது..!! அப்படியே உருகிப்போனாள்.. அத்தனை நேரம் அந்த செல்ஃபோன் மீது அவள் வளர்த்திருந்த ஆசையும் அவளுடன் சேர்ந்து உருகிக் கரைந்தது..!! ஆதிராவையே ஓரிரு வினாடிகள் சலனமில்லாமல் பார்த்த தாமிரா.. பிறகு உதட்டில் ஒரு குறும்புப்புன்னகையை கசியவிட்டவாறு, கைகள் இரண்டையும் முகத்திற்கு முன்பாக உயர்த்தி, கைகளின் இடைவெளியில் கண்சிமிட்டியவாறு கேட்டாள்..!!

"Game or Shame..??"

தாமிரா அவ்வாறு கேட்டதுமே ஆதிராவின் முகத்தில் சட்டென ஒரு மலர்ச்சி.. இதுவரை நடந்த அனைத்து போட்டிகளையும் அவள்தான் வென்றிருக்கிறாள் என்கிற தைரியத்தில் பிறந்த மலர்ச்சி அது..!!

"Game..!!!!" என்று உற்சாகமாக கத்தினாள்.

பழைய நினைவுகளில் இருந்து மீண்ட ஆதிரா.. இப்போது கையிலிருந்த இந்த கிஃப்ட்பாக்ஸை திறந்து பார்த்தாள்..!! உள்ளே ஒரு நகைப்பெட்டி இருந்தது.. இதயவடிவிலான இரட்டை பதக்கங்கள்.. தங்கத்தால் வார்க்கப்பட்ட தளப்பரப்பு.. அதன்மேல் பதிக்கப்பட்ட சிறுசிறு சிவப்பு கற்கள்.. அழகாக ஜொலித்தன இரண்டு பதக்கங்களும்..!! கணவன் மனைவி இருவரும் ஆளுக்கொன்றாய்.. அவர்களது கைச்சங்கிலியிலோ கழுத்து சங்கிலியிலோ.. இணைத்துக் கொள்கிற மாதிரியான இரட்டை பரிசுப்பொருட்கள்..!! ஆதிராவுக்கு மிகவும் பிடித்திருந்தது.. கணவனிடம் அவற்றை காட்டுகின்ற ஆர்வத்துடன்..
"என்னங்க.." என்றழைத்தவாறே படிக்கட்டை நோக்கி நடந்தாள்.

அத்தியாயம் 9

அன்று மதிய உணவு அருந்திய பிறகு.. 'ஒரு குட்டித்தூக்கம் போடப்போறேன்' என்றுவிட்டு படுக்கையில் விழுந்த சிபி.. மாலை நேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை.. ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்து போயிருந்தான்..!! புத்தகம் புரட்டிக்கொண்டிருந்த ஆதிராவுக்கு போரடிக்கவே.. வெளியில் சற்று உலாவி வரலாம் என்ற எண்ணத்துடன்.. படியிறங்கி ஹாலுக்குள் பிரவேசித்தாள்.. வாசல் திறந்து வீட்டினின்று வெளிப்பட்டாள்..!!

ஐந்துமணிதான் ஆகியிருக்கும்.. அதற்குள்ளாகவே வெளியே இருள்கவிழ்ந்து வெளிச்சம் குறைந்திருந்தது.. வளிமண்டலத்தில் பரவியிருந்த பனிப்படலம் தெளிவாகவே பார்வைக்கு புலப்பட்டது..!! சுற்றிலும் பச்சைப்பசேலென புல்வெளியும், குற்றுச்செடிகளும்.. சிலுசிலுவென வீசிய காற்றில் ஜில்லென்று ஒரு குளிர்ச்சி..!! சூழலில் ஒரு அடர் நிசப்தம்.. அந்த நிசப்தத்தை கிழிக்கிற மாதிரி.. அவ்வப்போது சீரான இடைவெளியில் ஒலித்த தூரத்து இரும்புப்பட்டறையின் சம்மட்டி சப்தம்..!!

"டங்ங்ங்.. டங்ங்ங்.. டங்ங்ங்..!!"

புல் வளர்ந்திருந்த மண்சரிவில் இறங்கி.. வீட்டுக்கு முன்பாக ஓடிய குழலாற்றை அடைந்தாள் ஆதிரா..!! உறுமீன் வருவதற்காய் காத்திருந்த இரண்டு கொக்குகள்.. ஆதிராவின் உருவம் கண்டதும் சிறகடித்து பறந்தோடின..!! ஆற்றங்கரையின் ஒரு ஓரத்தில் போடப்பட்டிருந்த.. மரத்தாலான சாய்விருக்கையில் வசதியாக அமர்ந்து கொண்டாள்..!! அமைதியாக ஓடிக்கொண்டிருந்த குழலாற்றை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்..!!

"வா வா வா.. குறிஞ்சி ஆத்துக்குள்ளதான் படுத்திருக்கா.. கூப்பிடுறா உன்னை.. ஓடி வா..!! ஹாஹாஹா..!!"

ஆதிராவின் காதுகளுக்குள் தாமிராவின் குரலும்,சிரிப்பும் க்றீச்சிட்டன.. நெற்றியில் ஒரு சுருக்கமெழ, இமைகளை இறுக்கி மூடிக்கொண்டாள்..!! ஒருசில வினாடிகளுக்கு பிறகு விழிகளை திறந்தவள்.. தூரமாக ஆற்றின் அடுத்தகரையில் தெரிந்த அந்த உயரமான மரத்தை பார்த்தாள்..!! மூளைக்குள் மீண்டும் தாமிராவின் நினைவுகள் முளைவிட்டன..!!

ஆதிராவும் தாமிராவும் செல்ஃபோனுக்காக சண்டையிட்டுக்கொண்ட அன்று.. சிறிது நேரத்தில் இந்த ஆற்றங்கரையில்தான் இருவரும் வந்து நின்றிருந்தனர்..!!

"இங்க எதுக்குடி கூட்டிட்டு வந்திருக்குற..??" ஆதிரா தங்கையிடம் கேட்டாள்.

"கேம் ஆடுறதுக்குத்தான்..!!" தாமிரா கேஷுவலாக சொன்னாள்.

"இங்கயா.. இங்க என்ன கேம்..??"

"ஹ்ம்ம்.. அதோ.. அந்த மரம் தெரியுதுல..??"

"ஆமாம்..!!"

"அதைப்போய் மொதல்ல யார் தொடுறாங்களோ.. அவங்களுக்குத்தான் அந்த செல்ஃபோன்..!!"

"அ..அதையா.. அதை எப்படி..??"

"ம்ம்ம்ம்..?? ஆத்துல நீந்தி அந்தக்கரைக்கு போய் தொடணும்..!!"

தாமிரா கூலாக சொல்ல, ஆதிராவிடம் பட்டென ஒரு பதட்டம்..!! குழலாற்றின் அடிப்பரப்பில்தான் குறிஞ்சி துயில் கொண்டிருக்கிறாள் என்பது அகழிமக்களின் அமானுஷ்ய நம்பிக்கை.. அதனால் ஏற்பட்டதுதான் ஆதிராவின் அந்த பதட்ட மும்..!!

"ஐயையோ.. ஆத்துல எறங்கனுமா.. நா..நான் மாட்டேன்பா..!!"

"ஏன்.. ஆத்துல எறங்கினா என்னவாம்..??"

"எறங்க மாட்டேன்னா எறங்க மாட்டேன்.. அவ்வளவுதான்..!! நீ வே..வேற ஏதாவது கேம் இருந்தா சொல்லு..!!"

"ஹாஹா.. பயந்தாங்கொள்ளி பயந்தாங்கொள்ளி.. தொடைநடுங்கி.. புள்ளப்பூச்சி..!!"

"ப்ச்.. பயம்லாம் ஒன்னும் இல்லடி..!!"

"அப்புறம் என்ன..?? வா..!! அந்த குறிஞ்சியா நாமளான்னு இன்னைக்கு ஒரு கை பாத்துடலாம்..!!" கண்சிமிட்டிய தாமிரா இப்போது ஸ்கர்ட்டை கழட்டி வீசி, ஷார்ட்சுடன் நின்றாள்.

"வேணான்டி..!!" ஆதிரா கெஞ்சினாள்.

"செல்ஃபோன் வேணும்னா வா.. ஷேம் ஷேம்னு நான் கேலி பண்ணனும்னா இங்கயே நில்லு..!!" சொன்ன தாமிரா, அக்காவின் பதிலுக்கு காத்திராமல் ஆற்றை நோக்கி ஓடினாள்.

"ஹேய்.. நில்லுடிஈஈ..!!" ஆதிரா கையுயர்த்தி கத்தினாள்.

"வா வா வா.. குறிஞ்சி ஆத்துக்குள்ளதான் படுத்திருக்கா.. கூப்பிடுறா உன்னை.. ஓடி வா..!! ஹாஹாஹா..!!"

சிரித்துக்கொண்டே ஓடிப்போய் ஆற்றுக்குள் தொப்பென்று விழுந்தாள் தாமிரா..!! செல்ஃபோன் கவர்ச்சியால் துணிச்சல் பெற்ற ஆதிராவும்.. இப்போது செருப்பை உதறி வீசிவிட்டு ஓடினாள்.. அவசரமாய் ஓடி ஆற்றுநீரை கிழித்துக்கொண்டு விழுந்தாள்..!!

அழகு உருக்கொண்ட ஆறறிவு மீன்களாக.. அக்காவும் தங்கையும் ஆற்றில் நீச்சலடித்தனர்..!! தூரத்தில் தெரிந்த மரத்தை கூர்மையாக பார்த்தவாறே தீவிரமாக கால்களை உதைத்தாள் ஆதிரா.. பக்கவாட்டில் தெரிந்த அக்காவை அன்பொழுக பார்த்தவாறே சோர்வாக கைகளை வீசினாள் தாமிரா..!! ஆதிராவுக்கு சந்தேகம் வராதமாதிரி, தாமிரா மெல்ல மெல்ல தனது வேகத்தை குறைத்துக்கொள்ள.. ஆதிராவே முதலில் அடுத்தகரை ஏறினாள்.. ஏறியவேகத்தில் ஓடிச்சென்று அந்த மரத்தை தொட்டாள்..!!

"ஹைய்ய்ய்..!! நான் ஜெயிச்சுட்டேன்ன்ன்.. எனக்குத்தான் அந்த செல்ஃபோன்ன்ன்..!!" குழந்தையாய் குதுகளித்தாள் அக்கா.

"ச்ச.. இந்தவாட்டியும் நீயே ஜெயிச்சுட்ட.. போடீ..!!" போலியாக சலித்துக்கொண்டாள் தங்கை.

வீட்டுக்கு திரும்பிய ஆதிரா.. மிக உரிமையாக சென்று அந்த செல்ஃபோனை கைப்பற்றிக்கொண்டாள்..!! அன்றிரவு படுக்கையில் விழுந்து நெடுநேரமாகியும்.. அந்த செல்ஃபோன் பட்டன்களையே திரும்ப திரும்ப அழுத்திக் கொண்டிருந்தாள்..!! ஆதிராவின் முகத்தில் காணப்பட்ட அந்த சந்தோஷமும், பூரிப்பும்.. அதைவிட பலமடங்காக அவளுக்கு அருகே படுத்திருந்த தாமிராவின் மனதுக்குள்..!!

ஆதிராவுக்கு அந்த செல்ஃபோனை மிகவும் பிடித்துப் போனது.. எந்த நேரமும் அதை கையில் தூக்கிக்கொண்டே அலைவாள்.. பத்திரமாக பார்த்துக்கொள்வாள்..!! ஆறு வருடங்களாகி அந்த செல்ஃபோன் அரதப்பழசாகிப் போனபிறகும்கூட.. அதையேதான் தொடர்ந்து உபயோகித்துக் கொண்டிருந்தாள்..!! தாமிராவின் தந்திரத்தால் ஆதிராவிடம் அந்த செல்ஃபோன் மீது ஏற்பட்ட பற்றுதலும், உரிமையுணர்வும்தான் அதற்கு காரணம்..!!

ஆற்றங்கரையில் அமர்ந்து தங்கையின் நினைவுகளில் ஆதிரா மூழ்கியிருந்த சமயத்தில்தான்.. எங்கிருந்து வந்ததென்றே தெரியாமல் திடீரென அவளுக்கெதிரே வந்துநின்றது அந்த முயல்..!! கையில் ஏதோ ஒரு சிவப்புநிற பழத்தை வைத்துக்கொண்டு.. எதிரேயிருந்த ஆதிராவையே குறுகுறுவென பார்த்தது..!! வெள்ளை வெளேரென்ற மேனி வண்ணத்துடன்.. புஸுபுஸுவென்று மிருதுவான தேக ரோமத்துடன்.. மிக அழகாக நின்றிருந்தது அந்த முயல்..!! அதைப் பார்த்ததுமே ஆதிராவின் மனதுக்குள் ஒரு ஐந்துவயது குழந்தை பிறப்பெடுத்தாள்..!!

"ஹாய்ய்ய்ய்..!!!"

என்று மலர்ந்த முகத்துடன் அழைத்துக்கொண்டே, எட்டி அந்த முயலை பிடிக்க முயன்றாள்.. அவளுடைய பிடியில் சிக்காமல் அந்த முயல் வெடுக்கென்று ஓடியது.. சிறிது தூரம் ஓடிச்சென்று திரும்பி நின்று இவளை பார்த்தது.. கையில் இருந்த பழத்தை கொறித்தது..!! இப்போது ஆதிராவுக்குள் ஒரு குழந்தைத்தனமான குறுகுறுப்பு.. அந்த முயலை பிடித்து கொஞ்சவேண்டும் என்று ஒருவித உந்துதல்..!! இருக்கையில் இருந்து எழுந்து அந்த முயலை நோக்கி சென்றாள்.. இவள் நெருங்கவும் அந்த முயல் ஓட்டமெடுக்க ஆரம்பித்தது.. புல்வெளி சரிவில் ஏறி தாவித்தாவி ஓடியது.. ஆதிராவும் அவசரமாக மேலேறினாள்..!!

சமவெளியை அடைந்த முயல் வீட்டை நோக்கி குதித்தோடியது.. சற்றும் சளைக்காத ஆதிரா அதன்பின்னே தொடர்ந்து ஓடினாள்..!! பச்சை பசலேன்ற புல்நிலம்.. அதில் தாவித்தாவி ஓடுகிற வெண்முயல்.. அம்முயலை விரட்டி பின்செல்கிற ஆதிரா..!! முயலின் ஓட்டத்துக்கு ஆதிராவால் ஈடுகொடுக்க முடியவில்லை.. முந்திச்சென்ற முயல் படியேறி வீட்டுக்குள் நுழைந்துவிட்டது..!! அதைப்பார்த்த ஆதிராவிடம் ஒரு சிறிய ஆச்சரியம்.. ஒருகணம் தயங்கிநின்றவள் பிறகு மீண்டும் ஓடினாள்.. படியில் ஏறி வாசற்கதவை அகலமாக திறந்தாள்.. உள்ளே பார்வையை வீசினாள்..!!

அவ்வளவு பெரிய வீட்டில்.. ஆங்காங்கே மரத்தூண்கள் நிற்கிற விஸ்தாரமான அந்த ஹாலின் மையத்தில்.. தனியாக, தூரமாக காட்சியளித்தது அந்த முயல்..!! இரண்டு கால்களை தரையில் ஊன்றி.. இரண்டு கால்களை மேலே தூக்கி வைத்துக்கொண்டு.. வீட்டு வாசலை உர்ரென பார்த்தவாறே நின்றிருந்தது..!! ஆதிரா வாசலில் வந்து நின்றதுமே.. என்னவோ இவளுடைய வருகைக்காகத்தான் காத்திருந்தமாதிரி.. மீண்டும் வீட்டுக்குள் விருட்டென ஓட ஆரம்பித்தது..!! ஆதிராவும் இப்போது மார்புகுலுங்க அதன் பின்னால் ஓடினாள்..!!

"ஹேய்ய்ய்...!!! நில்லு..!!!!!"

வாய்விட்டே கத்தினாள்..!! உள்ளே ஓடிய முயல்.. வீட்டின் இன்னொரு மூலையில் இருந்த அந்த அறையை அடைந்தது.. குறுகலாக தெரிந்த கதவிடுக்கின் வழியாக அறைக்குள் புகுந்துகொண்டது..!!

ஆதிரா மூச்சிரைக்க அந்த அறைமுன் வந்து நின்றாள்.. இரண்டு கைகளாலும் கதவினை உட்புறமாக தள்ளினாள்..!!

"க்க்கிர்ர்ர்ர்ர்ர்ர்..!!!" என்ற சப்தத்துடன் கதவு திறந்துகொண்டது.

அது ஏதோ பழைய பொருட்களை அடைத்துவைக்கிற அறை.. உள்ளே ஒரே இருட்டாக இருந்தது.. காற்றில் ஒரு புழுங்கல் நெடி..!! 'இதுக்குள்ள ஓடிப்போயிடுச்சே இந்த முயலு.. ச்ச..' என்று சலிப்பை உதிர்த்தாள் ஆதிரா..!! அறைக்குள் நுழைந்தவள் சுவற்றில் கைவைத்து தேய்த்து மின் ஸ்விட்ச்சை அழுத்தினாள்.. இருட்டு அகலவில்லை.. விளக்கு எரியவில்லை.. ஃப்யூஸ் ஆகியிருக்கவேண்டும்..!! 'என்ன செய்வது' என்று அவள் ஒருகணம் யோசித்துக் கொண்டிருக்கும்போதே.. வாசலுக்கருகே நின்றிருந்த பெட்டகத்தின் மேலிருந்த அந்த தீப்பெட்டி அவளுடைய பார்வையில் பட்டது..!!

"ச்சரக்க்க்...!!"

தீப்பெட்டி திறந்து ஒரு தீக்குச்சி கிழித்து பற்றவைக்க.. அறைக்குள் இப்போது சிறிய அளவில் ஒரு வெளிச்சம்..!! அந்த வெளிச்சத்துடனே மெல்ல அறைக்குள் அடியெடுத்து வைத்தாள் ஆதிரா..!! மசமசப்பான வெளிச்சத்திலேயே அந்த முயலை அப்படியும் இப்படியுமாய் தேடினாள்.. அது ஏதாவது இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொள்ளக்கூடாதே என்கிற கவலை வேறு..!! இருட்டுக்குள் தட்டுத்தடுமாறி அவள் நடந்துகொண்டிருக்க.. படக்கென அவளது முகத்துக்கு முன்னே அந்த மரச்சிலையை தோன்றவும்.. பக்கென ஒருகணம் அதிர்ந்துபோனாள்.. அதே நேரம் தீக்குச்சி வேறு தீர்ந்து அவளுடைய விரலைச்சுட..

"ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..!!"

கையை வெடுக்கென உதறினாள்.. எரிகிற விரலை வாயில் வைத்து எச்சில் பூசிக்கொண்டாள்..!!


"ச்சரக்க்க்...!!"

மீண்டும் ஒரு தீக்குச்சி பற்றவைத்துக்கொண்டு அறைக்குள் மேலும் முன்னேறினாள்.. உள்ளேயிருந்த பொருட்கள் எல்லாம் இப்போது மங்கலாக புலப்பட்டன.. உடைந்த கட்டில் நாற்காலிகள், துருப்பிடித்த இரும்பு உபகரணங்கள், சிதைந்துபோன ரப்பர் குழாய்கள், காலியான அட்டைப் பெட்டிகள்..!! கையில் தீக்குச்சி வெளிச்சத்துடன் அப்படியே உடம்பை மெல்ல சுழற்றினாள் ஆதிரா.. சுற்றிலும் அடர் இருட்டு.. அவள் நின்றிருந்த இடத்தில் மட்டும் சொற்ப வெளிச்சம்..!! அந்த வெளிச்சம் மெல்ல மெல்ல அந்த அறைக்குள் நகர.. இருள் அப்பியிருந்த ஒரு மூலையில்.. இப்போது இரண்டு சிவப்பு விளக்குகள் பளிச்சென்று மின்னின..!!

"ஆஆஆவ்வ்வ்..!!"

முதுகுத்தண்டு சட்டென சில்லிட்டுப்போக.. ஆதிரா வாய்விட்டே கத்திவிட்டாள்..!! ஆதிரா அவ்வாறு கத்தியதும்.. அறைக்குள் இருந்த பொருட்களை எல்லாம் தடதடவென உருட்டிக்கொண்டு ஓடியது அந்த முயல்..!! இருட்டுக்குள் செந்நிறத்தில் மின்னியது அந்த முயலின் கண்கள்தான் என்பதை.. ஓரிரு வினாடிகள் கழித்துதான் ஆதிரா உணர்ந்துகொண்டாள்..!! அதை உணர்ந்து அவள் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கையிலேயே.. அந்த முயல் சுவற்றோடு ஒட்டி நின்ற மரஅலமாரியின் இடுக்கில் சென்று மறைந்தது..!! உள்ளே சென்ற வேகத்தில்..

"க்க்கீச்ச்..!!" என்று ஈனஸ்வரத்தில் சப்தம் எழுப்பியது.

ஆதிராவிடம் இப்போது ஒரு பதைபதைப்பு.. அலமாரியின் நெருக்குதலில் இருந்து அந்தமுயலை விடுவிக்கவேண்டும் என்று அவளுக்குள் ஒரு உந்துதல்.. வெளிச்சம் தீர்ந்த தீக்குச்சியை வீசியெறிந்துவிட்டு ஓடினாள்..!! இருளுக்குள் தெரிந்த அலமாரியின் பிம்பத்தை நெருங்கினாள்.. அதை நகற்ற முயன்றாள்.. முடியவில்லை.. கடினமாக இருந்தது..!! அப்படியே கால்களை மடக்கி தரையில் மண்டியிட்டு அமர்ந்தாள்.. ஒருகையை மட்டும் அலமாரியின் பக்கவாட்டில் நீட்டி.. அப்படியே இருட்டுக்குள் தடவி தடவி.. அலமாரிக்கும் சுவற்றுக்கும் இருந்த குறுகலான இடைவெளியில் கையை நுழைத்தாள்.. இப்படியும் அப்படியுமாய் மெல்ல துழாவினாள்.. அந்த முயல் அகப்படுகிறதா என்று பார்த்தாள்..!!

அவளுடைய விரல்களில் ஏதோ வழுவழுப்பாய் தட்டுப்பட்டது.. கையை சுருக்கி அதை கப்பென பற்றிக்கொண்டாள்..!! 'இது முயல் இல்லையே' என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே.. 'க்க்கீச்ச்.. க்க்கீச்ச்..!!' என்று வாசலில் ஒரு சப்தம்..!! அத்தனை நேரம் அவளை அலையவிட்ட அந்த முயல்.. இப்போது அறையை விட்டு வெளியேறி, வராண்டாவில் துள்ளிக்குதித்து ஓடிக்கொண்டிருந்தது..!!

அந்தமுயலுக்கு எதுவும் ஆகவில்லை என்று தெரிந்ததும் ஆதிராவிடம் ஒரு நிம்மதி.. கையை அலமாரிக்கு பின்புறமாக செருகியிருந்தவளிடம், மெலிதான ஒரு புன்னகை..!! ஓரிரு வினாடிகள் அப்படியே அமர்ந்திருந்தவள்.. அப்புறம் கையை மெல்ல வெளியே இழுத்தாள்.. அந்தக்கை பற்றியிருந்த பொருளும் அதனுடன் வெளியே வந்தது.. அது என்ன பொருள் என்பது இருட்டுக்குள் தெளிவாக புலப்படவில்லை..!!

"ச்சரக்க்க்...!!"

ஆதிரா மீண்டும் ஒரு தீக்குச்சி உரசினாள்.. அதன் வெளிச்சத்தில் கையோடு வந்த பொருள் மீது ஆர்வமாக பார்வையை வீசினாள்..!! அது.. ஒரு மர பொம்மை.. சிறுவயதில் ஆதிராவும் தாமிராவும் பந்தயப் பொருளாக வைத்து விளையாண்ட அதே மாத்ரியோஷ்கா மர பொம்மை..!!!

கையில் அந்த பொம்மையுடனேதான் ஆதிரா அறையில் இருந்து வெளிப்பட்டாள்..!! அவளும் தாமிராவும் பெரியவர்களான பிறகும்கூட.. அந்த பொம்மையை அவர்கள் அறையிலேயே ஒரு அலங்காரப் பொருளைப்போல வைத்திருந்தது அவளுக்கு நன்றாக நினைவிருந்தது..!! வேண்டாத பொருட்களை அடைத்து வைக்கிற அந்த அறைக்கு இந்த பொம்மை எப்படி சென்றிருக்கக்கூடும் என்ற யோசனையுடனேதான் மாடிப்படியேறினாள்..!! அவர்களுடைய குடும்பம் மைசூருக்கு சென்றபிறகு.. அவர்களுடைய அறையை சுத்தம் செய்த வனக்கொடி.. அந்த அறையில் இந்த பொம்மையை போட்டிருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்..!!

மாடியில் இருக்கிற அவர்களது அறைக்கு ஆதிரா திரும்பியபோது.. சிபி அங்கே இல்லை.. உறங்கி எழுந்திருந்தவன் வேறெங்கோ சென்றிருந்தான்..!! ஆதிரா படுக்கையில் சென்று அமர்ந்தாள்.. சில வினாடிகள் அந்த பொம்மையையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.. சிறுவயது நினைவுகள் எல்லாம் அவளுடைய மனதில் எழுந்தன..!! பிறகு அவளுக்குள் ஏதோ ஒரு உந்துதல் ஏற்பட.. அந்த பொம்மையை திருகி திறந்தாள்.. உள்ளே இருந்த பொம்மைகளை ஒவ்வொன்றாக திறந்து அதற்குள்ளிருந்த பொம்மையை வெளியே எடுத்தாள்..!!

ஏழாவது பொம்மையை திறந்தபோதுதான் அந்த வித்தியாசத்தை உணர்ந்தாள்.. அதற்குள்ளே இருக்கவேண்டிய, எல்லாவாற்றிலும் மிகச்சிறிய எட்டாவது பொம்மையை காணவில்லை.. அதற்கு பதிலாக உள்ளே வேறொன்று இருந்தது.. ஒரு கம்ப்யூட்டர் மெமரி சிப்..!!

ஆதிரா ஆச்சர்யப்பட்டுப் போனாள்.. சிறிது நேரம் அந்த சிப்பையே வித்தியாசமாக பார்த்தாள்..!! 'இதை யார் இதற்குள் வைத்திருப்பார்கள்..?' என்று யோசித்துப் பார்த்தால்.. தாமிராவை தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது என்று தோன்றியது..!! அதே நேரம்.. அந்த சிப்புக்குள் என்ன ஒளிந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்கிற ஆர்வமும்.. அவளுக்குள் உடனே தோன்றியது..!!

பட்டென படுக்கையில் இருந்து எழுந்தாள்.. டேபிளில் இருந்த சிபியின் லேப்டாப்பை கையில் எடுத்தாள்..!! மீண்டும் மெத்தையில் வந்து அமர்ந்தவள், லேப்டாப்பை திறந்து ஆன் செய்தாள்.. அதன் பக்கவாட்டில் மெமரி சிப்பை செருகி, அதில் சேகரிக்கப்பட்டிருந்த டேட்டாவை லேப்டாப் திரையில் பார்த்தாள்..!! 'PRIVATE' என்கிற பெயருடன் ஒரே ஒரு zip file மட்டுமே அந்த மெமரி சிப்பில் இருந்தது..!! அதை திறந்து பார்க்க முயன்றபோது..

"Please enter the password" என்று கேட்டது.

ஆதிராவின் முகத்தில் சட்டென்று ஒரு ஏமாற்றம்..!! 'என்ன பாஸ்வேர்ட் வைத்திருப்பாள்' என்று மோவாயைக் கீறி யோசித்தாள்.. 'அதுவாக இருக்கும், இதுவாக இருக்கும்' என்று அவளுக்கு தோன்றிய நான்கைந்து வார்த்தைகளை முயன்று பார்த்தாள்..!! அவளுடைய முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.. அந்த file-ஐ திறக்க முடியவில்லை..!!

என்ன செய்யலாம் என்று சிறிது நேரம் யோசித்தாள்.. அப்புறம் யோசனை எதுவும் தோன்றாமல் போகவே, சலிப்புடன் லேப்டாப்பை மூடி வைத்தாள்..!! அந்த மெமரி சிப்பை மட்டும்.. டேபிள் ட்ராவில் பத்திரப்படுத்திக் கொண்டாள்..!!

அத்தியாயம் 10

கோயிலின் வாயிலில் இருந்து நீண்டிருந்த வீதியில்.. ஆண்களும் பெண்களும், பெரியவர்களும் சிறியவர்களுமாக திரள்திரளாய் கூட்டம்.. ஆதிராவும் அந்தக் கூட்டத்துக்குள் ஒருஆளாய் நின்றிருந்தாள்.!! இரவு நேரம் அது.. குழல் விளக்குகளும் சீரியல் விளக்குகளும்தான் அந்த இடத்தை வெளிச்சமாக வைத்திருந்தன..!! திடும்திடுமென முழங்கிய மேளச்சத்தம் காதைக் கிழித்தது.. கிறுகிறுவென சுற்றிய ராட்டினங்கள் கண்ணைக் கவர்ந்தன..!!

காவி வேஷ்டியும், காலில் சலங்கையும், கையில் பறையுமாக இருந்த சில இளைஞர்கள்.. நான்குக்கு நான்கு என்று வரிசையமைத்து கூடிக்கொண்டு.. கையிலிருந்த பறையை குச்சியால் 'டமார் டமார்' என்று ஒத்திசைவுடன் தட்டியவாறே.. காற்சலங்கைகள் 'ஜல் ஜல்' என்று ஒலியெழுப்புமாறு.. வீதியில் நளினமாக ஆடிவந்தனர்..!!

அவர்களுக்கு பின்னே.. காலையில் முயல் வேட்டைக்காக காட்டுக்குள் சென்றிருந்த வாலிபர்களும் சிறுவர்களும்.. இப்போது வெற்றிப் பூரிப்புடன் கம்பீரமாக நடந்துவந்தனர்..!! நடந்து வந்தவர்களின் ஒருகையில் அவர்கள் வேட்டையாட எடுத்துச் சென்ற ஆயுதம்.. வேல்க்கம்பு, குத்தீட்டி, இரும்புக்கழி..!! அவர்களது இன்னொருபக்க தோளில் நீளமான ஒரு கொம்பு.. அந்த கொம்பில் அவர்கள் வேட்டையாடிய முயல்கள் உயிரற்று தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தன..!!

ஆட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஆதிராவுக்கு.. திடீரென தங்கையின் ஞாபகம் வந்தது.. தலையை திருப்பி பக்கவாட்டில் பார்த்தாள்.. அருகில் தாமிரா இல்லாமல் போனதும் ஆதிராவிடம் ஒரு சிறுபதற்றம்..!! தலையை அப்படியும் இப்படியுமாய் சுழற்றி.. பார்வையாலேயே தாமிராவை தேடினாள்..!! சற்று தொலைவில்.. கூட்டத்தை விலக்கியவாறு சென்றுகொண்டிருந்த தாமிரா.. இப்போது ஆதிராவின் பார்வையில் பட்டாள்..!!

"தாமிராஆஆ..!!"


ஆதிரா இங்கிருந்து கத்தியது தாமிராவின் காதில் விழவில்லை.. மேலும் மேலும் முன்னேறி, கூட்டத்தில் இருந்து விடுபட்டாள்..!! ஏதோ ஒரு வசியத்துக்கு கட்டுப்பட்டவள் மாதிரி.. எந்திரம் போல கோயிலின் பின்புற இருட்டுக்குள் நடந்தாள்..!! இப்போது ஆதிரா அவளுடைய இடத்திலிருந்து கிளம்பினாள்.. நெருக்கியடித்து நின்ற கூட்டத்துக்குள் முண்டியடித்து, தங்கை சென்ற திசையிலேயே நகர்ந்தாள்..!! 'ஊஊஊஊஊ' என்று பெண்கள் குழவையிடும் சப்தம் ஒருபுறம் கேட்டுக்கொண்டிருக்க.. ஆதிரா கஷ்டப்பட்டு கும்பலை விலக்கி வெளியே வந்தாள்..!!

"தாமிராஆஆ..!!"

என்று கத்திக்கொண்டே தங்கை சென்ற பக்கமாக நடந்தாள்..!! கோயிலின் பின்பக்க பிரதேசம் இருண்டு போயிருந்தது.. நிலவின் மசமசப்பான வெளிச்சம் மட்டுமே மிச்சமிருந்தது..!! நெருக்க நெருக்கமாய் வளர்ந்திருந்த மரங்கள் எல்லாம்.. கருப்பு பிம்பங்களாகவே காட்சியளித்தன..!! ஆதிரா இருட்டுக்குள் தடுமாற்றமாய் நடந்தவாறே.. தங்கையை பெயர்சொல்லி அழைத்தவாறே சுற்றும் முற்றும் தேடினாள்..!!

"தாமிராஆஆ.. தாமிராஆஆ..!!"

தாமிரா எங்கே சென்றாள் என்றே தெரியவில்லை.. அதற்குள் மாயமாக மறைந்து போயிருந்தாள்..!! தங்கையை காணாத ஆதிராவுக்கு நெஞ்சு பதறியது.. அவசரம் தொற்றிக்கொண்டவளாய் அங்குமிங்கும் ஓடினாள்.. மரங்களுக்கு இடையில் புகுந்து பதைபதைப்புடன் தங்கையை தேடினாள்..!!

சிறிதுநேர தேடுதலுக்கு பிறகு.. ஒரு மரத்துக்கு அடியில் நின்றிருந்த தாமிரா பார்வையில் தென்பட்டாள்.. கருப்புஉடை அணிந்திருந்த அவளது முகம் மட்டும் அப்படியே வெளிறிப் போயிருந்தது..!! தங்கையை கண்டுவிட்ட மகிழ்ச்சியில்..

"தாமிராஆஆ..!!"

என்று உற்சாகமாக கத்திக்கொண்டே ஆதிரா அவளை நோக்கி ஓடினாள்..!! ஆனால்.. தாமிராவோ ஒருவித திகைப்புடன் சிலைபோல் உறைந்திருந்தாள்.. அவளுடைய கண்கள் பயத்தில் அகலமாய் விரிந்திருந்தன..!!

"அக்காஆஆ..!!" என்று ஈனஸ்வரத்தில் முனுமுனுத்தாள்.

தாமிராவை நோக்கி ஓடிய ஆதிரா இப்போது அப்படியே பட்டென நின்றாள்.. அவளுடைய முகத்தில் கொப்பளித்த மகிழ்ச்சி சுத்தமாக வடிந்து போய்.. குப்பென ஒரு திகில் சாயத்தை அப்பிக்கொண்டது..!! ஆதிராவின் திகிலுக்கு காரணம்.. மரத்துக்கு பின்புறம் இருந்து வெளிப்பட்ட அந்த இன்னொரு உருவம்.. தாமிராவின் முதுகுப்பக்கம் தோன்றி அவளுக்கு மிகநெருக்கமாக நின்றிருந்தது..!!

"அக்காஆஆ..!!"

தாமிரா தொடர்ந்து பரிதாபமாக அழைத்துக் கொண்டிருந்தாள்..!! ஆதிராவோ அந்த உருவத்தைக் கண்ட மிரட்சியில் இருந்தாள்.. ஒருகையை உயர்த்தி, விரல்களை விரித்து அசைத்தவாறே, அவர்களை நோக்கி மெல்ல நகர்ந்தாள்..!! அந்த உருவத்தின் முகம் தெளிவாக தெரியவில்லை.. ஆதிரா மிகவும் பிரயத்தனப்பட்டு அந்த உருவத்தின் முகத்தை காண எத்தனித்தாள்.. இமைகளை கசக்கி கசக்கி விழித்து விழித்து பார்த்தாள்.. பிரயோஜனம் இல்லை.. முகமெல்லாம் கரியப்பிக்கொண்ட மாதிரி மசமசப்பாக காட்சியளித்ததே ஒழிய, தெளிவு பிறக்கவில்லை..!!

அவஸ்தையுடன் தலையை இப்படியும் அப்படியுமாய் அசைத்த ஆதிரா.. படக்கென பதறியடித்துக் கொண்டு எழுந்தாள்..!! அவளது இதயம் தாறுமாறாக அடித்துக் கொண்டது.. அவளுடைய மார்புகள் குபுக் குபுக்கென மேலும் கீழும் ஏறி இறங்கின.. தஸ்புஸ்சென்று மூச்சிரைத்தது..!! ஒருகணம் அவளுக்கு எதுவும் புரியவில்லை.. படுக்கையில் அமர்ந்து மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள்..!! அப்புறம்.. எல்லாமே கனவு என்று உணர்ந்ததும்தான் அவளிடம் ஒரு நிம்மதி பெருமூச்சு வெளிப்பட்டது..!!

பக்கவாட்டில் திரும்பி பார்த்தாள்.. சிபி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.. அவனுடைய ஒருகை இவளுடைய இடுப்பில் தவழ்ந்திருந்தது..!! தலையை திருப்பி கடிகாரத்தை பார்த்தாள்.. நள்ளிரவு தாண்டி இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது..!! தொண்டை வறண்டுபோனது மாதிரி ஒரு உணர்வு அவளுக்கு.. தாகமெடுத்தது..!! தனது இடுப்பை வளைத்திருந்த சிபியின் கரத்தை மெல்ல விலக்கினாள்.. மெத்தையில் இருந்து இறங்கினாள்..!! நடந்து சென்று டேபிள் மீதிருந்த ஜாடியை எடுக்க.. அதன் எடை குறைவாக இருந்தது.. அதனுள் தண்ணீர் இல்லை என்பது அந்த ஜாடியை எடுத்ததுமே அவளுக்கு புரிந்து போனது..!!

"ப்ச்..!!" என்று சலிப்பை வெளிப்படுத்தினாள்.

கதவு திறந்து அறையைவிட்டு வெளியே வந்தாள்.. மாடிப்படி இறங்கி ஹாலுக்குள் பிரவேசித்தாள்..!! எதற்காக இப்படி ஒரு கனவு என்று யோசித்தவாறே நடந்தாள்.. சிங்கமலையில் வனக்கொடி சொன்னது, திரவியம் திருவிழா பற்றி குறிப்பிட்டது, அப்புறம் அந்த முயல்.. எல்லாமுமாக சேர்ந்துதான் இப்படி ஒரு கனவு உருவாகி இருக்கவேண்டும் என்று தோன்றியது..!! கிச்சனுக்குள் நுழைந்த தாமிரா.. ஒரு சொம்பு நிறைய நீர் அள்ளி தொண்டைக்குள் ஊற்றிக் கொண்டாள்.. தாகம் தீர்ந்து தொண்டையின் வறட்சி நின்றது..!!

கிச்சன் விளைக்கை அணைத்துவிட்டு வெளியே வந்தபோதுதான்..

"தட்.. தட்.. தட்.. தட்..!!!"

என்று இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருந்த அந்த சப்தத்தை கவனித்தாள்.. எங்கிருந்து சப்தம் வருகிறதென திரும்பி பார்த்தாள்..!!

"தட்.. தட்.. தட்.. தட்..!!!"

வெளியில் வீசிய காற்றின் வேகத்தில்.. ஜன்னல் கதவுதான் அந்த மாதிரி அடித்துக் கொண்டு கிடந்தது.. அதனுடன் வெண்ணிற ஜன்னல் திரைச்சீலை வேறு உயரே எழும்பி பறந்து கொண்டிருந்தது.. 'ஷ்ஷ்ஷ்ஷ்' என்று காற்றின் சீற்றமான சப்தம்..!! ஒருகணம் யோசித்த ஆதிரா.. பிறகு அந்த ஜன்னலை நோக்கி நடந்தாள்..!! ஜன்னல் கதவைப்பற்றி, மூடுவதற்காக நகர்த்தியபோதுதான்.. தூரத்தில் அந்தக்காட்சி எதேச்சையாக அவளுடைய பார்வையில் விழுந்தது..!!

இருள் சூழ்ந்திருந்த காட்டுப்பகுதி.. மெல்லிய வெளிச்சத்துடன் புகைமாதிரி பனிமூட்டம்.. அகலமான மரத்தின் அடிப்பரப்பில் பாறை.. அந்த பாறையில் சிவப்பு அங்கி போர்த்திக்கொண்டு அமர்ந்திருந்த அந்த உருவம்.. அந்த உருவத்தை சுற்றி அமர்ந்திருந்த பறவைகள், காட்டு விலங்குகள்.. அந்த உருவம் ஏதோ உரையாற்றுவது போலவும், பறவைகளும் விலங்குகளும் அதை கவனமாக கேட்டுக் கொள்வது போலவும்.. பார்த்தாலே சில்லிட்டுப் போகிற மாதிரியான ஒரு காட்சி..!!

அதைக்கண்டதுமே ஆதிரா பக்கென அதிர்ந்து போனாள்.. அவளுடய நாடி நரம்பெல்லாம் குப்பென்று ஒரு பய சிலிர்ப்பு..!!

"ஆஆஆஆஆஆ..!!"

அவளுடைய கட்டுப்பாடின்றி, அந்த வீடே அதிரும் அளவிற்கு கத்திவிட்டாள்.. பதறுகிற இருதயத்துடன் படிக்கட்டை நோக்கி திடுதிடுவென ஓடினாள்..!! ஆதிராவின் சப்தத்தில், மேலே சிபி பதறிப்போய் எழுந்தான்.. எழுந்த வேகத்தில் கதவு திறந்து வெளியே ஓடினான்..!!

"ஆதிராஆஆ..!!" என்று கத்திக்கொண்டே படிக்கட்டில் தடதடவென இறங்கினான்.

"அத்தான்..!!" அலறியடித்து ஓடிவந்த ஆதிரா சிபியை இறுக்கி கட்டிக்கொண்டாள்.


"ஆ..ஆதிரா.. ஆதிரா.. எ..என்னாச்சுமா..??"

"அ..அத்தான்.. அத்தான்..!!" ஆதிரா வார்த்தை வராமல் திணறினாள்.

"சொல்லுடா.. என்னாச்சு..??"

"அ..அங்க.. அங்க.."

"எ..என்ன அங்க..??"

"அ..அங்க.. அந்த உருவம்.. கு..குறிஞ்சி..!!"

"குறிஞ்சியா..?? எங்க..??"

"அ..அங்க.. ஜ..ஜன்னல்.. ஜன்னல்ல..!!"

இப்போது சிபியின் முகத்தில் ஒருவித இறுக்கமும், தீவிரமும்..!! ஆதிராவை அணைத்தவாறே அழைத்துக்கொண்டு அந்த ஜன்னலை நெருங்கினான்..!! ஆதிரா பயந்து நடுநடுங்கிப்போய் இன்னும் அவனது மார்புக்குள்ளேயே முகம் புதைத்திருந்தாள்.. சிபி மட்டும் ஜன்னல் கதவை தள்ளி வெளியே பார்வையை வீசினான்..!!

இப்போது பாறையில் அந்த உருவத்தை காணவில்லை.. சுற்றிநின்ற பறவை, விலங்குகளையும் காணவில்லை.. அமைதியாக, இருட்டாக வெறிச்சோடிப்போய் இருந்தது அந்த இடம்..!!

"எ..எங்க ஆதிரா..??"

"அ..அங்க.. அந்தப் பாறைல..!!"

"பாறைல எதுவும் இல்லயேடா..!!"

சிபி அந்தமாதிரி சாந்தமாக சொன்னதும்தான்.. ஆதிரா அவனுடைய மார்பிலிருந்து எழுந்தாள்..!! அவளுடைய முகம் வியர்த்துப்போய் பயம் அப்பிக்கொண்டு காட்சியளித்தது..!! இன்னும் மிரட்சி குறையாத கண்களுடனே ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள்.. அங்கே இப்போது அந்த உருவத்தை காணவில்லை என்றதும்.. அவளிடம் ஒரு திகைப்பு.. மூளைக்குள் ஒரு குழப்பம்..!!

"அ..அங்க.. அந்த பாறைலதான் அத்தான் குறிஞ்சி உக்காந்திருந்தா.. நா..நான் பார்த்தேன்..!!"

"அங்க யாரும் இல்லடா..!! நீயா ஏதோ கற்பனை பண்ணிக்கிட்டன்னு நெனைக்கிறேன்..!!"

"ஐயோ.. இல்லத்தான்.. நான் பார்த்தேன்.. என் ரெண்டு கண்ணால பார்த்தேன்..!!"

"ப்ச்.. பாருடா.. நான் சொல்றதை கொஞ்சம் கேளு..!!"

"பார்த்தேன் அத்தான்.. செவப்பு அங்கி போத்திருந்தா.. பாறைல உக்காந்திருந்தா.. சுத்தி ஒரே புகையா இருந்துச்சு..!!"

"ஆதிரா ப்ளீஸ்..!!" சிபி எரிச்சலடைவதை உணராமல்,

"நாய் நரி காக்கா கரடின்னு என்னன்னவோ மிருகம்லாம் சுத்தி உக்காந்திட்டு இருந்துச்சு.. அவ பேசுறதை கேட்டுட்டு இருந்துச்சு..!! எனக்கு ஒருநிமிஷம் அபப்டியே ஹார்ட்டே நின்னு.." ஆதிரா தொடர்ந்து புலம்பிக்கொண்டிருக்க,

"ப்ளீஸ் ஆதிரா.. ஸ்டாப் இட்.. ப்ளீஸ்..!!!!" அவன் பொறுமையிழந்து கத்தினான்.

ஆதிரா இப்போது பட்டென்று அமைதியானாள்.. கணவனின் முகத்தையே பரிதாபமாக ஏறிட்டாள்.. அவனும் இவளுடைய முகத்தையே கவலையும், தவிப்புமாய் பார்த்தான்..!! அப்புறம் ஆதிராவின் கூந்தலை இதமாக கோதிவிட்டவாறே.. குரலில் சற்று கடுமையை குறைத்துக் கொண்டு சொன்னான்..!!

"இதுதான்.. இதுக்குத்தான் இங்க வரவேணாம்னு நான் சொன்னேன்.. கேட்டியா நீ..?? அடம்புடிச்சு கூட்டிட்டு வந்த.. இப்பப்பாரு..!! தேவையா இதெல்லாம்..??"

"........................"

"பேசாம காலைலயே மைசூர் கெளம்பிடலாம்..!!"

சிபி அந்தமாதிரி சொன்னதும் ஆதிராவுக்கு சுருக்கென்று இருந்தது.. அகழியில் ஐந்தாறு நாட்கள் தங்கியிருக்கலாம் என்ற அவளது ஆசைக்கு பங்கம் வந்துவிடுமோ என்றொரு பயம் பிறந்தது..!! ஓரிரு நாட்களாக நடந்த சம்பவங்கள் அவளுக்குள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தன.. அந்த குழப்பத்திற்கு விடை தெரிந்துகொள்கிற ஆர்வம் அவளுடைய மனதைப்போட்டு அரித்துக் கொண்டிருந்தது..!! இந்த நிலையில் அகழியில் இருந்து கிளம்ப அவளுக்கு விருப்பமில்லை.. கணவனை சமாளிப்பதுதான் சரியான வழி என்று தோன்றியது..!!

"ச..சரித்தான்.. விடுங்க.. நான்தான் எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டேனா இருக்கும்..!! இதை இத்தோட விட்றலாம்..!!" என்று சமாதானமாக சொன்னாள்.

"எப்படி விடுறது..?? நடுராத்திரில எந்திரிச்சு 'ஆ'ன்னு கத்துற.. குறிஞ்சியை பார்த்தேன்னு ஹிஸ்டீரியா பேஷன்ட் மாதிரி பொலம்புற..!! எப்படி ஈஸியா விடமுடியும்..??"

"ப்ச்.. நான்தான் சொல்றேன்ல..!! கெட்டகனவு வந்து முழிப்பு வந்துடுச்சு அத்தான்.. அதோட தண்ணி குடிக்கலாம்னு கீழ வந்தேன்.. ஜன்னல் கதவை மூடலாம்னு இங்க வந்தேன்.. ஏதோ கன்ஃப்யூஷன்ல நானா எதையோ கற்பனை பண்ணிக்கிட்டேன்னு நெனைக்கிறேன்.. அவ்வளவுதான்.. பயப்படுறதுக்குலாம் ஒன்னும் இல்ல.. விடுங்க..!!"

ஆதிரா அவ்வாறு அமர்த்தலாக சொல்லவும்.. சிபி அவளையே இமைகொட்டாமல் பார்த்தான்..!! இப்போது அவனுடைய இதழ்களில் மெலிதான ஒரு புன்னகை அரும்பியது.. குனிந்து மனைவியின் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தான்..!! அவளுடைய கன்னத்தை இதமாக வருடியவாறே..

"நீ எதுக்குடா கீழ தனியா வந்த.. என்னை எழுப்பிருக்கலாம்ல..??" என்று கனிவாக கேட்டான்.

"நல்லா தூங்கிட்டு இருந்திங்க.. டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நெனச்சேன்..!!"

"ம்ம்.. இனிமே இப்படிலாம் பண்ணாத.. புரியுதா..??"

"ச..சரித்தான்..!!"

"உனக்கு ரொம்ப வீக்கான ஹார்ட் ஆதிரா.. இந்த மாதிரி அட்வென்சர்லாம் உனக்கு வேண்டாம்.. ஹாஹா.. ஓகேவா..??" சிபி அந்தமாதிரி கேலிச்சிரிப்புடன் சொல்ல,

"ஹாஹா.. சரி..!!" ஆதிராவும் இயல்புக்கு திரும்பி புன்னகைத்தாள்.

"பெட்க்கு போலாமா..??"

"ம்ம்..!!"

"வா.. நானே உன்னை தூக்கிட்டு போறேன்..!!"

"ஐயோ.. வேணாம்த்தான்..!!"

ஆதிரா பதறிக்கொண்டிருக்கும்போதே சிபி அவளை அலாக்காக கைகளில் அள்ளிக்கொண்டான்..!! அவள் நாணத்துடன் சிணுங்க, அவன் குறும்புடன் சிரித்தவாறே.. குழந்தையைப்போல அவளை தூக்கிக்கொண்டு படியேறினான்..!!

அதே நேரம்.. பாறையில் அமர்ந்திருந்த அந்த உருவம் இப்போது படக்கென ஜன்னலுக்கருகே தோன்றியது.. கண்ணாடி ஜன்னலில் கைகளை விரித்து வைத்தவாறு கருப்பு பிம்பமாக காட்சியளித்தது.. படிக்கட்டில் செல்கிற ஆதிராவையும், சிபியையுமே உர்ரென்று முறைத்து பார்த்தது..!! வினோதமான ஒரு சப்தம் அந்த உருவத்திடம் இருந்து வெளிப்பட்டது..!!

"க்கர்ர்க்க்க்கர்.. க்கர்ர்க்க்க்கர்.. க்கர்ர்க்க்க்கர்..!!!"

அத்தியாயம் 11

அகழியில் காவல் நிலையம் கிடையாது.. களமேழி காவல் சரகத்தின் கீழ்தான் அகழி கிராமம் வரும்.. அங்குதான் காவல் நிலையமும் அமைந்திருக்கிறது..!! களமேழி சற்றே பெரிய ஊர்.. தாலுகா ஆபீஸ், தாசில்தார் ஆபீஸெல்லாம் அங்குதான்.. கலைக்கல்லூரி கூட ஒன்று உண்டு.. அகழியில் இருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கிறது..!!

காலையிலேயே களமேழி காவல் நிலையத்துக்கு கால் செய்து.. இன்ஸ்பெக்டரின் இருப்பு நிலவரத்தை அறிந்துகொண்டிருந்தாள் ஆதிரா..!! காலை உணவு அருந்தியபிறகு கணவனுடன் காரில் கிளம்பினாள்..!! மலைப்பாதையில் 15 கி.மீ கடந்து களமேழி வந்து சேர ஒருமணி நேரம் ஆகிப்போனது..!! ஒரு சிறிய குன்றின்மேல்.. சுற்றிலும் மரங்கள் அடர்ந்து.. ஓட்டுக்கூரையும், சிவப்புப்பூச்சுமாக.. பனிசூழ காட்சியளித்தது களமேழி காவல் நிலையம்..!! காவல் நிலையத்துக்கு வெளியிலேயே காரை பார்க் செய்துவிட்டு.. கணவனும் மனைவியும் உள்ளே நுழைந்தார்கள்..!!

"நாங்க அகழில இருந்து வர்றோம்.. இன்ஸ்பெக்டரை பாக்கணும்..!! கா..காலைல கால் பண்ணிருந்தோம்..!!"

"ஓ.. நீங்கதானா அது..?? இப்போ வந்துடுவாரு.. வெயிட் பண்ணுங்க..!!"

கான்ஸ்டபிள் சொன்னதும்.. ஓரமாக கிடந்த மரபெஞ்சில் ஆதிராவும் சிபியும் அமர்ந்துகொண்டார்கள்.. ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக்கொள்ளாமல் கட்டிடத்தின் உட்புறத்தை அமைதியாக வேடிக்கை பார்த்தார்கள்..!! ஸ்வெட்டரும் மங்கி குல்லாவும் அணிந்திருந்த கான்ஸ்டபிள்கள் மந்தமாகவே இயங்கிக் கொண்டிருந்தனர்.. அலுவல் எதுவும் நடப்பது மாதிரி தெரியவில்லை.. அரட்டைதான் பிரதானமாக இருந்தது..!!

அவர்கள் சென்றதிலிருந்து அரைமணி நேரம் கழித்துதான் ஸ்டேஷன் வந்து சேர்ந்தார் இன்ஸ்பெக்டர் வில்லாளன்..!! முப்பத்தைந்திலிருந்து நாற்பது வயதுக்குள் இருப்பார்.. முன்புற தலையில் நிறைய முடிகளை இழந்திருந்தார்..!! முகத்தில் ஒரு இறுக்கம்.. கண்களில் ஒரு கூர்மை..!! அவர் உள்ளே நுழைந்ததும் ஸ்டேஷன் அப்படியே அமைதியாகிப் போனது.. கான்ஸ்டபிள்கள் அவரிடம் தயங்கி தயங்கித்தான் பேசினர்.. மிகவும் கடுமையானவர் என்று அதிலேயே புரிந்தது..!!

வந்ததும் கான்ஸ்டபிள்களுக்கு ஏதேதோ உத்தரவுகள் பிறப்பித்தார்..!! இவர்கள் வந்திருப்பதை கான்ஸ்டபிள் ஒருவர் நினைவுபடுத்தியதும்.. ஒருமுறை திரும்பி இந்தப்பக்கம் பார்த்தார்..!! மேலும் சிறிது நேரம் கழித்துத்தான் இவர்களை தனது அறைக்கு அழைத்தார்.. 'என்ன விஷயம்?' என்று பொதுவாக விசாரித்தார்.. இவர்களும் வந்த விஷயத்தை சொன்னதும், ஒருசில வினாடிகள் அமைதியாகிப் போனார்..!! பிறகு ஒரு நீண்ட பெருமூச்சுடன்.. ஏளனமான குரலில் ஆரம்பித்தார்..!!

"அகழில இருக்குற ஒரு பயலுக்கும் அறிவுன்றதே கெடையாதா..?? காத்து அடிச்சா குறிஞ்சி.. கதவு அசைஞ்சா குறிஞ்சி.. மரத்தை பாத்தா குறிஞ்சி.. மலையை கண்டா குறிஞ்சி..!! எப்பத்தான் எல்லாம் திருந்த போறாய்ங்க..??"

"............................." ஆதிராவும் சிபியும் அமைதியாகவே இருந்தனர்.


"எவளாவது எவன்கூடயாவது ஓடிப்போயிருப்பா.. இவய்ங்க குறிஞ்சி தூக்கிட்டு போயிட்டான்னு சொல்லிட்டு திரிவாய்ங்க..!! கடன் தொல்லை தாங்காம எவனாவது ஊரைவுட்டு போயிருப்பான்.. மகனும் மருமகளும் சேந்து வயசானவரை அடிச்சு தொரத்திருப்பாய்ங்க.. பரிச்சைல பெயிலாயிட்டு ஒரு சின்னப்பய மெட்ராஸ்க்கு ரயில் ஏறிருப்பான்..!! இவய்ங்கட்ட போய் கேளுங்க.. எல்லாத்துக்கும் குறிஞ்சி குறிஞ்சிம்பாய்ங்க..!! உங்க ஊர்க்காரய்ங்கள நெனச்சாலே எரிச்சலா இருக்குயா..!!"

"அ..அப்போ.. குறிஞ்சின்னு ஒரு விஷயமே இல்லைன்றீங்களா..??" தயக்கமாகத்தான் கேட்டாள் ஆதிரா.

"சத்தியமா இல்லை.. இந்த ஆவி, பேய், பிசாசுலலாம் எனக்கு சுத்தமா நம்பிக்கை கெடையாது..!! சாதாரணமா நடக்குறதுக்கெல்லாம் இவய்ங்க பேய்ச்சாயம் பூசுறாய்ங்க..!!"

"ம்ம்.. அப்படியே வச்சுக்கிட்டாலும்.. இத்தனை பேர் காணாம போயிருக்காங்களே.. அதுக்கெல்லாம்.."

"இத்தனை பேர் காணாம போயிருக்காங்க, அத்தனை பேர் காணாம போயிருக்காங்கன்னு நீங்கதான் சொல்லிட்டு திரியிரிங்க.. எங்களுக்கு என்ன தெரியும்..?? இதுவரை எங்களுக்கு வந்திருக்குற கம்ப்ளயின்ட் எத்தனை தெரியுமா.. நாலே நாலு.. அதுல உங்க தங்கச்சி கேஸ் ஒன்னு..!!"

"சரி.. நாலு பேராவது கம்ப்ளயின்ட் குடுத்திருக்காங்களே.. அதுல.."

"ஒருத்தரக்கூட இன்னும் கண்டுபிடிக்க உங்களுக்கு துப்பு இல்லையேன்றீங்களா..??"

"ஐயோ.. அப்படி சொல்லல ஸார்..!!"

"பரவால.. சொல்லிக்கங்க..!! நீங்க என்னவேணா சொல்லிக்கங்க.. என்னவேணா நெனைச்சுக்கங்க..!! எனக்கும் கவலை இல்ல.. எங்க டிப்பார்ட்மன்ட்டுக்கும் கவலை இல்ல..!! நான் சொல்லிக்கிறதுலாம் ஒண்ணுதான்..!!"

"எ..என்ன..??"

"உங்க ஊர்க்காரய்ங்க ஒத்துழைப்பு இல்லாம.. எங்களால ஒன்னும் செய்ய முடியாது..!! காணாமப்போனா கம்ப்ளயின்ட் குடுக்கக்கூட வர மாட்டேன்றாய்ங்க.. அப்படியே கம்ப்ளயின்ட் வந்து விசாரிக்கப்போனா, ஒருத்தனும் வாயை தெறக்க மாட்டேன்றாய்ங்க..!! ஏதாவது சொல்லிட்டா எங்க அடுத்து குறிஞ்சி நம்மள தூக்கிட்டு போயிருவாளோன்னு எல்லாப்பயலுக்கும் பயம்..!! இவய்ங்கள வச்சுக்குட்டு என்னத்த பண்ணச் சொல்றிங்க..??"

"............................."

"குறிஞ்சின்ற பயத்தை விட்டு அவய்ங்க என்னைக்கு வெளில வர்றாய்ங்களோ.. அன்னைக்குத்தான் எங்களாலயும் எதாவது செய்ய முடியும்..!! அதுவரைக்கும் நீங்க என்னவேணா நெனைச்சுக்கங்க.. என்னவேணா பண்ணிக்கங்க..!!"

"உ..உங்க கோவம் புரியுது ஸார்..!! பட்.. தாமிரா கேஸ்ல நீங்க சொல்ற மாதிரி எதுவும் நடக்கலையே.. கண்ணால பாத்த சாட்சி வனக்கொடி.. அவங்க உங்க விசாரணைக்குலாம் ஒழுங்காத்தான கோவாப்ரெட் பண்ணுனாங்க..??" ஆதிரா கேட்க, அவளை கூர்மையாக ஒரு பார்வை பார்த்தார் வில்லாளன்.

"யாரு.. அந்த.. கோழிய திருட்ன மாதிரியே முழிக்குமே அந்த பொம்பளையா..??"

"ஆ..ஆமாம்..!!"

"அந்த பொம்பளையை பத்தி மட்டும் பேசாதிங்க.. கடுப்பா இருக்கு எனக்கு..!!"

"ஏன் ஸார்..??"

"பின்ன என்ன.. சும்மா கிளிப்புள்ள மாதிரி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருந்துச்சு.. அப்டியே செவுள்ல நாலு அப்பு அப்பலாமான்னு இருந்துச்சு எனக்கு..!!"

"எ..என்ன ஸார் சொல்றீங்க..??"

"அந்த பொம்பளை சரியில்லைங்க.. எதையோ மறைக்குது.. பொய் சொல்லுது.. எனக்கு நல்லாத்தெரியும்..!!"

"ஐயோ.. அவங்க அப்படிப்பட்டவங்க இல்ல ஸார்..!!"

"ஹ்ஹ்ஹ்ம்ம்..!! இதுக்குமேல நான் என்னத்த சொல்றது..?? அந்த பொம்பளைட்ட ஏதோ தப்பு இருக்குன்னு மட்டும் எனக்கு தெரிஞ்சது.. ஆனா என்னன்னுதான் ஒன்னும் புரியல..!! நானும் என்னால முடிஞ்சளவுக்கு துருவித்துருவி விசாரிச்சுப் பாத்தேன்.. ம்ம்ம்.. புண்ணியமே இல்ல..!! நீங்க என்னடான்னா அந்த பொம்பளைக்கு சர்டிபிகேட் குடுக்குறிங்க..!!"

"ச..சரி ஸார்.. அதெல்லாம் விடுங்க.. அவங்க பொய் சொல்றாங்கன்னே வச்சுப்போம்..!! என் தங்கச்சியை கண்டுபிடிக்க நீங்க வேறென்ன ஸ்டெப்ஸ்லாம் எடுத்திங்க.. அதைப்பத்தி கொஞ்சம் சொல்லுங்க.. ப்ளீஸ்..!!"

ஒருவழியாக முக்கியமான விஷயத்திற்கு வந்தாள் ஆதிரா..!! அதுவரை எகத்தாளமாக பேசிக்கொண்டிருந்த வில்லாளன்.. அதன்பிறகு சற்று அடக்கியே வாசித்தார்.. வீராப்பாக பேசுமளவிற்கு விஷயம் எதுவும் அவரிடம் இல்லை என்பதுதான் காரணம்..!! தாமிராவின் புகைப்படத்தை மற்ற ஸ்டேஷன்களுக்கு அனுப்பி வைத்தது.. அவளுடைய கல்லூரியிலும், தோழிகளிடமும் விசாரித்தது.. அகழி காட்டுக்குள் ஒருவாரம் தேடுதல் வேட்டை நடத்தியது.. இதைத்தவிர சொல்லிக்கொள்கிற மாதிரி எந்த உருப்படியான தகவலும் அவர் தரவில்லை..!!

"பேயை நம்புறதுக்கு போலீஸை நம்ப சொல்லுங்க உங்க ஊர்க்காரய்ங்கள.. அப்பத்தான் உங்க ஊருக்கும் ஒரு விடிவுகாலம் பொறக்கும்..!!"

அட்லாஸ்டாக ஒரு அட்வைஸை அள்ளிப்போட்டு.. ஆதிராவையும் சிபியையும் அனுப்பி வைத்தார் வில்லாளன்..!! ஸ்டேஷனை விட்டு வெளியே வந்த இருவரும்.. தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்..!! காரில் ஏறி அமர்ந்ததும்.. ஆதிரா சற்றே எரிச்சலாக சொன்னாள்..!!

"பேச்சுத்தான் பெருசா இருக்கு.. ஆக்க்ஷன் ஒன்னத்தையும் காணோம்..!!"

"ம்ம்.. ஆமாம் ஆதிரா.. ரொம்ப அசால்ட்டாத்தான் பேசுறாரு..!! அதில்லாம.. இதுல இன்னொரு மேட்டரும் இருக்கு..!!"

"என்ன..??"

"டெட்பாடி கெடைச்சாத்தான் மர்டர் கேஸ்.. அதுவரை எல்லாமே மிஸ்ஸிங் கேஸ்தான்..!! போலீஸ் கொஞ்சம் மெத்தனமாத்தான் இருக்கும்..!!"

"ம்ம்.. புரியுதுத்தான்..!!"

அடுத்த அரைமணி நேரத்துக்கெல்லாம்.. அவர்களுடைய கார் அகழியை நெருங்கியிருந்தது..!! அகழிக்கு செல்கிற சாலை.. களமேழிக்கு பிரிகிற சாலை.. ஊட்டியை சேர்கிற சாலை என.. மூன்று சாலைகளும் சந்தித்துக்கொள்கிற இடத்தை அடைந்திருந்தது..!! முச்சாலை சந்திப்பின் ஒருபக்கம் குழலாறு ஓடிக்கொண்டிருந்தது.. ஆற்றின் அடுத்த கரையில் பிரம்மாண்டமாக நின்றுகொண்டிருந்தது சிங்கமலை..!!

"காரை ஸ்டாப் பண்ணுங்கத்தான்.. எதாவது சாப்பிட்டு போகலாம்.. பசிக்குது..!!" என்றாள் ஆதிரா.

மனைவி சொன்னதும் காரின் வேகத்தை குறைத்து.. சாலையின் ஒரு ஓரமாக நிறுத்தினான் சிபி..!! இருவரும் காரை விட்டு வெளியே இறங்கினார்கள்..!! இரண்டே இரண்டு சாலையோர கடைகள்தான் இருந்தன அந்த இடத்தில்.. ஒன்று தேநீர்க்கடை.. இன்னொன்று பழக்கடை..!! ஆதிராவும் சிபியும் பழக்கடையை அணுகினார்கள்..!! பீச், ப்ளம்ஸ், மங்குஸ்தான், அண்ணாச்சி, பப்பாளி, திராட்சை என.. பலவகையான பழங்களை சிறுசிறு துண்டங்களாக்கி.. அதை ஒரு பெரிய பிளாஸ்டிக் கிண்ணத்தில் நிரப்பி விநியோகித்துக் கொண்டிருந்தார்கள்..!! அதை முழுவதும் சாப்பிட்டால் குறைந்தது நான்கு மணி நேரத்திற்கு பசியெடுக்காது..!!

"நான் ஒரு பவ்ல் சாப்பிடுறேன்.. உங்களுக்கு..??" ஆதிரா கேட்க,

"எனக்கு வேணாம் ஆதிரா.. நீ மட்டும் சாப்பிடு..!!" பதில் சொன்ன சிபி கடைக்காரனிடம் திரும்பி,

"எவ்வளவுப்பா..??" என்று கேட்டான்.

"நாப்பது ரூவா ஸார்..!!"

சிபி கடைக்காரனுக்கு பர்ஸில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தான்.. அவன் பழங்கள் நிரம்பிய கிண்ணத்தை ஆதிராவிடம் நீட்டினான்..!! நிஜமாகவே ஆதிராவுக்கு நிறைய பசியெடுத்திருக்க வேண்டும்.. அவசர அவசரமாக அந்த பழங்களை விழுங்கி காலி செய்துகொண்டிருந்தாள்..!! சிபியோ கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்காக கட்டியவாறு.. சிறுபிள்ளைபோல மனைவி சாப்பிடுகிற அழகையே ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்..!!

"வாவ்...!!!" என்றான் திடீரென.

"என்னத்தான்..??" வாயில் போட்ட பழத்துடன் கேட்டாள் ஆதிரா.

"அ..அங்க பாரேன்..!!"

"என்ன..??"

"பட்டர்ஃப்ளை ஆதிரா..!!"

அவன் கைநீட்டிய திசையில் அந்த பட்டாம்பூச்சி காட்சியளித்தது.. அதன் சிறகில் அப்படியொரு அழகுக்கலவையான பலவண்ண பூச்சுக்கள்.. இப்போது ஒரு செடியில் சென்றமர்ந்து மெலிதாக சிறகசைத்துக் கொண்டிருந்தது..!!

"எவ்வளவு அழகா இருக்கு பாரேன்..!!" சொல்லும்போதே சிபியிடம் அப்படி ஒரு உற்சாகம்.

"ம்ம்.. ஆமாத்தான்..!!" கணவனின் உற்சாகம் ஆதிராவையும் தொற்றிக் கொண்டது.

"ச்ச.. அப்படியே அந்த பட்டாம்பூச்சியாவே நானும் மாறிடலாம் போல இருக்கு..!!"

"ம்ம்.. நல்ல ஆசைதான்.. ஹாஹா..!!"

"ஹேய்.. இரேன்.. நான் போய் கேமரா எடுத்துட்டு வந்துடுறேன்.. எனக்கு இதை ஃபோட்டோ எடுத்தே ஆகணும்..!!"

ஆதிராவின் பதிலை எதிர்பாராமலே காரை நோக்கி ஓடினான் சிபி.. உதட்டில் ஒரு புன்னகையுடன் அவனது முதுகையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஆதிரா..!! 'அப்படி என்னதான் இருக்கிறது இந்த பட்டாம்பூச்சியிடம்.. எப்போது எங்கே பார்த்தாலும் இப்படி குழந்தையாகி விடுகிறானே..?' என்று நினைத்துக் கொண்டாள்..!! அதேநேரம்.. கணவனுடைய மென்மையான ரசனையும், மிருதுவான இயல்பும்.. அவளுக்கு ஒரு சந்தோஷத்தை கொடுக்கவே செய்தது..!!

"ச்சத்த்..!!"

திடீரென அருகே அந்த சப்தம் கேட்க.. ஆதிரா சற்றே குழப்பமாய் நெற்றி சுருக்கினாள்..!! அப்புறம் தனது புடவைத் தலைப்பை பார்த்ததும்தான் விஷயம் புரிந்தது அவளுக்கு.. ஏதோ ஒரு பறவையின் எச்சம்..!!

"ஐயே..!!"

என்று முகத்தை சுளித்தாள்..!! தலையை அண்ணாந்து பார்த்தாள்.. மேலே இரண்டு செங்கால் நாரைகள் சிறகடித்து பறந்துகொண்டிருந்தன..!! ஓரிரு வினாடிகள் அவஸ்தையாக நெளிந்தாள்..!! கணவனைப் பார்த்தாள்.. அவன் காருக்குள் புகுந்திருந்தான்.. கையை பார்த்தாள்.. கிண்ணம் காலியாகிற நிலையில் இருந்தது..!! நடந்து சென்று அந்த கிண்ணத்தை குப்பைக்கூடையில் எறிந்தாள்.. புடவைத்தலைப்பை தனித்துப் பிடித்தவாறே ஆற்றுப்பக்கமாக நகர்ந்தாள்..!!

"ஹேய்.. என்னாச்சு..??" எதிரே வந்த சிபி ஆதிராவை கேட்டான்.

"நாரை பொடவைல எச்சம் போட்ருச்சு அத்தான்..!!"

"ஹாஹா.. ஓகே ஓகே.. போய் வாஷ் பண்ணு போ..!!"

சிரிப்புடன் சொல்லிவிட்டு.. பட்டாம்பூச்சியை புகைப்படம் எடுக்க விரைந்தான் சிபி..!! ஆதிரா ஆற்றை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.. நடக்கும்போதே தலையை நிமிர்த்தி சிங்கமலையை ஒருமுறை பார்த்தாள்..!! மலையுச்சியில் பற்கள் தெரிய கர்ஜித்தவாறு சீற்றமான சிங்கமுக சிலை.. அதைச்சுற்றி வளர்ந்திருக்கிற அடர்த்தியான பச்சை மரங்கள்.. சரேலென செங்குத்தாக ஆற்றை நோக்கி இறங்கும் மலைச்சரிவு..!! ஊருக்கு தீங்கு செய்த குறிஞ்சியை ஊர்மக்கள் எல்லாம் சேர்ந்து தீயிட்டு கொளுத்தியபோது.. அவள் அந்த மலையுச்சியில் இருந்துதான் இந்த குழலாற்றில் குதித்தாள் என்று அகழியில் கதை சொல்வார்கள்.. அது இப்போது ஆதிராவுக்கு ஞாபகம் வந்தது..!!

ஆற்றை அணுக மரத்தாலான மேடை போடப்பட்டிருந்தது அந்த இடத்தில்.. ஆற்றின் நீர்வரத்து அதிகமாக இருக்க, மேடைக்கு அருகாகவே நீர் பாய்ந்து கொண்டிருந்தது..!! ஆதிரா அந்த மேடையில் நடந்து சென்றாள்.. அதன் அடுத்த முனையை அடைந்ததும் அப்படியே குத்துக்காலிட்டு அமர்ந்தாள்..!! குழலாறு சலனமில்லாமல் குழைவாக ஓடிக்கொண்டிருந்தது.. சூரியக்கதிர்கள் ஆற்றுநீரில் மோத, நீர்ப்பரப்பெங்கும் பாதரசக்கீற்றுக்கள்..!!

ஆதிரா புடவைத்தலைப்பை நீரில் நனைத்து சுத்தம் செய்தாள்.. அப்படியும் இப்படியுமாய் அதைப்போட்டு கசக்கினாள்.. சிறிது நேரத்துக்குப் பின் திருப்தி வந்ததுமே கசக்குவதை நிறுத்தினாள்.. புடவையை சரி செய்துகொண்டாள்.. இடுப்பு மடிப்பை இறுக்கிக்கொண்டாள்..!! ஆற்றின் நீரோட்டம் தெளிவாக இருந்தது.. அடியில் நீந்துகிற மீன்கள் எல்லாம் மேலே தெரிந்தன..!! ஆதிரா அந்த மீன்களின் அழகை சிலவினாடிகள் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

பிறகு.. கைகளை ஒருமுறை கழுவிக்கொள்ளலாம் என்று நினைத்து.. இரண்டு கைகளையும் ஆற்றுநீருக்குள் நுழைத்தாள்..!! உள்ளங்கைகளை ஒன்றோடொன்று வைத்து அழுத்தி தேய்த்துக் கொண்டிருக்கும்போதுதான் அது நடந்தது..!!

ஆற்றுக்குள் இருந்து படக்கென ஒரு கை நீண்டு வந்து ஆதிராவின் கைகளை அழுத்தமாக பற்றியது.. இரும்புப்பிடியென இறுகப் பிடித்து.. சரக்கென அவளை ஆற்றுக்குள் இழுத்தது..!! அதை சற்றும் எதிர்பாராத ஆதிரா, கத்துவதற்கு கூட அவகாசம் இல்லாமல், ஆற்றுக்குள் படார் என்று தலைகுப்புற விழுந்தாள்..!! விழுந்த வேகத்தில்.. கீழே கீழே கீழே என.. ஆற்றின் ஆழத்தை நோக்கி சென்றாள்..!! இதயம் தறிகெட்டு துடிக்க, கைகளையும் கால்களையும் வெடுக் வெடுக்கென வெட்டினாள்.. நீரின் மேற்பரப்புக்கு வர முயன்றாள்.. ஆனால் அவளுடைய உடலை யாரோ அமுக்குவது போல தோன்றியது.. பாரமாக இருந்தது..!!

"விஷ்ஷ்ஷ்க்க்க்.. விஷ்ஷ்ஷ்க்க்க்.. விஷ்ஷ்ஷ்க்க்க்..!!" என்று ஏதோ ஒரு சப்தம்.

நீருக்குள் அவள் அப்படியே சுழல.. அவளுடன் சேர்ந்து அவளை கட்டிக்கொண்டு இன்னொரு உருவமும் சுழன்றது..!! ஆதிராவின் கண்களுக்கு அந்த உருவம்.. தோன்றியது மறைந்தது.. தோன்றியது மறைந்தது.. தோன்றியது மறைந்தது..!! சிவப்பு நிற அங்கி அவளுடைய முகத்தை.. அறைந்தது விலகியது.. அறைந்தது விலகியது.. அறைந்தது விலகியது..!!

ஆதிரா விழிகளை விரித்து அந்த உருவத்தை அடையாளம் காண முயன்றாள்.. முடியவில்லை.. தெளிவில்லாமல் காட்சியளித்தது..!! வாயையும் மூக்கு துவாரங்களையும் இறுக மூடி வைத்திருந்தாள்.. அதையும் மீறி அவளுடைய நாசியை தாக்கியது அந்த வாசனை.. மகிழம்பூ வாசனை..!!

ஆதிரா அவ்வாறு அந்த உருவத்திடம் இருந்து மீளமுடியாமல் போராடிக் கொண்டிருக்கும்போதே.. நீர்ப்பரப்பை கிழித்துக்கொண்டு உள்ளே விழுந்தது இன்னொரு உருவம்.. ஆற்றின் ஆழத்துக்கு இறங்கி ஆதிராவை அணைத்துக் கொள்ள முயன்றது..!! ஆதிரா பிடிகொடுக்காமல் உடலை முறுக்கினாள்.. கைகால்களை படக் படக்கென உதறினாள்.. விழுக்கென்று நழுவ முயன்றாள்..!! பிறகு அந்த உருவத்தை அடையாளம் கண்டுகொண்டதும்தான் மெல்ல மெல்ல அடங்கினாள்.. இரண்டாவது உருவம் அவளுடைய கணவன் சிபிதான்..!!

மனைவியை கையில் அள்ளிக்கொண்டு நீர்ப்பரப்புக்கு வந்தான் சிபி.. பழக்கடைக்காரன் உதவியுடன் இருவரும் மரமேடைக்கு வந்தனர்..!! புஸ்புஸ்சென்று மூச்சிரைத்தனர் இருவரும்.. சர்சர்ரென அவர்களது மார்பு காற்றுக்காக அடித்துக்கொண்டது.. சலசலவென நீர் சொட்டியது இருவருடைய உடலில் இருந்தும்..!!

"எ..என்னாச்சு ஆதிரா..??"

சிபி சுவாசத்திணறலுடன் கேட்டான்..!! ஆதிராவோ சில வினாடிகள் எதுவும் பதில் சொல்லவில்லை.. அவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தது ஒருபுறம் இருக்க.. அவளுடய மூளையும் இன்னொருபுறம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது..!! நேற்று இரவு சிபி அவளிடம் கடிந்துகொண்டது அவளுக்கு இப்போது ஞாபகம் வந்தது.. சிறிதுநேர அவசர யோசனைக்குப் பிறகு..

"ஒ..ஒன்னுல்லத்தான்.. கால் ஸ்லிப் ஆகி உள்ள விழுந்துட்டேன்..!! வே..வேற ஒன்னுல்ல..!!" என்று பொய் சொன்னாள்.

சிபி சில வினாடிகள் மனைவியையே தவிப்பாக பார்த்துக் கொண்டிருந்தான்..!! ஐந்தாறுபேர் சுற்றிநின்று அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்..!! மேடையில் இருந்து எழுந்த ஆதிராவும், சிபியும்.. பழக்கடைக்காரனுக்கு மட்டும் ஒரு நன்றி சொல்லிவிட்டு.. மற்றவர்களிடம் இருந்து விலகி தனியே நடந்தனர்..!! கீழே விசிறியடித்திருந்த கேமராவை சிபி கையில் எடுத்துக்கொள்ள.. இருவரும் காரை நோக்கி சென்றனர்..!!

"கொஞ்சநேரம் பயந்தே போயிட்டேன் ஆதிரா..!!"

"ம்ம்.. ஸாரித்தான்.. நா..நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல..!!"

"பரவால.. விடு..!!"

அமர்த்தலாக சொல்லிவிட்டு சிபி முன்னால் நடக்க.. ஆதிரா மட்டும் பின்னால் திரும்பி, குழலாற்றை ஒருமுறை மிரட்சி அப்பிய விழிகளுடன் பார்த்தாள்..!! முன்பு அவளுடைய தங்கை தாமிரா கத்தியது.. இப்போது அவளது நினைவுக்கு வந்தது..!!

"வா வா வா.. குறிஞ்சி ஆத்துக்குள்ளதான் படுத்திருக்கா.. கூப்பிடுறா உன்னை.. ஓடி வா..!!"

 

3 comments:

  1. very nice thriller story. i like it ..... by rakshi

    ReplyDelete
  2. வினோத் குமார்: நன்று

    ReplyDelete
  3. Neenga Indra sounderajan ah follow panreengalonu thonuthu but story Sema super and awesome we want good finishing welldone Bro keep going

    ReplyDelete

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...